Friday, October 20, 2017

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட

திருவாசகம் - சிவமாக்கி என்னை ஆண்ட 


நாம் யார் ?

நம் உண்மை நிலையை பலப் பல போர்வைகள் போத்தி மூடி மறைத்து இருக்கின்றன.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்,டிவி, செய்தித் தாள்கள், நாம் வாசிக்கும் புத்தகங்கள், என்று ஒன்றின் மேல் ஒன்றாக சேர்ந்து நமது உண்மையான நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.

இதை புரிந்து கொள்வது சற்று கடினம்.

என்னை நான் அறிய மாட்டேனா ? என்னைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும் என்று நாம் நினைப்போம்.

சிந்திப்போம்.

நாம் சிலவற்றை சரி என்று , மற்றவற்றை தவறென்றும் நினைக்கிறோம். இந்த நினைப்பை எங்கிருந்து வந்தது ? யாரோ சொன்னது, எங்கேயோ படித்தது....

நாம் சிலவற்றை நம்புகிறோம், சிலவற்றை நம்புவதில்லை. ஏன் ?

சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. ஏன் ?

நாம் சிலவற்றை நியாயம் என்று நினைக்கிறோம். சிலவற்றை அநியாயம்  என்று  நினைக்கிறோம். ஏன் ?

எப்போதோ யாரோ சொன்னது. எங்கேயோ படித்தது. அது தான் உண்மை என்று நினைக்கிறோம்.

அது தான் உண்மையா ?

நாம் பின்பற்றும் மதம் மட்டும்தான் சரியா ? மற்ற மதங்கள் சொல்வதெல்லாம் தவறா ?

சரி, அதுவும் சரியான மதம் என்று ஒத்துக்கொண்டாலும் , இரண்டு மதங்களுக்கும் இடையில் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது ? இரண்டும் எப்படி  சரியாக இருக்க முடியும் ?

அதையெல்லாம் விட்டு விடுவோம்....

இறைவன் இருக்கிறானா ? இருந்தால் எப்படி இருப்பான் ?

இறைவனைப் பற்றி நமக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது அல்லவா ? அந்த அபிப்ராயம்  எங்கிருந்து வந்தது ?

படித்தது, கேட்டது ...அவ்வளவுதானே ? வேறு விதமாக படித்து இருந்தால், வேறு விதமாக கேட்டிருந்தால் நம் அபிப்ராயம் மாறி இருக்கும் அல்லவா ? அப்படி என்றால் எதுதான் இறைவன் ?

நம் மனதை பல மாசுகள், குற்றங்கள், குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன. அவற்றை நீக்கினால் உண்மை தெரியும்.

சிவன் என்பது வேறு எங்கோ இல்லை. ஏதோ இமய மலையில், பனியில் , உட்கார்ந்து இருக்கும் ஆள்  இல்லை. நீங்கள்தான் சிவன்.

"ஹா..நான் எப்படி சிவனாக முடியும் " என்று கேட்பீர்கள்.

நான் சொல்லவில்லை, மணிவாசகர் சொல்கிறார்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி" என்கிறார்.

என்னுடைய சித்தத்தில் உள்ள குழப்பங்களை எல்லாம் தெளியவைத்து என்னை சிவமாக்கி விட்டாய் என்கிறார்.

சித்தத்தில் உள்ள குழப்பங்கள் தெளிந்து விட்டால் சீவன் சிவமாகிவிடும்.

சீவன் வேறு சிவன் வேறு அல்ல. ஆனால் இந்த சீவன் தான் வேறு சீவன் வேறு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது. காரணம், குப்பைகளை தனது சித்தத்தில் அது அடைத்து வைத்துக் கொண்டு இருக்கிறது.

அந்த குப்பைகளுக்கு உள்ளே எங்கோ ஒரு மாணிக்கம் இருக்கிறது. அந்த மாணிக்கம் , தான் ஒரு குப்பை என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. குப்பையை விலக்கினால் ,ஒளி விடும் மாணிக்கம் வெளிப்படும்.

