Saturday, January 21, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான்

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான் 


பரதனைக் காண குகன் வருகிறான். முதலில் ஏதோ இராமன் மேல் கோபம் கொண்டுதான் பரதன் வந்து விட்டான் என்று நினைத்தான். பின், பரதனின் தவ வேடம் கண்டு, தான் நினைத்தது தவறு என்று அறிந்து, பரதனைக் காண குகன் தனியே வருகிறான்.

வரும் குகனை நானே சென்று பார்ப்பேன் என்று பரதன் எழுந்து செல்கிறான்.

குகனை நோக்கி கை கூப்பிய படி வருகிறான் பரதன். அப்படி வந்த பரதனை குகன் வணங்கினான்.  வணங்கிய குகனின் கால்களில் பரதன் விழுந்தான். விழுந்த பரதனை ஒரு தந்தை மகனை எடுத்து அணைப்பது போல எடுத்து அணைத்துக் கொண்டான்.

பாடல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்

    வீற்றிருக்கும் சீர்த்தியான்.


பொருள்


வந்து = தனியாக வந்து (வந்தது குகன்)

எதிரே தொழுதானை = எதிரில் தொழுத படி நிற்கும் பரதனை

வணங்கினான் = (குகன்) வணங்கினான்

மலர் இருந்த அந்தணனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

தனை வணங்கும் = தன்னை வணங்கும்படி இருக்கும்

அவனும் = பரதனும்

அவனடி வீழ்ந்தான் = குகனின் காலில் விழுந்தான்

தந்தையினும் களி கூரத் = ஒரு தகப்பனைவிட மிக மகிழ்ந்து

தழுவினான் = தழுவிக் கொண்டான் குகன்

தகவு உடையோர் = தகுதி உடையவர்கள்

சிந்தையினும் = சிந்தனையிலும்

சென்னியினும் = தலையிலும்


வீற்றிருக்கும் சீர்த்தியான் = எப்போதும் இருக்கும் பெருமை கொண்ட குகன்


பரதன் குகனைத் தொழுதான்

குகன் பரதனை வணங்கினான்

பரதன் குகன் காலில் விழுந்தான்

குகன் பரதனை தழுவிக் கொண்டான்

என்ன நடக்கிறது இங்கே ?

பரதன் ஒரு பேரரசின் மன்னன். குகன் ஒரு ஓடம் ஓட்டுபவன்.  ஒரு சக்கரவர்த்தி  ஓடம் ஓட்டுபவனின் காலில் விழுவதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா ?

பரதன் விழுந்தான்.

பரதனுக்குத் தெரியாதா ?

தெரியும்.

பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்து இருக்கிறது.

முதலாவது, இறைவனின் முன்னால் எல்லோரும் சமம். உருவம் இராம பக்தர்கள். இதில் பெரியவன் என்ன சிறியவன் என்ன. யாரை யார் தொழுதால் என்ன ? யார் காலில் யார் விழுந்தால் என்ன ? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இரண்டாவது, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். குகன் பரதனை தழுவிக் கொண்டான்.  வீட்டுப் பெண்மணிகள், தங்கள் வீட்டில் வேலை பார்க்கும்  பெண்களை தழுவிக் கொள்வதை நம்மால் சிந்திக்க முடியுமா ?  வீட்டு வாசலில் காவல் நிற்கும் அந்த காவலாளியை நம்மால் கட்டி அணைக்க முடியுமா ?  கையாவது கொடுப்போமா ?  வியர்வையில் நனைந்து, மீன் வாடை அடைக்கும் குகனை பரதன் தழுவிக் கொண்டான். அன்பும் பக்தியும் வந்து விட்டால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சின்னவன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. எல்லோரும் சமம். இது வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது, பக்தர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று பக்தர்களுக்குள்ளேதான் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. அவர் பெரியவர். இவர்  பெரியவர். அவர் இத்தனை முறை அந்த கோவிலுக்குப் போய் இருக்கிறார், அவர் மடாதிபதி, சன்னிதானம், தலைவர், குரு , என்று ஆயிரம் பாகுபாடுகள். இதெல்லாம் போக வேண்டும். ஒரே ஒரு முறை பார்த்த குகனும், கூடவே பிறந்த பரதனும் ஒருவருக்கு ஒருவர் சமமாக பழகினார்கள். பக்தியில்  சீனியாரிட்டி எல்லாம் கிடையாது.


நான்காவது, இராமன் குகனை தம்பி என்றான். குகனோ பரதனை மகனாக நினைக்கிறான். ஒரு தந்தை தன் மகனை அணைத்துக் கொண்டாள் எவ்வளவு மகிழ்வானோ , அதை விட மகிழ்ந்தான் குகன். அவ்வளவு அன்பு, வாஞ்சை. பக்தி என்று வந்து விட்டால், அன்புக்கு அளவே இல்லை.

பக்தி செலுத்துவோருக்கு ஒரு பாடம் இந்த பாடல்.



No comments:

Post a Comment