Monday, May 8, 2017

திருக்குறள் - அறிவுடையோர் குணம்

திருக்குறள் - அறிவுடையோர் குணம் 


அறிவு என்றால் என்ன ?

புத்தக அறிவா ? அனுபவ அறிவா ? கேள்வி அறிவா ? பட்டங்களா ? இசை, விளையாட்டு, நடனம் போன்றவை அறிவு சார்ந்த துறைகள் இல்லையா ? வீட்டை பராமரிப்பது, சமைப்பது இது அறிவின் பால் சேராதா ?

பின் இதுதான் அறிவு ?

வள்ளுவர் சொல்கிறார் - அறிவு உள்ளவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது என்ன என்றால், அவர்கள் வருவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, அப்படி அறிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி அடையும்படி ஒரு துன்பம் வராது.

வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

பொருள்

எதிரதாக் = எதிர்த்து + ஆ = எதிர் காலத்தில் ஆகும்

காக்கும் = காத்துக் கொள்ளும்

அறிவினார்க்கு = அறிவுடையவர்களுக்கு

இல்லை =இல்லை

அதிர = அதிர்ச்சி தரும்படி

வருவதோர் = வருகின்ற ஒரு

நோய் = நோய் , துன்பம்


சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

பெரும்பாலோனோர் துன்பம் வந்த பின் , ஐயோ துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வது, எப்படி இதை சமாளிப்பது என்று அங்கும் இங்கும் அலைவார்கள். யாரிடம் உதவி கேட்கலாம், என்ன செய்யலாம் , எப்படி செய்யலாம் என்று பதறுவார்கள். எல்லோர் மேலும் எரிந்து விழுவார்கள். தேவை இல்லாமல் கோபம் கொள்வார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது  என்று தன்னிரக்கத்தில் தத்தளிப்பார்கள்.

இது துன்பம் வந்தபின் அதை சமாளிக்கும் வழி.

அறிவுள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல.

அறிவுள்ளவர்கள், துன்பம் வருவதற்கு முன்னே அதைப் எதிர்பார்த்து, அது வராமல் இருக்கும்  வழிகளை மேற்கொள்வார்கள்.

எப்படி ?

சில உதாரணங்களை பார்ப்போம்.

மாணவப் பருவத்தில் சரியாக படிக்காமல் இருந்தால் பின்னால் துன்பம் வரும் என்று அறிந்து கொண்டு சரியாகப் படித்தால் ஏழ்மை என்ற துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் பின்னால் சர்க்கரை நோய் வரும், உடல் பருமன் சார்ந்த நோய்கள் வரும். இதை அறிந்து கொண்டு கட்டுப்பாட்டோடு இருந்தால் அந்த நோய்களால் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அளவுக்கு மீறி கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும், முதலை திருப்ப வேண்டும் , அந்த சமயத்தில் கையில் காசு இல்லை என்றால் சங்கடம்தான். கடன் வாங்கும்போது பின்னால் வருவதை யோசிக்க வேண்டும்.

இது தனி மனிதனுக்கு மட்டும் அல்ல. வியாபார நிறுவனங்களுக்கு, அரசாங்கத்துக்கு எல்லாம் பொருந்தும்.

பெரு மழை வந்தால் வெள்ளம் வரும். வெள்ளம் வந்தால் மக்கள் துன்பப் படுவார்கள். பொருள் சேதம் , உயிர் சேதம் வரும் என்று அறிந்து, ஏரி , கம்மாய்களை  தூர் எடுத்து, வெள்ளம் வடிய வாய்க்கால் வெட்டி வைத்தால் வெள்ள நீரை சேமித்து  அதன் மூலம் பயன் பெறலாம்.

மழை பொய்த்தும் போகும். வறட்சி வரும். நீரை தேக்கி வைத்தால் , வறட்சியை சமாளிக்க முடியும். வறட்சி வரும்முன் செய்ய வேண்டிய வேலை அது. அப்படி செய்தால், வறட்சியால் வரும் துன்பத்தை குறைக்க முடியும்.

பெரிய நிறுவனங்கள் பட்ஜெட் போடுவார்கள் எதற்கு ? என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்ள. ஒரு வேளை விற்பனை குறைந்து விட்டால் ? செலவு அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்று அறிந்து கொள்ள.

வரம் துன்பத்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அதில் இருந்து காத்துக் கொள்ளும் வழிகளை அறிந்து செயல் பட வேண்டும். துன்பத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். அது தான் அறிவுள்ளவர் செயல்.

இந்த குறளை படித்தபின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால் , உங்களுக்கு என்ன எல்லாம் துன்பம் வரக் கூடும் என்று ஒரு பட்டியல் போடுங்கள்.  ஒவ்வொரு துன்பத்தில் இருந்தும் எப்படி காத்துக் கொள்ளலாம் என்றும்  வழி காணுங்கள்.

வள்ளுவர் சொல்லுவதை கூர்ந்து கவனியுங்கள்.

என்னதான் வரும் துன்பத்தை பற்றி கனக்குப் போட்டு , அதை சமாளிக்க வழி தேடினாலும், துன்பம் வராமல் போகுமா ?

"அதிர வருவதோர் நோய் " என்றார்.

நோய் அல்லது துன்பம் வரும். அதனால் பெரிய அதிர்ச்சி இருக்காது. அதிர்ச்சி தரும் துன்பம் இருக்காது. ஏன் என்றால் அந்த துன்பம் வரும் வரும் என்று நீங்கள் மனதுக்குள் எதிர்பார்த்து இருப்பதால், அது உண்மையிலேயே வரும் போது ஒரு அதிர்ச்சி இருக்காது.  உங்கள் மனம் அதை எதி கொள்ளத் தயாராக இருக்கும். துன்பம் ஒரு அதிர்ச்சியைத் தராது.

அதிர்ச்சி இல்லை என்றால், தெளிவாக, பதற்றம் இல்லாமல் அந்த துன்பத்தை கையாள முடியும்.

முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். என்ன நோய் வர வழி இருக்கிறது என்று கண்டு கொள்ளுங்கள். அதற்கு தகுந்த மருந்து, மாத்திரை சிகிச்சைகளை மேற் கொள்ளுங்கள்.

உங்கள் நிதி நிலவரத்தை ஆராயுங்கள். என்ன பெரிய செலவு வரும் , அதை எப்படி சமாளிப்பது என்று திட்டம் போடுங்கள்.

காப்பீடு (insurance ) இல்லை என்றால் உடனே எடுங்கள்.

எதிர் காலத்தில் வரும் துன்பத்தில் இருந்து தப்பிக்க இப்போதே வழி தேடுங்கள்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.










No comments:

Post a Comment