Showing posts with label Thiru Chadhagam. Show all posts
Showing posts with label Thiru Chadhagam. Show all posts

Wednesday, September 2, 2015

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே

திருவாசகம் - திருச்சதகம் - யானும் பொய்யும் புறமே போந்தோமே


சொர்க்கம் நல்லதுதான்.

வீடு பேறு வேண்டும்தான்.

கைலாயம் கையில் கிடைத்தால் சுகம் தான்.

வைகுண்டம், பரமபதம் ..அடடா கிடைத்தால் என்ன சுகம்.

சரி, போகலாமா என்று கேட்டால் யார் வரத் துணிவார்கள் ?

யாராவது, இறைவனிடம் நான் உன்னிடம் வரவேண்டும் என்று வேண்டுகிறார்களா. அப்படியே வேண்டினாலும், சரி வா என்று இறைவன் அழைத்தால் போய் விடுவார்களா ?

இந்த உலகை விட்டுப் பிரிய யாருக்கு மனம் வரும்?

வைகுந்தம் அப்புறம் போகலாம், இந்த பூலோகத்தை அனுபவிப்போம் என்று இங்கேயே இருக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

இந்தச் சிக்கல், நமக்கு மட்டும் அல்ல, மாணிக்க வாசகருக்கே இருந்திருக்கிறது.

இறைவன் நேரில் வந்து, " வா போகலாம் " என்று அழைத்தான். சற்று தயங்கி நின்றார். இறைவன் போய் விட்டான்.

கிடந்து புலம்பித் தவிக்கிறார். ஐயோ, போகவில்லையே என்று.

திருவாசகம் எல்லாமே இந்தப் புலம்பல்தான்.

பாடல்

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறையீ றறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழைபொ றுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே.

பொருள்

மானேர் நோக்கி = மானைப் போன்ற கண்களைக் கொண்ட 

உடையாள் = உடையவளான பார்வதியை 

பங்கா  = பாதியாக கொண்டவனே

மறையீ றறியா = மறை + ஈறு + அறியா = வேதங்கள்  உன்னை முடிவாக அறியா

மறையோனே = மறைந்து இருப்பவனே, மறைகளுக்கு அப்பாற்பட்டவனே

தேனே = தேனே

அமுதே = அமுதே

சிந்தைக் கரியாய் = சிந்தனைகளுக்கு அரியவனே

சிறியேன் பிழைபொ றுக்கும் = சிறியவனான என் பிழைகளைப் பொறுக்கும்

கோனே = தலைவனே

சிறிதே கொடுமை பறைந்தேன் = சிறிய கொடுமைகள் சில சொன்னேன்

சிவமா நகர் = சிவ மாநகர் = கைலாயம்

குறுகப் போனார்  அடியார் = அடியார்கள் சென்றார்கள்

யானும் = நானும்

பொய்யும் = பொய்யும்

புறமே போந்தோமே. = வெளியே நின்று விட்டோம்

இறைவன் , வலிய வந்து ஆட்கொண்டான். இவர் போகவில்லை.

ஏன் போகவில்லை ?

பெரிய வேலையில் இருந்தார். பாண்டியன் அரசவையில் முதல் அமைச்சர் வேலை என்றால் சாதரணமா.

இப்படித்தான் வேலை, குடும்ப பொறுப்பு என்று அதை விட உயர்ந்தவற்றை விட்டு விடுகிறோமோ ?

வள்ளலார் கூட இதைப் பற்றி பேசி இருக்கிறார்...


தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

அம்மா ஒரு தடை. பின்னர் தாரம் ஒரு தடை. பின்னர் பிள்ளைகள்....

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இவை எல்லாம் எப்போதுதான்  தீருவது என்று சோர்கிறார் வள்ளல் பெருமான்.

ஒன்றைச் செய்யும் போது, மற்றது ஏதோ ஒன்றைச் செய்யாமல் விடுகிறோம்.

எதைச் செய்கிறோம் , எதை விடுகிறோம் என்று சிந்திப்போம்.



Thursday, February 26, 2015

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?

திருவாசகம் - திரு சதகம் - எப்போது சாவது ?


எதற்கும் ஒரு குறிக்கோள், காரணம் இருக்க வேண்டும். காரியம் ஆன பிறகும் காரியம் செய்து கொண்டு இருக்கக் கூடாது.

ஓட்டப் பந்தயம் முடிந்து, எல்லைக் கோட்டை தொட்டு விட்டால், ஓடுவதை நிறுத்த வேண்டும். அப்புறமும் ஓடிக் கொண்டே இருப்பதில் அர்த்தம் இல்லை.

சேர வேண்டிய ஊர் வந்து விட்டால், பயணத்தை நிறுத்த வேண்டும். அப்புறமும் போய்க் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.

வாழ்வின் அர்த்தம் என்ன ? குறிக்கோள் என்ன ? எதை அடைய இந்த வாழ்க்கை முயல்கிறது ? பணமா ? புகழா ? அறிவா ? உறவா ?  அல்லது இது எல்லாமுமா ? எவ்வளவு வேண்டும் ? எப்போது நிறுத்துவது ?

