Monday, May 1, 2017

திருக்குறள் - எதை கேட்க வேண்டும்

திருக்குறள் - எதை கேட்க வேண்டும் 


எதை கேட்பது ?

செய்திகளும் , சேதிகளும் நம் காதுகளில் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் எல்லாவற்றையும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அந்த செய்திகள் நமக்குள் விளைவிக்கும் விளைவுகளை அறியாமல் எல்லாவற்றையும் உள்ளே வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் சொல்கிறார் எதை கேட்க வேண்டும், எவ்வளவு கேட்க வேண்டும்.

அவர் சொல்வதை கேப்டப்போமா ?

பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு சிரியதாயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = கேட்ட அளவுக்கு

ஆன்ற = நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லவற்றை கேட்டால் பெருமை தரும். அவ்வளவுதானே ? இது என்ன பெரிய பெரிய விஷயம். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்று நினைக்கலாம்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் அதில் உள் அடங்கி இருக்கும் பொருள் விளங்கும்.

எனைத்தானும் = எவ்வளவு சிறிதாயினும். சிறியது என்பது கேட்கும் பொருளாக இருக்கலாம், கேட்கும் கால அளவாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், 5 நிமிடம், 10 நிமிடம் கூட போதும். நல்லதை கேட்க வேண்டும்.

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க வேண்டும். அது தான் சிக்கல். எது நல்லது ? எப்படி கண்டு பிடிப்பது ? டிவி செய்திகள், யார் யாரை கொலை செய்தார்கள், யாரை யார் ஏமாற்றினார்கள், சீரியல்கள், ஒன்றுக்கும் உதவாத திரைப்படங்கள், நகைச்சுவை என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள்...இவை எல்லாம் நல்லவையா ?

நல்லது என்பதற்கு இரண்டு பரீட்சை உண்டு. அதில் தேறினால் அது நல்லது.

அது, ஒரு செய்தி நமக்கு இம்மைக்காவது அல்லது மறுமைக்காவது அல்லது இரண்டுக்கும் பயனுள்ளதாக இருக்குமா ?

ஒன்றை கேட்பதனால் இந்தப் பிறவியில் ,இந்த வாழ்க்கையில் ஏதாவது பயன் இருக்குமா ? பிறவி முடிந்த பின் , மறு உலகில் நன்மை பயக்குமா ? என்று அறிய வேண்டும்.

மறு பிறப்பு, சொர்கம் இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா ? நன்மை என்றால் எந்த விதத்தில் நன்மை என்று அறிந்து கொண்டு கேட்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 நிமிடம் நல்ல விஷயங்களை கேட்டால் என்ன பெரிய பலன் வந்து விடும் என்று நாம் நினைக்கலாம்.

சிறு சிறு மழைத் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாய் மாறி பலன் தருவது போல , சின்ன சின்ன நல்ல விஷயங்கள் பின்னாளில் பெரிய நனமை பயக்கும்.


ஆன்ற = ஆன்ற என்றால் அகன்ற , பெரிய என்று பொருள். ஆன்றோர். கொஞ்சம் கொஞ்சம் கேட்டால் கூட, கேட்ட அளவுக்கு  மிகுந்த பெருமை தரும் என்கிறார்.

இதில் மறைந்து கிடைக்கும் பொருள் எது என்ன என்றால், நல்லதை கேட்டால் ஆன்ற பெருமை தரும் என்றால், தீயதை கேட்டால் ?

தீயனவற்றை கேட்டால்  பெரிய தீமை வந்து சேரும் என்பது உணர பட வேண்டிய ஒன்று.

நல்லது எல்லாவற்றை கொஞ்சம் கேட்டாலும் அந்த அளவுக்கு ஆன்ற தீமையை தரும்.

நல்லது அல்லாதவற்றை கேட்கவே கூடாது.

சரி வள்ளுவர் கேட்பதை மட்டும்தானே சொல்லி இருக்கிறார் ? பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. படிப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. தீயதை படிக்கலாமா ?

பார்ப்பதை தவிர்க்க இமை இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டால் பார்க்காமல் இருந்து விடலாம்.

படிப்பதை எளிதாக நிறுத்தி விடலாம்.

காதுக்கு ஒரு மூடி இல்லை. காதில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது.

எங்கிருந்து தீய சொற்கள் வருகின்றனவோ, அங்கிருந்து விலகி விடவேண்டும். அங்கேயே இருந்தால் அவை காதில் விழுந்து கொண்டே இருக்கும். தடுக்க முடியாது. தீயவர்கள் இருக்கும் இடம் விட்டு உடனே விலகி விட வேண்டும். டீவியை உடனே நிறுத்தி விட வேண்டும். மாறாக அதிக சப்தம்  வைத்து கேட்டுக் கொக்ண்டிருக்க கூடாது.

நல்லதைக் கேளுங்கள். எவ்வளவு கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு சுவை வந்து விட்டால், மேலும் மேலும் கேட்கத் தூண்டும்.

நல்லதை, கேட்க கேட்க நல்லதுதான்.













2 comments:

  1. காதுக்கு மூடி இல்லை.நாம் தான் நகர வேண்டும் தீய பேச்சுகளிலிருந்து. நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete