Thursday, November 30, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி


108 திவ்ய தேசங்களை பற்றி பாடுவதற்கு முன்னால் , ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முந்தைய பிளாகில் அவர் இராமானுஜருக்கு வணக்கம் செய்ததை பார்த்தோம்.

அடுத்த பாடலில் கூரத்தாழ்வானுக்கு வணக்கம் சொல்கிறார்.


நாம் ஒரு புது இடத்துக்குப் போகிறோம். அங்கே முன்னே பின்னே போனதில்லை. போகும் இடத்துக்கு ஒரு வரைபடமும் (map ) இல்லை. பின் எப்படி போய்ச் சேர்வது.

தமிழில் ஒரு பழ மொழி உண்டு.

"வழி வாயில " என்று.

கேட்டு கேட்டு போக வேண்டியதுதான்.

யாரிடம் கேட்பது ? அந்த இடம் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

உள்ளூரிலேயே இந்தப் பாடு என்றால், வைகுந்தம் எப்படி போவது ? யாரிடம் கேட்பது ?

ஆச்சாரியர்களிடம் கேட்க வேண்டும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், "கூரத்தாழ்வான் அடியை கூடுவதற்கு காத்திருக்கிறேன் " என்று. அவன் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுந்தம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்

முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்
தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண்
கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ்வான சடம்போட்டு


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முக் காலமும் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்துக்கு
எக் காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
போர தாழ்வான சடம் போட்டு

பொருள்

முக் காலமும் = மூன்று காலமும்

இல்லா = இல்லாத

முகில் = மேகம் போன்ற

வண்ணன் = நிறம் கொண்ட

வைகுந்தத்துக்கு = வைகுண்டத்துக்கு

எக் காலம் = எந்த காலத்தில்

செல்வான் = செல்லுவது என்று

இருக்கின்றேன் = இருக்கிறேன்

தக்கார் = தகுதி உடையவர்கள்

எண் = எண்ணும்

கூரத்தாழ்வான் = கூரத்தாழ்வான்

அடியை = திருவடிகளை

கூடுதற்கு = சேர்வதற்கு

நாய் அடியேன் = நாய் போன்ற கீழ்மையான அடியேன்

போர = மிகவும்

தாழ்வான = கீழான

சடம் = இந்த உடலை

போட்டு = போட்டு விட்டு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

வைகுண்டம் ....வைகுண்டம் என்றால் என்ன ?

குண்டம் என்றால் குழி. யாக குண்டம் என்றால் யாகத்தில் வேள்வி செய்ய தோண்டப்பட்ட குழி.

சாலை ஒரே குண்டும் குழியும் இருக்கிறது என்று சொல்வதில்லையா.

உள்ளத்திலே பெரிய குழி எது ? நரகக் குழி.

"வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்"

என்பார் அபிராமி பட்டர்.


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

பாவம் செய்பவர்கள் சென்று அடையும் இடம் நரகக் குழி.

சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

வி என்றால் இல்லை என்று அர்த்தம்.

நாயகன் என்றால் தலைவன்.

தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

பாவம் செய்பவர்கள் செல்லும் இடம் குண்டம்.

பாவம் செய்யாதவர்கள் செல்லும் இடம் வி-குண்டம். வைகுண்டம். வி-குண்டம் என்பது வைகுண்டம் என்று ஆனது.

புண்ணியம் செய்தவர்கள், பாவம் இல்லாதவர்கள் இருக்கும் இடம் வைகுண்டம். 

வைகுண்டம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பாற்கடல்,

அரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற நடன மாந்தர்களின் நாட்டியம்,

பஜனை பாடல்கள்

என்று இதெல்லாம் இருக்குமா ?

பிள்ளை பெருமாள் ஐயங்கார் முக்கியமான ஒன்றை கூறுகிறார்.

அங்கே காலம் என்பது கிடையாது.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது கிடையாது.

"முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்" என்கிறார்.

காலம் இல்லை என்றால் வினை கிடையாது. நேற்று செய்ததன் பலன் இன்று வந்தது என்ற பேச்சு கிடையாது.

கால தத்துவத்தை தாண்டி நிற்கும் இடம் அது.

வயது ஆகாது.

பிறப்பு இறப்பு மூப்பு என்பபது கிடையாது.

காலத்தை வென்று இருப்பார் என்பார் அருணகிரிநாதர்.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

காலம் என்பது இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா ?

காலம் இல்லாத இடம் வைகுண்டம். சிந்தித்துப் பாருங்கள். காலம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று. 

ஆனால், இந்த பூமியில் காலம் என்ற சிறையில் நாம் அகப்பட்டு இருக்கிறோம். 

"எக் காலம் செல்வான் இருக்கின்றேன் "

இந்த காலச் சிறையை விட்டு எப்போது செல்வது என்று இருக்கின்றேன் என்கிறார்.

இந்த உலகை விட்டு விட்டு வைகுண்டம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.

வைகுண்டம் போக வேண்டும் என்றால் கூரத்தாழ்வான் திருவடியை பற்ற வேண்டும்.

அப்படி என்று யார் சொன்னது ?

"தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு "

தக்கார் என்றால் தகுதியானவர், பெரியவர், சிறந்தவர் என்று பொருள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

என்பது குறள்.

பெரியவர்கள் எல்லோரும் எண்ணும் கூரத்தாழ்வான்.

குரு வணக்கம் முடிந்தது. நூலுக்குள் போவோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_30.html

2 comments:

  1. மீண்டும் மீண்டும் அனுபவித்து படிக்கத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. காலம் இல்லாத சூழ்நிலையை சிந்தித்து பார்த்தேன். தலை கால் புரியவில்லை.பகவானைத்தவிர வேறு ஒரு சிந்தனை இல்லாது இருப்பது தானோ!
    படிக்க படிக்க தெவிட்டாத ருசியை தருகிறது உங்கள் எழுத்து.

    ReplyDelete