Friday, May 25, 2018

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம்

திருக்குறள் - பாவ மன்னிப்பே இல்லாத பாவம் 


பாடல்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

பொருள்

எந்நன்றி = எந்த நன்றியை, எந்த அறங்களை

கொன்றார்க்கும் = கெடுத்தவர்களுக்கும்

உய்வுண்டாம் = அந்த பாவத்தில் இருந்து விடுபட வழி உண்டு

உய்வில்லை = உய்வில்லை, வழி இல்லை

செய்ந்நன்றி = ஒருவர் தனக்கு செய்த நன்றியை

கொன்ற மகற்கு = சிதைத்த மக்களுக்கு

ஒருவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தர்வகளுக்கு ஒரு காலும் அந்தப் பாவத்தில் இருந்து விடு பட வழி இல்லை என்கிறார் வள்ளுவர்.

உலகில் எவ்வளவோ பெரிய பெரிய பாவங்கள் இருக்கின்றன. கொலை , கொள்ளை, கற்பழிப்பு, சூது, துரோகம், சூறையாடல், என்று ஆயிரக்கணக்கில் குற்றங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நன்றி மறந்ததை மட்டும் வள்ளுவர் ஏன் இவ்வளவு பெரிதாகக் கொள்கிறார் ?

பசுவின் முலையை அறுத்தவர், பெண்ணின் கருவை சிதைத்தவர், ஆசிரியரை கொன்றவர் என்றெல்லாம் பெரிய கொடுமையான குற்றங்கள் இருக்கும் போது , நன்றி மறப்பது என்ன பெரிய குற்றமா ? ஏதோ மறந்து விட்டது. அந்த பாவத்துக்கு ஒரு வடிகாலே இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஏன் ?

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். என்ன நிகழ்கிறது என்று.

பிள்ளைகள் , பெற்றோரின் துன்பங்களை, தியாகங்களை மதிப்பது இல்லை. "என்ன பெரிதாகச் செய்து விட்டீர்கள். உலகத்தில் இல்லாத ஒன்றையா செய்து விட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கடமை. நானா உங்களை பெறச் சொன்னேன் ?" என்றெல்லாம் பேசுகிறார்கள். ஊன் மறந்து , உறக்கம் மறந்து, தங்கள் இன்பங்களை எல்லாம் தியாகம் செய்த பெற்றோரிடம் ஒரு நன்றி பாராட்டுதல் இல்லை.

மாணவர்கள், ஆசிரியர்களை கேலி செய்கிறார்கள், கேலிப் பெயர் வைத்து அழைக்கிறார்கள். "என்ன பெரிய ஆசிரியர். ஒரு வாரம் கொடுத்தால் அவரை விட நான் அதிகம் தெரிந்து கொள்வேன். இன்டர்நெட்டில் போனால் எல்லாம் கிடைக்கும். மேலும் அவர் என்ன இலவசமாகவா சொல்லித் தருகிறார். பீஸ் கட்டுறோம் இல்ல..." என்று பேசுகிறார்கள்.கல்விக் கண் திறந்த ஆசிரியர்கள் பால் ஒரு நன்றி இல்லை.

நோயாளிகள், மருத்துவரை மதிப்பது இல்லை. கேலி பேசுகிறார்கள். மட்டம் தட்டுகிறார்கள். வலி போக்கி, உயிர் காக்கும் மருத்துவர் மேல் ஒரு நன்றி கிடையாது.

தொழிலாளிகள், மேலதிகாரியை மதிப்பது இல்லை, வேலை செய்யும் நிறுவனத்தை மதிப்பது இல்லை. வேலை தந்து, சம்பளம் தந்து, சமூகத்தில் ஒரு மதிப்பு தந்த நிறுவனம் அதன் அதிக்கரிகளிடம் ஒரு நன்றி பாராட்டுதல் கிடையாது.

பொது மக்கள் அரசாங்கத்தை, அரசு அதிகாரிகள் செய்யும் நன்மைகளை நினைத்துப் பார்ப்பது இல்லை.

கணவன் செய்த நன்மைகளை மனைவி நினைப்பது இல்லை. மனைவி செய்த நன்மைகளை கணவன் நினைப்பது இல்லை.

இப்படி ஒரு சமுதாயமே, ஒரு நாடே நன்றி மறந்து இருந்தால் என்ன ஆகும்.

பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் உள்ள பாசம் போகும். ஆசிரியருக்கு, மாணவன் மேல் உள்ள அபிமானம் போகும். நோயாளி என்ன ஆனால் என்ன, எனக்கு வர வேண்டிய வருமானம் வந்தால் போதும் என்று மருத்துவர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள், தொழிலாளியை நசுக்கி இலாபம் சம்பாதிக்கலாம் என்று முதலாளிகள் நினைக்கிறார்கள்.

இந்தப் பட்டியல் மிக நீளமானது.

ஒரு சமுதாயமே சிதைந்து போகும். யாருக்கும் யார்  மேலும் ஒரு நன்றி இருக்காது.  நன்றி அறிதல் இல்லை என்றால், செய்த உதவிக்கு கை மாறு செய்ய வேண்டும் என்று தோன்றாது.

ஒரு காட்டுமிராண்டி கூட்டம் உருவாகும்.

ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு இது இன்னும் மோசமாக  பரவும்.

உணவு தரும் விவசாயி, ஆடை தரும் நெசவாளி, ஆசிரியர், மருத்துவர், பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர், உறவினர், என்று எல்லோரிடமும் நன்றி பாராட்டி வாழ்ந்தால் வீடும், நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று  நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், நன்றி மறப்பதை பெரிய பாவமாக சொல்கிறார் வள்ளுவர்.

யாரெல்லாம் நமக்கு நன்மை செய்தார்கள் என்று நினைத்துப் பார்ப்போம். அந்த நன்மைகளை மறக்காமல் இருப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_25.html

1 comment:

  1. ஆணித்தரமாக நல்ல உபமானத்துடன் அழுத்தமாக எடுத்து உரைத்தீர்கள். மிக்க நன்றி.
    தூர பயணத்தினால் சில பதிவுகள் விட்டு போய்விட்டன. விரைவில் படித்து விடுகிறேன்.

    ReplyDelete