Sunday, February 19, 2017

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ?

திருவாசகம் - புலன்களை என்ன செய்வது ?


இந்த புலன்கள் இருக்கிறதே , இவை நமக்கு நல்லது செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா ?

எந்த புத்தகத்தை எடுத்தாலும் ஏதோ இந்த புலன்கள் நமக்கு வாய்த்த வில்லன்கள் போலவே சொல்லுகின்றன. நம்மை தீய வழியில் இட்டுச் செல்லும், நம்மை பாவம் செய்யத் தூண்டும், நம்மை நரகத்தில் தள்ளி விடும் என்றெல்லாம் நம்மை பயமுறுத்துக்கிறார்கள்.

அப்படியா ?

புலன்களின் துணை இல்லாமல் நம்மால் வாழ முடியுமா ?

பார்க்காமல், பேசாமல், நுகராமல், தொடாமல், கேட்காமல் நம்மால் இருக்க முடியுமா ?

அப்படியே இருந்தாலும் அது என்ன வாழ்க்கை...மரக்கட்டை போல, ஒரு கல்லை போல வாழும் வாழ்க்கையில் என்ன சுகம் இருக்க முடியும்.

ஒருவேளை இந்த புலன்களை எல்லாம் அடக்கி , தவம் செய்து , இறைவனை அடைந்து விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம்...இறைவனை பார்க்க வேண்டாமா ? அவனைப் பற்றி பேச வேண்டாமா..அதற்கெல்லாம் புலன்கள் வேண்டுமே.

அப்படியானால் என்ன தான் செய்வது ?

புலன்கள் நல்லதும் செய்கின்றன. அல்லதும் செய்கின்றன.

அவற்றை வேண்டாம் என்று ஒரேயடியாக ஒதுக்கவும் முடியவில்லை. வேண்டும் என்று வைத்துக் கொண்டு கொண்டாடவும் முடியவில்லை.

என்ன செய்யலாம்.

சரி, கொஞ்சமாக அவற்றை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா ? ஒரு இட்டு, வாரம் ஒரு சினிமா...என்று ஒரு வரையறுத்து அனுபவிக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

கொஞ்சம் இடம் கொடுத்தால், இழுத்துக் கொண்டு ஓடி விடும். ஒன்று என்று ஆரமபித்த எதுவும் ஒன்றில் நிற்பதில்லை. மேலும் மேலும் என்று புலன்கள் இன்பங்களை அன்புபவிக்கத் துடிக்கின்றன.

பின் என்ன தான் செய்வது ?

மாணிக்க வாசகர் வழி சொல்லுகிறார். .

புலன்களை நல்ல வழியில் விடுங்கள். அது எவ்வளவு போகுமோ போகட்டும். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு அதிகம் அந்த வழியில் போகிறதோ, அவ்வளவு நல்லது.

புலன்களை கட்டுப் படுத்த முடியாது என்று மாணிக்க வாசகர் உணர்ந்து இருக்கிறார்.

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய என்பார் திருவாசகத்தில்.

கட்டுப் படுத்த முடியாத புலன்களை நல்ல வழியில் செலுத்தும் படி சொல்லுகிறார்.

நல்ல வழி என்றால் என்ன வழி ?

புலன்களை இறை சிந்தனைக்கு ஆட்படுத்தச் சொல்கிறார். ஒவ்வொரு புலனையும் இறைவனை நோக்கி திருப்பி விட்டு விடுங்கள். அது பாட்டுக்கு போகட்டும். எங்கு போகும் ? இறைவனிடம் தானே ? போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்கிறார்.

பாடல்

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
 கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
 மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
 மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத்
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித்
 தனிச்சுடரே இரண்டுமிலித்தனிய னேற்கே


