Sunday, December 4, 2016

திருக்குறள் - பரத்த நின் மார்பு

திருக்குறள் - பரத்த நின் மார்பு 


புலவி என்றால் பொய் கோபம். ஊடல். புலவி நுணுக்கம் என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். எப்படி மிக நுணுக்கமாக பெண்கள் ஒன்றை கண்டு பிடித்து கணவனோடு சண்டை போடுவார்கள் என்று சொல்ல வருகிறார். காதலில் அதுவும் ஒரு பகுதிதான்.

பாடல்

பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பொருள்

பெண்ணியலா ரெல்லாரும் = பெண் இயல்பு கொண்ட எல்லாரும்

கண்ணிற் = கண்ணால்

பொதுவுண்பர் = பொதுவாக உண்பார்கள், அல்லது இரசிப்பார்கள்

நண்ணேன் = பொருந்த மாட்டேன்

பரத்தநின் = பரத்தன்மை கொண்டவனான உன்

மார்பு = மார்பை

பெண் இயல்பு கொண்ட எல்லோரும் உன் மார்பை இரசிக்கிறார்கள். எனவே நான் உன்னை கட்டி பிடிக்க மாட்டேன் என்கிறாள் தலைவி.

பாடல் என்னவோ அவ்வளவுதான்.

அதில் உள்ள நுணுக்கம் எவ்வளவு தெரியுமா ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பரத்த = ஒரு பெண் தவறான வழியில் வாழ்க்கை நடத்தினால் அவளை பரத்தை என்று  இந்த சமூகம் கூறுகிறது. அந்த வழியில் செல்லும் ஆணுக்கு ஒரு பெயரும் இல்லையா ?  வள்ளுவர் சொல்கிறார், அப்படி செல்பவனுக்குப் பெயர் "பரத்தன்".  நாலு பெண்களிடம் சென்று வருபவனுக்கு பரத்தன் என்று பெயர் தருகிறார்  வள்ளுவர்.


பெண்ணியலா ரெல்லாரும் = பெண்கள் எல்லாரும் என்று சொல்லவில்லை. பெண் இயல்பு  கொண்ட எல்லாரும். அப்படி என்றால் என்ன அர்த்தம் ?  பெண்களுக்கு  கற்பு, நாணம் போன்ற நல்ல குணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு  பெண் வடிவம், ஆணோடு சேரும் இயல்பு மட்டும் கொண்ட பெண்களை  பெண் இயல்பு கொண்டவர்கள் என்கிறார். பெண்கள் எல்லோரும் என்று  சொல்லி இருந்தால் அது சரியாக இருக்குமா ? இருக்காது.  தன் கணவனை தவிர   வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத பெண்கள் இருப்பார்கள்  அல்லவா ? எனவே, பெண்கள் எல்லாரும் என்று சொல்ல முடியாது.

கண்ணிற் பொதுவுண்பர் = கண்ணால் பொதுவாக இரசிப்பார்கள் . பெண்களுக்கு  அவர்களுடைய கணவன் பெரிய ஆள் என்று மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதே சமயம் , தன் கணவனை தான் மட்டுமே இரசிக்க வேண்டும் என்ற  தன்னுடைமை உணர்வும் இருக்கும். கணவனை இன்னொரு பெண்  நெருங்குவதை எந்த பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள். இங்கே , தலைவி சொல்கிறாள், பெண் இயல்பு கொண்ட பெண்கள் கண்களால் பொதுவாக  பார்த்து இரசித்தார்களாம். அருகில் வரவில்லை. தொடவில்லை. கண்களால்  இரசித்தார்கள் . அவ்வளவுதான்.

பொது உண்பர் - ஒரு அழகான பெண் தெருவில் சென்றால் ஆண்கள் அவளை உன்னிப்பாக  கவனிப்பார்கள். அவள் அழகை வைத்த கண் வாங்காமல் ரசிப்பார்கள். பெண்களுக்கும் ஆண்கள் மேல் ஒரு கவர்ச்சி உண்டு. ஆனால், அவர்கள்  கூர்ந்து நோக்குவது இல்லை. அப்படி லேசாக கடை கண்ணால், அல்லது  கண் பார்வையை மேலோட்டமாக பார்ப்பது என்று உண்டு. ஆங்கிலத்தில்  tunnel vission , peripheral vision என்று  சொல்லுவார்கள்.

ஆண்களுக்கு வீட்டில் ஒரு பொருள் அந்த இடத்தில் இல்லை என்றால் தவித்துப் போவார்கள். கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். அது அவர்கள் கண்ணில் படாது. மனைவி வந்து "இங்க தான இருக்கு " என்று எடுத்து கையில் கொடுத்தால் அசடு வழிவார்கள். காரணம், அவர்கள் பார்வை ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே பார்க்கும். அக்கம் பக்கம் பார்க்காது.

ஆனால் பெண்கள் பார்வை அப்படி அல்ல. சுத்து வட்டாரத்தை ஒரு அலசு அலசும். எனவேதான் பெண்கள் வேகமான வாகனங்களை ஓட்ட சற்று சிரமப் படுவார்கள்.  பார்வை நேரே சாலையில் மட்டும் இருப்பது இல்லை. அப்படியே அலசிக் கொண்டிருக்கும்.

இதை அறிந்த வள்ளுவர், "பொதுப் பார்வை" என்றார்.

நண்ணேன் = விரும்ப மாட்டேன், பொருந்த மாட்டேன். கட்டி அணைக்க மாட்டேன் என்கிறாள். அவனை அனைத்துக் கொள்ள ஆசைதான். இருந்தும், கூச்சம். எல்லாரும் பார்த்த மார்பு இது. எப்படியெல்லாம் பார்த்து இருப்பார்கள். சீ,  இப்படி எல்லோரும் பார்த்த மார்பை நான் எப்படி அணைப்பேன் என்று தள்ளி நிற்கிறாள்.

இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்ன என்றால்,  கணவன் மேல் தவறு இல்லை. மத்த பெண்கள் பார்த்தார்கள். அதற்கு அவன் என்ன செய்வான். அவன்  அழகாக இருக்கிறான் என்ற பெருமை அவளுக்கு. அவனை எல்லோரும் இரசிக்கிறார்கள் என்ற பெருமிதம் அவளுக்கு. இருந்தும், அவன் யாரையும்  பார்க்கவில்லை. என்னை மட்டுமே விரும்புகிறான் என்ற காதல் எண்ணம் அவளுக்கு.

ஆணின் ஆளுமையை படம் பிடிக்கிறார்.

பெண்ணின் காதலை படம் பிடிக்கிறார்.

மற்ற பெண்கள் பார்த்ததற்கே ஊடல் கொள்ளும் உன் மனைவி, நீ நிஜமாகவே அந்த பெண்கள் பின்னால்  போனால் எவ்வளவு வருந்துவாள் என்று சொல்லாமல் சொல்கிறார்.

அப்படி செய்தால் , உன் மனைவியின் உண்மையான காதலை இழப்பாய் என்று  கணவனுக்கு இரகசியமாக சொல்கிறார்.

காமத்துப் பாலிலும் அறம் சொல்லிச் செல்கிறார். 

No comments:

Post a Comment