Tuesday, June 27, 2017

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள்

திருக்குறள் - உலகிலேயே பெரிய முட்டாள் 


நிறைய பேர் நிறைய படிப்பார்கள். படித்தவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். அதை தீர அலசி ஆராய்ந்து அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்வார்கள்.

யார் கேட்டாலும், அதில் இப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று மேற் கோள் காட்டுவார்கள்.

படித்தது போதாது என்று மேலும் மேலும் படிப்பார்கள்.

சரி, இவ்வளவு படித்து அறிந்து கொண்டு இருக்கிறாயே, அதன் படி நடக்கிறாயா, அவற்றை வாழ்வில் கடை பிடிக்கிறாயா என்று கேட்டால்

"ஹாங்...அது எல்லாம் நடை முறைக்கு சரி வராது,  படிக்க வேண்டுமானால் நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு ஒத்து வராது, அதெல்லாம் செய்ய முடியாது, ரொம்ப கடினம் " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி விட்டு , மீண்டும் படிப்பதற்கு முன்னால் எப்படி இருந்தார்களோ , அப்படியே வாழ்க்கையை தொடருவார்கள்.

அவர்களைத்தான், உலகிலேயே பெரிய முட்டாள்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.


பொருள்


ஓதி  = அறிய வேண்டியவற்றை படித்து அறிந்து

உணர்ந்தும் = அவற்றின் பயன்களை உணர்ந்து

பிறர்க்குரைத்தும் = பிறர்க்கு அதை எடுத்துச் சொல்லியும்

தானடங்காப் = தான் அடங்கா

பேதையின் பேதையார் இல் = முட்டாளைப் போல பெரிய முட்டாள் இல்லை .


ஓதி என்பதற்கு , மன மொழி மெய் அடங்குவதற்கு ஏதுவான நூல்களை ஓதி என்று குறிப்பிடுகிறார் பரிமேலழகர்.

புலன்களை அடக்கி, மனதையும், பேசும் மொழியையும் அடக்க உதவி செய்யும்  நூல்களை கற்று.

படித்தது மட்டும் அல்ல, அதன் பயன்களை உணர்ந்தும்.

அது மட்டும் அல்ல, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கொண்டு.

தான் அடங்கா - தான் ஆசைகளை அடக்காமல் இருக்கும் முட்டாளை விட பெரிய முட்டாள் இல்லை.


நல்லவற்றை படிக்க வேண்டும்.

நல்லவை என்றால் - மன மொழி மெய் அடங்க உதவும் நூல்கள். அப்படி என்றால் சிற்றின்பத்தை தூண்டும் நூல்களை படிக்கக் கூடாது.

படித்ததன் பலன்களை உணர வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்து உணர்த்தவற்றின் படி வாழ வேண்டும்.

படிப்பு ஒரு பக்கம், வாழ்க்கை ஒரு பக்கம் என்று இருக்கக் கூடாது.

அப்படி என்றால், படிக்கவே வேண்டாமே.

நிற்க அதற்கு தக என்பார் வள்ளுவர்.

நல்லதைப் படித்து அதன் படி வாழவேண்டும்.

1 comment:

  1. என்னையும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.மாற்றிக்கொள்ள முயற்ச்சி பண்ணுகிறேன்

    ReplyDelete