Tuesday, September 26, 2017

திருக்குறள் - வேலை செய்யும் வழி

திருக்குறள் - வேலை செய்யும் வழி 


எந்த ஒரு வேலையையும் எப்படிச்  செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

என்னிடம் கேட்டால் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பேன். ஒழுங்காக செய்ய வேண்டும் என்பேன். விடா முயற்சியோடு செய்ய வேண்டும் என்பேன்.

வள்ளுவர் ஆயிற்றே. மிக மிக ஆழமாக சிந்தித்து சொல்கிறார்.

திட்டமிடுதல் என்றால் என்ன ? எதை திட்டமிட வேண்டும் ? எப்படி திட்டமிட வேண்டும் என்றெல்லாம் கேள்வி வரும் அல்லவா ?

அதை எல்லாம் விளக்க ஒண்ணே முக்கால் அடி குறள் போதுமா ? சுருக்கமாகவும் சொல்ல வேண்டும். அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும், அது ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.

இதோ அந்தக் குறள்

பாடல்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
           

பொருள்

ஊறொரால் = ஊறு + ஒரால் = ஊறு என்றால் தடை. துன்பம். ஒரால்  என்றால்
நீக்குதல், விலக்குதல்

உற்றபின் = வந்த பின்

ஒல்காமை = தளராமை , நடுங்காமை, சுருங்காமை

இவ்விரண்டின் = இந்த இரண்டின்

ஆறென்பர் = வழி என்பார்

ஆய்ந்தவர் கோள் = படித்து அறிந்தவர்களின் கோட்பாடு


முதலாவது, ஒரு வேலையை தொடங்குமுன் அதில் என்ன எல்லாம் சிக்கல் வரும், தடைகள் வரும்னு சிந்திக்கணும். நமக்கு ஆசையாக இருக்கிறது என்று யோசிக்காமல் கொள்ளாமல் காரியத்தில் இறங்கக் கூடாது.  அது வீடு வாங்குவதாக இருக்கட்டும், திருமணம், வேலை, தொழில் தொடங்குவது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆசை ஒரு புறம், ஆர்வம் ஒரு புறம் இருக்கட்டும். அவற்றை எல்லாம் தள்ளி வைத்து விட்டு , அந்த காரியத்தில் என்ன எல்லாம் தடை வரும், என்ன எல்லாம் சிக்கல் வரும், யார் தடை சொல்வார்கள், யார் இதை தடுக்க அல்லது கெடுக்க நினைப்பார்கள் என்று பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, அந்த தடைகளை எப்படி வென்றெடுப்பது என்று வழி காண வேண்டும். எந்த காரியத்திலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படி சமாளிப்பது என்று சிந்திக்க வேண்டும். அந்த வழி முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, சரி நாம் எவ்வளவுதான் சிந்தித்து, காரியத்தில் இறங்கினாலும் நாம் எதிர்பாராத சிக்கல்கள், சவால்கள், தடைகள் வராமல் இருக்குமா ? வரும் என்கிறார் வள்ளுவர். நாம் எவ்வளவுதான் முன் கூட்டியே திட்டமிட்டாலும், எதிர்பாராத சிக்கல்கள் வரத்தான் செய்யும்.  நம்மை அதற்கு தயார் படுத்துகிறார். காதலிக்கும் போது உள்ள சுகம் திருமண வாழ்வில் இல்லாமல் போகலாம். இல்லாமல் போகும் என்று நினைக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

நான்காவது, சரி அப்படி வந்து விட்டால் என்ன செய்வது ? "ஒல்காமை " வேண்டும் என்கிறார். மனம் தளரக் கூடாது. பிரச்சனைகள் வரும். சிக்கல்கள் வரும். மனம் தளராமல் இருக்க வேண்டும். போராட வேண்டும்.

ஐந்தாவது, இதுதானா வழி. வேற வழி இல்லையா என்றால் , ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள் கண்ட வழி இது. உங்களுக்கு வேறு வழி தெரிந்தால் அதிலும் போகலாம். எதுக்கு சிரமப் படவேண்டும். நமக்காக சிரமப்பட்டு கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த வழியிலேயே போவது எளிதுதானே.