மாணிக்க வாசகர் சொல்கிறார் .... இறை அருள் பெறுவது தான் இந்த வாழ்வின் நோக்கம். அதை அடைந்து விட்டால் பின் வாழ்வில் அர்த்தம் இல்லை. வேறு என்ன வேண்டும்.

சில காதலர்கள் பேசுவதைக் கேட்டால் தெரியும்...இந்த நொடி நான் அப்படியே செத்துரலாம் போல இருக்கு என்று சந்தோஷமாக சொல்லுவார்கள். மகிழ்வின் உச்சம்.

(முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு...முதல்வன் பாடல்)

இது போதும், இதுக்கு மேல் எதுவும் வேண்டாம். இதற்கு மேல் வாழ்வில் என்ன இருக்கிறது என்ற உன்மத்தம் வந்து விடுகிறது.

அருள் பெற்ற அடிகள்...உன்மத்த நிலையில் இறைவனைப் பற்றி பேசித் திரிகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.  அவரைப் பற்றி தங்கள் மனதுக்குத் தோன்றியதை பேசுகிறார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அடிகள் கவலைப் படவில்லை. "சாவது எந்நாளோ" என்று  கேட்கிறார்.

பாடல்

உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி,
மத்த மனத்தொடு, `மால் இவன்' என்ன, மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்
தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?


பொருள்

உத்தமன் = உயர்ந்தவன்

அத்தன் = முதல்வன், தந்தை, ஆதியானவன்

உடையான் = உடையவன்

அடியே நினைந்து உருகி = அவனுடைய திருவடிகளை நினைத்து உருகி

மத்த மனத்தொடு = களிப்பு கொண்ட மனத்தோடு

`மால் இவன்' என்ன = இவன் (மனிவாசாகர் ) மயக்கம் உற்றவன் என்று

மன நினைவில் = மன நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட = என் (மணிவாசகர்) மனதில் தோன்றிய , ஒத்த கருத்துகளை கூறிட

ஊர் ஊர் திரிந்து = ஊர் ஊராகத் திரிந்து

எவரும் = எல்லோரும்

தம் தம் மனத்தன பேச = அவர்கள் மனதில் தோன்றியதைப் பேச

எஞ்ஞான்று கொல் = எப்போது

சாவதுவே? = இறப்பது ?


இறைவனை நினைத்து அவர் மனம் உருகுகிறது. 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி. 

உருகிய மனத்தில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அந்த களிப்பில் ஏதேதோ  சொல்லுகிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. தங்கள் மனதுக்குத் தோன்றியதை அவர்கள் சொல்கிறார்கள். 

ஒரு புறம் உண்மை கண்ட களிப்பு. மற்றவர்களிடம் சொல்லலாம் என்றால் முடியவில்லை. அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

இந்த உலகில் உள்ள பொருள்கள், மனிதர்கள் மேல் பற்று சுத்தமாக இல்லை. 

இருந்து என்ன செய்ய ?

எப்போது இறப்பது என்று வினவுகிறார். 

இது போன்ற பாடல்களுக்கு உரை படித்து புரிந்து கொள்ள முடியாது. 

உரையைப் படித்த பின்,  அதை மறந்து விடுங்கள். 

நேரடியாகப் பாடலைப் படியுங்கள்.  

மனதை என்னவோ செய்யும். அதுதான் அந்தப் பாடலின் உண்மையான அர்த்தம். 

 

Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



Monday, February 23, 2015

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே

திருவாசகம் - திருச் சதகம் - கண்டு கொள்ளே 


திருச் சதகம் என்பது 100 பாடல்களை கொண்டது. பத்து தொகுதிகளாக உள்ளது.

மணி வாசகர் உருகி உருகி எழுதி இருக்கிறார்.

முடிந்தால் அனைத்தையும் எழுத ஆசை.

முதல் பாடல்.

என் உடலில் வியர்வை அரும்பி, உடல் விதிர் விதிர்த்து, என் தலைமேல் கைவைத்து உன் திருவடிகளை , கண்ணீர் ததும்ப, வெதும்ப, உள்ளத்தில் பொய்யை விட்டு, உன்னை போற்றி, ஒழுக்கத்தை கை விட மாட்டேன்....என்னை கொஞ்சம் கண்டு கொள்ளேன் " என்று உள்ளம் உருகுகிறார்.


பாடல்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்
பொய் தான் தவிர்ந்து, உன்னை, `போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.

பொருள்

மெய் தான் அரும்பி = உடலில் வியர்வை அரும்பி

விதிர்விதிர்த்து = நடு நடுங்கி

உன் = உன்னுடைய

விரை ஆர் = மனம் பொருந்திய

கழற்கு = திருவடிகளுக்கு

என் = என்னுடைய

கை தான் தலை வைத்து =  கையை தலைமேல் வைத்து

கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி

வெதும்பி = வெதும்பி

உள்ளம் = உள்ளமானது

பொய் தான் தவிர்ந்து = பொய்யை விடுத்து

உன்னை = உன்னை

`போற்றி, சய, சய, போற்றி!' = போற்றி,  சய சய போற்றி

என்னும் = என்ற

கை தான் நெகிழவிடேன் = கை என்றால் ஒழுக்கம். ஒழுக்கத்தை கை விட மாட்டேன்

உடையாய்! = உடையவனே

என்னைக் கண்டுகொள்ளே = என்னை கண்டு பின் (ஆட் ) கொள்வாய் 

வழிபாடு எப்படி இருக்க வேண்டும் ?

உடலால், மொழியால், உள்ளத்தால்

"மெய் தான் அரும்பி, 
விதிர்விதிர்த்து, 
என் கை தான் தலை வைத்து, 
கண்ணீர் ததும்பி"

இது எல்லாம் உடல் மூலம் பக்தி செலுத்துவது.

"உள்ளத்தில் பொய்யை விட்டு"

இது மனதால் பக்தி செய்வது

"போற்றி, சய, சய, போற்றி!" 

இது வாக்கால் பக்தி செய்வது

மூன்று கரணங்களாலும் வழி படுவது என்றால் இதுதான்.

இன்னொன்று,

வழிபடும்போது கையை தலைக்கு மேல் உயர்த்தி வழிபட வேண்டும்.

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
 

என்பார் அடிகள் திருவாசகத்தில்

தலைக்கு மேல் கையை உயர்த்தி ஏன் வழிபட வேண்டும் ?



Tuesday, October 23, 2012

திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


திருச் சதகம் - நான் அறிஞனா அறிவிலியா ?


பக்த கோடிகள், இறைவனை நம்பாதவர்களை விட புத்திசாலிகளா ?

இறைவனை தேடுவதும் அவனை அடைவதும் ஒரு அறிவான செயலா ? இறை அருள் பெற்ற பின் ஒருவன் முன்பிருந்ததை விட அறிவு அதிகம் பெற்றதாக கூற முடியுமா ? இறை அருள் பெறாதவர்கள் அறிவில் குறைந்தவர்களா ? 

இந்த குழப்பம் மாணிக்க வாசகருக்கும் இருக்கிறது. இறைவனிடமே கேட்கிறார். "உன் அருள் பெறுவதற்கு முன் நான் அறிவற்றவனாக இருந்தேன் என்று எனக்கு தெரியும்.. ஆனால், உன் அருள் பெற்ற பின், என் அறிவு கூடி விட்டதா?"  என்று 


 பாடல்:


அறிவ னேஅமு தேயடி நாயினேன்
அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்டநாள்
அறிவ னோஅல்ல னோஅருள் ஈசனே.

சீர் பிரித்த பின் 

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவனாகக் கொண்டோ எனை ஆண்டது
அறிவிலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அரு ஈசனே 

பொருள் 

அறிவனே = அறிவில் சிறந்தவனே

அமுதே = அமுதம் போன்றவனே

அடி நாயினேன் = நாயையை போன்ற அடிமையான நான்

அறிவனாகக் கொண்டோ = என்னை அறிவுடையவனாக ஆக்குவதற்கோ

எனை ஆண்டது = எனை ஆண்டு கொண்டது ?

அறிவிலாமை = (நான்)அறிவு இல்லாமை இருந்தது

அன்றே கண்டது = அன்றே நான் கண்டு கொண்டது

ஆண்ட நாள் = நீ என்னை ஆண்டு கொண்ட நாள் முதல் 

அறிவனோ = நான் எதையும் அறிந்தவனா ?

அல்லனோ = இல்லை அறிவில்லாதவனோ ?

அரு ஈசனே  = நான் அதை தெரிந்து கொள்ள அருள் புரிவாய் ஈசனே 

Monday, October 22, 2012

திருச்சதகம் - கரை காணாக் கடல்


திருச்சதகம் - கரை காணாக் கடல் 


பிறவியை பெரிய கடல் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 

கடல், அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது. நமக்கு என்ன என்று நாம் இருப்போம். 

மாணிக்க வாசகர் அந்த பிறவி பெருங்கடலை நம் மனதில் தைக்கும்படி உணர்த்துகிறார். 

பெரிய கடல். அந்த கடல் நடுவே (கரையோரம் அல்ல) நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டு தத்தளிகிறீர்கள். அலை உங்களை போட்டு புரட்டி எடுக்கிறது. புயல் காற்று ஒரு புறம் ஊசி போல் துளைக்கிறது. சற்று தூரத்தில் சில சுறா மீன்கள் நீந்திக் கொண்டு இருக்கின்றன. எப்படி கரை சேர்வது என்று தவித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு மரத்துண்டு கிடைக்கிறது பற்றிக்கொள்ள. உங்கள் அருகே வந்து ஒரு மாலுமி கரை இருக்கும் இடத்தை காட்டுகிறார்.  உங்களுக்கு எப்படி இருக்கும் ?

பிறவி என்ற பெருங்கடல்.

துன்பம் என்ற அலை அடித்துக்கொண்டே இருக்கிறது

பெண்கள் மேல் கொண்ட மோகம் என்ற புயல் காற்று அலைகழிக்கிறது

ஆசை என்ற சுறாமீன் விழுங்க வருகிறது

அஞ்செழுத்து தான் தெப்பம்

கரை காட்டியது அவன் அருள்

பாடல்