Showing posts with label கந்தர் அநுபூதி. Show all posts
Showing posts with label கந்தர் அநுபூதி. Show all posts

Monday, March 18, 2024

கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து

 கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து


நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள். 


அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு சக்கரம் என்கிறார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆங்க்யா என்ற ஆறு சக்கரங்களின் வழியாக மேலே ஏறி, தலைக்கு மேல் சஹாஸ்ரார் என்ற இடத்தை சென்று அடையும் என்கிறார்கள். 


இந்த சக்தி ஒவ்வொரு இடத்திலும் ஏறி நிற்கும் போது, பல நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார்கள். 


உதாரணமாக கழுத்தில் வந்து நின்றால் அவர்கள் சொல்வதை உலகம் கேட்டு நடக்கும், என்கிறார்கள். ஏன், சிலர் சொல்வதை உலகம் கேட்கிறது என்றால் காரணம் அவர்களின் சக்தி அங்கே நிற்கிறது. 


இந்த சக்கரங்கள் உண்மையா? அப்படியும் நடக்குமா? மற்ற மதங்களில் இது பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விகள் நிற்கின்றன. நிறைய ஆராய வேண்டி இருக்கிறது. 


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


என்பார் மணிவாசகர். 


குண்டலினி என்ற அந்த சக்தி இதயத்துக்கு வருவதும், தலைக்கு மேல் வருவதையும் இது குறிப்பதாக சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 


இங்கே, அருணகிரியார் பாடுகிறார் 


"இந்த குண்டலினி சக்தி ஆறு நிலைகளைத் தாண்டி சஹாஸ்ரார் என்ற அந்த நிலைக்கு செல்லும் பேறு எனக்குக் கிடைக்குமா? கோபம் கொண்டு வரும் சூரனை வென்று, தேவர்கள் மனம் குளிரும்படி தேவ லோகத்தை அவர்களுக்கு கொடுத்தவனே "


என்று. 


பாடல்  


ஆறாறையு நீத் ததன் மேனிலையைப் 

பேறாவடி யேன் பெறு மாறுளதோ 

சீறா வரு சூர் சிதைவித் திமையோர் 

கூறா வுலகங் குளிர் வித்தவனே 


சீர் பிரித்த பின் 


ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையை  

பெறாத அடியேன் பெறுமாறு உளதோ  

சீறா வரும்  சூர் சிதைவித்து இமையோர்  

கூறா உலகம்  குளிர் வித்தவனே 


பொருள் 


ஆறு = வழி, பாதை 


ஆறையும் = ஆறு நிலைகள் (மூலாதாரம் தொடங்கி ஆங்க்யா வரை) 


நீத்து = விடுத்து 

அதன் மேல் நிலையை  = அதற்கு மேல் உள்ள நிலையான சஹாஸ்ரார் 

 

பெறாத அடியேன் = இது வரை பெறாத அடியேன் 


பெறுமாறு உளதோ = இனி அடையும் வழி உள்ளாதா? 

  

சீறா வரும் = சீறி வரும் 


 சூர்= சூரனை 


சிதைவித்து = வென்று 


இமையோர் =தேவர் 

  

கூறா உலகம் = அவர்களுக்கு அளிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு அளித்து 


குளிர் வித்தவனே  = அவர்களை குளிர்வித்தவனே 


"கூறா உலகம்" - செய்யா எனும் வாய்பாடு. கூறாக பிளந்து கொடுக்கப்பட்ட உலகம். தேவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட தேவலோகத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்டு தேவர்கள் மனம் குளிரும்படி செய்தவனே.


"ஆறாறையும்" என்பதை 6 x 6 = 36 என்று கொண்டு, முப்பத்தி ஆறு தத்துவங்களையும் கடந்து மேலே செல்வது என்றும் பொருள் சொல்லுவார்கள். 





Tuesday, March 12, 2024

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும்

கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் 


பக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும். 


அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, பாட்டில் உள்ள மற்றைய செய்திகள்/கருத்துகளுக்குள் நாம் போகலாம். 


அருணகிரியார் சொல்கிறார் ,


"என் தாய் நீ. எனக்கு அருள் செய்யும் தந்தை நீ. என் மனதில் உள்ள சலனங்களை எல்லாம் போக்கி, என்னை ஆட்கொள்"


என்று. 


பாடல் 


எந்தாயு மெனக் கருள் தந்தையு நீ 

சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் 

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 



சீர் பிரித்த பின் 


என் தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ 
 
சிந்தா குலமானவை தீர்த்து எனை ஆள்  

கந்தா கதிர் வேலவனே உமையாள் 

மைந்தா குமரா மறை நாயகனே . 


பொருள் 


என் தாயும் = என்னுடைய தாயும் 


எனக்கு அருள் தந்தையும் நீ = எனக்கு அருள் செய்யும் தந்தையும் நீயே 
 
 
சிந்தா குலமானவை = என் சிந்தையுள் ஏற்படும் சலனங்களை 


தீர்த்து = முடித்து வைத்து 


எனை ஆள் = என்னை ஆட்கொள்வாய் 
  

கந்தா = கந்தா 


கதிர் வேலவனே = கதிர் வீசும் வேலை உடையவனே 


உமையாள் மைந்தா = உமா தேவியின் மைந்தனே 


குமரா = குமரனே 


மறை நாயகனே = வேதங்களின் தலைவனே 

 


சிந்தையில் உள்ள சலனங்கள் நின்றால்தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட முடியும். அந்தச் சலனங்களை நாமே நிறுத்த முடியுமா?  அருணகிரியார் சொல்கிறார், "முருகா நீயே அந்தச் சலனங்களை நிறுத்தி என்னை ஆட்கொள் " என்று. இறைவனிடமே அந்தப் பொறுப்பையும் விட்டுவிடுகிறார். பூரண சரணாகதி. 


Wednesday, March 6, 2024

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


நிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம். 


அருணகிரியார் கூறுகிறார் 


"மறைத்து வைக்கும் கல்வியை கொண்டவர்களின் வாசலில் சென்று அவர்களிடம் உதவி கேட்கும் படி வைக்காமல் உயர்ந்த மெய்ப் பொருளை நீ எனக்கு அருள வேண்டும். தலைவா, இளையவனே, வஜ்ராயுதம் என்ற படையைக் கொண்டவனே, சிவ யோகத்தை பக்தர்களுக்குத் தருபவனே "


என்று. 


பாடல் 



கரவாகிய கல்வியுளார் கடை சென்று 

இரவா வகை மெய்ப் பொருளீகுவையோ 

குரவா குமரா குலிசாயுதகுஞ் 

சரவா சிவ யோக தயாபரனே 


பொருள் 


கரவாகிய = கரத்தல் என்றால் மறைத்தல். மறைத்து வைக்கும் 


 கல்வியுளார் = கல்வியை உடையவர்கள் 


கடை சென்று = வாசலில் சென்று 

 

இரவா வகை  = பிச்சை எடுக்காமல் இருக்கும்  படி 


மெய்ப் பொருளீகுவையோ  = மெய்யான பொருளை எனக்குத் தந்து அருள் புரிவாயா 

 

குரவா = குரவன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்றாலும், தலைவன் என்ற அர்த்தம் இங்கு பொருந்தும். 


குமரா = இளையவனே 

 

குலிசாயுத = குலி + ஆயுதம் = வஜ்ரப் படையை உடையவனே 

 

 

குஞ்சரவா = குஞ்சரம் என்றால் யானை. தெய்வயானைக்கு தலைவனே 


சிவ யோக தயாபரனே = சிவ யோகத்தை பக்தர்களுக்கு தருபவனே 


சாதாரண மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று மறைத்து வைத்துக் கொள்வார்கள். முருகன், சிவ யோக பலன்களையே பக்தர்களுக்குத் தருபவன். அவனிடமே நேரே சென்று கேட்டு பெற்றுக் கொள்ளலாம். 


