Monday, May 22, 2017

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 


இலக்கியம் அறிய இலக்கணம் அவசியமா ?

மற்ற மொழிகளில் எப்படியோ, தமிழ் மொழியில் , இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியத்தின் ஆழத்தை , நுண்மையை அறிய முடியும்.

எடுத்துக்காட்டாக


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளை எடுத்துக் கொள்வோம்.

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான். எவ்வாறு "அ" என்ற எழுத்து மொழிகளுக்கு எல்லாம் முதலாக இருக்கிறதோ, அது போல உலகுக்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பது குறளின் சாரம்.

இதில் இலக்கணம் எங்கிருந்து வந்தது ?

சிந்திப்போம்.

முதலில் எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன என்று பார்ப்போம்.

அணி என்றால் அணிகலன். மோதிரம், வளையல், சங்கிலி போன்ற அணிகலன்கள். இவை நமக்கு அழகு செய்பவை. அது போல, பாடலுக்கு அழகு செய்பவை அணி எனப்படும்.

உவமை அணி என்றால், ஒன்றைச் சொல்லி மற்றதை விளங்க வைப்பது.

நிலவு போன்ற முகம், தாமரை போன்ற பாதம் என்று சொல்லும் போது முகத்தை நிலவுக்கு உவமையாக்கி சொல்கிறோம்.

இதில் இரண்டு வகை உண்டு.

உவமை அணி

எடுத்துக்காட்டு உவமை அணி என்று.

நிலவு போல முகம் என்றால் உவமை அணி.

நிலவு முகம் என்றால் எடுத்துக்காட்டு உவமை அணி. இதில் "போல" என்ற உவம உருபு இல்லை. அதை நாம் தான் எடுத்துக் காட்ட வேண்டும்.

மதி முகம் என்றால் மதி போன்ற முகம்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

என்ற குறளில் 

அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி பகவான் முதற்றே உலகு 

என்ற இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

நடுவில் "போல" என்ற உவம உருபு இல்லை. அகரம் மொழிக்கு முதலாக இருப்பது போல, இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒன்று இல்லாவிட்டால், இந்த இரண்டு வரியும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படும் ? தனித்தனியான இரண்டு வரிகள் இருக்கும். ஒரு பொருளும் இருக்காது. 

போல என்ற அந்த ஒரு சொல்  இந்த குறள் என்ன சொல்ல வந்ததோ அதை நமக்கு  உணர்த்துகிறது அல்லவா ?


உவமைக்கு இரண்டு வேலை இருக்கிறது. ஒன்று ஒன்றை உயர்வு படுத்திச் சொல்வது. இரண்டாவது, தெரிந்ததை வைத்து தெரியாதை விளங்கச் செய்வது. 

உதாரணமாக,

அவளுடைய முகம் நிலவு போல இருந்தது என்றால் முகமும் தெரியும், நிலவும் தெரியும். எனவே , இங்கே உவமை முகத்தின் அழகை உயர்த்திச் சொல்ல வந்தது. 

புலி இருக்கிறதே அது ஒரு பெரிய பூனை போல இருக்கும் என்று சொல்லும்போது பூனை ஒன்றும் புலியை விட உயர்ந்தது அல்ல. ஆனால் நாம் பூனையை பார்த்து இருப்போம். வீட்டிலேயே இருக்கும். புலியை பாத்து இருக்க மாட்டோம். எனவே, தெரிந்த பூனையை வைத்து தெரியாத புலியை புரிய வைக்க உவமை பயன்படுகிறது. 

இது ஒரு புறம் இருக்கட்டும். 

உவமை சொல்லும் போது , ஒரு படி உவமை என்று ஒன்று உண்டு. அதாவது உவமை சொல்லப்பட்ட பொருளின் ஒரே ஒரு குணம் தான் பொருந்தும். எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகும். 

உதாரணமாக,

நிலவு போன்ற முகம் என்றால், குளிர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  நிலவில் இருப்பது போல அவளின் முகத்தில் பள்ளம் மேடு இருக்குமா ? அவளும் நிலவு போல வளர்ந்து வளர்ந்து தேய்வாளா என்று கேட்கக்  கூடாது.நிலவின் குளிர்ச்சி மட்டும் தான் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இறைவனைப் பற்றி சொல்ல வருகிறார் வள்ளுவர். 

இறைவனை எதற்கு உதாரணமாகச் சொல்லலாம் ? இறைவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, உயர்ந்ததைச் சொல்லி இறைவன் அது போல இருப்பான் என்று சொல்ல முடியாது. 

இறைவன் அறிய முடியாதவன். எனவே, அறிந்த ஒன்றை வைத்து அறியாத இறைவனை விளங்கச் செய்ய வேண்டும். 

எனவே, அகரத்தை எடுக்கிறார் வள்ளுவர். 

இங்கே,அகரத்துக்கும் இறைவனுக்கும் எதில் சம்பந்தம் ?

"தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை " என்கிறார் பரிமேலழகர். 

எப்படி அகரம் எழுத்துக்கு முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான்.

சரி, ஒருவன் தலைவன் என்றால் அவனை யாரோ தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும் அல்லவா ? முதல்வரோ, பிரதமந்திரியோ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு தலைவராக வருகிறார்கள். 

அப்படி என்றால் இறைவனை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா ?

எப்படி இறைவன் முதல்வனான் ?

இலக்கணம் அதையும் விளக்குகிறது.

எப்படி என்று மேலும் சிந்திப்போம். 









No comments:

Post a Comment