பொருள்


சிந்தனை = சிந்தனை, மனம், எண்ணங்களை

நின்தனக்கு ஆக்கி = உனக்கு என்று ஆக்கி

நாயினேன் தன் = நாய் போன்ற கீழான என்

கண் இணை = இரண்டு கண்களையும்

நின் = உன்னுடைய

 திருப்பாதப் = திருவடிகள் என்ற

போதுக்கு ஆக்கி = மலர்களுக்கு ஆக்கி

வந்தனையும் = என் வணக்கத்தையும்

அம்மலர்க்கே ஆக்கி = அந்த திருவடிகளுக்கே ஆக்கி

வாக்கு = என் பேச்சை

உன் = உன்னுடைய

மணிவார்த்தைக்கு ஆக்கி = உன் பெருமைகளை பேசும்படி செய்து

ஐம்புலன்கள் ஆர = எனது ஐந்து புலன்களும் அமைதி அடைய

வந்தனை = வந்து என்னை

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

உள்ளே புகுந்த = எனதுள்ளே புகுந்து

விச்சை = வித்தை

மால் = விரும்பும்

அமுதப் பெரும் கடலே = அமுதத்தாலான கடலைப் போன்றவனே

மலையே = மலையே

உன்னைத் தந்தனை = உன்னை எனக்குத் தந்தனை

செந் தாமரைக்காடு = சிவந்த தாமரை மலர்களைக் கொண்ட காடு

அனைய மேனித் = போன்ற உடல் கொண்டவனே

தனிச்சுடரே = தனித்துவம் வாய்ந்த சுடரே

இரண்டும் = இரண்டும்

இலி = இல்லாத

தனிய னேற்கே = தனியனான எனக்கே

இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்

நாம் உற்று கவனித்தால் , புலன்களால் ஒன்றும் பிரச்சனை இல்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் மனம் தான்.  ஒரு பொருளை வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்லுவது மனம் தான். புலன்கள் உதவி  செய்கின்றன. அவ்வளவே.

எனவே, முதலில், மனதை திசை திருப்ப வேண்டும். அங்கங்கே அலையும் மனதை நல்ல வழியில் செலுத்தி விட்டால் , புலன்கள் கூடவே போகும்.

சிந்தனை நின் தனக்கு ஆக்கி என்றார்.

மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தால், புலன்களை கட்டுப் படுத்த முடியாது.

மனதை கட்டுப் படுத்த முடியாது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். கட்டுப் படுத்துவதற்கு பதில், அதை இறைவன் பால் திருப்பி விட்டு விட வேண்டும். அவ்வளவுதான்.


"நாயினேன்" என்கிறார்.

ஏன் ? நாய் நன்றியுள்ள பிராணி தானே. அதை ஏன் குறிப்பிட்டு கூறுகிறார் ?

நாய்க்கு இரண்டு கெட்ட  குணங்கள் உண்டு.

முதலாவது, என்ன தான் அதை கழுவி குளிப்பாட்டி, நடு வீட்டில் வைத்தாலும், உடையவன் இல்லாத போது அது வெளியில் ஓடி அசிங்கத்தை உண்ணும் இயல்பு உடையது.

இரண்டாவது, வீட்டைக் காக்கும் நாய்தான், வீட்டிற்கு வரும் ஒரு திருடன் அந்த நாய்க்கு ரெண்டு ரொட்டித் துண்டோ, மாமிச துண்டோ போட்டால் அவன் பின்னால் வாலை குழைத்துக் கொண்டு போய் விடும்.

மனித மனமும் அப்படித்தான். என்ன தான் உயர்ந்த சிந்தனைகள் , இறை சிந்தனைகள் இருந்தாலும், அந்தப் பக்கம் ஒரு அழகான பெண் போனால் மனம் சலனம் அடையும்.  பூஜை செய்யும் போது பக்கத்து வீட்டில் நல்ல மணமுள்ள  பதார்த்தம் ஏதாவது செய்தால், மனம் அங்கே போய் விடும்.

புலன்களை கட்டிக் காக்க வேண்டிய மனம், சில சமயம், புலன் இன்பத்தின் பின்னால் போய் விடும்.

கவனமாக இருக்க வேண்டும்.

அதெல்லாம் சரி, எந்நேரமும் இறைவனை நினைத்துக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருக்குமா ?  சலிப்பு வராது.  மேலும், அதில் என்ன அப்படி ஒரு சந்தோஷம்  வந்து விடப் போகிறது ?

குழந்தையை எடுத்து முகர்ந்து பார்க்கும் சுகம் வருமா, இனிமையான பாடலை கேட்கும் சுகம் வருமா ,  ருசியான உணவை உண்ணும் இன்பம் கிடைக்குமா ?


(இன்னும் சிந்திப்போமா ?) 

1 comment:

  1. சிந்தனையை தொடருங்கள் 🙏

    ReplyDelete