Saturday, November 5, 2016

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும்

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும் 


எதற்காக திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்டால் , "மனைவியோடு இன்பமாக இருக்கலாம், சீர் செனத்தி என்று கொஞ்சம் செல்வம்  வரும்,மாப்பிள்ளை என்று ஒரு மரியாதை வரும், சமூகத்தில் ஒரு மதிப்பு வரும்..." இவற்றிற்காக கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான்.

சரி, பிள்ளை எதற்கு என்று கேட்டால் "பிள்ளை இல்லா விட்டால் ஆண்மை இல்லாதவன், மலடி என்ற அவச் சொல் வரும், அது மட்டும் அல்ல, நமக்கு அப்புறம் நம் சந்ததி வளர வேண்டாமா, அதற்கும், மேலும், சேர்த்து வைத்த சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டாமா அதற்கும் " ஒரு பிள்ளை வேண்டும் என்கிறான்.

சரி, பிள்ளைகளை எதற்கு பள்ளி கூடத்திற்கு அனுப்புகிறாய் என்று கேட்டால், படிச்சு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத்தான் என்கிறான்.

எதற்கு திருமணம் செய்துகொள்வது, எதற்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவது, எதற்கு அவர்களை படிக்க வைப்பது என்று சரியாகத்  தெரியாமலேயே இவை நடந்து கொண்டிருக்கின்றன.

திருமணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , குழந்தைகளை பெற்றுக் கொள்வதின் நோக்கம் என்ன என்று இன்னிலை என்ற அற நூல் கூறுகிறது.

"ஒரு பெண்ணை மணந்து அவளோடு இன்பம் காணப்பது என்பது நல்ல பிள்ளைகளைப் பெற்று, அவர்களை நான்கு அல்லது ஐந்து ஆண்டில் அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் இறைவனை காணும்படி கல்வி கற்பிப்பதே இல்வாழ்வின் இனிய நோக்கம் "

பாடல்

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய்-தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து.

பொருள்

பாலை = பாலகனை

வளர்த்துக்  = வளர்த்து

கணங்குழை = அழகிய காதணிகளை அணிந்த பெண்ண

மாலையுறல் = மால் என்றால் மயக்கம். கிறக்கம் . இங்கே இன்பம் என்ற பொருளில் வந்தது. இன்பம் அடைதல்

சால்பென்ப = உயர்ந்தது என்று கூறுவார்கள்

கண்கூடாக் காணாய் = கண் கூடாகக் காண்பாய்

தழைகாதல் = பெருகி வரும் காதலில்

வாலறிவ னாக்க = இறைவனை அறிய

வகையறிக = வகையினை செய்தல் , பள்ளியில் சேர்த்தல், குருவிடம் ஒப்புவித்தல்

காலத்தால் = தகுந்த நேரத்தில்

தோலொடு = அழகான

நாலைந் தணந்து = நான்கு அல்லது ஐந்து வயதில்

இரண்டு வயதில், இரண்டரை வயதில் pre kg என்று பிள்ளைகளை கொண்டு போய்  பள்ளிக் கூடத்தில் தள்ளி விடுகிறார்கள்.

கல்வி கற்பதின் நோக்கம், ஏதோ வேலை தேடிக் கொண்டு , நாலு காசு பார்ப்பது அல்ல.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல். இறைவனை அறியாமல் எப்படி அவனை தொழுவது ? இறைவன், கடவுள் என்றால் யார் என்றே அறியாமல் , எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன் என்று கோவிலுக்குப் போவது, பூஜை செய்வது, பாட்டுப் பாடுவது, விரதம் இருப்பது என்று பல பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தேவைதான். ஆனால் அதுவே முடிவு அல்ல.

மணி அடிப்பதும் , சர்க்கரை பொங்கல், சுண்டல் சாப்பிடுவதும் இறைவனை அறிவது ஆகாது. ஆனால் , அங்குதான் ஆரம்பிக்க வேண்டும்.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து அவர்கள் இறைவனை அடைய வழி செய்வதுதான் திருமணம் செய்து கொண்டு , ஒரு பெண்ணோடு இன்பமாக வாழ்வதின்  குறிக்கோள்.

சொல்லித் தந்திருக்கிறார்கள். படிக்காமல் விட்டு விட்டோம்.

படிப்போம். மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.

எந்த நிலையில் நம் சமுதாயம் சிந்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்போம்.





No comments:

Post a Comment