Thursday, February 9, 2017

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்


ரொம்ப நாள் கழித்து யாராவது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போனால் "என்னப்பா ஆளையே காணோம். இப்பத்தான் என் நெனப்பு வந்துச்சா " என்று கேட்பார்கள் அல்லவா....

அது போல

நீண்ட நாள் கழித்து நாவுக்கரசர் சிதம்பரத்தில் உள்ள சிவ பெருமானை தரிசிக்கப் போகிறார்.

அங்கே சிவன் ஆடிய கோலத்தில் கையை அபிநயம் பிடித்தப்பிடி இருக்கிறார்.

அதைப் பார்த்த நாவுக்கரசருக்கு  "எப்ப வந்தாய் " என்று கேட்பது போல இருந்ததாம்....

பாடல்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்

ஒன்றி இருந்து = மனம் வாக்கு காயம் என இவை எல்லாம் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = நினையுங்கள்

உம் தமக்கு =உங்களுக்கு

ஊனம் இல்லை = குறை இல்லை

கன்றிய = சினந்த

காலனைக் = எமனை

காலால் கடிந்தான் =காலால் எட்டி விலக்கினான்

அடியவற்கா = அடியவனான மார்கண்டேயனுக்காக

சென்று தொழுமின்கள் = அவனை சென்று தொழுங்கள்

தில்லையுள் = தில்லையுள்

சிற்றம்பலத்து =சிற்றம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும்

என்று வந்தாய் என்னும் = என்று வந்தாய் என்று கேட்கும்

எம்பெருமான் = எம்பெருமானாகிய சிவனின்

தன் திருக்குறிப்பே = சைகையே


ஒன்றி இருந்து நினைமின்கள் - மனமும் உடலும் ஒன்றாக இருக்க வேண்டும். எங்கே முடிகிறது. கண்ணை மூடினால் ஆயிரம் சிந்தனைகள். அலையும் மனதை நிறுத்தி ஒருமுகப் படுத்த வேண்டும்.

காலால் கடிந்தான் - கடிதல் என்ற சொல்லுக்கு கண்டித்தல் , விலக்குதல் , ஓட்டுதல் என்று  பொருள்.

காலனை காலால் ஓட்டினான் என்ற தொடருக்கு எமனை எட்டி உதைத்தார் என்று பொருள்  கொள்ளக் கூடாது. எமன் என்ன தவறு செய்தான் ? காலம் முடிந்த ஒருவனின் உயிரை எடுப்பது அவனுக்கு இடப்பட்ட வேலை. கடமை.  அதைத்தானே  அவன் செய்தான். கடமையை செய்ததற்காக அவனை தண்டிக்கலாமா ? அதுவும் பல பேர் அறிய எட்டி உதைக்கலாமா ?

அது அல்ல பொருள்.

சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கூறுகிறது. அதில் காலம் என்பது ஒரு தத்துவம். மார்கண்டேயர் யோக மார்கத்தில் கால தத்துவத்தை கடந்து  சென்று விட்டார்.  "இரவும் பகலும் அற்ற வெளிக்கு " சென்று விட்டார்.  இதை அறியாத எமன் அவர் ஏதோ 16 வயது முடிந்து விட்டது என்று அவருடைய உயிரை எடுக்கச்  சென்றார். கால தத்துவத்துக்கு உட்பட்டவர்கள் உயிரை எடுப்பதுதான் அவனுக்கு இட்ட வேலை.  காலத்தை தாண்டிய மார்கண்டேயர் போன்ற யோகிகளின் உயிரை பறிக்க முயன்றது அவன் தவறு.

சரி. எமன் தவறு செய்த்ததாகவே  இருக்கட்டும். அதற்காக அவனை எட்டி உதைப்பதா ?

ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள  வேண்டும். சமய இலக்கியங்கள் இறைவனின் திருவடி என்று சொல்லுவது ஞானத்தை.

'திருவடிகளைத் தருவாய் " என்றால் ஞானத்தை தருவாய் என்று பொருள்.


நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து என்பார் அபிராமி பட்டர்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

என்பது அபிராமி அந்தாதி.

இறைவன் திருவடி தீண்டப் பெறுவதற்கு திருவடி தீட்சை என்று பெயர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவனின் சிலை நாவுக்கரசரைப் பார்த்து "எப்போது வந்தாய்" என்று கேட்பது போல இருந்ததாம்.

என்னிடம் வர ஏன் இவ்வளவு நாள் ? முதலிலேயே வரவேண்டியது தானே என்று கேட்பது போல இருந்ததாம்.

உடலில் வலு இருக்கும் போது , மனதில் உறுதி இருக்கும் போது , இரத்தம் சூடாக இருக்கும் போது மனிதன் இறைவனை நினைப்பது இல்லை.

தோல்விகள் துரத்தும் போது , வாழ்வின் நிகழ்வுகள் தன்னுடைய சக்தியை தாண்டி  நிகழும் போது , மனிதன் இறைவனை நோக்கி ஓடுகிறான்.

இறைவன் காத்து   இருக்கிறான்.

நீங்கள் எப்போது வருவீர்கள் என்று.





1 comment:

  1. திருவடியின் பெருமையை அழகாக உரைத்தீர்கள்.
    மகாபலியை பகவான் தன திருவடியால்தான் பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார். அகலிகைக்கு திருவடியால்தான் விமோசனம் கிடைத்தது. வைணவ கோவில்களில் பகவானின்
    பாதங்கள் பொருந்திய சடாரியை தலை மேல் வைப்பார்கள். நம் சம்பிரதாயத்தில் பாத ஸ்பர்சத்திற்கு முக்கிய இடம் உண்டு.

    ReplyDelete