Tuesday, February 21, 2017

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ? பாகம் 2

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ? பாகம் 2


(இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் - 

)



புலன்களை இறை சிந்தனைக்கு ஆட்படுத்தச் சொல்கிறார். ஒவ்வொரு புலனையும் இறைவனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும் ? இறைவனிடம் தானே ? போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்கிறார்.

பாடல்

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
 கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டுமிலித்தனிய னேற்கே


பொருள்


சிந்தனை = சிந்தனை, மனம், எண்ணங்களை

நின்தனக்கு ஆக்கி = உனக்கு என்று ஆக்கி

நாயினேன் தன் = நாய் போன்ற கீழான என்

கண் இணை = இரண்டு கண்களையும்

நின் = உன்னுடைய

 திருப்பாதப் = திருவடிகள் என்ற

போதுக்கு ஆக்கி = மலர்களுக்கு ஆக்கி

வந்தனையும் = என் வணக்கத்தையும்

அம்மலர்க்கே ஆக்கி = அந்த திருவடிகளுக்கே ஆக்கி

வாக்கு = என் பேச்சை

உன் = உன்னுடைய

மணிவார்த்தைக்கு ஆக்கி = உன் பெருமைகளை பேசும்படி செய்து

ஐம்புலன்கள் ஆர = எனது ஐந்து புலன்களும் அமைதி அடைய

வந்தனை = வந்து என்னை

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

உள்ளே புகுந்த = எனதுள்ளே புகுந்து

விச்சை = வித்தை

மால் = விரும்பும்

அமுதப் பெரும் கடலே = அமுதத்தாலான கடலைப் போன்றவனே

மலையே = மலையே

உன்னைத் தந்தனை = உன்னை எனக்குத் தந்தனை

செந் தாமரைக்காடு = சிவந்த தாமரை மலர்களைக் கொண்ட காடு 

அனைய மேனித் = போன்ற உடல் கொண்டவனே

தனிச்சுடரே = தனித்துவம் வாய்ந்த சுடரே

இரண்டும் = இரண்டும்

இலி = இல்லாத

தனிய னேற்கே = தனியனான எனக்கே

புலன்களையும் , அவற்றை செலுத்தும் மனதையும் கட்டுப் படுத்த முடியாது. ஆனால் அவை போகும் திசையை மாற்ற முடியும். அவற்றை நல்ல வழியில் திருப்பி விட்டால் அவை அந்த வழியில் போகும். 

சரி, புலங்களையும் மனதையும் இறைவன் பால் திருப்பினால், அதனால் நமக்கு ஒரு இன்பம் இருக்குமா ?

மனைவியின் அணைப்பு, குழந்தையின் விரல் தீண்டும் இன்பம், சுவையான உணவு, இனிய சங்கீதம், இயற்கை காட்சிகள் என்ற இன்பத்தை எல்லாம்  விட்டு விட்டு , இறைவனை நினை என்றால் அதில் என்ன இன்பம் இருக்கும் ?

இருக்கும் என்கிறார் மணிவாசகர்.

மால் அமுதப் பெரும் கடலே மலையே


அமுதம்இ இனிமையானது. உடலையும் உயிரையும் இணைத்து வைக்கக் கூடியது. ஒரு கடலளவு அமுதம் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அள்ள அள்ள குறையாத இன்பம். நாம் குடுத்தா கடல் வற்றி விடும் ?

மலை போல் குவிந்து கிடக்கும் இன்பம்.

சரி. அது என்ன கடலே , மலையே என்கிறார். கடலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் ?

மிக உயரமானது மலை. மிக ஆழமானது கடல். இரண்டையும் சொன்னால் , இவை இரண்டுக்கும்  இடைப்பட்ட அனைத்தும் இதில் அடங்கும்.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்லுவது போல.

வேங்கடம் முதல் , குமரி வரை என்று சொல்லுவதைப் போல.

இறைவன் அமுதக் கடல் போன்றவன். அமுத மலை போன்றவன்.

அவன் எப்படியும் இருந்து விட்டு போகட்டும். அவனை நினைப்பதால் எனக்கு இன்பம் வருமா ?

வரும் என்கிறார்கள். மணிவாசகர் மட்டும் அல்ல.

ஐம்புலன்கள் ஆர

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருபவன் இறைவன். புலன்கள் ஆர என்றால் திருப்தி அடைய, அமைதி அடைய என்று பொருள்.

உலகில் நமக்கு ஒவ்வொரு பொருளும் ஒரு சில இன்பங்களைத் தரும். சில ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும்.

ஊதுபத்தி நல்ல மணம் தரும். பார்க்க ஒன்றும் அழகாக இருக்காது. அதை சுவைக்க முடியாது. ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும்.

மல்லிகை , இனிய நறுமணம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும். இரண்டு புலன்களுக்கு இன்பம் தரும். ஆனால் அதை சுவைக்க முடியாது. கசக்கும்.

லட்டு , பார்க்கவும் அழகாக இருக்கும், நெய் வாசம் நாசிக்கும் இனிமையாக இருக்கும். வாயில் போட்டால் சுவையாகவும் இருக்கும். அது மூன்று புலங்களுக்கு இன்பம் தரும். ஆனால் பாடாது. அதை தொட்டு பார்ப்பதில் ஒரு பெரிய சுகம் இல்லை.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது, எது தெரியுமா ?

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருபவர்கள்.

நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லுகிறார்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும், கேட்டும், தொட்டும், முகர்ந்து, சுவைத்து மகிழும் இந்த ஐந்து புலன்களுக்கு இன்பமும் இந்த அழகிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்ணிடம் உள்ளது என்கிறார்.

சரி அப்படி என்றால் அவளையே பற்றி இருக்க வேண்டியதுதானே. எதற்கு ஆண்டவன் ?

இருக்கலாம். ஆனால், ஆணோ பெண்ணோ அவர்கள் மூலம் பெறும் இன்பம் ஒரு சிறிது  நேரம். சிறிது காலம்.   இளமையும் அழகும் உடல் வலிமையையும் கொஞ்ச நாள் தான். நீண்ட இன்பம் தராது.

பேரின்பத்தின் முதல் படி சிற்றின்பம். இந்தப் படியில் காலை வைத்து அங்கு போக வேண்டும்.

திருவாய்மொழியில்,

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

ஆர பருக  என்பார் ஆழ்வார்.


புலன்களோடும், மனதோடும் அவற்றை அடக்க வேண்டும் என்று சண்டை போடாதீர்கள். அவற்றை இறைவன் பால் திருப்பி விடுங்கள்.

தீராத இன்பம் கிடைக்கும் என்கிறார் மணிவாசகர்.




1 comment:

  1. இறைவனிடம் ஐந்து புலன்களையும் திருப்பி விட்டால், மனித இனமே நாளடைவில் அழிய வேண்டியதுதானா?! ஒரு அளவோடு எல்லா இன்பங்களையும் அனுபவிப்பது மேல் அல்லவா?

    ReplyDelete