Thursday, February 22, 2018

அபிராமி அந்தாதி - பூத்தவளே

அபிராமி அந்தாதி - பூத்தவளே 


பெண் !

பெண் என்பவள் இயற்கையின் ஒரு உன்னதம்.

ஆணால் புரிந்து கொள்ளவே முடியாத புதிர். ஒன்றும் அறியாத வெகுளிப் பெண்ணாக திருமணம் ஆகி கணவன் வீடு வருவாள். பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண். புகுந்த வீட்டில் , தன் ஆளுமையை நிலை நிறுத்துவாள்.

கணவன் பார்ப்பான்....

ஒரு சமயம் இளம் பெண்ணாக, கூச்சம், நாணம் நிறைந்த பெண்ணாக காட்சி தருவாள்.

அவன் உடல் நலம் குன்றி படுத்து விட்டால், பத்து அம்மா செய்யாததை அவள் ஒருத்தி செய்வாள்.

சரி, இவ்வளவு பொறுமையும், மன உறுதியும் உள்ள பெரிய பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாள் , ஒன்றும் இல்லாததற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கவலைப் படுவாள்.

ஒரு கணம் மகளாக இருப்பாள். மறு கணம் மனைவியாக. இன்னொரு கணம் தாயாக. சில நேரம் தமக்கையாக. தோழியாக.

நிறம் மாறிக் கொண்டே இருப்பாள்.

அவளை என்ன என்று நினைப்பது. தாயென்று நினைத்து கும்பிடுவதா ? தாரம் என்று நினைத்து அணைப்பதா ? மகள் என்று நினைத்து கொஞ்சுவதா ? தோழி என்று நினைத்து பட்டும் படாமல் சற்றே விலகி நிற்பதா ?

விடை தெரியாத புதிர் அவள்.

அவள் எப்படி இருக்கிறாளோ அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதுதான்  ஆணுக்கு சிறந்த வழி.

அவள் தாயானாள் , பிள்ளையாக மாறு.

அவள் தாரமானாள் , கணவனாக மாறு.

அவள் மகளானாள் , தகப்பனாக மாறு.

அவள் காதலியானால், காதலனாக மாறு.

அவள் ஒரு நிலையி இருப்பது இல்லை.

அபிராமி பட்டர் பார்க்கிறார். அபிராமி, எப்படி பட்டவள் என்று. அவருக்குப் புரியவில்லை. ஒரு சமயம் சிவனை விட மூத்த பெண்ணாக தெரிகிறாள். இன்னொரு முறை விஷ்ணுவுக்கு இளையவளாகத் தெரிகிறாள்.

பெண் அப்படித்தான்.

பாடல்

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


பொருள் 


பூத்தவளே புவனம் பதினான்கையும் = புவனம் பதினான்கையும் தோற்றி வித்தவளே. ஆண்களிடம் ஒரு வேலை சொன்னால், வேலையை விட சத்தம் அதிகமாக இருக்கும். பதினான்கு உலகத்தையும் ஒரு பூ பூப்பது போல மென்மையாக, சத்தம் இல்லாமால், தோற்றி வித்தாள்.


பூத்தவண்ணம் காத்தவளே = அந்த உலகங்களை காக்கிறாள். அதுவும் , எப்படி தோற்றுவித்தாளோ அதே மாதிரி காக்கிறாள். பூத்த வண்ணம் காக்கிறாள்.


பின் கரந்தவளே = அவற்றை பின்னாளில்  மறைத்து அருளுகிறாள்

கறைகண்டனுக்கு மூத்தவளே = கழுத்தில் கறை உள்ள சிவனுக்கு மூத்தவளே. உண்மையில் அவள் இளையவள். இருந்தாலும், அவள் சிவனை பராமரிக்கும் நிலையை பார்த்தால், இவள், அவனுக்கு மூத்தவள் போலத் தெரிகிறாள்.


என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே =  என்றுமே மூப்பு அடையாமல் இருக்கும் திருமாலுக்கு இளையவளாக இருக்கிறாள். அது எப்படி முடியும்.

சிவனுக்கு மூப்பு. திருமாலுக்கு இளையவள்.

அது தான் பெண்.


மாத்தவளே = மா தவம் உடையவளே

உன்னை அன்றி =   உன்னைத் தவிர

மற்றோர் தெய்வம் = வேறு ஒரு தெய்வத்தை

வந்திப்பதே = வணங்குவது இல்லை

பெண் அனைத்துமாக இருக்கிறாள்.

எல்லா பெண்களும் அபிராமியின் கூறுகள்தான்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_22.html

1 comment:

  1. பாடலே அழகு. அதை இன்னும் ஜொலிக்கும்படியாக உங்கள் விளக்கம். மிக்க நன்றி.

    ReplyDelete