Sunday, November 20, 2016

நான்மணிக் கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன

நான்மணிக்  கடிகை - ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன


எவ்வளவோ காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. சிலவற்றை உடனடியாகச் செய்கிறோம். மற்றவற்றை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைக்கிறோம்.

தள்ளி வைத்த காரியங்கள் குவிந்து கொண்டே போகின்றன. நமக்கு நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காலம் இருக்கத்தான் செய்கிறது. இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அந்தக் காலங்கள் அனைத்தும் உருண்டோடி விடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் , கடைசியில் ஒன்றும் இருக்காது.  எனவே தள்ளிப் போடும் காரியங்கள் எவை எவை என்று பாருங்கள்.

முடிந்தவரை தள்ளிப் போடாமல் செய்யப் பாருங்கள்.


பாடல்

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

சீர் பிரித்த பின்


ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன; யாமமும்
நாழிகையானே நடந்தன; தாழீயா,
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்
வெஞ் சொலால் இன்புறுவார்.

பொருள்


ஊழியும் = ஊழிக் காலமும்

ஆண்டு = ஆண்டுகளால்

எண்ணி = எண்ணிக்கையில்

யாத்தன = செய்யப் பட்டன. யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள்.

யாமமும் = யாமமும்

நாழிகையானே = நாழிகையால்

நடந்தன = நடந்து முடியும்

தாழீயா = காலம் தாழ்த்தாமல்

தெற்றென்றார் கண்ணே  = தெளிந்தவரிடம் சென்று

தெளிந்தனர் = தெளிவு பெற்றனர்

வெட்கென்றார் = அறிவு இல்லாதவர்கள்

வெஞ் சொலால் = பயனில்லாத சொற்களால்

இன்புறுவார் = இன்பம் அடைவார்கள்

ஊழிக் காலம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமாய் தேய்ந்து, பின் அது கொஞ்சம்  யாமங்களாக மாறும். பின் அந்த யாமங்கள் குறைந்து குறைந்து நாழிகையாகி பின்  அதுவும் இல்லை என்று ஆகிவிடும்.

அறிவுள்ளவர்கள் , காலம் நிறைய இருக்கிறது, பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க மாட்டார்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பின்னால்  செய்ய வேண்டும் என்று மற்ற படித்து தெளிந்தவர்களிடம் சென்று  கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடப்பார்கள்.

அறிவில்லாதவர்கள், வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு அதில் இன்பம் காண்பார்கள்.

"தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்" . நாமே எல்லா புத்தகங்களையும் படித்து  தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. அனைத்து புத்தகங்களையும் படித்து முடிக்க  ஒரு ஆயுள் போதாது. அப்படியே படித்து விட்டாலும், தெளிவு பிறக்காது . படிக்க படிக்க குழப்பம் அதிகரிக்கும்.

பின் எப்படி தெளிவு பெறுவது ?

எதைப் படிப்பது, எப்படி படிப்பது, எப்போது படிப்பது , அவற்றின் சாரம் அல்லது அர்த்தம் என்ன என்று படித்து தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலம் இருக்கிறதே என்று நல்ல காரியங்களை தள்ளிப் போடக் கூடாது. காலம் கரைந்து விடும்.




1 comment:

  1. எதையும் தள்ளி போடக்கூடாது என்பது தெரிந்த விஷயமானாலும் எதை தள்ளி போடாமல் எதை படிக்க வேண்டும் என்பதை ஆசார்யன் அல்லது கற்று தெரிந்தவர் மூலம் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete