Saturday, July 1, 2017

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !


காட்டில் இராமனைக் கண்டு, அரசை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. பார்த்தார் வசிட்டர், இது வேலைக்கு ஆகாது. பரதன் சொன்னால் இராமன் கேட்க மாட்டான். நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று , பரதனை இடை மறித்து "நீ அரசை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் . இது என் ஆணை " என்கிறார்.

குருவின் ஆணை. மீறவும் முடியாது.

தர்ம சங்கடத்தில் இராமன்.

இராமன் என்ன செய்தான் ?

முனிவரை வணங்கி, அறிஞனே , நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது என்று கூறத் தொடங்குகிறான் ...


பாடல்


கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:


பொருள்

கூறிய முனிவனைக் = ஆட்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய முனிவனை

குவிந்த தாமரை = குவிந்த தாமரை போன்ற

சீறிய கைகளால் = சிறந்த கைகளால்

தொழுது = வணங்கி

செங்கணான் = சிவந்த கண்களை உடைய

‘ஆறிய சிந்தனை அறிஞ! = ஆறிய சிந்தனை உள்ள அறிஞனே

ஒன்று உரை கூறுவது உளது’  = நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது

எனக் கூறல் மேயினான் = என்று கூறத் தொடங்கினான்



சொன்னது  ஆசிரியன். அவர் சொன்னதை மறுத்துச் சொல்லப் போகிறான் .

அப்படி சொல்வதற்கு முன்னால் , கை கூப்பி , தொழுது பின் சொல்லத் தொடங்குகிறான்.

இது நமது பண்பாடு. கலாச்சாரம்.

பெரியவர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையோடு பேச வேண்டும்.

இன்று , பெரியவர்கள் பேசுவதை கேட்பது கூட கிடையாது. அப்படியே கேட்டாலும், அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் பாதியில் இடை மறித்து பேசும் பழக்கம் இருக்கிறது.  

பெரியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேசும் போது , அவர்களை வணங்கி, மரியாதையுடன் பேச வேண்டும். .

இராமன் ஒரு மாற்றுக் கருத்தை கூறப் போகிறான். நாம் பெரியவர்களின் கருத்துக்களோடு முரண் படலாம். அதை சொல்லும் முறை இருக்கிறது.

இராமனிடம் பாடம் கற்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, "ஆறிய சிந்தனை அறிஞ" என்று மரியாதையோடு அவர் பெருமையையும்  சேர்த்துச் சொல்கிறான்.


"நீ பெரிய அறிஞன் என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லிவிட்டு சொல்லாத் தொடங்குகிறான்.

இது ஒரு பேசும் கலை.

நாம் இன்னொருவரின் கருத்தை மறுத்துச் சொல்ல வேண்டி இருந்தால், அவர்களோடு கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு, கடு கடு என்று பேச வேண்டியது இல்லை.

"நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்குத் தெரியாதது இல்லை. உங்க அறிவுக்கும், அனுபவத்துக்கும், நீங்க சொல்வது சரியாத்தான் இருக்கும். ....இருந்தாலும், எனக்கு சொல்ல ஒன்று இருக்கிறது "

என்று சொல்ல ஆரம்பித்தால், எதிரில் இருப்பவரும் நீங்கள் சொல்வதை கேட்பார்.

முதலில் இனிய சொற்களோடு ஆரம்பிக்க வேண்டும்.

"ஆறிய சிந்தனை அறிஞ" என்று சொன்னவுடன் வசிட்டரின் கோபம் கொஞ்சம் தணியும். என் அறிவின் வீச்சை இராமன் அறிவான். அவன் என்ன தான் சொல்கிறான் கேட்போம் என்று அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுவார்.


ஆறிய சிந்தனை என்றால் என்ன ?

நம் சிந்தனை எந்நேரமும் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. காமம், கோபம், பொறாமை, எரிச்சல் என்ற பல்வேறு குணங்களால் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. ஆறிய சிந்தனை என்பது, சலனம் இல்லாமல், அமைதியாக, தெளிவாக இருப்பது. உணர்ச்சி வசப்படாமல், அமைதியான சிந்தனை என்று பொருள்.

இராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன ? வசிட்டனுக்கு ஒன்றும் இல்லை.  இராமன் மேல் உள்ள அன்பினாலோ, அல்லது பரதன் மேல் உள்ள வெறுப்பினாலோ  அவன் அதைக் கூறவில்லை என்று இராமன் முன்னமேயே தெரிவித்து விடுகிறான்.


இரண்டு விஷயங்கள்


ஒன்று, பெரியவர்களோடு பேசும் போது , அவர்களை வணங்கி மரியாதையோடு பேச வேண்டும்.

இரண்டு, மாற்று கருத்து இருந்தாலும், பெரியவர்களின் அறிவை, திறமையை குறைத்து  மதிப்பிடக் கூடாது. நம் கருத்தை பணிவாக வெளிப்படுத்த வேண்டும்.





No comments:

Post a Comment