Friday, December 9, 2016

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு

திருக்குறள் - உடம்போடு உயிரிடை நட்பு


உடம்புக்கும், உயிருக்கும் இடையேயான உறவு எப்படி பட்டது ?

முதலில் உயிர் என்று ஒன்று இருக்கிறதா என்றே நமக்குச் சந்தேகம் இருக்கிறது. அது தெரிந்தால் அல்லவா அதற்கும் உடலுக்கும் இடையில் உள்ள உறவை பற்றி ஆராய முடியும்.

உயிர் வேறு. உடம்பு வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள உறவு என்ன என்பதை ஒண்ணே முக்கால் அடியில் சொல்கிறார் வள்ளுவர்.

என்ன ஒரு சிந்தனை . என்ன ஒரு  தெளிவு. சிலிர்க்க வைக்கும் அர்த்தம்.

பாடல்

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு.

பொருள்

குடம்பை = கூட்டினை

தனித்தொழியப் = தனித்து விட்டு

புட்பறந் தற்றே = புள் + பறந்தற்றே = புள் என்றால் பறவை. பறவை பறந்த மாதிரி

யுடம்பொ டு = உடம்போடு

உயிரிடை நட்பு = உயிருக்கு இடையிலான நட்பு

கூட்டை விட்டு பறவை பறந்து செல்வது மாதிரி உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு.

அதுசரி, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய build up னு கேட்கிறீர்களா ?

.சிந்திப்போம்

ஒரு பறவை மரத்தில் கூடு கட்டுகிறது.  கூட்டில் முட்டை இடுகிறது. கூட்டை கேட்டு அது  முட்டை இடுவது இல்லை. முட்டையில் இருந்து குஞ்சு வெளி வருகிறது. வந்தவுடன் அது பறந்து விடுவது இல்லை. கொஞ்ச காலம் இருந்து, இறக்கை முளைத்தவுடன் , பறந்து விடுகிறது.  பறவை பறந்து போன பின் கூடு  வெறுமையாக இருக்கிறது.

உயிர்கள் தாங்கள் சேர்த்து வைத்த வினைகளின் பலனை அனுபவிக்க உடலை எடுக்கின்றன. அனுபவித்து முடிந்தவுடன், உடலை விட்டுப் போய் விடுகின்றன. ஆவி போன பின் அந்த உடல் எனும் கூடு வெறுமனே கிடக்கும் . நாளடைவில் , அந்த கூட்டில் உள்ள குச்சிகள் மழையிலும் காற்றிலும் கீழே விழுந்து மக்கிப் போகும். நம் உடல் புதைக்கப் பட்டோ, எரிக்கப் பட்டோ அழிந்து போவதைப் போல.

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால்,  குடம்பை என்பதற்கு முட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

அதுவும் ஒரு கூடுதானே.

ஒரு முட்டையை பார்த்தால், அது உயிரற்றது போலத்தான் தெரியும். அதற்குள் உயிர் இருக்கிறது.

ஒரு காலம் வந்தவுடன், முட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே உள்ள பறவை வெளியே வரும். வெளியே பறவை வந்தவுடன், அந்த முட்டை தனித்து விடப்படும். அதை தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். முட்டையின் வேலை முடிந்து விட்டது.

யோசித்துப் பாருங்கள்.

நம் உடல் எதற்கு ? நமக்குள்ளே உள்ள நம்மை அறிய, ஞானம் பெற, அனுவங்களால் அறிவைப் பெருக்க. உடல் என்பது ஒரு கருவி. அது முடிந்தவுடன் , கருவியை தூக்கிப் போட்டுற வேண்டியதுதான்.

நாம் என்ன செய்கிறோம் ?

உடலைப் போற்றி பாதுகாக்கிறோம். அதுக்கு சோப்பு, வாசனை திரவியம், உடை என்று  அதிலேயே நம் கவனம் பூராவும்.  மரணம் வந்தால் கவலைப் படுகிறோம்.

