Tuesday, January 10, 2017

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்


இராமனை சித்திரகூடம் அனுப்பிவிட்டு கங்கையின் மறு கரையில் குகன் நிற்கிறான். இராமனை அழைத்துச் சென்று நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தக் கரையில் பரதன் நிற்கிறான்.

எதிர் கரையில் நிற்கும் குகனைப் பற்றி பரதனிடம் சுமந்திரன் கூறுகிறான்.

பாடல்

“கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.

பொருள்

‘கல் காணும் திண்மையான் = கல் போன்ற வலுவான உடல் உடையவன்

கரை காணாக் காதலான் = இராமன் மேல் கரை இல்லாத அளவு அன்பு கொண்டவன்

அல் = இருட்டு, கருப்பு

காணில் = கண்டால்

கண்டு அனைய = சேர்ந்து இருந்த

அழகு அமைந்த = அழகு கொண்ட

மேனியான் = மேனியை உடையவன்

மல் = மல்யுத்தம்

காணும் = செய்யும்

திரு நெடுந்தோள் = சிறந்த பெரிய தோள்களை உடையவன்

மழை காணும் = மழை கொண்ட மேகம் போன்ற

மணி நிறத்தாய்! = நீல மணி போல ஒளி விடும் நிறம் கொண்டவனே

நின் காணும் உள்ளத்தான் = உன்னைக் காணும் உள்ளத்தோடு இருக்கிறான் (குகன்)
,
நெறி = வழியில்

எதிர் நின்றனன் ‘‘ என்றான் = எதிரில் நிற்கின்றான் என்றான்

இராமனும், குகனும், பரதனும் கரிய நிறம். அதுவும் ஒரு அழகுதான் என்று ரசிக்கிறான்  கம்பன்.

குகனுக்கு உடல் முரடு. கற் பாறை போன்ற  உருவம்.

கரிய நிறம்.

ஆனால், உள்ளம் எல்லாம் காதல். கரை காணா காதலான் என்கிறான் கம்பன்.
அளவிடமுடியாத காதல்.

"நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் "

இதற்கு இரண்டு விதத்தில் பொருள் கொள்ளலாம்.

ஒன்று, உன்னை காணும் நோக்கோத்தோடு எதிரில் நிற்கிறான் என்பது ஒரு பொருள்.

இன்னொன்று, உன்னை ஒரு கை பார்க்க, படையோடு உன்னை எதிர்த்து நிற்கிறான் என்பது இன்னொரு பொருள்.

எது எப்படியோ, பரதனுக்கு இது எல்லாம் காதில் விழவே இல்லை....அவனுக்கு கேட்டதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்....

அது .....

No comments:

Post a Comment