Wednesday, October 4, 2017

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?

திருக்குறள் - விதியை வெல்ல முடியுமா ?


என்ன பண்ணி என்ன பலன். எல்லாம் விதி என்று பலர் நொந்து கொல்வதைப் பார்த்து இருக்கிறோம்.

விதி என்று ஒன்று இருக்கிறதா ? இருக்கிறது என்றால் அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள் ? கடவுளா ? எல்லாம் விதிப்படிதான் என்றால் மனிதன் ஏன் எந்த முயற்சியும் செய்ய வேண்டும் ? மனிதனுக்கு ஏதாவது சுதந்திரம் இருக்கிறதா ?  விதிக்கு நாம் எல்லாம் அடிமைகளா என்ற பல கேள்விகள் வரும்.

விதி என்பதை நமது சூழ்நிலை என்று வைத்துக் கொள்வோம். நாம் பிறந்த குடும்பம், வீடு, பெற்றோர், உடன் பிறப்பு , நாடு, நாம் படித்த பள்ளிகள் இவை எல்லாம் நாம் தேர்ந்தெடுக்க வில்லை. நமக்கு அமைந்தது. நம் விதி அது. நாம் விரும்பி பெற்றது அல்ல. நாம் விரும்பினாலும் மாற்ற முடியாது.

நமக்கு வரும் போட்டிகள், இடர்பாடுகள், எதிரிகள், சிக்கல்கள் இவையும் நமது விதிதான்.

பரிட்சைக்குப் போகிறோம். அதில் வரும் கேள்விகள் நம் விதி. நாம் அதை மாற்ற முடியாது.

வேலைக்கு மனு போடுகிறோம். நம்மோடு எத்தனை பேர் அந்த வேலைக்கு போட்டி போடுவார்கள். அதில் நம்மை விட சிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ? அதுவும் விதி.

பொதுவாகவே , இந்த விதி , அதாவது நமது சூழ்நிலை , நமக்கு எதிராகவே இருக்கிறது  ?

ஏன் ?

இருக்கும் வாய்ப்புகள் குறைவு ? அதை அடைய நினைப்போர் அதிகம். எனவே  ,போட்டி, பொறாமை,  போன்றவை இருப்பது இயற்கை.

காரில் போகிறோம், விபத்து ஏற்பட்டு விடுகிறது. விதி.

அலுவலகத்தில் , செய்யாத தவறு நம் மீது வந்து விழுகிறது. அதுவும் விதி.

சரி, இப்படி எல்லாமே விதி என்றால், மனிதன் என்னதான் செய்வது ? எப்படித்தான் வாழ்வது ?

இந்த விதியை நம்மால் வெல்ல முடியாதா ?


முடியும் என்கிறார் ?

எப்படி என்றால் அதற்கு இரண்டே இரண்டு செயல்பாடுகள் அவசியம்.

விதிக்கு எதிராக நாம் போராட வேண்டும். அந்த போராட்டத்தில் நமக்கு வேண்டியது இரண்டு அம்சங்கள்.

முதலாவது, விடாமல் போராட வேண்டும்.

இரண்டாவது, வெற்றி கிடைக்கும் வரை வலிமையை ஏற்றிக் கொண்டே போக வேண்டும் நமது போராட்டத்தில்.

பாடல்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்


பொருள்


ஊழையும்  = விதியையும்

உப்பக்கம் = புறமுதுகு

காண்பர்  = காண்பர்

உலைவின்றித் = தளர்வின்றி

தாழாது = முயற்சியில் குறைவு இன்றி

உஞற்று பவர் = முயல்பவர்

எத்தனை நாள் ஆனாலும் விடாமல் போராட வேண்டும்.

முயற்சியை விட்டு விடக் கூடாது.

அது மட்டும் அல்ல, முயற்சி குறையக் கூடாது.

முதல் முறை முயன்றோம். முடியவில்லை என்றால், இரண்டாம் முறை முன்பைவிட   அதிக முயற்சி செலுத்த வேண்டும். அதை விட குறைவாக அல்ல.

இரண்டாம் முறையும் தோல்வி என்றால், மூன்றாம் முறை முயற்சியை இன்னும் அதிகரிக்க  வேண்டும்.

நிறைய பேர் கொஞ்சம் முயற்சி செய்வார்கள். தோல்வி வந்ததும் தளர்ந்து விடுவார்கள்.  "என்னால் அவ்வளவுதான் முடியும் ...முடிந்த எல்லா வழியும் முயற்சி செய்து  விட்டேன். இனி மேல் என்ன செய்வது "  என்று விரக்தி அடைந்து அமர்ந்து விடுவார்கள்.


தோல்வி வரும். முயற்சியை தளர விடக் கூடாது. அது மட்டும் அல்ல, அதை அதிகரிக்கவும் வேண்டும்.


பரீட்ச்சையில் தேற வேண்டுமா ? நல்ல வேலை கிடைக்க வேண்டுமா ? கிடைத்த வேலையில் மேலும் மேலும் முன்னேற வேண்டுமா ? போட்டிகளில் முதலில் வர வேண்டுமா ?  பணம் திரட்ட வேண்டுமா ?


மனம் தளராமல், முயற்சி குறையாமல் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வளவுதான் என்னால் முடியும் என்று ஒரு காலத்திலும் சொல்லக் கூடாது.

மேலும் மேலும் முயற்சியின் வலுவை அதிகரிக்க வேண்டும்.

அப்படி செய்தால், விதி என்ற அந்த பெரிய எதிரியை புறம் காட்டி ஓட விடலாம்.


உலகிலேயே பெரிய எதிரி விதி தான்.

வள்ளுவர் சொல்கிறார் "ஊழையும்" என்று . அதில் ஒரு "ம்" சேர்க்கிறார்.


ஊழை (விதியை) மட்டும் அல்ல, அதை விட பெரிய சிக்கல் எது வந்தாலும், அதையும் வெற்றி காண முடியும் என்கிறார்.

ஊழை வெற்றி காண்பது மட்டும் அல்ல, அதை ஓட ஓட விரட்டி அதன் புற முதுகை  காண முடியும் என்கிறார்.

ஊக்கம் தரும் குறள் . வாழ்வில் தளர்ச்சி வரும் போது , சோகம் துக்கம் வரும் போது இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு புத்துணர்ச்சி தோன்றும். உலகையே வென்று விடலாம் என்று தோன்றும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_4.html

2 comments:

  1. ஊக்குவிக்கும் குறள் ! நன்றி.

    ReplyDelete