நமக்கு சில கடமைகள் இருப்பதைப் போல, கடவுளுக்கும் ஏதாவது கடமைகள் இருக்குமா ?
இருக்கும் என்கிறார் நக்கீரர் திரு முருகாற்றுப் படையில்.
அது என்ன கடவுளின் கடமை ?
நம்மை காப்பது தான். வேறு என்ன?
நம்ம குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும், அவர்களை காப்பது நம் கடமை அல்லவா ?
அது போல நாம் என்ன செய்தாலும், நம்மை காப்பது இறைவனின் கடமை.
-------------------------------------------------------------------------------
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்கு பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி
--------------------------------------------------------------------------------
கொஞ்சம் பதம் பிரிக்கலாம்
--------------------------------------------------------------------------------------
காக்க கடவிய நீ காவாது இருந்த கால்
யாருக்கு பரமாம் ? அறு முகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிவேலா நல்ல
இடம் காண் இரங்காய் இனி
------------------------------------------------------------------------
பொருள்:
காக்க கடவிய நீ = என்னை காக்க வேண்டிய கடமை உள்ள நீ
காவாது இருந்த கால் = காப்பாற்றாமல் இருந்து
விட்டால். உன் கடமையில் இருந்து தவறி விட்டால்
யாருக்கு பரமாம் ? = அது யாருக்கு பாரம் ? யார் குற்றம் ?
அறு முகவா = ஆறு முகம் கொண்டவனே
பூக்கும் கடம்பா = கடம்ப பூ பூக்கும் வனத்தில் உள்ளவனே
முருகா = முருகா
கதிர்வேலா = ஒளி வீசும் வேலை உடையவனே
நல்ல இடம் காண் = இப்ப இது நல்ல இடம் தான்
இரங்காய் இனி = கொஞ்சம் இறங்கி வாப்பா