"இரவா வகை மெய் பொருள் ஈகுவையோ" என்று கொண்டு, கரத்தல் தொழிலை செய்பவர்கள் மெய் பொருளை கற்றுத் தராமல் மற்றவற்றை கற்றுத் தருவார்கள், அந்த மாதிரி ஆட்களிடம் போய் நிற்காமல், நீயே எனக்கு மெய்ப் பொருளைத் தா என்கிறார். 


"கரவா வகை கல்வி"..நாம் படிக்கும் அனைத்தும் நமக்கு மெய் பொருளை உணர்த்துவதில்லை. அதை மறைத்து, வேறு எதையெதையோ நமக்குத் தரும். அந்த மாதிரி மெய்ப் பொருளை மறைக்கும் கல்வியை விட்டு விட்டு மெய்ப் பொருளை அறியும் கல்வியை எனக்குத் தா என்று வேண்டுகிறார் என்றும் கொள்ளலாம். 


வள்ளுவர் கூறுவார், 


கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழார் எனின் 


கல்வி, மெய் பொருளைத் தர வேண்டும். 


 


Friday, February 23, 2024

கந்தர் அநுபூதி - கமழும் கழல்

கந்தர் அநுபூதி - கமழும் கழல் 


கிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?  


இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா?  இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். இன்னொருபுறம் மிகுந்த மகிழ்ச்சி. 


அது போல அருணகிரிநாதர் இருக்கிறார். 


முருகனின் திருவடியில் சரணம் அடையும் பேறு தனக்கு எப்படி கிடைத்தது என்று விளங்காமல் தவிக்கிறார். அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று திகைக்கிறார். 


அப்படி என்ன முருகன் திருவடியில் சிறப்பு?


அவரே சொல்கிறார் 


"வீடு பேற்றைத் தரும் திருவடி. தேவர்களின் தலை மேல் இருக்கும் திருவடி. வேதத்தில் படிந்து கிடக்கும் திருவடி. வள்ளியைத் தேடி தினைப்புனம் உள்ள காட்டில் பதிந்த திருவடி. இங்கெல்லாம் அவன் திருவடி பட்டு, அவை எல்லாம் மணம் வீசுகிறதாம்."


பாடல் 



சாடும் தனிவேல் முருகன் சரணம் 

சூடும் படிதந்தது சொல்லு மதோ 

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங் 

காடும் புனமும் கமழுங் கழலே . 


பொருள் 


சாடும் = போர் புரியும் 

தனி = தனித்துவமான 


வேல் = வேல் 


முருகன் = முருகன் 


சரணம்  = சரண் அடையும்படி 


சூடும் படிதந்தது = அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளத் தந்தது 


சொல்லு மதோ  = எப்படி என்று சொல்ல முடியுமா? 


வீடும் = சுவர்க்கத்திலும் 


சுரர்மாமுடி = தேவர்களின் தலையிலும் 


வேதமும் = வேதத்திலும் 


வெங் காடும் = வெம்மையான காட்டிலும் 


புனமும் = அந்தக் காட்டில் உள்ள திணை புனம் உள்ள இடத்திலும் 


 கமழுங் கழலே = மணம் வீசும் திருவடிகளே 


Wednesday, December 25, 2019

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.

காக்கை கரவா கரைந்துண்ணும் என்பார் வள்ளுவர்.

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பார் மணிவாசகர். இறைவன் படைத்து, காத்து, கரந்து விளையாடுகிறான்.




ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)


சிலர் படிப்பார்கள். நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை பிறருக்கு சொல்ல மாட்டார்கள். எங்கே தெரிந்து கொண்டால் அவனும் நம்மை மாதிரி ஆகி விடுவானோ, நம் பெருமை குறைந்து விடுமோ என்ற பயம்.


நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது. யார் எப்படிப்  போனால் என்ன, நாம் நல்லா இருக்க வேண்டும்  என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கலாம்.


தான் கற்ற மந்திரத்தை உலகில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ள கோவில் கோபுரத்தில் மேல் ஏறி சொன்னார் இராமானுஜர். அவருக்கு அந்த உபதேசத்தை சொன்னவர்கள் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது  (மறைத்து வை) என்று  சொல்லித்தான் அனுப்பினார்கள். இராமானுஜரின்  தாயுள்ளம், எல்லோரும் உய்ய வேண்டும் என்று தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எல்லோருக்கும் சொன்னார்.


அப்படி அல்லாமல், தனக்கு மட்டும் என்று அறிவை வைத்துக் கொள்ளும் அறிவுக் கருமிகளின்  வீட்டு வாசலில் சென்று நிற்கும் படி என்னை வைத்து விடாதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.



பாடல்

கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

படிக்க கொஞ்சம் கடினம் தான். சீர் பிரிப்போம்.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசாயுத குஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

பொருள்


கரவாகிய  = மறைத்து வைக்கக் கூடிய

கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்

கடை சென்று  = வாசலில் சென்று

இரவா வகை  = கை  ஏந்தும் படி செய்யாமல்

மெய்ப்பொருள் ஈகுவையோ = உண்மையான பொருளை தருவாயாக

 குரவா = தலைவா. குரவன் என்றால் தலைவன்

குமரா = குமரா

குலிசாயுத =குலிசாயுதம் என்ற ஆயுதத்தை கையில் கொண்டவனே

குஞ்சரவா  = குஞ்சரவா

சிவயோக  = சிவ யோகத்தில் நிற்பவனே

தயாபரனே! = தயை நிறைந்தவனே

கல்வியை கற்றால் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு விளக்கமும் தரலாம்...மறைத்து வைக்கக் கூடிய கல்வி.

கல்வி, உண்மையை நம்மிடம் இருந்து மறைத்து விடும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்"  என்றார் மணிவாசகர்.

கல்விக்குள் போகக் கூடாது. போனால், அதைத் தாண்டி போக வேண்டும். எல்லை கடக்க வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின் 

என்பார் வள்ளுவப்  பேராசான்.

அறிவு இறைவனிடம் இட்டுச் செல்ல வேண்டும்.

எங்கே இட்டுச் செல்கிறது?  ஆணவத்திடம் தான் இட்டுச் செல்கிறது.

படியுங்கள். படித்ததை மற்றவர்களுக்கும் தாருங்கள். படித்தத்தின் பலன் என்ன என்று சிந்தியுங்கள்.  பயன் என் கொல் என்று வள்ளுவர் கேட்கிறார்.


interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_25.html

Sunday, October 27, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்


கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 




குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

இந்தப்  பாடலை  சில நாட்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தேன்.

அது என்ன அறிவு அற்று, அறியாமையும் அற்று என்று சில அன்பர்கள் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறியாமை அற்றது சரி. அறிவு ஏன் அற்றுப் போக வேண்டும். அறிவு போய் விட்டால் அறியாமை வந்து விடாதா என்பது அவர்கள் கேள்வி.

சிந்திப்போம்.


நிறைய வாசிக்கிறோம். சொற்பொழிவுகள் கேட்கிறோம். கோவில்களுக்குப் போகிறோம். பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்கிறோம்.

எதற்கு ?

வாசிக்க வாசிக்க, வந்து கொண்டே இருக்கும்.  படிக்க வேண்டியது கடல் போல இருக்கிறது.  அனைத்தையும் வாசித்து விட முடியுமா ? அப்படியே வாசித்து விட்டாலும், எல்லாம் புரிந்து விடுமா? அப்படியே புரிந்தாலும், நமக்கு புரிந்துதான் சரி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?