வாழ்க்கை என்பதே சிக்கல்களை, துன்பங்களை , சவால்களை , பிரச்சனைகளை எதிர்பார்த்து இருப்பதும், அவற்றை நீக்க போராடுவதும்தான். வேறு அல்ல.

ஒண்ணே முக்கால் அடியில் வாழ்க்கைத் தத்துவத்தை தருகிறார் வள்ளுவர்.

படிப்போம். நடக்க முயற்சிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_26.html

Monday, September 25, 2017

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


வான் பொய்ப்பதும், பஞ்சம் வருவதும் என்றும்  உள்ளது தான்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. மழை வந்தால் , வாழ்க்கை.

ஏனோ தெரியவில்லை இரண்டு மூன்று ஆண்டுகளாய் கோபம் கொண்ட காதலியாய் வானம் முகம் திருப்பிக் கொண்டு போய் விட்டது. ஒரு புல் பூண்டு கூட இல்லை. பூமி கட்டாந்தரையாக போய் விட்டது. பஞ்சம் பிழைக்க ஊர் மக்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். செத்தாலும் இந்த மண்ணிலேலேயே சாவோம் என்று ஒரு சில வயதானவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்த ஊரில் இருக்கிறார்கள். மரங்களில் விளையாடும் அணில் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வருகிறது. வீட்டை காலி பண்ணி விட்டு சென்றவர்கள் விட்டுச் சென்ற நெல் மணிகள், தானியங்கள், என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படி தின்கின்றன. வீடு திறந்து கிடக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது பூட்டி வைக்க ? அணில் தொட்டி முத்தத்தில் விளையாடுகிறது.  மற்றபடி ஊரில் உயிர் இல்லை.

இன்றுதான் அப்படி.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் , இந்த கிராமம் எப்படி இருக்கும் தெரியுமா ? தேரும் திருவிழாவும், ஆட்டமும் பாட்டமும், குதூகலமாய் இருந்தது. மாடு கன்னு ஒரு புறம், வண்டிகள் அசைத்து செல்வது ஒருபுறம், தெருவோரக் கடைகளும், பாடும் கூத்துமாய் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

இன்று, எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய் விட்டது.

அவளுக்கு அந்த ஊர் சொந்த ஊர் அல்ல. ஆனால் அந்த ஊருக்கு வந்து போனவள். சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்ததையும் பார்த்து இருக்கிறாள். இப்போது வெறிச்சோடிப் போன ஊரையும் பார்க்கிறாள்.

அவள் காதலன் அவளை விட்டு விட்டு வெளியூர் போயிருக்கிறான் - பொருள் தேட.

அவனில்லாத வெறுமை அவளை வாட்டுகிறது.

ஒரு விதத்தில் இந்த ஊர் போலத்தான் தன் வாழ்வும் என்று நினைக்கிறாள்.

அவன் இருந்த போது சந்தோஷமும், மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவன் இல்லாத போது வெறுமை சூழ்ந்து , சோகத்தில் இருக்கிறாள்.

அந்த கிராமம் போல.

பாடல்


காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே.


பொருள் 

காதலர் = காதலர்

உழையராகப் = உடன் இருந்த போது

பெரிதுவந்து = பெரிது உவந்து

சாறுகொள் = சாரம் நிறைந்த

ஊரின்  = ஊரில்

புகல்வேன்  = புகுந்தது போல இருந்தது

மன்ற = ஆனால்

அத்தம் நண்ணிய = பாலை நில வழி சென்ற

அங்குடிச் = அந்த குடிமக்கள் நிறைந்த

சீறூர் = சிறந்த ஊர்

மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின்

அணிலாடு முன்றில் = அணில் ஆடும் முன் இல். இல்லத்தின் முன்னே, திண்ணையில் அணில் விளையாடும்

புலப்பில் = புலப்பு + இல் = தனிமையான இல்லம்

 போலப் = போல

 புல்லென்று = பொலிவு இழந்து

அலப்பென் தோழி = வருத்தம் கொள்வேன் தோழி

 அவர் அகன்ற ஞான்றே = அவர் என்னை விட்டு பிரிந்த பொழுது .

