Sunday, February 4, 2018

அகநானூறு - நீங்குதல் மறந்தே

அகநானூறு - நீங்குதல் மறந்தே 


பொருளாதாரம் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

பல வீடுகளில் கணவன் காலையில் ஒரு ஏழு அல்லது எட்டு மணிக்கு வேலைக்குப் போனால் இரவு வரும் போது எட்டு அல்லது ஒன்பது ஆகி விடும். அலுவலக நேரம் போக நிறைய நேரம் போக்குவரத்தில் போய் விடுகிறது.

இரவு வந்த பின், களைப்புதான் இருக்கும். போதா குறைக்கு பல நேரங்களில் conference call என்று வீட்டுக்கு வந்த பின்னும் வேலை தொடரும்.

வேலை இல்லாவிட்டாலும், அலுவலக சிந்தனையில் இருப்பார்கள்.

கொடுமை என்ன என்றால், பெண்களும் இப்போது வேலைக்குப் போகிறார்கள். அலுவலக வேலைக்கு மேல் , வீட்டு வேலையும் அவர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.

கணவன் மனைவிக்கு இடையில் அன்பை பரிமாறிக் கொள்ள நேரம் இல்லை.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் செலவழிக்க நேரம் இல்லை.

ஓடி ஓடி சம்பாதித்து, களைத்த பின், அந்த சம்பாதித்த பணத்தை மருத்துவரிடம் தந்துவிட்டு ....என்ன ஆயிற்று நம் வாழ்க்கைக்கு என்று ஏங்குவதே முடிவாக இருக்கும்.

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனை இல்லை.

சங்க காலம் தொட்டு நிகழ்வதுதான்.

அக நானூறில் ஒரு பாடல்.

அது ஒரு வறண்ட பாலை நிலம். மழை பெய்து ஆண்டு பல ஆகி விட்டன. பச்சை நிறமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்.

அந்த பொட்டை காட்டில் , ஒரு பெரிய மரம். அதுவும் பட்டுப் போய் இருக்கிறது. மரத்தின் அடி பாகத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதன் மூலம் வெப்பக் காற்று வீசும் போது ஊய்ய்ய் என்று சத்தம் வருகிறது.

மரத்தின் உச்சியில் ஒரு பருந்து கூடு. அதில் வாழும் இரண்டு பருந்துகள். அடிக்கடி தின்று விட்டு போட்ட மிச்ச மாமிச துண்டுகளில் இருந்து மாமிச வாடை அடித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கூண்டில்.

அடிக்கிற வெயிலிலும், உலர்ந்த காற்றிலும், அந்த பருந்துகளின் இறக்கையில் தீப் பிடித்தது போல  ஒரு தோற்றம்.

அந்தக் காட்டின் வழி சென்று, பொருள் தேடி வர நினைக்கிறான் கணவன்.

அவனுக்குள் ஒரு சஞ்சலம்.

மனைவியை விட்டு பிரிய வேண்டும். அவளின் அன்பு, அவளின் காதல், அவள் அணைப்பு தரும் சுகம் , இவற்றை எல்லாம் விட்டு விட்டுப் போகவும் மனம் இல்லை. பொருள் பெரிதா, மனைவியோடு இருந்து அவள் தரும் அன்பு பெரிதா என்ற கேள்வி அவன் முன் நிற்கிறது.

அவன் என்ன முடிவு செய்தான் ?

பாடல்

ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
2
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி   5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
3
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது,                 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.

பொருள் 

ஆள் வழக்கு அற்ற  = ஆள் அரவம் அற்ற


சுரத்திடைக் = காட்டு வழியில், காட்டின் இடையில்

கதிர் தெற = வெயில் மண்டைய பிளக்க

நீள் = நீண்ட, இங்கு அதிக

எரி பரந்த = அனல் பறக்கும்

நெடுந் = நெடிய, உயரமான

தாள் = அடி , அடி மரம்

யாத்து = 'யா ' என்ற மரத்தின்

போழ் வளி முழங்கும் = அடி மரத்தில் போகும் காற்று முழக்கம் செய்ய

புல்லென் = பொலிவற்ற (இலை , பூ இல்லாத)

உயர்சினை = சினை என்றால் உறுப்பு. இங்கே கிளை. உயர்ந்த கிளையில்


முடை நசை = மாமிச  நாற்றம் அடிக்கும்

இருக்கைப் = இருக்கும் இடம். கூடு

பெடை முகம் நோக்கி = பெண் பருந்தின் முகம் நோக்கி

ஊன் பதித்தன்ன = மாமிச துண்டை ஒட்டி வைத்தது போல

வெருவரு = அச்சம் தரும்

செஞ் செவி = சிவந்த காதுகளை கொண்ட

எருவைச் = பருந்து

சேவல் = சேவல்

கரிபு  = கரிந்து

சிறை  = சிறகு

தீய = தீய்ந்து போகும் படி

வேனில் நீடிய = உயர்ந்த மூங்கில்

வேய்  உயர் நனந்தலை = அகன்ற பெரிய காடுகளில்

நீ = நீ , தலைவன் தன் நெஞ்சுக்கு சொல்லுகிறான்

உழந்து எய்தும்  = கஷ்டப்பட்டு   அடையும்

செய்வினைப் = வேலை செய்ததால் கிடைக்கும்

பொருட் பிணி = ஈட்டிய பொருள்கள், செல்வங்கள்

பல் இதழ் = பல இதழ்கள் கொண்ட (மலர் போன்ற )

மழைக் கண்  = மழை போன்ற குளிர்ச்சியான கண்கள்

மாஅயோள்வயின் = மாநிறம் போன்ற அவளை

பிரியின் = பிரிந்த பின்

புணர்வது ஆயின் = அடைவது என்றால் (செல்வத்தை)

பிரியாது = அவளை விட்டுப் பிரியாமல்

ஏந்து முலை  = எடுப்பான மார்பகங்கள்

முற்றம் வீங்க = அன்பினால் நிறைவடைய

பல் ஊழ் = பல முறை

சேயிழை  = சிவந்த அணிகலன்களை   அணிந்த பெண்

தெளிர்ப்பக் = ஒலிக்க ,  அவள்அ கட்டி அணைக்கும் போது கேட்கும் வளையல் சத்தமும், உன்னை கண்டவுடன் ஆர்வமாக ஓடி வரும் அவளின் கொலுசு சத்தமும்

கவைஇ, நாளும் = நாள் தோறும்

மனைமுதல் = வீட்டில் இருந்து (உள்ளூரிலேயே இருந்து )

வினையொடும் = வேலை செய்து

உவப்ப = மகிழ்ச்சியோடு இரு

நினை = அது பற்றி நினை

மாண் நெஞ்சம்! = சிறந்த நெஞ்சே

நீங்குதல் மறந்தே = அவளை விட்டு நீங்குதலை மறந்தே

பொருள் தேவைதான். பொருளை விட சிறந்தது மனைவியின் அன்பு.

அப்படி சிறப்பாக நினைக்க வேண்டும் - கணவன்.

அது சிறப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் - மனைவி.

 அன்புக்கும் நேரம் ஒதுக்குங்கள். வாழ்வு இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_4.html



1 comment:

  1. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது என்ன ஆயிற்று?

    ReplyDelete