Showing posts with label Kaar Naarpadhu. Show all posts
Showing posts with label Kaar Naarpadhu. Show all posts

Wednesday, January 24, 2024

கார் நாற்பது - இன்னே வருவர் நமர்

 கார் நாற்பது - இன்னே வருவர் நமர் 


பருவ நிலைகள் நம் மனதைப்  பாதிக்கின்றன. 


மழைக் காலம் 


அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் எப்போதும் மேகம் சூழ்ந்து இருண்டு இருக்கிறது. மரங்களும் செடிகளும் துளிர் விட்டு, மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன. சில மரங்களிலும், செடிகளிலும் புது மொட்டுகள் மலரலாமா வேண்டாமா என்று மெல்ல எட்டிப் பார்க்கின்றன. வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. காற்றில் ஈர மணம். 


காதலனை பிரிந்து இருக்கிறாள். அவன் மட்டும் இப்போது கூட இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்குகிறாள். 


தூரத்தில் மின்னல் வெட்டுகிறது. 


அந்த மின்னல் அவன் வர இருக்கிறான் என்ற செய்தியை சொல்லவதாக அவளுக்குப் படுகிறது. அவன் அனுப்பிய தூது என்று நினைக்கிறாள். 


பாடல் 



கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த

நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்

இன்னே வருவர் நமரென் றெழில்வானம்

மின்னு மவர்தூ துரைத்து


பொருள் 


கடுங்கதிர் = கடுமையான வெப்பம் 

 

நல்கூரக் = நல்குரவு என்றால் வறுமை. கோடைக் காலம் வறுமை அடைந்தது என்றால், வெயில் குறைந்து விட்டது என்று அர்த்தம். கோடைக் காலம் போய் விட்டது. 


கார் = கார் காலம், அதாவது மழைக் காலம் 


செல்வ மெய்த = மேலும் மேலும் வலுப்பெற 


நெடுங்காடு = பெரிய காடு 


நேர் = நேர்த்தியான 


சினை யீனக் = சினை என்றால் உறுப்பு. இங்கே காட்டில் உள்ள மரம், செடி, கொடிகளின் உறுப்பான மலர்கள். மலர்கள் மொட்டு விட்டு பூக்கத் தொடங்கி விட்டன. 


கொடுங்குழாய் = வளைந்த காதணியை அணிந்தவளே 


இன்னே வருவர் = இப்போதே வருவார்  


 நமரென் றெழில்வானம் = நமர் + என்று + எழில் + வானம் = நம் துணைவர் இப்போதே வருவார் என்று அழகான வானம் 


மின்னு மவர்தூ துரைத்து = மின்னும் அவர் தூது உரைத்து = மின்னல் மூலம் அவர் சொல்லி அனுப்பிய தூதினை என்னிடம் சொல்லி 


இப்படி ஒரு நாற்பது பாட்டு இருக்கிறது. அத்தனையும் காதலை, பிரிவை, இயற்கையை ஒட்டிய வாழ்வை சித்தரிக்கும் பாடல்கள். 


Wednesday, October 15, 2014

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே


வருகிறேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவள் மனம் ஏங்குகிறது. ஒரு வேளை வர மாட்டானோ என்று சந்தேகிக்கிறது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று பயப் படுகிறது.

அவளின் சோர்ந்த நிலை கண்டு, அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.

"கவலைப் பட்டு எதுக்கு நீ இப்படி மெலிஞ்சு போற. இந்த வானம் இப்படி இடி இடிக்கிறதே ஏன் தெரியுமா ? உன்னை விட்டு பிரிந்த உன் தலைவனைப் பார்த்து, "காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உன் தலைவியிடம் போ " என்று சொல்லத்தான்."

இடி இடிப்பது கூட, காதலுனுக்கு சேதி சொல்வது போல இருக்கிறது என்று தோழி ஆறுதல் சொல்லுகிறாள்.

பாடல்

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள்

தொடியிட = தொடி+ இட = தொடி என்றால் வளையல். வளையல் இட

வாற்றா = ஆற்றாமல், முடியாமல்

தொலைந்த = மெலிந்த (அழகு தொலைந்த)

தோ ணோக்கி = தோள் நோக்கி

வடு = மாவடுவை

விடைப் = இடையில், நடுவில் 

போழ்ந்த = பிழந்த

கன்ற = அகன்ற

கண்ணாய் = கண்ணைக் கொண்டவளே

வருந்தல் = வருத்தப் படாதே

கடி = பெரிய, வலிய

திடி = இடி முழக்கும்

வான = வானம்

முரறு = சப்தம் இடுவது

நெடுவிடைச் = நீண்ட தொலைவு

சென்றாரை = சென்றவரை

நீடன்மி னென்று = இன்னும் காலத்தை நீட்டாதே என்று சொல்ல


Sunday, October 12, 2014

கார் நாற்பது - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து

கார் நாற்பது  - எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து 


சங்க காலம்.

காற்றாடி (Fan ), குளிர்சாதன (air conditioner , fridge ) போன்றவை இல்லாத காலம்.

வெயில் என்றால் அப்படி இப்படி இல்லை. மரம் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வானம் நோக்கி கை ஏந்தி மழை வேண்டும் காலம்.