காலத்தில் முட்டை உடைந்தால் தான், உள்ளே உள்ள உயிர் வெளியே வந்து,  வளர  முடியும். முட்டைக்குள்ளேயே இருந்தால், அந்த பறவை இறந்து விடும் அது மட்டும் அல்ல, முட்டையும் அழுகி விடும். முட்டை உடைந்து உள்ளே உள்ள பறவை  வெளியே வருவதுதான் எல்லோருக்கும் நல்லது.

அது போல, இந்த உடலை சரியான வழியில் நாம் உபயோகப் படுத்தி உள்ளே இருக்கும்  உயிர், அல்லது ஆத்மா அல்லது அதன் பெயர் என்னவோ அதை வளர்க்க வேண்டும்.

உடலைப் போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். உதாசீனப் படுத்தக் கூடாது.  ஆனால், அது உடலுக்காக வேண்டி அல்ல. உடலுக்கு உள்ளே உள்ள உயிருக்காக.

"உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்பார் திருமூலர்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பது திருமந்திரம். 

உடல் என்பது முட்டை

உயிர் என்பது அந்த முட்டைக்குள் இருக்கும் பறவை குஞ்சு 

"தனித்தொழியப்" என்றார். 

பறவை குஞ்சு மீண்டும் முட்டைக்குள் போக விரும்பாது. அதை அனுப்பவும் முடியாது. அதே போல, உயிரும் ஒரு முறை உடலை விட்டு வெளியே வந்து விட்டால் மீண்டும் உடலுக்குள் போக விரும்பாது. முட்டை தனித்துத்தான் கிடக்கும். 

இந்த பிறவி என்ற சக்கரத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமல் கா என்று உருகினார் பட்டினத்தார் 

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாழாமற் கா’

என்பது பட்டினத்தடிகள் வாக்கு.

முட்டையிலிருந்து எப்படி குஞ்சு வெளி வரும் ? தானாகவே வந்து விடுமா ? இல்லை, அதை அடை காக்க வேண்டும்.

அப்படி அடை காத்து இந்த உடலில் இருந்து உயிரை வெளிவரச் செய்து அது மீண்டும் இன்னொரு  உடலுக்குள் போகாமல் காப்பது குருவின் வேலை, ஆச்சாரியாரின்  வேலை.

என்னுடைய "வித்து மேலும் விளையாமல்" காத்தவனே என்று திருக்கழுக்குன்றில் இருக்கும் சிவனை போற்றுகிறார் மணிவாசகர்.

பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,

கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

என்பது திருவாசகம்.

முட்டைக்குள் இருக்கும் பறவைக் குஞ்சு சிறை பட்டிருக்கும். முட்டை உடைந்து  வெளியே வந்தால் வானம் வசப்படும்.

நீங்கள் முட்டைக்குள் இருந்து துன்பப் பட பிறந்தவர்கள் அல்ல. வெளியே வந்து  வானத்தை வசப்படுத்துங்கள். உடலை வளப்படுத்தி உயிரை வளருங்கள். வளர்ந்த உயிர் வானத்தை அளக்கும். நல்லதைப் படியுங்கள். நல்லவற்றை கேளுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். உடல் உங்களுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எத்தனையோ விதமான உடல்கள் கிடைத்திருக்கலாம். புல்லாக, புழுவாக, மிருகமாக, பறவையாக ,பாம்பாக என்று ஏதோ ஒன்று கிடைத்து இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால்  அந்த உடல்கள் எல்லாம் எடுத்துத் தான் இருந்தீர்கள்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்பார் மணிவாசகர். எத்தனையோ பிறவிகள் எடுத்து , இளைத்து இந்த மனிதப் பிறவியில் உன்னை அடைந்தேன் என்கிறார்.

நல்ல மனிதப் பிறவி கிடைத்தபின்னும் அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடக் கூடாது.

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

என்பது அவ்வை வாக்கு. 



அருமையான இந்த உடலைப் பெற்று ஞானம், கல்வி, தானம் , தவம் என்று நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

பின் மீண்டும் வராத வானவர் நாடு வழி திறக்கும்.


No comments:

Post a Comment