Thursday, November 24, 2016

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு

நாலடியார் - கனி இருக்க காய் உதிர்தலும் உண்டு 


வாழ்க்கை நிலையாமை கூட எல்லோருக்கும் புரிந்து இருக்கிறது. இன்றில்லா விட்டால் என்றாவது ஒரு நாள் மரணம் வரும் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆனால், தெரியாத இரண்டு நிலையாமை இருக்கிறது.

ஒன்று, செல்வம்.

இன்னொன்று இளமை.

இளமை எப்போதும் இருக்கும் என்று மனிதன் நினைக்கிறான். முதுமை எட்டிப் பார்த்தால் கூட அதை மறுதலிக்கிறான். எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அதை மறுக்கப் பார்க்கிறான்.

முடி நரைக்கிறது  - சாயம் பூசி அதை மீண்டும் கறுப்பாக காட்டுகிறான்.

பல் ஆடுகிறது, விழுகிறது - ஏதேதோ சிகிச்சை செய்து முன்பு போல் செய்து கொள்கிறான்.

எத்தனை க்ரீம்கள், பவுடர்கள் , பூச்சுகள், என்று கல்லறைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம்.

அழகாக , இளமையாக தோன்ற வேண்டும் என்று நினைப்பது என்ன தவறா ?

தவறில்லைதான்...இருந்தாலும், அந்த இளமையை பற்றிக் கொண்டு இருப்பதில் ஒரு  சிக்கல் இருக்கிறது.

பாடல்

மற்று அறிவாம் நல் வினை; யாம் இளையம்' என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே, கரவாது, அறம் செய்ம்மின்!-
முற்றி இருந்த கனி ஒழிய, தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு!

பொருள்

மற்று = பின்னால்

அறிவாம் = அறிவோம், செய்வோம்

நல் வினை; = நல்ல வினைகளை

யாம் இளையம்' = நாம் இளமையானவர்கள் என்று

என்னாது = எண்னாமல்


கைத்து = கையில்

உண்டாம் = உள்ள

போழ்தே = போதே

கரவாது = மறைக்காமல்

அறம் செய்ம்மின்! = தான தர்மங்களை செய்யுங்கள்

முற்றி = முற்றி

இருந்த = இருக்கும்

கனி ஒழிய = கனியை விட்டுவிட்டு

தீ வளியால் = வெப்பக் காற்றில்

நல் காய் = நல்ல காய்

உதிர்தலும் உண்டு! = உதிர்ந்து விடுவதும் உண்டு

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்படி இளமையாக இருப்பதாக  நினைத்துக் கொண்டு, நல்ல காரியங்களை பின்னால் பார்த்துக்  கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், சில சமயம் கனிந்த பழம் இருக்க காய் உதிர்வதும் உண்டு.

வயதான பின் தான் மரணம் வரும், நினைவு தவறும் என்று நினைக்கக் கூடாது.

வாழ்க்கை என்பது நீர் குமிழி மாதிரி. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் .

எனவே, நல்ல காரியங்களை தள்ளிப் போடாமல் உடன் செய்வது நல்லது.



1 comment:

  1. அப்போதைக்கு இப்போதே செய்து விடவேண்டும்.தெரிந்த விஷயம் தான். கடை பிடிக்க தான் மனம் வருவதில்லை.ஆசாபாசங்களில் மனதை அலைய விட்டு கொண்டிருக்கிறோம்

    ReplyDelete