புல் எல்லாம் கருகி விட்டது. மூச்சில் அனல் பறக்கும் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்கள் நகர்ந்தன.

வெயில் காலம் போய் விட்டது.

கார் காலம் வந்து விட்டது.

வருகிறேன் என்று சொன்னவன் இன்னும் வரவில்லை.

வானம் மின்னல் வெட்டுகிறது. மழைக்கு கறுத்து இருக்கிறது. அது ஏதோ சேதி சொல்வது போல இருக்கிறது அவளுக்கு.

அவன் சொன்ன சேதியை அந்த மின்னல் அவளிடம்  ஏதோ சொல்கிறது  சொல்கிறது.

என்ன என்று அவளுக்குத்தான் தெரியும்....


பாடல்

கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.

பொருள்

கடுங்கதிர் = கடுமையான வெப்பத்தைத் தரும் வெயில் காலம் 

நல்கூரக் = மெலிவு அடைந்து, குறைந்து

கார் செல்வ மெய்த = செல்வத்தை தரும் கார் காலம் வந்தது

நெடுங்காடு = நீண்ட காடு

நேர்சினை யீனக் = அரும்பு விட

கொடுங்குழாய் = வளைந்த ஆபரணங்களை அணிந்தவளே

இன்னே வருவர் = இப்போதே வருவேன் 

நமரென் றெழில்வானம் = நமர் (நம்மவர்) , என்று  எழில் வானம்

மின்னு -= மின்னும்

மவர்தூ துரைத்து =அவர் தூது உரைத்து



Friday, October 3, 2014

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது 


ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டு இருக்கும் போது , பிரிவு படுத்தத்தான் செய்கிறது.

மழைக் காலத்தில் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனான். வரவில்லை.

தவிக்கிறாள் அவள்.

மாலை நேரம். வானத்தைப் பார்க்கிறாள். கரு மேகங்கள் பன்னீர் தெளிக்கிறது. வான வில் ஜாலம் காட்டுகிறது.

வர்றேன்னு சொன்னானே, ஒரு வேளை வரமாட்டானோ என்று தவிக்கிறாள்.

பாடல்  

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.

பொருள்

பொருகடல் = அலை அடிக்கும் கடல். பொருதல் என்றால் எதிர்த்தல், சண்டை இடுதல். கடல் அலை கரையோடு எதிர்க்கிறது.

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி அணவு பெருந்துறை யாரே.

என்பார் திருஞான சம்பந்தர்



வண்ணன் = அந்த நிறம் கொண்டவன். கரிய நிறம் கொண்ட திருமால். கடல் வண்ணன்

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே?

என்பது நாலாயிர திவ்ய பிரபந்தம்.


புனைமார்பிற் றார்போல் = புனைந்து மார்பில் இருப்பது போல

திருவில் = திரு வில். வான வில்.

விலங்கூன்றித் = குறுக்கே நிறுத்தி

தீம்பெயல் தாழ = இனிமையான மழை வீழ, (அந்நேரத்தில்)

வருதும் = வருவேன்

எனமொழிந்தார் = என்று சொன்னார்

வாரார்கொல் = வர மாட்டாரோ

வானங் = வானம்

கருவிருந் = கருக் கொண்டு

தாலிக்கும் போழ்து = ஆலிக்கும் பொழுது. ஆலுதல் என்றால் ஒலித்தல், சந்தோஷத்தில் ஆடுதல்.

குயில் ஆலுவ குளிர் சீர்காழியுள் என்பார் திரு ஞான சம்பந்தர்.

வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் 
அம்புந்தி மூ எயிலெய்தவன் அண்ணாமலை அதனைக் 
கொம்புந்துவ குயிலாலுவ குளிர் காழியுள் ஞான 
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. 

இது இந்த பாடலில் உள்ள சொற்களுக்கு அர்த்தம். அதன் கீழே ஓடும் அந்த பெண்ணின் மன நிலையை சிந்திப்போம்.

கடல் எப்போதும் போல இருக்கிறது. அவளுக்கு ஏனோ அது கரையோடு சண்டை போடுவது போல இருக்கிறது. அவள் மன போராட்டத்தை கடலின் மேல் ஏற்றிக் கூறுகிறாள்.


வானவில், திருமாலின் கழுத்தில் உள்ள மாலை போல இருக்கிறதாம். அவளுக்கும் மாலை சூடிக் கொள்ள, அவளுடைய காதலனுக்கு மாலை சூடிப் பார்க்க  ஆசை.

மேகம் கருக் கொண்டு சந்தோஷத்தில் சப்தம் இடுகிறது என்கிறாள். அது போல தானும் தாய்மை நிலை அடைய வேண்டும், அதனால் மகிழ்வு அடைய வேண்டும் என்று நினைக்கிறாள்.

இயற்கை எல்லாம் அவளின் வாழ்வோடு பின்னி பிணைந்து இருப்பது போல இருக்கிறது அவளுக்கு.

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி பாடியது போல ...பார்ப்பது எல்லாம் அவளுக்கு அவனை  நினைவு படுத்துகிறது.

அன்பு !