Sunday, March 26, 2017

திருக்குறள் - பெண்ணின் காமம்

திருக்குறள் - பெண்ணின் காமம் 


பெண்ணிற்கு காமம் உண்டா ? அவளுக்கும் கூடலில் ஆசை இருக்குமா ? பெண்கள் அதை பெரிதாக வெளிப்படுத்துவது இல்லை. எனவே இந்த சந்தேகம் ஆண்கள் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது.

மனைவி மேல் சந்தேகம் , வருத்தம். "அவளுக்கு என் மேல் ஆசை இல்லை" என்ற முடிவுக்கு வந்து விடுகிறான். அந்த குழப்பத்தில் வேறு இடத்தில் அவன் மனம் செல்கிறது.

பெண் தன்னுடைய காமம் பற்றி வெளிப்படையாக பேசுவதோ அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்துவதோ இல்லை.

பெண் கவிஞர்களோ, பெண் எழுத்தாளர்களோ கூட இதைப் பற்றி ஆழமாக எழுதுவது இல்லை.

வள்ளுவர் தெளிவு படுத்துகிறார்.

அந்தக் காலத்தில் ஒரு பெண் மேல் ஒரு ஆடவனுக்கு காதல் வந்த பின், அந்த பெண்ணின் பெற்றோர் அந்த காதலை எதிர்த்தால், அந்த பையன் மடல் ஊர்வான்.

மடல்  ஊர்தல் என்றால் என்ன ?

எந்த பெண்ணை காதலிக்கிறானோ, அந்த பெண்ணின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து கொள்வான். இந்த காலம் போல போட்டோ எல்லாம் இல்லாத காலம்.

பனை மரத்தின் குருக்குகளை கொண்டு ஒரு குதிரை செய்து கொள்வான். அந்த குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு , அந்த கொடியை கையில் பிடித்துக் கொள்வான். அந்த உள்ளில் உள்ள சிறு பையன்கள், அவனுடைய நண்பர்கள் எல்லாம் அந்த குதிரையை ஊருக்குள் இழுத்துக் கொண்டு செல்வார்கள்.

அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து, ஊர் மக்கள்  , சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அவர்களை திருமணத்துக்கு  சம்மதிக்க வைப்பார்கள்.

இதற்கு மடல் ஊர்தல் என்று பெயர்.

காதலன் சொல்கிறான் "கடல் போல காமம் இருந்தும் மடல் ஏறாத பெண்ணனை விட பெருமையானது எது" என்கிறார்.

பாடல்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


பொருள்

கடல் அன்ன = கடல் போல

காமம் =காமம்

உழந்தும் = விருத்தியும்

மடல் ஏறாப் = மடல் ஏறாமல் இருக்கும்

பெண்ணில் = பெண்ணைவிட

பெருந்தக்கது இல் = பெருமை உடையது ஒன்றும் இல்லை



பெண்ணுக்கு காமம் உண்டு என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

அவ்வளவுதானா ?

இல்லை. குறளில் நுணுக்கமாக சில விஷயங்களை சொல்கிறார்.

கடல் அன்ன .....கடல் போன்ற காமம்.  பெண்ணின் காமம் மிகப் பெரியது. உலகில் மிகப்  பெரியது எது என்று பார்த்தார் வள்ளுவர். மலை போல பெரியது என்று சொல்லலாம். ஆனால், மூன்றில் இரண்டு பங்கு கடல் தான். எனவே, கடலைப் போல பெரியது என்றார். பெண்ணின் காமத்தின் முன்னால்  ஆணின் காமம் ரொம்ப சிறியதாகி விடுகிறது. கடலுக்கும், நிலத்துக்கும் உள்ள விகிதம்.

இரண்டாவது, நிலம் அங்கொன்றும் , இங்கொன்றுமாக இருக்கும். ஒன்று கொஞ்சம் பெரிதாக இருக்கும், இன்னொன்று ஒரு குட்டி தீவாக இருக்கும். கடல் அப்படி  அல்ல. தொடர்ந்து இருப்பது. இடை வெளி இல்லாமல் பரந்து பட்டது. ஆணின் காமம் வரும், போகும். சிறிது நேரம் இருக்கும், அப்புறம் காணாமல் போய் விடும். பெண்ணின் காமம் நிலைத்து நீண்டு கிடப்பது.

மூன்றாவது, கடலின் ஆழம் யார்க்கும் தெரியாது. மேலே பார்க்க எங்கும் சமமாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஆயிரம் மேடு பள்ளங்கள் இருக்கும். வெளியே  தெரியாது. பெண்ணின் காமமும் அப்படித்தான், வெளியே ஒன்றும் தெரியாது. ஆயிரம் இரகசியங்களை உள்ளடக்கியது அது.

நான்காவது, கடல் பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்கும். மற்ற நாட்களில்  அமைதியாக இருக்கும். அது போல பெண்ணின் காமம் தருணம் பார்த்து வெளிப்படும். மற்ற நேரங்களில் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.

ஐந்தாவது, கடலுக்குள் முத்து இருக்கும், பவளம் இருக்கும், ஆயிரம் விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கும். ஆனால், கடல் அதை எல்லாம் கொண்டு வந்து கரையில் கொட்டி விடுவது கிடையாது. அது போல பெண்ணும் தன் காமத்தை மறைந்து வைத்து இருக்கிறாள்.

உழந்தும் ...வருத்தம் தந்தும். காமம் அவளுக்கும் சங்கடம் தான். வருத்தம் இல்லாமல்  இல்லை. அவளையும் அது படுத்துகிறது என்கிறார் வள்ளுவர்.


சரி , பெண் அப்படி இருக்கிறாளே, அது சரிதானா ? வாய விட்டு சொன்னா என்ன ? என்று ஆண் தவிக்கிறான். ஆனால், அப்படி சொல்லாமல் இருப்பதுதான்  மிகப் பெரிய பெருமை என்கிறார் வள்ளுவர்.

அப்படி என்றால், ஒரு பெண் தன் காமத்தை தானே சொல்லுவது அல்லது வெளிப்படுத்துவது என்பது  சிறுமை என்கிறார்.

காமத்தை அடக்க முடியாதுதான். இருந்தும், அதையும் அடக்கி, ஏதோ ஒண்ணும் இல்லாதது போல  இருப்பதுதான் பெண்ணின் பெருமை என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், அதை விட பெரிய பெருமை வேறு எதுவும் இல்லை என்று முடிக்கிறார்.

பெருந்தக்கது இல் என்கிறார். கடல் போல காமம் வந்து வருத்தினாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்மையை போல பெருமை உடையது எதுவும் இல்லை என்கிறார்.

பெண் காதலை, காமத்தை சொல்லவில்லையே என்று ஆண்கள் வருந்தக் கூடாது. அது அவளின் இயற்கை. அது அவளின் பெருமை. அவளை கொண்டாடுவோம்.


2 comments:

  1. இந்த இடத்தில் "காமம்" என்ற சொல்லுக்கு இதுதான் பொருளா, இல்லை சும்மா "ஈர்ப்பு" என்பது போன்ற பொருள் இருக்குமா?

    அருமையான குறள். அருமையான விளக்கம். நன்றி.

    ReplyDelete