சிலர் கூறுவார்கள் , தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு குறிப்பிட்ட பாடல்களை, முழுவதும் சொல்லிவிட்டுத் தான் காப்பியே குடிப்பேன் என்று.

மூன்று வேளை அதை செய்வேன், ஆறு வேளை இதைச் செய்வேன், மாதம் இருமுறை அதைச் செய்வேன் என்று.

இப்படி செய்து கொண்டே இருந்தால், நேரே சுவர்க்கம், இறைவன் திருவடி என்று எதையோ அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அது சரி அல்ல.

மாடிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக எறிச் செல்ல வேண்டும். நான் தினமும் பத்து படி ஏறி இறங்குவேன், ஒரு நாளைக்கு இருப்பது முறை  ஏறி இறங்குவேன், இப்படி இருப்பது வருடம் செய்து கொண்டு இருக்கிறேன்.  வாழ் நாள் பூராவும் இப்படி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் முழு மாடியும் ஏறி விடுவேன் என்று யாராவது சொன்னால் இப்படி இருக்கும்.

ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு  நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.

அந்த பாசுரம் எவ்வளவு நல்லா இருக்கு, இந்த பாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது   என்று அதிலேயே நின்று விடக் கூடாது.

பள்ளிக் கூடம் போனால்,  ஒவ்வொரு வகுப்பாக மேலே செல்ல வேண்டும்.

இரண்டாம் வகுப்பு பிடித்து இருக்கிறது என்று ஒரு 30 வருடம் இரண்டாம் வகுப்புக்கே போய் கொண்டு இருக்க முடியுமா ?

அவ்வளவு ஏன் ?

வீடு குப்பையாக இருக்கிறது. விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கிறோம். குப்பை எல்லாம் ஒரு   ஓரத்தில் தள்ளி விட்டோம். வீடு சுத்தமாகி விட்டது.

வீடு சுத்தமானபின் விளக்குமாறை என்ன செய்வது?

"அடடா, என் அருமை விளக்குமாறே , நீ அல்லவா இந்த வீட்டை சுத்தம் செய்தாய். எனவே உன்னை நான் நடு வீட்டில் வைக்கிறேன் " என்று யாராவது சொல்வார்களா?

குப்பையை கூட்டியபின் பின் விளக்குமாறை குப்பையோடு சேர்த்து ஓரமாக  வைத்து விட வேண்டும்.

அறியாமை என்ற குப்பை நீங்கியபின், அறிவு என்ற விளக்குமாறு எதற்கு?

படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. படித்ததை வைத்து மேலே செல்ல வேண்டும்.  வாழ்நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருப்பேன் என்பது, விளக்குமாறை தலையில் வைத்துக் கொண்டு  அலைவது போலத்தான்.



பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது

அறிவு என்பது இறைவனை அல்லது உண்மையை அறிய பெரிய தடை. 

சொல்வது, அருணகிரி நாதர் மட்டும் அல்ல. மணிவாசகரும் சொல்கிறார். 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.  

செல்வம் சேர்த்து வைத்து வைத்தால், அதை விட்டுப் போக மனம் வராது. இன்னும் அனுபவிக்க வேண்டும்  என்றே மனம் பற்றும். 

அன்பான மனைவி கிடைத்தால், அவளை விட்டு பிரிய மனம் வராது.  ஆசை மேலும் மேலும் வளரும். 

பிள்ளைகள், கேட்கவே வேண்டாம். பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி போவது. 

இதெல்லாம் நமக்குத் தெரிகிறது. 

அடுத்து ஒன்றைச் சொல்கிறார் மணிவாசகர் - "கல்வி" 

கல்வியும்  சித்தத்தைக் குழப்பும் என்கிறார். 

இறைவனை அடைய செல்வம், மனைவி, பிள்ளைகள் எப்படித் தடையோ அப்படி கல்வியும். 

காரணம், கல்வியில் இறங்கியவர்கள் அதில் போய் கொண்டே இருப்பார்கள். அதுவே குறிக்கோள் என்பது  போல .

"கற்பனவும் இனி அமையும்" என்பார் மணிவாசகர். 

படியுங்கள். பூஜை செய்யுங்கள். விரதம் இருங்கள். ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள்  எல்லாம்  சொல்லுங்கள்  

ஆனால், அதுவே முடிவானாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.  

அதைத் தாண்டி போக வேண்டும். 

அறியாமை அற்று, அறிவும் அற்றுப் போக வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_27.html

Friday, October 18, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட செல்வம். எல்லாவற்றையும் பல இரும்பு பெட்டிகளில் போட்டு அவனுக்கு சொந்தமான பல இடங்களில் மறைவாக புதைத்து வைத்து இருந்தான். அந்த பெட்டிகளின் சாவியை அவனுடைய மகனிடம் கொடுத்து "மகனே நான் இதுவரை சேர்த்த செல்வங்களை எல்லாம் பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்து இருக்கிறேன். அந்தப் பெட்டிகளின் சாவிகள் இவை. பத்திரமாக வைத்துக் கொள் . எனக்குப் பின்னால் அவை அனைத்தும் உனக்குத்தான்" என்று கூறினான்.

மகனும் சாவியை வாங்கிக் கொண்டான். பெட்டிகள் எங்கே இருக்கிறது அந்தத் தந்தை மகனிடம் சொன்னான். அவன் சரியாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. சரி, அப்பறம் இன்னொரு நாள் கேட்டு சரியாக எழுதி வைத்துக் கொள்வோம் என்று இருந்து விட்டான்.  விதியின் விளையாட்டு. தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.

மகனிடம் சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்த சாவிகள் எந்த பூட்டைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது. பூட்டு தெரியாது. ஆனால், சாவி இருக்கிறது.

அவன் , அவனுடைய  மகனிடம் "மகனே, உன் தாத்தா பெரிய ஆள். நிறைய சம்பாதித்தார். அவற்றை எல்லாம் பல பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்தார். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை.  நீ தான் அவற்றின் வாரிசு. சில பெட்டிகளின் இடம் எனக்குத் தெரியும். மற்றவை மறந்து  போய் விட்டது. நீ கண்டு பிடித்துக் கொள். ஆனால், அவற்றில் பல விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கின்றன" என்று கூறி தன் மகனிடம் அந்த சாவிகளைக் கொடுத்தான்.

இப்படி தலை முறை தலை முறையாக அந்த சாவிக் கொத்து கை மாறிக் கொண்டே வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பின், தற்போதைய வாரிசுகள் "எங்க முன்னோர்கள்  பெரிய செல்வந்தர்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தார்கள். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை " என்று அந்த சாவிக் கொத்தை  கையில் ஸ்டைலாக சுத்திக் கொண்டு திரிகிறார்கள். பெட்டிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அது போலத்தான்  பலர் இன்று இருக்கிறார்கள்.

கோவில், பூஜை, நாள், கிழமை, உடம்பில் பல விதமாக கோடுகள் போட்டுக் கொள்வது, பல விதமாக உடை  அணிந்து கொள்வது, சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது  என்று பல வித காரியங்களை செய்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள். அவர்கள் மடையர்களா என்று  கேட்கிறார்கள். முன்னோர்கள் செய்ததற்கு காரணம் இருக்கலாம். நீ ஏன் செய்கிறாய் என்றால் தெரியாது.

இந்த சடங்களுகளின் பின்னால் காரணம் இருக்கலாம். ஆனால் அது என்ன என்று தெரியாது.

சாவி இருக்கிறது. பூட்டு எங்கே என்று தெரியாது.

குறியீடுகள் முக்கியமாக போய் விட்டது. சாவியே செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விரதம் என்றால் அது எதை சாதிக்க முற்படுகிறது என்று தெரிய வேண்டும்.

விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். .

ஏன் செவ்வாய், வெள்ளி பூஜைக்கு உகந்த நாள்? ஏன் மார்கழி உயர்ந்த மாதம்,  ஏன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்,  ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் ?

கையில் சாவியை சுழற்றிக் கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்வது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

குறிகளை, குறியீடுகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவே இறுதி அல்ல.  அது எதைக் குறிக்கிறதோ  அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவியை எடுத்துக் கொண்டு போய் , பெட்டியை திறந்து செல்வங்களை எடுத்து அனுபவிக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


அறிவு இல்லாமல் போகலாம். அறியாமை எப்படி இல்லாமல் போகும்?

செய்கின்ற செயல்களின் அர்த்தங்களை கண்டு பிடியுங்கள். சாவி முக்கியம் அல்ல.  செல்வம் முக்கியம்.

தேடுங்கள். காரணம் இல்லாமல் காரியம் செய்யக் கூடாது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_18.html

Thursday, August 29, 2019

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து 


இந்த  உலகம் எப்படி வந்தது ? யார் இதைப் படைத்தது? உயிர்களை இறைவன் படைத்தானா? முக்தி என்றால் என்ன? ஏன் உயிர்கள் வினையில் சிக்கித்  தவிக்கின்றன?  இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  உயிர்களைப் பற்றும் ஆணவம் , கன்மம், மாயை போன்ற மலங்கள் எப்படி உயிரைப் பற்றுகின்றன ?

ஒரு வினையில் இருந்து மற்றொரு வினை வருகிறது என்றால், முதல் வினை எங்கிருந்து வருகிறது?

இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது.

அந்த பதில்கள் சைவ சித்தாந்தின் 36 தத்துவங்களுக்குள் அடங்கி இருக்கிறது.

எப்படி கேள்வியை மடக்கி மடக்கி கேட்டாலும், அதில் பதில் இருக்கிறது.

It is a manum opus. Great frame work of philosophy.

அதை விளக்குவது அல்ல இந்த ப்ளாக்கின் நோக்கம்.

அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த 36 தத்துவங்களையும் தாண்டி நான் செல்ல எனக்கு வழி சொல்ல மாட்டாயா என்று முருகளை வேண்டுகிறார்.

பாடல்


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

சீர் பிரித்தபின்

ஆறு ஆறையும்  நீத்து அதன் மேல் நிலையை 
பேறா அடியேன் பெறுமாறு உளதோ 
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் 
கூறா உலகம் குளிர் வித்தவனே 

பொருள்

ஆறு ஆறையும்  = 6 x 6 = 36 தத்துவங்கள்

 நீத்து = தாண்டி

அதன் = அந்த தத்துவங்களின்

மேல் நிலையை  = மேல் நிலையை

பேறா அடியேன் = பெறாத அடியேன்

பெறுமாறு உளதோ  = பெறுவதற்கு ஒரு வழி உள்ளதா

சீறா = சீறி

வரு = வரும்

சூர் = சூரர்களின் உடலை, உலகை

சிதைவித்து = அழித்து

இமையோர்  = வானவர்கள்

கூறா = முறையிட்டு, வேண்டி வந்த

உலகம் = உலகம்

குளிர் வித்தவனே  = குளிர்வித்தவனே

"முருகா , நீ எவ்வளவு பெரிய ஆளு. சூரபத்மனை அழித்து, அவனது படைகள், உலகங்கள் அனைத்தையும் அழித்து, தேவர்களுக்கு அவர்கள் உலகை தந்தவன். அவ்வளவு பெரிய ஆள். நான் ஒரு சின்ன ஆள். எனக்கு அந்த தத்துவங்களை தாண்டி  உள்ள இடத்துக்கு கொண்டு போவது உனக்கு என்ன பெரிய  காரியமா ? உன்னால் முடியும். "

என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் 36 தத்துவங்களை தேடி கண்டு கொள்வார்களாக !

ஒன்றைப் படிக்கும் போது, அதில் இருந்து வேறு எதை அறிந்து கொள்ளலாம் என்று தேட  வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_29.html

Monday, June 19, 2017

கந்தர் அநுபூதி - குறியை குறியாது

கந்தர் அநுபூதி  - குறியை குறியாது 


ஒரு ஊரில் இருந்து , இன்னொரு ஊருக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் செல்லும் ஊர் தாங்கிய பெயர் பலகைகள் இருக்கும். சில சமயம் அந்த பெயருக்கு பக்கத்தில் அந்த ஊர் இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்றும் எழுதி இருக்கும்.

அதை காணும் போது , நாம் சரியான வழியில் தான் செல்கிறோம், வழி தவறி விடவில்லை என்று நமக்குத் தெரிய வரும்.

உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போகிற வழியில் "கன்னியாகுமாரி" என்று பெயர் பலகை இருக்கும்.

உடனே, "ஓ, இதுதான் கன்யாகுமாரியா " என்று அங்கேயே இறங்கி விடக் கூடாது. அப்படி இறங்கினால் அது எவ்வளவு நகைப்புக்கு உரிய ஒன்றாக இருக்கும். அப்படி இறங்கிய ஒருவரிடம், "இது கன்னியாகுமாரி இல்லை. இது விழுப்புரம். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் " என்று கூறினால், "அப்ப ஏன் கன்னியாகுமாரி என்று இங்கே எழுதி இருக்கிறது " என்று சண்டை பிடித்தால், அந்த ஆளை நாம் என்னவென்று நினைப்போம்.

அவனை பித்தன், பேதை என்று சொல்வதற்கு முன்னால் , சற்று நிதானியுங்கள்.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்.

இறைவனை அடைய பல குறியீடுகள், இருக்கின்றன. பூஜை செய்வது, கோவிலுக்குப் போவது,  அவன் மேல் உள்ள பாடல்களை படிப்பது, திருநீறு, திருமண்  இட்டுக் கொள்வது, விரதம் இருப்பது என்று பல இருக்கின்றன. இவை ஒரு குறியீடுகள் மட்டுமே. "கன்னியாகுமாரி " என்று பெயர் பலகை இருப்பது போல.

குறியீடுகளை தாண்டி அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொண்டு , மேலே செல்ல வேண்டும். கோவில் என்றால் என்ன, சிலைகள் ஏன், பாடல்கள் எதற்கு, சமய சின்னங்கள் எதற்கு என்று அறிந்து, அவை நம்மை எங்கே செலுத்த  முனைகின்றன என்று அறிந்து அங்கே செல்ல வேண்டுமே ஒழிய , குறியீடுகளையே  பற்றிக் கொண்டு இதுதான் முடிவு என்று இருக்கக் கூடாது.

கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால், அந்த பெயர் பலகை காட்டும் திசையில் செல்ல வேண்டும். அந்த பெயர் பலகையை கட்டிக் கொண்டு அங்கேயே இருந்து விடக் கூடாது.


மருத்துவர் ஒரு மருந்தை சீட்டில் எழுதி, "இதை மூன்று வேளை சாப்பிடுங்கள்" என்றால், அதில் உள்ள மருந்தை மூன்று வேளை சாப்பிட வேண்டும். எழுதிக் கொடுத்த  காகிதத்தை துண்டு துண்டாக்கி மூன்று வேளை சாப்பிடக் கூடாது.  மருந்து சீட்டு ஒரு குறியீடு. மருந்தை உண்டு, நோய் குணமாக வேண்டும் என்பது நோக்கம்.

பல பேர் மருந்து சீட்டை சாப்பிட்டு விட்டு, "டாக்டர்,  நீங்க சொன்னபடி சாப்பிட்டேன், நோய் குணமாகவில்லையே " என்று குறை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இத்தனை கோவில், உற்சவம், குடமுழுக்கு, பூஜை, புனஸ்காரம், விரதம், என்றெல்லாம் இருந்தும் ஒருவரும் தன்னை உணர்ந்து ஞானியான மாதிரி தெரியவில்லை.

ஏன் ? குறியீடுகளை புரிந்து கொள்ளவில்லை.

இதைத்தான் அருணகிரி நாதர் கூறுகிறார்,

"குறியை குறியாது குறித்து அறியும்" என்று. குறிகளை விட்டு விட வேண்டும். அதை எதை குறிக்கிறதோ அங்கே போக வேண்டும்.

அறிவிப்பு பலகைகள் தேவை தான். அதை பார்த்து விட்டு, மேலே போய் கொண்டே இருக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள் 

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல் 

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு


அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


குறியை குறியாது, அது எதை குறிக்கிறதோ அதை குறித்துக் கொள்ள வேண்டும். 

அது எவ்வாறு நிகழ்ந்தது என்றால் , "வேலினால்" நிகழ்ந்தது என்கிறார். 

அது எப்படி வேல் நிகழ்த்தும் ?

வேல் என்பது ஒரு குறியீடு. 

வேல் என்பது ஞானத்தை குறிக்கும் குறியீடு. 

எப்படி ?

வேல் எப்படி இருக்கிறது = நீண்டு இருக்கிறது, முகப்பு அகன்று இருக்கிறது, நுனி கூர்மையாக இருக்கிறது. அறிவும் அது போல ஆழ்ந்து, அகன்று, நுண்ணியதாக இருக்க வேண்டும்.

"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே " என்பார் மணிவாசகர் திருவாசகத்தில். 

அது நிகந்ழ்த பின் என்ன ஆகும் ?

உலகியல் பற்றுகள் நீங்கும். 

அப்புறம் ?

பேச்சும், சிந்தனையும் அற்றுப் போய் விடும். 

அப்புறம் ?

அறிவும், அறியாமையும் அற்றுப் போய் விடும். 

அறிவும் , அறியாமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. 


செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

என்று கூறுகிறார்.

இங்கே கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 

'உம்' என்ற இடைச் சொல்லுக்கு பல வேலைகள் இருக்கிறது. 



" உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்."


எதிர்மறை 
சிறப்பு 
ஐயம் 
எச்சம் 
முற்றும் 
எண்ணும் 
தெரிநிலை 
ஆக்கம் 

என்ற எட்டு பொருளைத் தரும்.

உதாரணம் தந்தால் நன்கு விளங்கும். 

ஈன்றாள் பசி காண்பாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்பது குறள்.

பெற்ற தாய் பசித்து இருப்பதைக் கண்டால் கூட, ஒருவன் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யக் கூடாது. 

இங்கே, குறளை ஊன்றி கவனியுங்கள் 


காண்பானாயினும் என்று ஒரு உம் மை சேர்க்கிறார். 


ஈன்றாள் பசி காண்பாயின்  செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 

என்று சொல்லி இருக்கலாம்.

காண்பானாயினும் என்று சொல்வதன் மூலம், அப்போது கூட செய்யக் கூடாது என்ற எதிர் மறை பொருளைத் தருகிறது 


களவு செய்யினும் கொலை செய்யற்க என்று கூறும் போது , களவும் செய்யக் கூடாது என்ற பொருள் வரும். 

இங்கு உம்மை எதிர் மறை பொருளில் வந்தது. 

பாரதனைப் பற்றி இராமனிடம் கூறும் போது கோசலை கூறுவாள், 

"நின்னினும் நல்லன்"  என்று. 

நின்னின் நல்லன் என்று சொன்னாலும் அதே பொருள் தான். 

நின்னிலும் என்று சொல்லும் போது , "இராமா, நீ நல்லவன். பரதன் உன்னை விட நல்லவன் " என்ற பொருள் வரும்.

உயர்வு சிறப்பு உம்மை.

அடுத்தது ஐயம்.

இறுதிப் போட்டியில், இந்தியா வென்றாலும் வெல்லும் என்று சொல்லும் போது , வெல்லுமா, வெல்லாதா என்ற சந்தேகம் வருகிறது அல்லவா. இதில் உள்ள "உம் " மை நீக்கி விட்டுப் படித்துப் பாருங்கள். இந்த சந்தேகம் வராது. எனவே இது ஐயத்தை கொண்டு வரும் உம்மை.

அடுத்தது, எச்சம்.

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்று கூறும் போது , மற்ற ஆசிரியர்கள் வந்திருந்தார்கள் என்பது தானாகவே புலப்படும். 

கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வந்திருந்தார் என்று சொன்னால் , மற்றவர்கள் வந்தார்களா இல்லையா என்று தெரியாது. 

தலைமை ஆசிரியரும் வந்திருந்தார் என்றால் மற்றவர்களும் வந்தார்கள் என்று புலப்படும். 

மற்றவர்கள் இங்கே எச்சம். மீதி. 

எனவே இது எச்ச உம்மை. 

அடுத்தது முற்றும்மை. 

இராமனும் பரதனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் என்று கூறினால், வேறு யாரும் வரவில்லை, அவர்கள் இருவர் மட்டும் தான் வந்திருந்தார்கள் என்று ஒரு புரியும். வேறு யாரும் இல்லை. அவர்கள் மட்டும் தான் . முழு பட்டியலும் வந்து விட்டது என்பதால் இது முற்றும்மை.

ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 

ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும். 

இதில் , முதலாவதில், நிறைய புலன்கள் இருக்கிறது, அதில் ஐந்து புலன்களை அடக்க வேண்டும் என்று  சொல்லப்பட்டது போல தோன்றும். 

இரண்டாவதில், மொத்தமே ஐந்து புலன்கள் தான். அந்த ஐந்தையும் அடக்க வேண்டும் என்பது பெறப்படும். 

எனவே இது முற்றும்மை.

இங்கே அருணகிரி சொல்கிறார் 


"செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே."

உலகப் பற்று, சொல், சிந்தனை இந்த மூன்று தான் மொத்தமும். இதற்கு வெளியில் ஒன்றும் இல்லை. உலகியலில் பற்று விட்டாலும், உள்ளுக்குள் சொல் ஓடிக் கொண்டே இருக்கும். விட்டது சரிதானா, ஒரு வேளை சரி இல்லையோ என்ற வாதம் உள்ளுக்குள் நடந்து கொண்டே இருக்கும். அது நின்றாலும், வார்த்தை இல்லாமல் சிந்தனை மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும்.


சிந்தையும் அற்று என்று ஒரு முற்றும்மையை போடுவதின் மூலம் எல்லாம் அற்றது என்று தெரிய வருகிறது.

குறியை குறியாது, குறித்து அறிந்தால் அந்த ஞானத்தின் மூலம் உலகப் பற்று, சொல் மற்றும் சிந்தனை நிற்கும்.

அப்படி நிற்கும் போது அறிவும், அறியாமையும் அற்றுப் போய்விடும்.

பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

மிக ஆழ்ந்த பொருள் செறிவு கொண்ட பாடல்.

மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

Tuesday, January 17, 2017

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும் 


பணிவு இல்லாதது. ஆணவம் கொள்வது. தான் தான் உயர்ந்தவன் என்று எப்போதும் எண்ணிக் கொள்வது இறைவனின் குணம் என்று நேற்றுப் பார்த்தோம். அது ஒரு அரக்க குணம்.

அப்படியானால் பணிவது தெய்வ குணமா  என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதற்கு அருணகிரிநாதர் விடை தருகிறார்.

வள்ளியின் பாதங்களை பிடிக்கிறான் முருகன். அது மட்டும் அல்ல, "நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்கிறேன்" என்று கூறுகிறான். அவள் மீது கொண்ட மோகத்தால் அதுவும் தணியாத மோகத்தால் என்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்



 திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பொருள்


திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே

என் மனம் கடினமானது. கல் போன்றது. அதில் உன் திருவடித் தாமரை மலருமா ?

மலராது.

ஆனால், நீ நினைத்தால் முடியும் . ஏன் என்றால் நீ உன் அடியவர்களிடத்தில்  அன்பும்,  கருணையும் கொண்டவன். நீ நினைத்தால் உன் திருவடிகள் என் மனதில் பதியும் என்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிகிறான் . பணிந்து, நீ எனக்கு இட்ட வேலை என்ன  என்று கேட்கிறான்.

தனக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டவள் அவள் என்று நினைக்கிறான்.

காடு மேடெல்லாம் அலைந்து அவள் கால் வலிக்காதா ? கல்லும் முள்ளும் குத்தி  அவள் கால் நோகாதா என்று நினைத்தது அவள் பாதங்களை பிடிக்கிறான்.

நீ கஷ்டப் பட்டது எல்லாம் போதும். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல் என்று  அவளை வேண்டி நிற்கிறான்.

ஒவ்வொரு வீட்டிலும் இது நடந்தால் குடும்பம் எப்படி இருக்கும் ?

மனைவியின் தியாகங்களை, துன்பங்களை கணவன் அறிந்து அவள் மேல் கருணை கொண்டு, அவள் பாதங்களை பிடித்து , அவள் மேல் காதல் கொண்டால்  தாம்பத்தியம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மனைவியின் காலை நான் பிடிப்பதா என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் இனி வரும் தலை முறைகளுக்கும்  அருணகிரிநாதர் பாடம் சொல்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிந்தான். அவள் இட்ட கட்டளையை கேட்டான். அவள் மேல் தீராத மோகம் கொண்டான்.

ஒரு புறம்  இராவணன்....படுக்கை அறையிலும் வணங்கா முடி.

இன்னோரும் புறம் முருகன்...வள்ளியின் பாதம் பணியும் , அவளின் ஆணையை கேட்கும் முருகன்.

இலக்கியம் படிப்பதில் உள்ள இன்பம் இதுதான்.

பணிந்து பாருங்கள்.  சொர்கம் தெரியும்.



Sunday, August 3, 2014

கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு

கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு 


நல்ல நூல்கள் ஒன்றிரண்டு கிடைத்தால் அதை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாக்கலாம். நமக்கோ, கணக்கில் அடங்கா நூல்கள் தமிழில் கிடைத்து இருப்பதால் அவற்றின் அருமை தெரியாமல் இருக்கிறோம் நாம்.

எண்ணற்ற நூல்களை விடுங்கள், ஒரு நூலில் எத்தனை பாடல்கள், ஒவ்வொரு பாடலிலும் எத்தனை ஆழமான கருத்துகள்...ஒரு நூலைப் படித்து முடிக்க ஒரு ஆயுள் போதாது.

திருக்குறள், திருவாசகம், திரு மந்திரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்புகழ், என்று எத்தனை எத்தனை புத்தகங்கள்.

நாமும் அறியாமல், அடுத்த சந்ததிக்கும் இவற்றை அறிமுகம் செய்யாமல் மிகப் பெரிய சொத்தை அனுபவிக்காமல் போகிறோம்.

கந்தர் அனுபூதியில் ஒரு பாடல்...

சுகத்தில் பெரிய சுகம் எது ?

புலன்கள் மூலம் கிடைக்கும் உடல் இன்பம். சுவை, காட்சி, காதால் கேட்பதால் பெரும் இன்பம், தொடுவதால் கிடைக்கும் இன்பம், நறுமணங்களை நுகர்வதால் வரும் இன்பம் என்று கிடைக்கும் புலன் இன்பங்கள்.

உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம் - தாய்மை, கணவன், மனைவி, பெற்றோர், என்ற உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம்.

இவை எல்லாவற்றையும் விட பெரியது, ஞானத்தின் மூலம் கிடைக்கும் சுகம். அறிவின் மூலம் கிடைக்கும் சுகம் பெரிய சுகம்.

இந்த சுகத்தை யாரிடம் இருந்து பெறலாம் ?

ஞான சுகத்தின் அதிபதி யாரோ, அவனிடம் இருந்து பெறுவதுதானே முறை.

பாடல்

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

சீர் பிரித்த பின்

மதி கெட்டு அற வாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுக அதிப -அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

பொருள்

மதி கெட்டு  = அனைத்து சிக்கல், மற்றும் துன்பங்களுக்கும் காரணம் அறிவு சரியாக வேலை செய்யாமைதான். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் வள்ளுவர்.

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பது பழமொழி.

அற வாடி = அற என்றால் முற்றிலும், முழுவதும், அதிகமான

மயங்கி  = மயங்கி

அறக் கதி கெட்டு = அற வழி கெட்டு. புத்தி கெட்டுப் போகும்போது அற வழி மறந்து போகும். அற வழியில்      

அவமே கெடவோ கடவேன் = வீணாக கெட்டுப் போவதற்கா நான் இருக்கிறேன்

நதி புத்திர = நதியின் புத்திரனே. சிவனின் நெற்றில் கண்ணில் இருந்து வந்த சுடரை வாயு பகவானிடமும் , அக்னி பகவானிடமும் கொடுத்தார். அவர்களால் அதன் வெம்மையை தாங்க முடியவில்லை. அவர்கள் கங்கையிடம் கொடுத்தார்கள். அவள் அதை சரவணப் பொய்கையில் விடுத்தாள். இறுதியில் அவளால் தரப் பட்டதால் முருகனை நதி புத்திரர் என்று அழைக்கிறார் அருணகிரிநாதர்.

ஞான சுக அதிப = ஞானத்தால் வரும் சுகத்தின் அதிபதியே. ஞானமும், அதில் இருந்து வரும் சுகமும் ....இரண்டுக்கும் அதிபதி அவன். யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம்தானே கேட்க முடியும் ?

அத் திதி புத்திரர் = அத் திதியின் புத்திரர்களான சூரபத்மன் முதலியோரின்  

வீறு அடு சேவகனே. = வீரத்தை சண்டை இட்ட சேவகனே 


காசிபருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன் முதலிய அரக்கர்கள். எண்ணிறந்த  வரத்தைப் பெற்றவர்கள். 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆளும்  வரம் பெற்றவர்கள். 

என்ன இருந்து என்ன பயன் ? அற வழியில் இருந்து தவறினார்கள். மாண்டு போனார்கள். 

அவர்கள் செய்த தவறு என்ன ? 

நன்றி மறந்தது. எல்லாம் தந்த இறைவனுக்கு நன்றி மறந்த தவறு. 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவம்.  

செய்த நன்றியை மறந்தான், மாண்டான். 

மதி கெட்டு , அற வழி மறந்து, போகாத வழியில் சென்று முடிவைத் தேடிக் கொண்டான். 

எத்தனை நன்றிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம் ? 

பட்டியல் போடுங்கள் ...உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்தவர்களின்   பெயரை. நன்றி கூறுங்கள் அவர்களுக்கு. 

Thanks Giving day என்று ஒரு நாள் வைத்து இருக்கிறோம். வருடம் பூராவும்  நன்றி செலுத்தும்  நாள்தான். 

Tuesday, June 17, 2014

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள்

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள் 


நாம் உண்மையை மற்றவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியுமா.

ஞானம் சொல்லித் தந்து வருமா ?

