Saturday, October 22, 2016

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல்

திருக்கடை காப்பு - குரங்கின் ஊடல் 


திருஞான சம்பந்தர் குழந்தையாக இருக்கும் போதே பாடல் பாடத் தொடங்கினார். சின்ன பிள்ளை தானே, குரங்கைப் பார்த்தால் அவருக்கு ஒரு மகிழ்ச்சி. எங்கு போனாலும் குரங்கைப் பற்றி , அது செய்யும் செயல்களை பற்றி பாடுவார்.

திருச்சிராப்பள்ளிக்கு வருகிறார். அங்கே, மலை மேலே ஒரு பெண் குரங்கு, தன்னுடைய துணையான ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு, குட்டிக் குரங்கை தூக்கிக் கொண்டு , முகம் சிவந்து , மரங்களின் ஊடே பாய்கிறது. அப்படிப் பட்ட ஊரில் உள்ள சிவனே நீ ஒன்றுக்கு ஒன்று முரணான பாம்பையும் நிலவையும் தலை மேல் வைத்து இருப்பது பிழை அல்லவா என்று வினவுகிறார்.

பாடல்

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?


 பொருள்


கைம் மகவு = கை பிள்ளையை

ஏந்திக் = எடுத்துக் கொண்டு

கடுவனொடு = ஆண் குரங்கோடு

ஊடிக் = ஊடல் கொண்டு

கழை = மரங்களுக்கு

பாய்வான் = (இடையில்) பாய்ந்து செல்லும்

செம்முக = சிவந்த முகத்தை கொண்ட

மந்தி = பெண் குரங்கு

கரு = கரிய

வரை = மலை

ஏறும் = ஏறும்

சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

வெம் முக = வெம்மையான முகத்தைக் கொண்ட

வேழத்து = யானையின்

ஈர் உரி போர்த்த = தோலினை மேலே போர்த்துக் கொண்ட

விகிர்தா! = தலைவா

நீ = நீ

பைம்முக = படத்துடன் கூடிய முகம் கொண்ட

நாகம் = நாகப் பாம்பையும்

மதி = நிலவையும்

உடன் வைத்தல் = ஒன்றாக வைத்து இருப்பது

பழி அன்றே? = தவறு அல்லவா ?

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று இதை ஒரு பெரிய  தோத்திர பாடல் என்று போற்றி மகிழ்கிறார்கள் ?

குரங்குகளுக்குள் சண்டை வருவதும், சிவன் தலையில் பாம்பையும், நிலவையும்  வைத்து இருப்பதும் என்ன பெரிய செய்தியா ?

சிராப்பள்ளி குன்று இருக்கிறது. அதன் மேல் சிவன் கோவில் இருக்கிறது. அங்கே இருக்கும்  குரங்குக்கு அது எல்லாம் முக்கியம் இல்லை. ஆண் குரங்கும்  பெண் குரங்கும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு இருக்கின்றன.

எது முக்கியம் வாழ்வில் என்று தெரியாமல்.

குரங்கைப் பற்றி சொன்னால் என்ன, நம்மைப் பற்றி சொன்னால் என்ன. அதில் இருந்து வந்தவர்கள் தாமே நாம்.

உலகில் என்னென்னெவோ செய்ய வேண்டியது இருக்கிறது. அதை விட்டு விட்டு, சாப்பாடு, ஊடல், கூடல் , பிள்ளைகள், குடும்பம் என்று அலைகிறோம் .

அந்த குரங்குகளுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா

நாம் அந்த குரங்குகளை பார்த்து சிரிக்கிறோம். திருஞான சம்பந்தர் போன்ற பெரியவர்கள்  நம்மைப் பார்த்து சிரிப்பார்கள்.

பொருள் சேர்ப்பதும், உண்பதும், உறங்குவதும், பிள்ளை வளர்ப்பதும்...இது மட்டும்தானா  வாழ்க்கை.

மதியையும் பாம்பையும் வைத்து இருக்கிறாயே என்கிறார்.

இருவினை ஒப்பு என்பது சைவ சித்தாந்தத்தில் ஒரு முக்கிய பாடம்.

நன்மை தீமை, உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் முட்டாள், இன்பம் துன்பம்  என்று வாழ்வில் எல்லாம் இரண்டு துருவங்களாக இருக்கிறது.


இன்பம் வேண்டும், துன்பம் வேண்டாம்.

நன்மை வேண்டும், தீமை வேண்டாம்.

செல்வம் வேண்டும், வறுமை வேண்டாம்


இப்படி நாம் ஒன்று வேண்டும், மற்றது வேண்டாம் என்று இருக்கிறோம்.

ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் தெரியும், இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடு  ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றில்லாமல் மற்றது இல்லை.

பிறப்பு உண்டு என்றால், இறப்பு கட்டாயம் உண்டு.

பதவி உயர் வரும்போது மகிழ்ச்சி என்றால், ஓய்வு பெற்று வீட்டுக்குப் போகும் போது  துன்பம் கட்டாயம் உண்டு.

இன்பம், தலை என்றால், துன்பம் வால் . தலையை பிடித்து தூக்கினால் வாலும் கூடவே வரும்.

துன்பம் வேண்டாம் என்றால், இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக பார்க்கும் சம நோக்கு  வேண்டும்.

அதற்குத் தான் "இருவினை ஒப்பு" என்று  பெயர்.

"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பது வள்ளுவம்.

அரசை கொடுத்த போதும் மகிழவில்லை, அது இல்லை காட்டுக்குப் போ என்று சொன்னபோதும் இராமன் துன்பப் படவில்லை.

நடுவில் நில்லுங்கள். இன்பமும் துன்பமும் உங்களை ஒன்றும் செய்யாது.



No comments:

Post a Comment