Friday, June 23, 2017

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்

பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்


புற இருளை எவ்வாறு சூரியன் போக்குகிறதோ , அது போல அக இருளை நீக்க வந்தது இந்த பெரிய புராணம் என்று பாயிரத்தில் குறிக்கிறார் சேக்கிழார்.

இருள் , தான் எவ்வளவு தான் முயன்றாலும் அது தன்னை தானே வெளிச்சமாகிக் கொள்ள முடியாது.

அது போல, அக இருளை நாம் எவ்வளவுதான் முயன்றாலும், நாமே அதே போக்கிக் கொள்ள முடியாது. குருவருளும் , இறை அருளும் தேவை . இறைவனின் அருள் இல்லாமல் அது நிகழாது என்பதை பெரிய புராணம் முழுவதும் நாம் காண முடியும்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"  என்பார் மணிவாசகர்.

பெரிய புராணத்தில் முதல் கதை தடுத்தாட்கொண்ட புராணம்.

ஒரு பிரச்சனை, தவறு , சிக்கல் நிகழப் போகிறது என்றால் அது நிகழ்வதற்கு முன்னால் அதை தடுத்து நிறுத்தி, அதை செய்ய  இருந்தவர்களை அதில் இருந்து காப்பாற்றுவது தடுத்து + ஆண்டு + கொள்வது.

சுந்தரர், திருமணம் செய்து கொள்ள  இருந்தார். அப்போது சிவ பெருமான், வயோதிக வேதியர் வடிவில் வந்து, "இந்த சுந்தரன் எனக்கு அடிமை. இவனுடைய தாத்தா எனக்கு ஓலை எழுதி தந்திருக்கிறார். எனவே இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது " என்று தடுத்தார்.

சுந்தரர் வாது புரிகிறார். "பித்தா " என்று அந்த வேதியரை ஏசுகிறார்.

வேதியர் ஓலையை காண்பிக்கிறார்.  அந்த ஓலையை வாங்கி கிழித்துப் போட்டு விடுகிறார் சுந்தரர். வேதியர் விடுவதாய் இல்லை. "இது படி (copy ) ஓலை தான். மூல ஓலை என்னிடம் இருக்கிறது " என்று எல்லோரையும் கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார். ஊரில் உள்ள எல்லோரும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். சுந்தரர் அடிமைதான் என்று சொல்லி விடுகிறார்கள்.

பின், சிவன் தன் சுய உருவத்தை காட்டி , "நீ இந்த சம்சார சாகரத்தில் கிடந்து அழுந்தாமல் இருக்கவே வந்து உன்னை தடுத்தாட்கொண்டேன்" என்று அருள் புரிகிறார்.

"என்னை பித்தா என்று திட்டினாய் அல்லவா, எனவே என்னை பித்தா என்றே ஆரம்பித்து பாடு " என்றார்.

"பித்தா  பிறை சூடி, பெருமானே அருளாலா " என்று பாடுகிறார்.

அந்தக்  கதைதான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதல் பாடல் சுந்தரர் பிறந்த நாட்டின் பெருமையை பற்றி பேசுகிறது.

பாடல்  

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு,
மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச்
செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.

பொருள்


கங்கையும்  = கங்கை நதியும்

மதியும் = நிலவும்

பாம்பும்  = பாம்பையும்

கடுக்கையும் = கொன்றை மலர்

முடி மேல் வைத்த = முடி மேல் வைத்த

அங்கணர் = அழகிய கண்ணை உடைய அவர் (சிவன்)

ஓலை காட்டி = ஓலையை காட்டி

ஆண்டவர் = ஆட்கொண்ட

தமக்கு நாடு = உரிமையாகக் கொண்ட நாடு

மங்கையர் = பெண்கள்

வதன = முகம்

சீத = குளிர்ச்சியான

மதி = நிலவு போன்ற

இரு மருங்கும் ஓடிச் = இரண்டு பக்கமும் ஓடி

செங் கயல் = சிறந்த மீன்கள்

குழைகள் = காதில் அணியும் ஆபரணங்களை

நாடும் = தேடும்

திருமுனைப்பாடி நாடு = திருமுனைப்பாடி  என்ற நாடு



நாடு நன்றாக  இருக்கிறது என்று சொல்ல வந்த சேக்கிழார் அதை  எப்படி சுருக்கமாக சொல்வது என்று யோசித்து சொல்கிறார்.

பெண்களின் முகம் குளிர்ந்த நிலவைப் போல இருந்தது என்கிறார் . பெண் மகிழ்ச்சியாக இருந்தால்  அவள், இருக்கும் வீடும், சமுதாயமும்,  நாடும் சிறந்து  விளங்கும். தான் இருக்கும் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் பெண் மகிழ்ச்சியாக இருப்பாள். எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றால் , அங்குள்ள எல்லா குடும்பங்களும் மகிழ்வாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்ல, அவர்களின் மீன் போன்ற கண்கள் , அவர்களின் காதில் உள்ள குழையை தேடி போனதாம்.  கண்கள் நீண்டு இருந்தன என்று சொல்கிறார்.  நீண்ட கண்கள் பெண்களுக்கு ஒரு அழகு.

உறவுகள் கண்ணில் தொடங்கி , காதின் வழியே உறுதி அடைகின்றன.

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்தவுடன் ஏதோ ஒன்று பிடித்துப் போகிறது. எனக்கேற்ற பெண் / ஆண் இவள்/இவன் தான் என்று மனதில் எங்கோ பட்சி சொல்கிறது.

அப்புறம் கொஞ்ச கொஞ்சமாய் அவளோடு பேசி , அவள் பேசுவதை கேட்டு மேலும் பிடித்துப் போகிறது.

காதல் கண்ணில் ஆரம்பிக்கிறது.

உருவ வழிபாடு அது தான். பார்த்தவுடன் பக்தி வருகிறது. பின் இறைவனைப் பற்றி கேட்டு, படித்து அறிந்து கொள்கிறோம்.

அதை சொல்ல வந்த சேக்கிழார், அந்த ஊரில் உள்ள பெண்களின் கண்கள் காது வரை நீண்டு இருந்தது என்று  கூறுகிறார்.

சுந்தரை  -  ஓலை காட்டி ஆண்டார்
ஞான சம்பந்தரை  - பாலை (ஞானப்பால்) தந்து ஆண்டார்
மணி வாசகரை - காலை (திருவடி) காட்டி ஆண்டு கொண்டார்
நாவுக்கரசரை -  சூலை நோய் தந்து ஆண்டு கொண்டார்

இவைகள் வெறும் கதைகள் அல்ல. மிகப் பெரிய தத்துவங்களை சொல்ல வந்த ஒரு ஊடகம். அந்தத் தத்துவம் என்ன என்று பெரிய புராணம் முழுவதும் படித்தால் புரியும்.

நேரம் இருப்பின், முடிந்தவரை, தெரிந்தவரை பகிர்ந்து கொள்ள ஆசை.

4 comments: