Wednesday, May 16, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்


ஒவ்வொரு குழந்தையும் தாய் மற்றும் தந்தையின் கலப்பில் உருவாவதுதான். அப்படி பிறக்கும் குழந்தைகள் தாய் மற்றும் தந்தையின் குணங்களை கொண்டுதான் பிறக்கின்றன.

அதாவது, அது ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி அதனிடம் ஆண் மற்றும் பெண் குணம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

ஆண்  குழந்தை என்றால் அதனிடம் ஆண் குணம் மட்டுமே இருக்கும் என்றில்லை. பெண் குழந்தைக்கும் அதே விதிதான்.

வளரும் போது என்ன ஆகிறது என்றால், இந்த சமுதாயம் ஆண் குழந்தையிடம் சில குணங்களையும், பெண் குழந்தையிடம் வேறு சில குணங்களையும் வளர விடாமல் தடுக்கிறது.

ஆண் பிள்ளை என்றால் அழக் கூடாது. பொம்மை வைத்து விளையாடக் கூடாது. வீட்டுக்குளேயே இருக்கக் கூடாது என்றும்

பெண் குழந்தை என்றால் அழலாம், மென்மையாக இருக்க  வேண்டும், அதிராமல் நடக்க வேண்டும், விளக்கு வைத்தால் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்றும் சில விதிகளை வரையறுக்கிறது.

எனவே ஆண் சில குணங்களை வலுக் கட்டாயமாக அழுத்தி வைக்கிறான் . (Suppress). பெண்ணும் அப்படித்தான்.

இப்படி சில குணங்கள் அழுத்தி மழுங்கடிக்கப் பட்டதால் ஒவ்வொருவரும் குறை மனிதர்களாவே இருக்கிறோம்.

இந்தக் குறையை நிரப்ப ஒரு ஆண் , வேறொரு பெண்ணையும், ஒரு பெண் வேறொரு ஆணையும் தேடுகிறார்கள். கிடைத்தால் நல்லது. பெரும்பாலான சமயம் கிடைப்பதில்லை. குறை நீடிக்கிறது.

ஒவ்வொரு ஆணுக்குளும் ஒரு பெண் உறங்கிக் கிடக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உறங்கிக் கிடக்கிறான்.

நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்குள் இருக்கும் பெண்ணை இனம் கண்டு ஒன்றாக இணைவதுதான் உச்ச கட்ட இன்பம் (orgasm). உங்களுக்குள் இருக்கும் பெண்ணை வெளியில் தேடாதீர்கள். உள்ளே தேடுங்கள்.

பெண்ணுக்கும் அப்படியே.

உண்மையான திருமணம் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆணுடனோ பெண்ணுடனோ நடப்பதுதான்.

அப்படி சக்தியும் சிவனும் ஒன்று சேரும் போது, அதி உயர் இன்பம் பிறக்கும். அதுவே இறை தரிசனம். நீங்கள் முழு மனிதராய் மாறுவது அப்போதுதான்.

மனிதன் இறைவனாய் மாறுவதும் அப்போதுதான்.

சரி, இதற்கும் தேவாரத்துக்கும் என்ன சம்பந்தம் ?

திரு நாவுக்கரசர் சொல்கிறார்


"காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்"

 காதல் கொண்ட பெண் யானையும், ஆண் யானையும் ஒன்றாக வருவதைக் கண்டேன். அதைக் கண்டவுடன் இறைவனின் திருவடியை கண்டேன். இது வரை கண்டு அறியாத ஒன்றைக் கண்டு கொண்டேன்  என்று.

ஆண் யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவது என்னே பெரிய விஷயமா. யானைகள் ஒன்றாக வருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

ஆணும் பெண்ணும் இணைவது, ஒரு சக்தியாக மாறுவது இறைக் காட்சி என்கிறார்.

சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி வகுக்கும்.  சிற்றின்பத்தை அறியாமல், அதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை அறியாமல், அதைக் கடக்காமல் பேரின்பத்தை அடையவே முடியாது.

என்பது வயதில் நாவுக்கரசர் சொல்கிறார். அனுபவ அறிவு.

பாடல்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

No comments:

Post a Comment