ஒருவர் எவ்வளவுதான் கற்று அறிந்த ஞானியாக இருந்தாலும், கற்ற அனைத்தையும் இன்னொருவருக்கு தந்து விட முடியுமா ?

முடியாது என்கிறார் அருணகிரி நாதர்.

"கரவாகிய கல்வி உளார்"  கரவு என்றால் மறைத்தல் என்று பொருள். அறிந்தவர்கள் அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லித்  .தருவது இல்லை. அது கல்வியின் இயற்கை குணம். கல்வியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருவன் தன்னை  திடப் படுத்திக் கொள்ள நினைப்பான். தான் நிலைத்த பின் மற்றவர்களுக்கு தரலாம் என்ற எண்ணம் வரும். அவன் எப்போது திருப்தி அடைந்து, மற்றவர்களுக்குத் தருவது ?


அது மட்டும் அல்ல, தனக்குத் தெரிந்த அனைத்தையும் இன்னொருவனுக்கு சொல்லுவது என்றால், கேட்பவனின் தகுதி பார்க்க வேண்டும். குரங்கு கை பூ மாலையாகப் போய் விடக் கூடாது.

இறைவா, தன்னிடம் உள்ள கல்வியை மறைத்து மீதியை மற்றவர்களுக்குத் தரும் கல்வியாளர்களிடம் சென்று என்னை நிற்க வைக்காமல் நீயே எனக்கு உபதேசம் செய். தலைவா, குமரா, படைகளைக் கொண்டவனே, சிவ யோகம் தரும் தயை  உள்ளவனே என்று முருகனிடம் உருகுகிறார் அருணகிரி.

பாடல்


கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

சீர் பிரித்த பின் 


கரவாகிய கல்வி உளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ 
குரவா குமரா குலிச ஆயுதம் 
குஞ்சரவா சிவ யோக தயா பரனே 

பொருள் 


கரவாகிய கல்வி உளார் = மறைக்கக் கூடிய கல்வியை உடையவர்கள் 

கடை சென்று = வாசலில் சென்று 

இரவா வகை = வேண்டாது இருக்கும்படி 

மெய்ப் பொருள் ஈகுவையோ = மெய்யான பொருளை நீயே எனக்குத் தா 

குரவா = தலைவா 

குமரா = குமரா 

குலிச ஆயுதம் = குலிசம் என்ற ஆயுதம் தாங்கிய 
 
குஞ்சரவா = குஞ்சரவா 

சிவ யோக தயா பரனே = சிவ யோகத்தைத் தரக்கூடிய அன்புள்ளவனே 

 

Saturday, January 25, 2014

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி 


எல்லா அற நூல்களும் ஏறக் குறைய ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை என்று கூறுகின்றன.

ஆனால் ஆசையை எப்படி விடுவது ?

அதற்கு முன்னால், ஆசை எப்படி வருகிறது என்று தெரிய வேண்டாமா ?

ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? மரக் கட்டை போல, ஒரு கல்லைப் போல வாழும் வாழக்கை ஒரு வாழ்க்கையா ?

எல்லாவற்றிற்கும் நாலு வரியில் பதில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

ஆசை புலன்கள் வழியாக வருகிறது.

புலன்கள் இருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசையை ஒழிக்க முடியாது. ஆசை, மனித இயற்கை.

ஆனால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அலையும் மனதை வேறொரு  ஆசை மேல் திருப்பலாம்.

அது, இறைவன் மேல் கொள்ளும் ஆசை. அப்படி இறைவன் மேல் ஆசை கொண்டால், மனம் உலக ஆசைகளை விட்டு விடும்.

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருள் 

கைவாய் = கையில் உள்ள

கதிர் வேல் = ஒளி வீசும் வேல்

முருகன் = முருகன்

கழல் பெற்று = திருவடிகளைப் பெற்று

உய்வாய் = வழி காண்பாய்

மனனே = மனமே

ஒழிவாய் ஒழிவாய் = விலகுவாய் விலகுவாய்

மெய் = உடல்

வாய் = வாய் (நாக்கு)

விழி = கண்

நாசியொடும் = மூக்கோடு

செவி ஆம் = காது என்ற


ஐவாய் =  ஐந்து புலன்கள்

வழி செல்லும் அவாவினையே = வழியாக செல்லும் ஆசைகளையே


Sunday, January 19, 2014

கந்தர் அநுபூதி - தணியாத மோகம்

கந்தர் அநுபூதி - தணியாத மோகம் 


திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

முருகனுக்கு வள்ளி மேல் அவ்வளவு மோகம்.

மோகம் எப்போதும் தணிந்து போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அது போல. நாள் ஆக நாள் ஆக மனம் சலிக்கும், உடல் சலிக்கும்.

ஆனால் முருகனுக்கு வள்ளி மேல் "தணியாத மோகம்"

அதுவும் எப்படி பட்ட மோகம் ? அதி மோகம். அளவுக்கு அதிகமான தீராத மோகம்.

அந்த மோகத்தில் அவன் என்ன செய்கிறான் ?

வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிகிறான்.

பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று  கெஞ்சுகிறான்.

 "நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், எனக்கு இட்ட கட்டளை என்ன " என்று அவள் பாதங்களை  பணிந்து வேண்டுகிறான்.

அவன் கொண்டது காதல் மட்டும் அல்ல...மோகம் மட்டும் அல்ல...கருணையும் கூட.  "தயாபரனே" என்கிறார் அருணகிரி.

காதலும் கருணையும் கலந்தது அவன் மனம்.

ஒரு புறம் அவள் மேல் மோகம்.

இன்னொரு புறம் அவள் மேல் கருணை. பாவம், இந்த பொண்ணு என்னை நம்பி வந்து  இருக்கிறாள். இவளை நான் காக்க வில்லை என்றால் வேறு யார் காப்பார்கள் என்று  அவள் மேல் கருணை.

அவ்வளவு கருணை உள்ள நீ, உன் பாதத் தாமரையை கல் போன்ற என் மனத்திலும்  பூக்க வைக்க மாட்டாயா என்று உருகுகிறார் அருணகிரி.

"திணியான மனோ சிலை"

திணி என்றால் கடினமான என்று பொருள்.

மனோ என்றால் மனம்
சிலை என்றால் கல்

கல்லு போல கடினமான மனம்.

கல்லில் எங்காவது பூ பூக்குமா ?

பூக்காது, அதற்கு என்ன செய்ய முடியும். அவன் திருவடிகள் தாமரை போல மென்மையாக  இருக்கிறது. என் மனமோ கல்லு போல கடினமாக இருக்கிறது.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில்

நான் என் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவன்  நினைத்தால் அவன் திருவடித் தாமரை என் மனத்திலும் பூக்கும்.

ஏன் என்றால் அவன் கருணை உள்ளவன்.

வள்ளிக்காக அவள் பாதத்தை பிடித்தவன்.

எனக்காக இதைச் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் அருணகிரி.


பொருள்

திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே


Tuesday, November 5, 2013

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?

கந்தர் அநுபூதி - இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ?


மனைவியுடனோ, காதலியிடமோ பத்து பேர் முன்னிலையில் இருந்து பேசினால் இனிமை இருக்குமா ? தனிமையில் அவளோடு பேசினால் இனிமை இருக்குமா ? 

தனிமையில் பேசுவதில் தான்  சுகம்.

மனைவி மற்றும் காதலிக்கே அப்படி என்றால் இறைவனுக்கு எப்படி ?

இலட்சம் பேருக்கு நடுவில், கோவிலில், கும்பலுக்கு , கோஷத்துக்கு நடுவில் இறைவனோடு ஒன்ற முடியுமா ?

தனிமையில் இருந்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அது என்ன என்று தெரிய வரும். நண்பர்களிடம் விவாதித்து அறிய முடியாது. 

