Friday, November 4, 2016

இராமாயணம் - பரதன் 10 - சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது

இராமாயணம்  - பரதன் 10 -  சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது


துன்பம் இல்லாத யார் இந்த உலகில் ? எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அதிகார பலம் உள்ளவனாக இருந்தாலும், ஆள்  அம்பு சேனை என்று இருந்தாலும் துன்பம் ஏதோ ஒரு வகையில் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

சரி துன்பம் வந்து விட்டது. என்ன செய்வது ? எப்படி அதைப் போக்கிக் கொள்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் ஆயிரம்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று எதையெதையோ முயன்று பார்ப்பார்கள்.

தயரதன் இறந்து விட்டான்.  தந்தை இறந்த துக்கத்தை எப்படி மாற்றுவது ? அவன் உயிரோடு எழுந்து வந்தால் அல்லது அந்த துக்கம் போகாது. அது ஒன்றும் நடக்கும் காரியம் இல்லை. பின் எப்படி அந்த துக்கத்தில் இருந்து விடுபடுவது ?

பரதன் சொல்கிறான்


" என் தந்தையும், தாயும், என் தலைவனும், என் முன் பிறந்தவனும் , முடிவே இல்லாத நல்ல குணங்களை கொண்ட இராமனின் திருவடிகளில் என் தலையை வைத்தால் அல்லது இந்த துக்கம் மாறாது " என்று

பாடல்

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது ‘என்றான்.


பொருள்

‘எந்தையும் = என்னுடைய தந்தையும்

 யாயும் = என் தாயும்

எம்பிரானும் = என் தலைவனும்

எம்முனும் = என் அண்ணனும் (முன் பிறந்தவன்)

அந்தம் = முடிவே

இல் =  இல்லாத

பெருங் = சிறந்த

குணத்து = குணங்களைக் கொண்ட

இராமன் = இராமன்

ஆதலால் = ஆதலால்

வந்தனை = வணக்கம்

அவன்கழல் = அவன் திருவடிகளில்

வைத்தபோது = செய்கின்றபோது

அலால் = தவிர

சிந்தை = மனதில் உண்டானான

வெம் = வெம்மகாயன்

கொடுந் = கொடுமையான

துயர் = துன்பம்

தீர்கலாது  = தீராது

என்றான் = என்றான் பரதன்

மனக் கவலையை மாற்றும் மருந்து இராமனின் திருவடிகள் என்பது பரதனின் முடிவு.

பரதன் இருந்த போது இராமன் இருந்தான். அவன் கூடவே, அவன் மாளிகையில். இப்போது நமக்கு ஒரு துன்பம் என்றால் இராமனைத் தேடி எங்கே போவது  ?

இராமனை வெறுமனே இராமன் என்று சொல்லவில்லை.

எந்தையும்
யாயும்
எம்பிரானும்
எம்முன்னும்
அந்தமில் குணத்து இராமன்

என்று கூறுகிறான்.

பெரியவர்கள், நல்லவர்கள், உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் , அவர்களைப் போய்ச் சேருங்கள். அதுவே மனக் கவலையை மாற்றும் மருந்து.

ஒரு வேளை , பரதனின் அதீத சோகத்தால் அவன் அண்ணனைப் பார்க்க நினைத்திருக்கலாம்.

உணர்ச்சி வசப்படாமல் , தெளிவாக சிந்தித்து , மனக் கவலை மாற்ற வழி சொன்னவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா ?

வள்ளுவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது  

என்கிறார் வள்ளுவர்.

தனக்கு உவமை இல்லாதவனுடைய திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு  மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார்.

பரதனைப் படிக்கும் போது , வாழ்க்கையைப் படிக்கிறோம்.



1 comment:

  1. தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் சொல்வது யாரை? இறைவனையா?

    நாம் அப்படிப்பட்ட ஒரு ஆளை எங்கே தேடுவது?!

    ReplyDelete