யாருக்காக வருந்துவது ? பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பஞ்சம் பிழைக்க எங்கோ சென்ற  அந்த மக்களை நினைத்தா ? சொந்த வீட்டை திறந்து போட்டு விட்டு, இனிமேல் திரும்பி வரும் எண்ணமே இல்லாமல் , இறுதியாக  விலகிப் போன  அந்த மக்களை நினைத்தா அல்லது

காதலனைப் பிரிந்து வாடும் அந்த இளம் பெண்ணை நினைத்தா ?

எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும் அந்த ஊரின் சோகம், அதன் தனிமை, அந்த மக்களின் சோகம் மனதுக்குள் என்னவோ செய்கிறது என்பது உண்மை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_47.html




Saturday, September 23, 2017

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

திருக்குறள் - உருவு கண்டு எள்ளாமை வேண்டும் 


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

உருவத்தைப் பார்த்து ஒருவரை கேலி செய்யக் கூடாது. உருண்டு வரும் பெரிய தேருக்கு அச்சாணி போல உள்ளவர்களை உடையது உலகு

அவ்வளவுதானே. எளிமையான குறள் தானே . கடினமான சொல் எதுவும் இல்லையே. இதுக்கு எதுக்கு விளக்கம் என்று நினைப்போம்.

ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க குறளின் ஆழம் புரியும்.

வாருங்கள், சிந்திப்போம்.

அச்சாணி = அச்சாணி என்ன செய்கிறது ? தேரின் சக்கரம் கழண்டு விழாமல் தடுத்து நிறுத்துகிறது. அதை , எப்படி செய்கிறது ? பெரிய புத்திசாலித்தனம் கிடையாது, சிக்கலான வடிவம் கிடையாது. பின் எப்படி செய்கிறது என்றால், உறுதியாக , என்ன வந்தாலும் சரி, எவ்வளவு பாரம் வந்தாலும் சரி, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் சரி , இந்த சக்கரம் கழண்டு விழ விடுவதில்லை என்று உறுதியோடு இருக்கிறது.  அத்தனை பாரத்தையும் தாங்கிக் கொண்டு, தேரை நல்லபடி கொண்டு செல்ல உதவுகிறது. அது போல, ஒரு வீட்டை, நாட்டை, நிறுவனத்தை நல்லபடி கொண்டு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை, கடமை இருக்கும். அதை, விடாப் பிடியாக , உறுதியாக செய்ய வேண்டும். அப்போதத்தான், அந்த வீடோ, நிறுவனமோ, நாடோ தடுமாறி விழாமல் செல்லும்.

இரண்டாவது,  "உருள் பெரும் தேர்".   தேர் என்றால் வெறும் தேர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.  வீடு, நாடு, நிறுவனம், அனைத்துக்கும் அது ஒரு உவமை.


மூன்றாவது,  தேரில் சப்பரம் தெரியும், வடம் தெரியும், அதில் உள்ள சாமி சிலை தெரியும், கும்பம் தெரியும், பூ வேலைப்பாடு தெரியும், சக்கரம் கூட தெரியும். ஆனால், இந்த அச்சாணி தெரியாது.  "இந்த தேர் விழாமல் இருக்க நான் தான் காரணம்.  என்னை யாரும் கண்டு கொள்வதில்லை" என்று அச்சாணி நினைத்து , கழண்டு முன்னால் வந்து நின்றால் , என்ன ஆகும் ?  அச்சாணி  அங்கு தான் இருக்க வேண்டும். அது போல, வீட்டை, நாட்டை கொண்டு செல்லும் சிலர்   இருப்பார்கள். அவர்கள் வெளியே தெரிவது இல்லை. அதற்காக  அவர்களை உதாசீனப் படுத்தக் கூடாது.

