நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திரு விண்ணகரம்
நம்மால் எவ்வளவோ செய்ய முடியும். சாதிக்க முடியும். இருந்தும் ஒன்றும் செய்யாமல் , ஒரு சராசரி மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஏன்?
செய்யும் ஆர்வம் இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. உடலில் வலு இருக்கிறது. நன்றாக வேலை செய்யும் மூளை இருக்கிறது. இருந்தும், ஒன்றும் செய்வதில்லை.
படித்தோம், வேலைக்குப் போனோம், திருமணம் செய்து கொண்டோம், பிள்ளைகளைப் பெற்றோம், அவற்றைப் படிக்க வைத்தோம், அவர்கர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் ...இவை எல்லாம் செய்து விட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் வயதாகி விடுகிறது.
"இனி போட்டு என்னத்தச் செய்ய ..." என்று சோர்ந்து போய் விடுகிறோம்
நம்மை பெரிய காரியங்களைச் செய்ய விடமால் தடுப்பது எது?
நம் புலன்கள் தான். அவை தூண்டி விடும் ஆசைகளால் அலைக்கழிக்கப் பட்டு, அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் ஒன்றும் செய்யாமல் வாழ் நாள் எல்லாம் வீணடிக்கிறோம்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்கிறார் ....
"செயற்கரிய செய்ய முடிந்த நம்மை , செய்ய விடாமல் மயக்கியவர் ஐந்து பேர் (புலன்கள்) . அவர்கள் மயக்கத்தில் மயங்கி, சிற்றின்பங்கள் பின் போய் அலைகிறாய் நெஞ்சே. அதை விட்டு விட்டு, சிவந்த கண்களை உடைய திருமால் இருக்கும் திரு விண்ணகரம் என்ற தலத்தை நாடு"
என்கிறார்.
பாடல்
செயற்கரியசெய்வோமைச்செய்யாமனெஞ்சே
மயக்குவாரைவர்வலியா - னயக்கலவி
சிந்திபுரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
னந்திபுரவிண்ணகரநாடு.
சீர் பிரித்த பின்
செயற்கு அரிய செய்வோமை செய்யாமல் என் நெஞ்சே
மயக்குவார் ஐவர் வலியால் இனிய கலவி
சிந்தி புரவிண்ணகரமென்பர் திருச்செங்கண்மால்
நந்தி புர விண்ணகரநாடு.
பொருள்
செயற்கு = செய்வதற்கு
அரிய = கடினமான
செய்வோமை = செய்யத் தகுந்த நம்மை
செய்யாமல் = செய்ய விடாமல்
என் நெஞ்சே = என் மனமே
மயக்குவார் ஐவர் = மயக்குவது இந்த ஐந்து புலன்கள்
வலியால் = வலிமையால்
இனிய = இன்பமான
கலவி = கலந்து அனுபவிப்பது
சிந்தி = சிந்திப்பாய்
புர = ஆட்சி செய்
விண்ணகரமென்பர் = விண்ணுலகை என்பார்
திருச்செங்கண்மால் = சிவந்த கண்களை உடைய திருமால் உறையும்
நந்தி புர விண்ணகரநாடு. = நந்திபுர விண்ணகரத்தை நாடு
இந்த புலன்கள் நம்மை ஆசை காட்டும். அதில் இன்பம், இதில் இன்பம். அதைச் செய்தால் , அந்த சொர்கமே தெரியும் என்றெல்லாம் நம்மை அலைக்கழிக்கும்.
அவற்றில் இருந்து மனதை திருப்பி நல்ல வழியில் செலுத்த வேண்டும் என்றால், நந்திபுர விண்ணகரத்தை நாடு என்கிறார்.
இந்த ஊரில் அப்படி என்ன சிறப்பு ?
பேயாழ்வார் சொல்கிறார்.
பாற்கடல், வைகுந்தம், திருவேங்கடம் போன்ற இடங்களில் இருந்த பின், இந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தில் வந்து இருந்தாராம்.
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை வண்பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.
(2342) மூன்றாந் திருவந்தாதி - 61
ஒப்பிலியப்பன். உப்பு இல்லாத அப்பன். மனைவி உப்பு இல்லாமல் சமைத்தால் கூட அதை அன்போடு உண்ண வேண்டும் என்று குடும்ப பாடம் நடத்திய இடம்.
நம்மாழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி தந்தாராம் இந்தத் திருத்தலத்தில்
என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே
-திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்
இந்தத் திருத் தலத்துக்கு என்று தனி சுப்ரபாதமே உண்டு.
சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாதுறை பக்கம்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post.html