Sunday, October 30, 2016

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன்

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன் 



பரதன் அரசாள வேண்டும். நீ காடாள வேண்டும் என்று கைகேயி சொன்ன பின், கோசாலையை காண இராமன் வருகிறான். இராமனின் கோலத்தைக் கண்டு கோசலை , இராமனைப் பார்த்துக் கேட்டாள்  "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உளதோ" என்று . "முடி புனைய தடை இல்லை, ஆனால் முடி பரதன் புனைகிறான்" என்று சொல்கிறான்.

பங்கமில் குணத்து என் தம்பி, உன் காதல் மைந்தன் பரதன் முடி சூட்டுகிறான் என்று கூறுகிறான்.

கோசலை கலங்கவில்லை.

"அரச முறை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், உங்களை போல மூன்று மடங்கு நல்ல குணங்கள் கொண்டவன். உன்னை விட நல்லவன். ஒரு குறையும் இல்லாதவன் பரதன். அவனே ஆளட்டும் " என்று கூறுகிறாள்.


பாடல்

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

“முறைமை அன்று = அரச முறை இல்லை. மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது அரச தர்மம் இல்லை.

என்பது = என்று

ஒன்று உண்டு; = ஒன்று உண்டு

மும்மையின் = மூன்று மடங்கு

நிறை குணத்தவன் = நிறைந்த குணங்கள் கொண்டவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்; = குறை ஒன்றும் இல்லாதவன்

எனக் கூறினள்,= என்று கூறினாள் . கூறியது யார் ?

நால்வர்க்கும் = நான்கு சகோதரர்களுக்கும்

மறு இல் = குறை இல்லாத

அன்பினில் = அன்பினால்

வேற்றுமை மாற்றினாள் = வேறு பாடு இல்லாத கோசலை

நுணுக்கமாக அறிய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

முதலாவது, தன் மகனுக்கு அரசு இல்லை. தான் சக்ரவர்த்தியின் தாய் இல்லை  என்று அறிந்த கோசலை பேசுகிறாள்.

இரண்டாவது, தாய்மார்கள் பாடம் படிக்க வேண்டிய இடம். பிள்ளை ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலோ, அல்லது ஏதாவது போட்டியில்  வெற்றி பெறவில்லை என்றாலோ, பெரும்பாலும் தாய்மார்கள் பிள்ளைகளை திட்டுவது இயல்பு. சரி படிச்சாதானே, ஒழுங்கா படுகிறதே இல்லை, எந்நேரம் பார்த்தாலும் டிவி என்று கடிந்து கொள்வார்கள். பிள்ளை ஏற்கனவே  மனம் நொந்து வந்திருப்பான். அதற்கு மேல் தாயின் கடிய சொற்கள்.

கோசலை அறிவாள் . ஒரு வேளை இராமன் மனம் துன்பப் பட்டிருக்குமோ , அவனை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது என்று, "பரவாயில்லை, பரதன் உன்னை விட நல்லவன், அவனே ஆளட்டும் " என்று ஆறுதல் சொல்கிறாள்.

மூன்றாவது, அவள் பரதனைப் பற்றி கூறும் சொற்கள்.   மும்மையின் நிறை குணத்தவன் என்கிறாள். உங்கள் மூன்று பேரை காட்டிலும் நிறைந்த குணங்கள்  கொண்டவன் என்பது பொருள்.

நான்காவது, நின்னினும் நல்லன். உன்னை விட நல்லவன் என்கிறான். பரதன்  உயரும் இடம். இராமனை விட ஒரு படி மேலே போய் விட்டான். சொல்வது வேறு யாரும் அல்ல,  கோசலை கூறுகிறாள். இராமனின் தாய். எந்த தாய்க்கும் தன் பிள்ளை  உயர்வுதான். தன் பிள்ளையிடமே இன்னொரு பிள்ளையைப் பற்றி எந்தத் தாயும் பேச மாட்டாள். அதுவும் இராமனைப் போன்ற பிள்ளையை விட  வேறு யார் பெரிய நல்ல குணங்கள் கொண்டிருக்க முடியும் ? பாரதனால் முடிந்தது.  இராமனை விட நல்லவன் என்று கோசலை சான்றிதழ் தருகிறாள்.

ஐந்தாவது, இதுவரை பரதன் எதுவும் சாதித்தாக செய்தி இல்லை. இருந்தும் அவன்  உயர்ந்து நிற்கிறான். எப்படி ? அவன் குணங்கள் . குணத்தால்,மனத்தால் உயர்ந்தவன் பரதன்.

இராமனை விட நல்லவன் என்று இராமனின் தாய் கூறும் அளவுக்கு நல்லவன் பரதன்.

எப்படி அப்படி ஆனான் என்று கம்பர் காட்டுகிறார்.

மேலும் சிந்திப்போம்.



No comments:

Post a Comment