Thursday, May 3, 2018

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?

தேவாரம் - மண்டையில ஏன் ஏற மாட்டேங்குது?


வானில் கரிய மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. குளிர்ந்த காற்று அடிக்கிறது. மண் வாசம் எங்கிருந்தோ வருகிறது. மழை வரும் என்று நாம் யூகிக்கிறோம்.

தூரத்தில் , மலை மேல் புகை எழுகிறது. ஏதோ தீ பிடித்திருக்கிறது என்று நம்மால் அறிந்து  கொள்ள முடிகிறது. நேரில் பார்க்கவில்லை, இருந்தும் தீ இருக்கும் என்று அறிவு சொல்கிறது.

ஒருவன் கொலை செய்து விட்டான் என்று நீதி மன்றத்தில் அவனை நிறுத்தி இருக்கிறார்கள். கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ஆனால், கொலை செய்யப் பட்டவனுக்கும், இவனுக்கும் முன் விரோதம் இருந்து இருக்கிறது, இவன் கத்தி வாங்கி இருக்கிறான், கொலை செய்யப் பட்டவனின் வீட்டுக்குள் இவன் போனதை பார்த்த சாட்சி இருக்கிறது. பின் அவள் வெளியே வந்ததைப் பார்த்த சாட்சி இருக்கிறது. கொலை செய்யப் பட்டவனின் உடம்பில் உள்ள கத்தியில் இவன் கை  ரேகை இருக்கிறது. இவன் தான் கொலையாளி என்று நினைக்க இவ்வளவு ஆதாரங்கள் போதும். இருந்தும், கொலையை நேரில் பார்த்த சாட்சி இல்லை.

அது  போல, கடவுளை நேரில் பார்த்த சாட்சி இல்லை. யாரும் பார்த்து விட்டு வந்து சொல்லவில்லை. படம், வீடியோ எதுவும் இல்லை. அவரும் நேரில் வந்து நம்மிடம் சொல்ல வில்லை.

இருந்தும்,

"எவ்வளவோ குறிகள் இருக்கின்றன, அடையாளங்கள் இருக்கின்றன, கோவில்கள் இருக்கின்றன,  வேதாகம நெறிகள் இருக்கின்றன, அவற்றில் சொல்லப் பட்ட நேர்மையான கருத்துக்கள் இருக்கின்றன, இவ்வளவு ஆயிரம் இருந்தும், சொன்னாலும், அறிவில்லாமல் , இவை அனைத்தும் உங்கள் மனதில் ஏறாமல் இருப்பது எவ்வாறு"

என்று திருநாவுக்கரசர் கேட்கிறார்.

பாடல்


குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.



பொருள்


குறிகளும் = சமயக் குறிகளும்

அடையாளமும் = அடையாளங்களும்

கோயிலும் = கோயிலும்

நெறிகளும் = வழி முறைகளும்

அவர் = இறைவன்

நின்றதோர் நேர்மையும் = இருப்பதற்கான நேர்மையான சாட்சியங்களும்

அறிய = அறிந்து கொள்ள

ஆயிரம் = ஆயிரக் கணக்கில்

ஆரணம் ஓதிலும் = வேதாகமங்கள் சொன்னாலும்

பொறியீ லீர் = பொறி என்றால் கருவி. இங்கே அறிவைக் குறிக்கும்.

மனம் = உங்கள் மனதில்

என் = ஏன்

கொல் = அசைச் சொல்

புகாததே = ஏன் அவை ஏறவில்லை , புகவில்லை

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இதில் ஏதோ ஒன்று இருக்கும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை என்று கேட்கிறார்.

இத்தனையும் பொய்யாகவா இருக்கும் ?

சிந்திக்க வேண்டிய கேள்வி.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_3.html

No comments:

Post a Comment