Saturday, September 24, 2016

இராமாயணம் - விராதன் வதை படலம் - உறங்குதியால் உறங்காதாய்!

இராமாயணம் - விராதன் வதை படலம் -  உறங்குதியால் உறங்காதாய்!


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாய் பிறந்து, இராமனோடு சண்டையிட்டு, இராமன் திருவடி பட்டு, சாபவிமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன் , இராமனைப் பற்றி சிலச் சொல்லுகிறான்.


இன்பம் வேண்டும் என்றுதான் வாழ்வில் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இருந்தும் துன்பம் வருகிறது. நல்லது வேண்டும் என்று தான் நினைக்கிறோம், இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

இன்பம் மட்டுமே இருக்கக் கூடாதா ? நல்லது மட்டுமே நடக்கக் கூடாதா ?

ஏன் இந்த கஷ்டங்கள் வருகின்றன ?

இதற்கு காரணம் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பாகங்கள்  மாதிரி. ஒரு பாகம் மட்டும் வேண்டும் என்றால் எப்படி முடியும் ?

நாய்த குட்டியின் தலையை தூக்கினால் வாலும் கூடவே சேர்ந்தே வரும்.

இன்பம் உருவம் என்றால் , துன்பம் நிழல்.

நன்மை உருவம் என்றால் , தீமை நிழல்.

இரண்டையும் பிரிக்க முடியுமா ?

இதை அறிந்தவர்கள் இந்த நல்லது/கெட்டது , நன்மை/தீமை, உயர்வு/தாழ்வு என்ற இரட்டைகளை தாண்டி நடுவில் நிற்பார்கள்.

ஒரு சம நோக்கு இருக்கும் அவர்களுக்கு.

பாடல்

பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார்போல்
    அருந்தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணிமார்ப!
    நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால் உறங்காதாய்!


பொருள்

பொரு அரிய = பொருவு என்றால் ஒப்பு. பொருவு அரிய என்றால் ஒப்பு, உவமை கூற முடியாத

சமயங்கள் = பல சமயங்கள்

புகல்கின்ற = சொல்கின்ற

புத்தேளிர் = தேவர்கள்

இரு வினையும் = இரண்டு வினைகள். நல்லது/கெட்டது  போன்ற வினைகள்

உடையார்போல் = உடையவர்களைப் போல

அருந்தவம் = பெரிய தவத்தை

நின்று இயற்றுவார்  செய்வார்கள்

திரு = திருமகள்

உறையும்  = வாழும்

மணிமார்ப! = கௌஸ்துபம் என்ற மணியை அணிந்த மார்பை உடையவனே

நினக்கு = உனக்கு

என்னை = என்ன

செயற்பால? = செய்ய வேண்டும் ?

ஒரு வினையும் = ஒரு வேலையும்

இல்லார்போல் = இல்லாதவர் போல

உறங்குதியால் = உறங்குகிறாயா ?

உறங்காதாய் = உறங்காதவனே

இராமன் ஏதோ வினை செய்வது போல இருக்கிறது. ஒன்றும் செய்யாதவன் போலவும்  இருக்கிறான். உறங்குகிறானா, விழித்து இருக்கிறானா  என்று தெரியவில்லை.

வினை செய்வதற்கு முன் அந்த வினையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்படி தேர்ந்தெடுக்க , அந்த வினை நல்லதா, கெட்டதா என்று தேர்வு செய்ய வேண்டும்.  நல்லது கெட்டது நின்ற பிரிவினை மறைந்து விட்டால்  எந்த வினையை செய்வது ?

அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருக்க முடியுமா ?

இந்த இருமைகளை தாண்டினால் அது புரியும்.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பார் வள்ளுவர்.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

இன்பத்தையும்,  துன்பத்தையும் சமமாக காணும் அந்த நிலை சுகமானதுதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_42.html

No comments:

Post a Comment