நான்காவது,  அச்சாணி எவ்வளவு பெரிய வேலை செய்கிறது. அதற்காக அதை  தங்கத்தால் செய்து போட முடியுமா  ?  அது இரும்பில் தான் செய்யப் பட வேண்டும். சாதாரண இரும்புதானே, இது என்ன பெரிய மதிப்பு உள்ளதா என்று  கேலி செய்யக் கூடாது.

ஐந்தாவது, "நான் இந்த வீட்டுக்கு எவ்வளவு செய்து இருக்கிறேன். ஒரு நன்றி இல்லை. அவனுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறேன், கடைசியில் இப்படி செய்து விட்டானே..." என்றெல்லாம் பேசக் கேட்டு இருக்கிறோம். ஒரு அச்சாணி  தேய்து போய் விட்டால் என்ன செய்வார்கள். ? அடடா , எவ்வளவு உதவி செய்தது இத்தனை நாள் என்று அதை யாரும் தூக்கி தேரில் வைப்பது இல்லை. தேய்ந்து போய் விட்டால் , வேறு அச்சாணி போடுவார்கள். பழையதை தூக்கி போட்டு விடுவார்கள்.  அதற்காக அந்த அச்சாணி நொந்து பயனில்லை. அது போல, நாம் நமது வீட்டுக்கோ, நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ எவ்வளவு செய்து இருப்போம். நமது தேவை தீர்ந்து போனால், அடுத்தவரை நாடுவார்கள்.  நாம் அதை நினைத்து நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை. உலகம் அப்படித்தான் இருக்கும்.

ஆறாவது, "அன்னார் உடைத்து" : இந்த நன்றி கெட்ட உலகில், நான் எதுக்கு அச்சாணி போல கிடந்து  உழல வேண்டும் ? ஒரு மதிப்பும் இல்லை, காரியம் முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடுகிறார்கள். எனக்கு அச்சாணியாக இருக்க விருப்பமில்லை என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அப்படி சொல்கிறவர் மத்தியில் , அச்சாணியாக  இருந்து, சுயநலம் இன்றி நாட்டையும், வீட்டையும், நிறுவனத்தையும் கொண்டு செல்லும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடையது உலகம் என்கிறார்.  சில பேர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். அவரக்ளை இந்த உலகம்  "பிழைக்கத் தெரியாதவன்", "அப்பாவி", " பாவம் " என்றெல்லலாம் கேலி பேசும். கேலி பேசக் கூடாது என்கிறார்.  அவர்களால் தான் இந்த உலகம் என்ற தேர் உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏழாவது, "எள்ளாமை வேண்டும் "  தேரின் அளவைப் பார்த்தால் , அச்சாணியின் அளவு மிக மிக சிறியதுதான். தேரின் மதிப்பைப் பார்த்தால், அச்சாணியின் மதிப்பு ஒன்றும் இல்லைதான்.  அதற்காக அதை கேலி பேசக் கூடாது.


எட்டாவது, நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய சாதனைகளை புரிந்து இருப்போம்.  பெரிய பதவி, அதிகாரம், செல்வம், செல்வாக்கு என்று எல்லாம் வந்திருக்கும். நாம் இந்த இடத்தை அடைய நமக்கு பலர் உதவி செய்து இருப்பார்கள். குறிப்பாக நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உடன் பிறப்புகள் என்று பலர் பலவித சோதனைகளை தாங்கிக்  கொண்டு நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்து  சேர்த்திருப்பார்கள். இப்போது திரும்பிப் பார்த்தால், அவர்கள் அற்பமாக தெரியலாம்.  "ஹா, அவர் இல்லாவிட்டால் நான் உயர்ந்திருக்க மாட்டேனா " என்று எள்ளாமை வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வளவு அர்த்தம் விரியும் என்று.

புதையல். தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/09/blog-post_23.html

Saturday, September 2, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க 


முன் கதைச் சுருக்கம்:

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.


பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம்