Thursday, November 9, 2017

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்

திருப்பாவை - நாராயணனே நமக்கே பறை தருவான்



மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இது என்ன காலம் இல்லாத காலத்தில் திருப்பாவை ? இது என்ன மார்கழி மாதமா ?

இல்லையில்லை.

ஆண்டாள் பாசுரங்களில் பல இடங்களில் "பறை" என்ற சொல் வருகிறது.

மேலே உள்ள பாடலில்

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

என்று வருகிறது.

இப்படி பறை என்ற சொல்லை பல இடங்களில் ஆண்டாள் பயன் படுத்தி இருக்கிறாள்.

உரை எழுதிய பல பெரியவர்கள் பறை என்பதை ஒரு வாத்தியம் என்றே கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

"நாராயணன் பறை தருவான் "  என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும் சிலர்  எத்தனை வகையான பறைகள் உண்டு என்று ஆராய்ச்சியில்  இறங்குகிறார்கள்.

நாராயணன் ஏன் ஆயர் பாடி பெண்களுக்கு பறை என்ற வாத்தியத்தைத் தர வேண்டும் ?

பெண்கள் பறை அடிப்பார்களா ? அப்படி வேறு எங்கும் இல்லையே ...

இது கொஞ்சம் நெருடலாகவே இருந்து வந்தது எனக்கு.

தமிழில் பல சொற்கள் காலப் போக்கில் பொருள் மாறி விட்டன. ஒரு சொல்லுக்கு பல  பொருள் இருந்தால் ,  அவற்றில்  சில வழக்கத்தில் இருந்து  போய் விட்டன

அப்படி போனாலும், தமிழில் இருந்து மற்ற மொழிக்கு சென்ற சில சொற்கள் அப்படியே இருக்கின்றன.

நாம் அவற்றில் இருந்து சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை கண்டு கொள்ளலாம்.

உதாரணமாக மலையாளத்தில் பறை என்றால் "சொல்" என்று அர்த்தம்.

நீ பற என்றால் நீ சொல்லு என்று அர்த்தம்

நீ எந்து பறையுன்னது என்று சொன்னால் நீ என்ன சொல்கிறாய் என்று அர்த்தம்.

நிங்கள் பறையுன்னது மனசில ஆகில்லா என்றால் நீங்கள் சொல்வது மனதில்  புரியவில்லை என்று அர்த்தம்.

எனவே, பறை என்ற சொல்லுக்கு "சொல்", "வாக்கு", "பேச்சு" என்று அர்த்தம்.

இந்தச் சொல் தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்று அங்கு நிலைத்து விட்டது. இங்கே மறைந்து விட்டது.

இப்போது, அந்த அர்த்தத்தில் இந்த வரியைப் பார்ப்போம்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு ஒரு உறுதியான , நம்பிக்கையான சொல்லைத்த தருவான்.

இறைவனோடு பேசுகிறாள் ஆண்டாள். நாராயணனோடு அவ்வளவு அன்யோன்யம். அவன் இவளிடம் ஏதோ சொல்கிறான். அவன் சொன்னதை தனக்கு மட்டும் என்று  வைத்துக் கொள்ளாமல் "நம் எல்லோருக்கும் அவன் வாக்கு தருவான் " என்று தனக்கு கிடைத்த அந்த இறை அருளை எல்லோருக்கும் கிடைக்கும் படி சொல்லுகிறாள் ஆண்டாள்.


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கண அறிவு இலக்கியத்தை மேலும் சுவைக்க உதவும். சொற்களின் ஆழத்தை, அதன் வீரியத்தை அறிய உதவும்.

நாராயணனே நமக்கே பறை தருவான்


என்று சொல்லும் போது , ஆண்டாள் இரண்டு இடத்தில் ஏகாரத்தை பயன் படுத்துகிறாள். 

நாராயணனே
நமக்கே

ஏன் ?

இதற்கு உயர்வு சிறப்பு ஏகாரம் என்று  பெயர்.

நாராயணன்  நமக்கு  பறை தருவான்

என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொன்னால், நாராயணன் தந்தான், அவனுக்கு மேலும் வேறு யாரும் தர  .வாய்ப்பு இருக்கிறது. அது இதை விட  உயர்ந்த வாக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும் அல்லவா.

சுப்ரீம் கோர்ட் சொன்னது என்றால், வேறு ஏதாவது கோர்ட் அதை விட உயர்வாக சொல்லலாம்.

சுப்ரீம் கோர்டே சொல்லியாச்சு என்றால் அதுக்கு மேல அப்பீல் கிடையாது.

நாராயணனே என்று சொல்லிவிட்டால் அதுக்கு மேல ஒன்றும் இல்லை. 

தலைவர் வந்து விட்டார். கூட்டத்தை ஆரம்பிக்கில்லாம் என்றும் சொல்லலாம்.

தலைவரே வந்து விட்டார்...என்று சொன்னால் , இனிமேல் வேறு யாருக்கும் காத்திருக்க  தேவையில்லை என்பது புலனாகும்.


நமக்கே தருவான் ....நமக்கு மட்டும் தான தருவான். எனக்கே எனக்கா என்று கூறுவது போல. நமக்கு கொஞ்சம் தந்து விட்டு மற்றவர்களுக்கு மீதியை தருவான் என்று  இல்லாமல், அனைத்தையும் நமக்கே தருவான்  என்கிறாள்.நமக்கே தருவான், வேறு யாருக்கும் தர மாட்டான். எனக்கே தருவான் என்று சொல்லவில்லை. நமக்கே தருவான் என்று தன்னோடு உள்ள அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.

ஆண்டாளின் திருப்பாவையில் பத்து இடங்களில் இந்த பறை என்ற சொல் வருகிறது.