பாடல்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


பாடல்

முத்தி நெறி = முக்தி அடையும் வழியை

 அறியாத = அறியாத

மூர்க்கரொடு = மூர்க்கர்களோடு

முயல்வேனைப் = சேர்ந்து இருப்பேனை

பத்திநெறி = பக்தி வழியை

அறிவித்துப் = அறியும்படி செய்து

பழவினைகள் = பழைய வினைகள்

பாறும்வண்ணஞ் = அற்றுப் போகும் படி செய்து

சித்தமலம் = சித்தத்தில் உள்ள குற்றங்களை, மாசுகளை, குறைகளை

அறுவித்துச் = விலக்கி

சிவமாக்கி  = என்னையும் சிவமாகச் செய்து

எனையாண்ட = என்னை ஆண்டு கொண்ட

அத்தனெனக் = அத்தனாகிய நீ எனக்கு

அருளியவாறு = அருள் செய்தவாறு

யார்  பெறுவார் = யாரால் அடைய முடியும்

அச்சோவே = அச்சோ (வியப்பு குறி )


சித்தமலம் தெளிவித்து சிவமாகச் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

இறைவன் நமக்கு ஏன் அந்த மாதிரி செய்ய மாட்டேன் என்கிறார் ? மணிவாசகருக்கு  மட்டும் அருள் செய்தாரே ?

மணிவாசகரே சொல்கிறார் - "யார் பெறுவார் ". யாரால் பெற முடியும் என்று கேட்கிறார். 

பெறுவதற்கு வழியும் சொல்கிறார். 

"முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை "

முக்தி நெறி அறியாத மூர்கள் நட்பை விட வேண்டும். மூர்க்கர்கள் என்றால் யார் ?

பிடிவாதம் பிடிப்பவர்கள். அடம் பிடிப்பவர்கள். தான் சொல்வதே சரி என்று சாதிப்பவர்கள். அவர்களை மூர்க்கர்கள் என்று சொல்லுவார்கள். 

எதிலும் திறந்த மனம் வேண்டும். உண்மையை தேடுகின்ற தாகம் வேண்டும். ஆராய்கின்ற மன பக்குவம் வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதே உண்மை, நான் அறிந்ததே சத்யம் என்ற அடம் பிடிக்கக் கூடாது. 

"நெஞ்சக் கல்லு நெகிழ வேண்டும்"

"பக்தி நெறி அறிவித்து"

மூர்க்கர்களை விட்டு விலகிய பின், பக்தி நெறியில் செல்ல வேண்டும். 

மூர்க்கர்களை விட்டு விட்டு, நல்லவர்களை பின் பற்ற வேண்டும். 

அப்படி செய்தால் , பழைய வினைகள் நம்மை விட்டு விலகும். 

அது விலகும் போது சித்த மலம் விலகும். 

சித்த மலம் விலகினால், சிவமாவோம். 

திருத் தொண்டர் தொகை பாடிய சுந்தரர் , அந்த பட்டியலில் மணி வாசகரை சேர்க்கவில்லை. 

ஏன் ? மணிவாசகர் திருத்தொண்டர் இல்லையா ?

இல்லை. 

அவர் சிவமாகவே மாறி விட்டார். அவர் தொண்டர் இல்லை. 

"சிவமாக்கி எனை ஆண்ட" என்கிறார் மணிவாசகர்.

உரையை விட்டு விடுங்கள். பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். 

நேரே உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். 




2 comments:

  1. யார் எழுதிய இந்தப் பாடல் படித்தாலும், மாணிக்கவாசகர் பாடல் படிக்கும்போது ஏனோ மனம் நெகிழத்தான் செய்கிறது.

    ReplyDelete
  2. சுந்தரர் மணிவாசகரை சேர்க்காததற்குக் காரணம், மணிவாசகர் சுந்தரரின் காலத்திற்குப் பிற்பட்டவர்.

    ReplyDelete