இறை அனுபவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். 

பாடல் 

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே

சீர் பிரித்த பின் 

தன்னந் தனி நின்று  அது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

பொருள் 

தன்னந் தனி நின்று = தனியாக நின்று, தனியாக இருந்து 

அது = அதனை 

தான் அறிய = தான் அறிந்து கொள்ள, அறிந்து கொண்டதை  

இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? = மற்றவர்களிடம் சொல்லித் தெரிய வைக்க முடியுமா 

மின்னும் கதிர் வேல் = மின்னல் ஒளி வீசும் 

விகிர்தா =  உருவம் மாறுபவன்  

நினைவார் = நினைப்பவர்கள் 

கின்னம் = இன்னல்கள் 

களையும் = களையும் 

க்ருபை = அன்பு 

சூழ் சுடரே = சூழும் சுடரே 




Monday, November 4, 2013

கந்தர் அநுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

கந்தர் அநுபூதி -  அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?


எல்லாவற்றையும் அறிவால் அறிந்து  கொள்ள முடியுமா ? எல்லாம் தர்க்கத்தில் அடங்குமா ? அறிவால் அறிய முடியாதது என்று ஒன்று இருக்குமா ? அப்படி ஒன்று இருக்கும் என்பதை அறிவு அறியுமா ?

அதை அறிந்து கொள்ள முடியும் என்றால் அப்படி அறிவது எது ? அறிவா ?

வெறும் அறிவை மட்டும் கொண்டு அறியமுடியாது அது. அவன் அருள் இன்றி அவனை அறிய முடியாது என்கிறார்  அருணகிரி நாதர்.

பாடல்

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

சீர் பிரித்த பின்

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.


பொருள்

முருகன் = முருகன்

தனிவேல் முனி = தனித்துவமான வேலைக் கொண்ட முனிவன்

நம் குரு = அவன் நமது குரு. நமக்குத் சொல்லித் தரும் யாருமே குரு தான். என்னை கேட்டால் google  ம், விக்கி பீடியாவும் நமக்கு குருதான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி. குருவாய் வந்து ஆண்டு கொண்டார் மணிவாசகரை.

என்று = என்று


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ = அருளின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்

மிகச் சிறிய பொருள்களை சாதாரண கண்ணால் காண முடியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்களை அறிய தொலை நோக்கி வேண்டும். அவனை அறிய அவன் அருள் வேண்டும். அததை அறிய அதற்குரிய உபகரணங்கள் வேண்டும்.


உரு அன்று = அது உருவம் உள்ளது அன்று. அப்படி என்றால் படங்களும், சிலைகளும் காண்பிப்பது அவன் உருவை அன்று. அவனுக்கு உருவம் இல்லை.

அரு அன்று = உருவம் இல்லாதது அருவம். அது அருவமும் அன்று.

உளது அன்று = உள்ளது அன்று

இலது அன்று = இல்லாததும் அன்று



இருள் அன்று, ஒளி அன்று = இருளும் அன்று, ஒளியும் அன்று

என நின்றதுவே = என நின்றது.

அது என்ன உரு அன்று, அரு அன்று, ஒளி அன்று, இருள் அன்று ...ஒரே குழப்பமாக  இருக்கறதே...

ஒரு குழப்பமும் இல்லை...ரொம்ப எளிதானது....

நம் உடலில் இடம் வலம் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது அல்லவா ? அதில் குழப்பம் இல்லையே .

வலது எங்கே முடிகிறது ? இடது எங்கே ஆரம்பிக்கிறது ?

கை எங்கே முடிகிறது , விரல் எங்கே ஆரம்பிக்கிறது ?

நம்மால் சொல்ல முடியாது.

பகல் எந்த நொடியில் முடிந்து இரவு எந்த நொடியில் ஆரம்பிக்கிறது ?

சொல்ல முடியாது.

ஏன் சொல்ல முடியாது ?

வாழ்வில் நாம் காணும் பிரிவுகள் எல்லாம் பிரிவுகளே அல்ல. முழுமையான ஒன்றின் தொடர்ச்சிதான். நம் வசதிக்கு நாம் ஒன்றிற்கு வலது என்றும் மற்றதற்கு  இடது என்றும் பெயர் இட்டிருக்கிறோம். உடல் ஒன்று தான்.

நீங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. முன்னும் இல்லை பின்னும் இல்லை. நீங்கள் ஒன்றுதான்.

அருவமும், உருவமும் ஏதோ ஒன்றின் இரண்டு  முனைகள்.ஒரு முனை அருவம். ஒரு முனை உருவம்.

இரண்டும் இல்லை. இரண்டும் தான்.

உருவமும், அருவமும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு.

அது வரை புரிகிறது.

அதற்கு மேல் புரிய அவன் அருள் வேண்டும் என்கிறார் அருணகிரி....


என்ன செய்யலாம் ?




Thursday, January 17, 2013

கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று


கந்தர் அநுபூதி - அறிவும் அறியாமையும் அற்று 


குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலும்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையும்அற் றதுவே.


அருணகிரி நாதர் பாடல் என்றால் பதம் பிரிக்காமல் படித்து அறிய முடியாது. 

சீர் பிரித்த பின் 

குறியை குறியாது குறித்து அறியும் 
நெறியையை தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று உலகோடு உரை சிந்தையும் அற்று 
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே 

பொருள் 

Tuesday, July 3, 2012

கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


நமக்கு செல்வம், பொருள், உறவு இது எல்லாம் சேர சேர இன்பம் பெருகும்.
அல்லது, நாம் அப்படி நினைப்போம்.

ஆனால், அருணகிரி நாதரோ, எல்லாம் இழந்து, தன்னையும் இழந்தபின்னும் நலம் பெற்றதாய் கந்தர் அனுபூதியில் சொல்கிறார்.

இழப்பதில் ஒரு சுகமா ?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். எதில் இருந்து எல்லாம் மனிதன் நீங்கி நிற்கிறானோ, அதனால் அவனுக்கு துன்பம் வராது என்கிறார்.

பற்று குறைய குறைய துன்பம் குறையும்.

துன்பம் குறைய குறைய இன்பம் நிறையும்.

எல்லாம் இழந்த பின் என்ன இருக்கும் ? "நான்" என்ற ஒன்று இருக்கும்.
அதையும் இழந்து விட்டால் ? எவ்வளவு இன்பம் இருக்கும் ?

கந்தர் அனுபூதியில் உள்ள மிகச் சிறந்த பாடல் என்று கீழ் வரும் பாடலை சொல்லுவார்கள்.


Saturday, April 7, 2012

கந்தர் அநுபூதி - வள்ளியின் பின் சென்ற வேலன்

பசங்களுக்கு பொண்ணு மேல ஒரு "கிக்" வந்துருச்சுனா அந்த பொண்ணுங்க பின்னாலேயே சுத்துவாங்க.
அந்த பொண்ணு எங்க போனாலும் அது பின்னாடியே போக வேண்டியது.
இவன் வீடு எங்கேயோ இருக்கும், அந்த பொண்ணு வீடு வேற எங்கேயோ இருக்கும்.
அந்த பொண்ணுக்காக வழிய மாத்தி அவ வீட்டு வழியா போவானுங்க.
அவ நிக்கிற பஸ் ஸ்டாண்ட்ல போய் நிப்பாணுக.
லைப்ரரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு வீட்டுல போய் தண்ணி கேக்குறது....
இப்படி நிறைய நடக்கும்ல ... நாம கேள்வி பட்டு இருக்கோம்ல...
இப்படி தான் முருகன் வள்ளி பின்னால சுத்தினாராம்...கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் சொல்கிறார்