அது ஒரு வாத்தியம் என்று வைத்துப் பார்த்தால் சற்று நெருடத்தான்  செய்யும். அதை "சொல்" "வாக்கு " என்று வைத்துப்  பாருங்கள்.

மிக அழகான அர்த்தம் கிடைக்கும்.

பறை என்ற சொல் வரும் பாசுரத் தொகுப்பு கீழே உள்ளது.



 1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)


மற்றவற்றையும் எழுத ஆசைதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_9.html


11 comments:

  1. 'மாலே மணிவண்ணா'வில் வரும் 'பறை' தமிழ்ப் பறை தான், மலையாள பறையல்ல :)

    ReplyDelete

  2. மற்றவற்றையும் எழுத ஆசைதான்.What are you waiting for Sir. We are delighted, educated & mesmerized with your thinking & the consequent writing.Pl Sir we all beg of you just go ahead & write more.
    K.S.Subramanian

    ReplyDelete
  3. இரட்டை ஏகாரம் பற்றிய பொருளும், உதாரணங்களும் அருமை! நன்றி.

    ReplyDelete
  4. I thought

    பறை என்றால் சொல் அல்ல...

    பறை என்றால் அருள் முக்தி போன்ற அர்த்தம் இருக்கலாம்..

    ஏன்னென்றால் இறைவன் நமக்கு அருள் முக்தி ஆனந்தம் kodupavar

    ReplyDelete
    Replies
    1. அருள் என்று நாற்பது ஆண்டுகளாக நானே பொருள் கண்டு என் குடும்பத்தினருக்கும் சொன்னேன்.
      K.அரியநாதன் வழக்கறிஞர் போளூர் திருவண்ணாமலை மாவட்டம்.

      Delete
  5. பறை என்பதை வாக்கு என்று அர்த்தம் கொள்வது சரியாகத் தெரியவில்லை. பறை கொள்வான் என்ற சொற்பிரயோகத்தில் வாக்கு என்று எப்படி பொருள் கொள்ள இயலும். வரம் தருதல், அருள் தருவான் என்பது போன்ற பொருளில் தான் அந்த சொல் கையாளப்பட்டு இருக்க வேண்டும். மொழி ஆய்வாளர்கள் இதனை இன்னும் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. பறை எனும் சொல் குறித்து மேலும் கூகிளில் தேடும்போது சென்னைப் பல்கலைக்கழக லெகஸிகனில் ' விரும்பிய பொருள்' என்றும் ஒரு பொருள் சொல்லப் படுகிறது. அதற்கு மேற்கோளாக திருப்பாவை பாசுரம் தான் சொல்லப் பட்டுள்ளது.

    ReplyDelete
  7. விவேகாபாரதிJanuary 9, 2021 at 9:32 AM

    பறை என்ற சொல்லுக்கு வைகுண்டம் அல்லது சொர்க்கம் என அர்த்தம்... வைகுண்டம் செல்லும் ஆன்மா பற்றி அறிவிப்பு செய்தல் கருவி எனவும், ஆன்மா வைகுண்டம் சென்று திருவடி அடைதல் காரணமாக கடைசியாக கேட்கும்ஒலி என்பதால் பறைஒலி எனவும் தெளிவுறுக..... நன்றி

    ReplyDelete
  8. 'சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே' என்று தெளிவாக வாத்தியத்தைக் குறிக்கின்றதே? எனவே "நாம் அவன் புகழைப் பாடுவதற்கான இசையை அவனே நமக்குத் தந்து நமக்குப் புகழ் சேரும் வண்ணம் செய்வான் என்பது ததெளிவா வைஷ்ணவ சரணாகதி தத்துவத்தோடு ஒத்துப்போகிறது.
    (உ.ம்)
    *'வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே !' (விஷ்ணு சகஸ்ரநாமம்)
    * 'ஆய் நின்ற அவரே' (திருவாய் மொழி)
    "He is the subject of all predicates"A.K.Ramanujan
    *"When me they fly Iam the wings"( Emerson, 'Brahma'
    எவே அவன் புகழைப் பாட முடியுமா? என்று பிரமிக்காமல் பாட ஆசைப்படும் பக்தருக்கு இசையும் (பறையும்)அவனே தருவான் என்று படிக்கும் போது முதல்பாடல் என்ற விதத்தில் இன்னும் அழகாக எழுதியிருக்கிறாள் ஆண்டாள் என்றே தோன்றுகிறது,... பறையுடன் நமக்குப் பகையேதும் இல்லாத பட்சத்தில்.

    ReplyDelete
  9. பறை என்பது அறுதியில் முக்தியையே, அவன் இணையடி நீழலிலேயே வாசம் செய்யும் அந்த ஆனந்த நிலையையே குறிக்கிறது. இது பல வியாக்கியானங்களிலும் காணக் கிடைக்கும்.

    ஆனால், இந்த வரைவில் சொல்லிய படி அதற்கு தோலால் ஆன வாத்தியம் என்பதில் தொடங்கி, சொல், வாக்கு, வாக்குறுதி, என்கிற பொருள்களும் இருப்பதில் எந்த சந்தேகமும் இருக்க வொண்ணாது. ஶ்ரீ ஆண்டாள், (புலவி அல்லவோ?!) அதனால், பறை என்ற சொல்லின் இத்தகைய எல்லா பொருள்களையும் கையாண்டு, இந்த பதத்தை முதல் பாசுரத்திலிருந்தே தொடங்கி, கடைசி பாசுரம் வரையிலும் பிரயோகித்து, இந்த ஜீவன், அந்த பரமனடி சேரும் வரைக்குமான வழிதனை மறை பொருளாய் நல்கி அருளி யுள்ளாள். 🙏🏼

    ReplyDelete