Monday, October 2, 2017

திருக்குறள் - அறிவின் பயன்

திருக்குறள் - அறிவின் பயன் 




அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.

இந்த குறள் பற்றி முன்பு ஒரு தரம் பார்த்தோம். நவில் தொரும் நூல் நயம் போல படிக்க படிக்க , சிந்திக்க சிந்திக்க மேலும் மேலும் அர்த்தங்களை தருவது குறள்.


குறளின் எளிய விளக்கம் , மற்ற உயிர்களின் துன்பத்தை நம் துன்பம் போல நினைத்து அதை நீக்கா விட்டால், நாம் பெற்ற அறிவின் பயன் என்ன ? (ஒன்றும் இல்லை )

பொருள்

அறிவினான் = அறிவினால்

ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?

பிறிதின்நோய் = மற்றவற்றின் நோய் (துன்பம்)


தந்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல

போற்றாக் கடை = நீக்காவிட்டால்

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_2.html

சரி, இதில் என்ன ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ?

சிந்திப்போம்.

ஏன் "தன் நோய் போல்" என்று கூறினார் ?

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் போற்றாக் கடை என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

அது என்ன "தன் நோய் "


சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் , பல துன்பங்களை அறிய மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு பெரிய பணக்காரன் , பசி என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. வேளா வேளைக்கு உணவு அவனுக்கு கிடைத்து விடும்.  குளிர், வெயில் இவற்றின் கொடுமை அவனுக்குத் தெரியாது.

தனக்கு அந்த துன்பம் இல்லை என்பதால் வேறு யாருக்கும் அந்த துன்பம் இருக்காது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

நமக்கு உணவு இல்லாமல் , பசியால் வாடினால் எப்படி இருக்கும், என்ன செய்வோம் என்று நினைத்து பார்த்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு பசியின் கொடுமை தெரியும் . தனக்கு பசி வந்தால் அவன் என்ன செய்வான் ? பிச்சை எடுப்பான்.  ஆனால் ஒரு செல்வந்தன் , தனக்கு பசி வந்தால் என்ன செய்வான் ?  "யப்பா, இந்த பசி ரொம்ப பொல்லாதது. ஒரு தரம் துன்பப் பட்டு விட்டோம்.  இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டும் அல்ல. என் பெண்டாட்டி பிள்ளைகளும் இந்த பசியால் துன்பப் படக் கூடாது " என்று நினைத்து அதற்கு வேண்டியவற்றை செய்வான் அல்லவா.

அது போல,  மற்றவர்களுக்கு வரும் துன்பத்தையும் ஒருவன் துடைக்க வேண்டும்.  ஏதோ, ஒரு வேளைக்கு உணவு போட்டால் போதாது. எப்படி தன்னுடைய பசி கொடுமையை நிரந்தரமாக போக்க முயல்வானோ, அப்படி மற்றவர்கள்  துன்பத்தையும் போக்க வேண்டும்.

மற்றொன்று, பெண்களின் உடல் ரீதியான பிரச்னைகளை ஆண்கள் அறிந்து கொள்ளவே முடியாது. யோசிக்கலாம். கற்பனை பண்ணி பார்க்கலாம். அப்படி ஒரு பிரசவ வலி தனக்கு வந்தால் என்னவெல்லாம் வேண்டியிருக்கும் என்று  யோசிக்கும் ஒவ்வொரு ஆணும், அதை அந்த பெண்களுக்கும் அளிக்க முயல வேண்டும்.

மற்றொன்று, வீட்டிலோ, அல்லது உறவினருக்கோ, நண்பருக்கோ ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால், நமக்கு என்னென்ன வேண்டியிருக்கும் என்று  நினைத்து அவர்களுக்கு செய்ய வேண்டும்.

"பிறிதின்" என்றால் என்ன அர்த்தம். பிற மனிதர்கள் மட்டும் அல்ல, பிராணிகள், செடி கொடிகள்,  ஊர்வன, பறப்பன என்று எல்லாமே அந்த "பிறிதின்" என்பதில் அடங்கும். தன்னைத் தவிர மற்ற எல்லாம். நீர் நிலைகள்,  ஆகாயம், ஆறு, குளம், என்று அனைத்தும் அதில் அடங்கும்.

"போற்றா கடை".  போற்றுதல் என்றால் விலக்குதல் , காத்தல் , நீக்குதல், மதித்தல் என்று பல பொருள் உண்டு.


மற்றவர்கள் துன்பத்தை நீக்கினால் மட்டும் போதாது, அது மீண்டும் வராமல் காக்க வேண்டும். வருவதற்கு முன்பே அந்த துன்பங்களை மாற்றி வைக்க உதவி செய்ய வேண்டும்.

சில சமயம், நம்மால் மற்றவர்களின் துன்பத்தை மாற்றவோ குறைக்கவோ முடியாது. அவர்கள் நமக்காக படும் துன்பத்தை கண்டு தலை வணங்குவதைத் தவிர ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு பெற்றோர் படும் பாட்டுக்கு , ஒரு பிள்ளை என்ன செய்து விட முடியும் ? ஒரு தாயின் பிரசவ வேதனையை , அவள் பெறும் பிள்ளை ஒன்றும் செய்து விட முடியாது. அந்த வலியை பொறுத்துக் கொண்டு தன்னை ஈன்றெடுத்த தாயின் வலியை போற்றலாம். அவ்வளவுதான் செய்ய முடியும்.

"அறிவினான் ஆகுவது உண்டோ "...மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க அறிவு உள்ளவர்களால் தான் முடியும் .


எவ்வளவுதான் படித்தாலும் மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க முடியாவிட்டால் அந்த அறிவினால் ஒரு பயனும் இல்லை.

அறிவு என்பது எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறோம் என்பதல்ல, எத்தனை பட்டங்கள் பெற்றோம் என்பதல்ல, மற்றவர்களின் துன்பத்தை நம் துன்பமாக  எப்போது நினைக்கிறோமோ அதைப் பொறுத்தது.

"ஆகுவது உண்டோ "  ....சும்மா ஐயோ பாவம், எவ்வளவு துன்பப் படுகிறார்கள் என்று வருத்தப்படுவதோடு நின்று விடக் கூடாது. அது எல்லோராலும் முடியும்.  "ஆகுவது" என்றால் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். ஆக்குதல்  என்பதில் இருந்து வந்தது "ஆகுவது". உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்.

திருக்குறள் என்ற நூலில், ஒரு குறளுக்காவது  முழு அர்த்தமும் கண்டு விட முடியுமா என்று தெரியவில்லை.

கடல் போல் விரிந்து கிடக்கிறது.  அத்தனை பெரிய அறிவுக் கருவூலம்.







No comments:

Post a Comment