Wednesday, March 22, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால் 


சினம் அன்பை முறிக்கும். உறவைக் கெடுக்கும். உண்மை எது என்று அறியவிடாமல் தடுக்கும். புத்தி தடுமாறச் செய்யும். தவறான முடிவுகளை எடுக்கச் செய்யும். தானே ஏதோ கற்பனை பண்ணிக் கொண்டு தவிக்கும். தூக்கம் போக்கும். உடல் நலத்தைக் கெடுக்கும்.

கோபத்தை தவிர்க்க வேண்டும்.

கோபத்தில் ஏதேதோ செய்து விட்டு, சொல்லி விட்டு வாழ் நாள் எல்லாம் வருந்துபவர் பலர்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.


என்பார் வள்ளுவர்.

சினம் என்பது தன்னை கொண்டவனை மட்டும் அல்ல, அவன் இனத்தையே சுடும் என்கிறார்.

இராமனைக் காண பரதன் வருகிறான். வரும் வழியில் பரத்துவாஜ முனிவரைக் காண்கிறான். அவர் எல்லோருக்கும் விருந்து அளிக்கிறார். எல்லோரும் நன்றாக உண்டார்கள் - பரதனைத் தவிர.

பின் அங்கிருந்து கிளம்பி இராமன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.

பரதனும் அவன் படைகளும் தூரத்தில் வருவதைக் கண்ட இலக்குவன், "ஆஹா, நாட்டை எடுத்துக் கொண்டது மட்டும் அல்ல, இராமனை கொல்லவும் இந்த பரதன் படையோடு வருகிறானே " என்று கோபம் கொள்கிறான்.


பாடல்

‘பரதன், இப் படை கொடு,
    பார் கொண்டான், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர்
    கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன்
    மேல், வந்தான்; இது
சரதம், மற்று இலது ‘எனத் ‘
    தழங்கு சீற்றத்தான்.

பொருள்


‘பரதன் = பரதன்

இப் படை கொடு = இந்த படைகளோடு

பார் கொண்டான் = உலகையே கொண்டவன். பார் கொண்ட பரதன் இந்த படையோடு வந்தான் என்று வாசிக்க வேண்டும் 

மறம் கருதி = போர் செய்யக் கருதி

உள் கிடந்தது ஓர் = மனதின் உள்ளே கிடந்த ஒரு

கறுவு = கோபம், மன வைராக்கியம்

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் என்பார் அருணகிரிநாதர்

கறுவு மிக்கு ஆவியை கலக்கும் அக் காலன் ஒத்து என்பது திருப்புகழ். நம் ஆவியை எப்படா கொண்டு போகலாம் என்று கறுவிக் கொண்டே இருப்பானாம் அந்த காலன்.

காதலால் = பேராசையால்

விரதம் உற்று இருந்தவன் = தவ விரதம் ஏற்று இருக்கும் இராமனை

மேல், வந்தான்; = சண்டை போட வந்திருக்கிறான்

இது சரதம் = இது உண்மை

மற்று இலது = வேறு எதுவும் இல்லை

எனத் தழங்கு சீற்றத்தான் = என்று முழக்கும் சீற்றம் கொண்ட இலக்குவன்


விசாரிக்கவில்லை. என்ன ஏது என்று தெரியாது. கண்டவுடன் கோபம் கொள்கிறான் இலக்குவன். 

பரதனை தவறாக நினைக்கிறான். 

கோபம் கண்ணை மறைக்கிறது. 

இலக்குவனுக்கே இந்த நிலை என்றால், நாம் எந்த மூலை .

வந்த கோபத்தில் என்னவெல்லாம் பேசுகிறான் தெரியுமா ?


No comments:

Post a Comment