Sunday, January 8, 2017

இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்

இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்


இராமனைக் கொல்லவே பரதன் வந்திருக்கிறான் என்று குகன் நினைத்து விட்டான். நினைத்தது மட்டுமல்ல, பரதன் மேல் சண்டை போட தன் படைகளை தயார் விட்டான். குகனும், அவன் படைகளும் போருக்கு தயாராக நிற்கின்றனர். பரதனுக்கு இது எதுவும் தெரியவில்லை. இராமன் சென்ற திசை பார்த்து நிற்கிறான். பரதனின் அமைச்சன், நிலைமையை எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘கங்கை இரு கரை உடையான்;
     கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
     உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
     வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
     குகன் என்னும் குறி உடையான்.


பொருள்


‘கங்கை = கங்கை ஆற்றின்

இரு கரை = இரண்டு கரைகளையும்

உடையான் = ஆட்சி செய்பவன்

கணக்கு இறந்த = கணக்கில் அடங்காத

நாவாயான் = படகுகளை உடையவன்

உங்கள் = உங்கள்

குலத் = குலத்தில் தோன்றிய

தனி நாதற்கு = தனிச் சிறப்பு வாய்ந்த நாயகனான இராமனுக்கு

உயிர்த் துணைவன்; = உயிர் போன்ற துணைவன்

உயர் தோளான் = பரந்த தோள்களை உடையவன்

வெங்கரியின் ஏறு அனையான் = மதம் கொண்ட ஆண் யானை போன்றவன்

வில் பிடித்த வேலையினான் = விற்களைப் பிடித்திருக்கும் சேனையை கடல் போலக் கொண்டவன்

கொங்கு அலரும் = மொட்டு மலரும்

நறுந் தண் = மணம் வீசும் குளிர்ச்சியான

தார்க் = மாலை அணிந்தவன்

குகன் என்னும் குறி உடையான் = குகன் என்ற பெயரைக் கொண்டவன்

எப்படி பேச வேண்டும் என்று கம்பன் பாடம் நடத்துகிறான்.

சில பேர் பேச ஆரம்பித்தால் எப்படா முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறான் என்று  பொறுமை அத்துப்  போகும்.தேவை இல்லாத விஷயங்களை எல்லாம்   முதலில் சொல்லி விட்டு கடைசியில் சொல்ல வந்ததை  சொல்லுவார்கள்.

அது தவறு.

முதலில் சொல்ல வந்ததை,  எது முக்கியமானதோ, எது கேட்பவர்ககு தேவையோ  அதை முதலில் சொல்ல வேண்டும்.

பரதனுக்கு என்ன வேண்டும் இப்போது ?

கங்கை கரையை கடக்க வேண்டும், அதற்கு படகு வேண்டும். இராமன் இருக்கும் இடம் தெரிய  வேண்டும். ....

சுமந்தரன் சொல்லுகிறான்...

' கங்கை கரையை உடையவன்'

'கணக்கில் அடங்காத படகுகளை கொண்டவன் '

பரதனுக்கு  புரிந்திருக்கும், கங்கையை கடக்க குகனின் துணை வேண்டும் என்று.

அது மட்டும் அல்ல, இந்த குகன் உங்கள் இராமனின் நண்பன் என்றும் அறிமுகப் படுத்துகிறான். எனவே அவனுக்கு இராமன் இருக்கும் இடம் தெரியும்  என்பதும் பாரதனுக்குப் புரிந்திருக்கும்.

அது மட்டும் அல்ல, குகன் பெரிய பலசாலி என்று சொல்கிறான்.

சுமந்திரன் பாடு சங்கடமான ஒன்று.

குகன் நினைக்கிறான் பரதன் இராமனை கொல்ல வந்திருக்கிறான் என்று. எப்படியாவது  பரதனை அழிக்க வேண்டும் என்று படையை தயார் செய்து விட்டான்.

பரதனுக்கு குகன் மேல் பகை இல்லை. குகன் தன் மேல் கோபம் கொள்ள காரணம்  எதுவும் இல்லை என்ற நினைப்பு அவனுக்கு இருக்கும்.

என்ன செய்வது. மேலே போனால், குகன் பரதன் மேல் அம்பு எய்வது உறுதி.
மேலே போகவும் வேண்டும். குகனைப் பற்றி பரதனிடம் சொல்லவும் வேண்டும்.

எப்படிச் சொன்னான் என்று பார்ப்போம்




No comments:

Post a Comment