Tuesday, June 20, 2017

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை

திருக்குறள் - கடினமான காரியம் ஒன்றும் இல்லை 


கடினமான காரியம் என்று ஒன்று உள்ளதா ? கருவியோடு காலம் அறிந்து செய்தால் என்று கேட்கிறார் வள்ளுவர்.


பாடல்

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

பொருள்

அருவினை = கடினமான செயல், பெரிய செயல்

என்ப  =  என்று (ஒன்று)

உளவோ = உள்ளதா ?

கருவியான் = கருவியை உடையவன்

காலம் = காலம்

அறிந்து செயின் = அறிந்து செய்தால்


எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க இரண்டு இன்றியமையாதது - ஒன்று தகுந்த கருவிகள். மற்றொன்று செய்யத் தகுந்த காலம். 

காலம் என்பதற்கு தகுந்த காலம் என்று பொருள் சொல்லப் படுகிறது. ஒரு அரசன், தகுந்த காலத்தில் காரியத்தை செய்ய வேண்டும் என்பது பொதுப் பொருள். 

காலத்தை நாம் வேறு விதமாக பார்க்கலாம்.

எந்தக் காலத்தில் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருள். எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் பட வேண்டும். 

சில மாணவர்கள், தேர்வுக்கு சில நாள் முன்னால் படிக்கத் தொடங்குவார்கள். இரண்டு அல்லது மூணு நாளில் மொத்த புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம் என்று காலத்தை தவறாக எடை போடுவார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள்  ஆரம்பத்தில் இருந்தே தினம் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டே வருவார்கள். அவர்களுக்குத் தெரியும் உயர்ந்த மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு காலம் , நேரம் படிக்க வேண்டும் என்று. 

அதே போல் விளையாட்டுத் துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் வெற்றி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல் படவேண்டும். 

கருவியான் காலம் அறிந்து செயின்.....

சில காரியங்களை கருவி இல்லாமல் செய்தால் காலம் அதிகம் ஆகும். 

உதாரணமாக, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தே போவது என்றால்  காலம் அதிகம் ஆகும். பேருந்து, கார், ஆகாய விமானம் என்ற கருவியின் துணை கொண்டு செய்தால் காலம் மிச்சப்படும். 

எந்த கருவியை உபயோகப் படுத்தலாம், எந்த காலத்தில் செய்யலாம், எவ்வளவு காலம் ஆகும் என்று அறிந்து செயல் படவேண்டும்.

அது மட்டும் அல்ல, ஒவ்வொரு செயலும் , சரியானபடி முடிய ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும். 

சரியான காலம் பார்த்து விதை விதைத்து விட்டோம் என்பதற்காக அந்த விதை உடனே முளைத்து காய் கனி தராது. அது வளர்ந்து பலன் தர காலம் ஆகும். 

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களாயினும் , பருவத்தால் அன்றி பழா . 

அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது. 

குழந்தை பத்து மாதம் தாயின் கருவில் இருந்தால்தான் அது ஆரோக்கியமாக பிறக்கும். குறை பிரசவம் என்றால் ஆரோக்கிய குறைவுதான். 

அவசரப் படக்கூடாது. 

சிலர் உடற்பயிற்சி கூடத்திற்கு (gym ) இரண்டு நாள் போவார்கள். மூன்றாம் நாள் எடை குறையவில்லை, தசைகள் நல்ல வடிவில் வரவில்லை என்று நிறுத்தி விடுவார்கள். இது எல்லாம் வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று. 

எனவே,

காலம் என்பது 

- எப்போது செய்ய வேண்டும் என்று அறிவது 
- எவ்வளவு காலம் தேவை என்று அறிவது 
- பலன் கிடைக்க எவ்வளவு காலம் என்று அறிவது 

நல்ல கருவிகள் காலத்தை மிச்சப் படுத்த உதவும். அதையும் அறிந்து செயல் பட வேண்டும். 

ஒரு காரியத்தை மற்றவர்களை விட முன்னால் செய்து முடிக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கருவி வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும். 

கருவி இருந்தால் மட்டும் போதாது, அதை சரியான முறையில் கையாளவும் தெரிய வேண்டும். 

ஓட்ட தெரியாமல் கார் வைத்திருந்து என்ன பலன். 


கருவி என்பதை இயந்திரம் என்று மட்டும் கொள்ளாமல் தொழில் நுட்பம் (டெக்னாலஜி) என்று கொள்ள வேண்டும். 

ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன், எந்த மாதிரி கருவிகள் வேண்டும், எவ்வளவு காலம் வேண்டும், என்று அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்தானே ?











 




No comments:

Post a Comment