Wednesday, December 14, 2016

இராமாயணம் - மன்னவர் மன்னவா

இராமாயணம் - மன்னவர் மன்னவா 



தயரதன் இறந்ததையும் , இராமன் கானகம் போனதையும் அறிந்த பரதன், அந்த இரண்டுக்கும் காரணம் தன் தாயான கைகேயி தான் என்று அறிந்து அவளை சுடு சொற்களால் ஏசி விட்டு, கோசலையை காணச் செல்கிறான். கோசலையும் "உன் தாயின் செயல் உனக்குத் தெரியாததா" என்று கேட்கிறாள். அதனால் மனம் நொந்து, "என் தாய் கேட்ட வரங்கள் எனக்கும் தெரியும் என்றால், மிகப் பெரிய பாவங்களை செய்தவர்கள் செல்லும் நரகத்துக்கு நான் போவேன் " என்று அந்த பாவங்களை பட்டியல் இட்டு சூளுரைக்கிறான்.

அவனுடைய நல்ல மனதை அறிந்த கோசலை அவனை "மன்னர் மன்னவா" என்று வாழ்த்துகிறாள்.

பாடல்


‘முன்னை நும் குல முதலுேளார்கள்தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! ‘என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.


பொருள் 

‘முன்னை = முன்னால்

நும் = உன்னுடைய

குல = குலத்தில் தோன்றிய

முதலுேளார்கள்தாம் = அரசர்களில்

நின்னை யாவரே = உனக்கு யார்

நிகர்க்கும் = சமமாகும்

நீர்மையார் = தன்மை கொண்டவர்கள் ?

மன்னர் மன்னவா! = மன்னர்களின் மன்னவனே

என்று வாழ்த்தினாள் = என்று வாழ்த்தினாள்

உன்ன உன்ன = நினைக்க நினைக்க

நைந்து = இற்றுப் போய்

உருகி விம்முவாள் = உருகி விம்முவாள்

தனக்கு பதில் பரதன் முடி சூட்டப் போகிறான் என்று இராமன் தன்னுடைய தாயான  கோசாலையிடம் கூறிய போது  "நின்னினும் நல்லன் " என்று பரதனை கூறினாள்.

அடுத்து, பரதனை நேரில் கண்டு பேசிய பின் அவனை "மன்னர் மன்னவா" என்று  அவனை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகிறாள்.

இராமன் மன்னனாகி இருப்பான்.

பரதன் மன்னர்களுக்கு எல்லாம்  மன்னவன் என்று வாழ்த்துகிறாள்.

இது வரை சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களில் யார் உனக்கு இணையாவார்கள் , யாரும் ஆக மாட்டார்கள் என்று கூறுகிறாள்.

அப்படி என்ன செய்து விட்டான்  பரதன் ?

இரண்டே இரண்டு விஷயம் தான்

ஒன்று, நல்லதே நினைத்தது

இரண்டாவது, மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக பேசியது.

இன்னும் பரதன் எப்படி உயருகிறான் என்று  பார்ப்போம்.


No comments:

Post a Comment