Showing posts with label ouvaiyaar. Show all posts
Showing posts with label ouvaiyaar. Show all posts

Sunday, November 7, 2021

ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம்

 ஔவையார் தனிப்பாடல் - சொல்லின்பம் 


கவிதை என்பது ஒரு அனுபவம். அதை அனுபவித்துத் தான் அறிய முடியும். சொல்லி விளங்க வைக்க முடியாது. 


ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உரை சொல்லி விடலாம். எல்லா சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து விட்டால், கவிதை புரிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல. 


ரோஜா மலரின் அழகு எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு இதழாக பியித்து பியித்து பார்த்தால் இறுதியில் காம்புதான் மிஞ்சும். 


ஒரு குழந்தையின் அழகு எங்கே இருக்கிறது? அதன் கண்ணிலா? மூக்கிலா? என்று தேடக் கூடாது. 


சொல்லின் அர்த்தம் தெரியாமல் அழகு புரியுமா என்றால் புரியாதுதான். ஆனால், சொல்லின் அர்த்தம் மட்டும் அல்ல கவிதையின் அழகு. 


பலபேர் சொல்லின் அர்த்தத்தோடு நின்று விடுகிறார்கள். 


எந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்? இதுவா அர்த்தம்? அது கூட சரியாக வரும் போல் இருக்கிறதே? அப்படிச் சொன்னால் என்ன? என்று சொல்லுக்குள் நின்று விடுகிறார்கள். 


பாடல் 


இலக்கணக் கவிஞர் சொல்லின்பம் தேடுவர்

மலக்கும்சொல் தேடுவர் வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நீளும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_7.html


(Please click the above link to continue reading)



இலக்கணக் கவிஞர் = நெறிமுறை அறிந்த கவிஞர்கள் 


 சொல்லின்பம் தேடுவர் = சொல்லின் இன்பத்தைத் தேடுவார்கள் 


மலக்கும் சொல் = மயக்கும் சொற்களை 


தேடுவர் வன்க ணாளர்கள் = தேடுவார்கள் கீழானவர்கள் 


நிலத்துறும்  கமலத்தை நீளும் வண்டத் = நிலத்தில் உள்ள வண்டு நீரில் உள்ள கமலத்தை (தாமரையை) நாடி அதில் உள்ள தேனை அனுபவிக்கும் 


ஈ = வண்டு 


தலைக்குறை = முதல் குறைந்த 


கமலத்தைச் = கமலத்தை 


சாரும் தன்மைபோல் = தேடுவதைப் போல 


ஔவையார் குசும்பு.


தலைக்குறை என்றால் தலை இல்லாத. அல்லது தொடக்கம் இல்லாத. 


கமலம் - இதில் முதல் எழுத்து இல்லை என்றால்? 


மலத்தை தேடும் ஈ போல என்று அர்த்தம். 


வார்த்தைகளை விட்டுவிட வேண்டும். அர்த்தத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


என்னைக் கேட்டால், கவிதையின் அர்த்தத்தையும் விட்டுவிடலாம். கவிஞனின் மனதை, அவன் உணர்சிகளை பிடிக்க வேண்டும். 


அபிராமி பட்டர் சொல்லுவார் 


"என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே" என்று அபிராமியை. 


மூப்பு இல்லாத முகுந்தனுக்கு இளையவள் என்றால் என்ன அர்த்தம் என்று மண்டையை போட்டு கசக்கக் கூடாது. 


அவருக்கு, அவள் எப்போதும் இளமையானவள். அவளுக்கு வயதே ஆகாது. அதை எப்படியோ சொல்கிறார். வார்த்தைகளை தாண்டி உணர்சிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 


அது தான் சொல்லின் இன்பம். 


மனைவி செய்த சமையலின் சுவை அவள் தரும் உணவில் இல்லை. அதை நமக்காக நேரம் செலவழித்து, பொறுமையாக, ஒவ்வொரு பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்யும் கனிவில் இருக்கிறது. அந்த அன்பு மனம் புரிந்தால் சமையல் சுவைக்கும். இதில் உப்பு இல்லை, அதில் காரம் கூட இருக்கிறது என்று சொல்லுவது அந்த ஈயை போன்ற செயல். 


அப்பா அல்லது அம்மா, பிள்ளையைத் திட்டுகிறார்கள். சொல்லின் அர்த்தத்தைக் கொண்டா அதைக் கணிப்பது. நாம் நன்றாக வேண்டும் என்ற காதலில் அல்லவா திட்டுகிறார்கள் என்ற அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். 


கவிதையை புரிந்து கொள்ள முயல்வதெல்லாம் ஒரு வாழ்க்கைப் பயிற்சி. 




Sunday, August 9, 2020

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு


பாண்டிய மன்னன் ஒரு பொற்கிழியை ஒரு பெரிய கொடிக் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு, அவையில் உள்ள புலவர்களளைப் பார்த்துக் "உங்களில் யாராவது பாடல் பாடுங்கள். உங்கள் பாடலுக்கு அந்த கயிறு அறுந்து பொற் கிழி கீழே விழுந்தால் அதை நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அறிவித்து விட்டான். 

புலவர்கள் யாரும் பாடவில்லை. அவர்கள் பாடி, கயிறு அறுந்து விழாவிட்டால் அவர்களுக்கு அது பெரிய அவமானமாகப் போய் விடும். பரிசு கிடைக்காதது ஒரு புறம். அவர்கள் பாடிய பாடல் சரி இல்லை என்று எல்லோர் முன்பும் அவமானம் வேறு வந்து சேரும்.

ஒளவையார் இதை கேள்விப் பட்டு, அவர் இரண்டு பாடல்களைப் பாடினார். அவர் பாடிய முதல் பாடல் கீழே உள்ள link இல் உள்ளது. 



அவர் பாடிய அடுத்த பாடல். 

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார் 

"யுத்தம் வந்து விட்டது, சண்டைக்கு வாருங்கள் என்றால் நூற்றில் ஒருவன் வருவான்.  நல்ல பாடல் எழுது என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் அது முடியும். படித்ததை எல்லோருக்கும் விளங்கும்படி தெளிவாக எடுத்துச் சொல் என்றால் அது பத்தாயிரத்தில் ஒருவரனுக்குத்தான் முடியும். சம்பாதித்த பொருளை பிறருக்கு தானமாகக் கொடு என்றால் அது கோடியில் ஒருவனுக்குத்தான் முடியும். அது உண்மை என்றால், ஏ பொற்கிழியே நீ அறுந்து விழுவாயாக" என்று பாடினார். 

பொற்கிழி  அறுந்து விழுந்தது. 

பாடல் 

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் 
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் 
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் 
உண்டாயின் உண்டென் றறு. 


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_9.html

ஆர்த்தசபை = சண்டைக்கு வா என்றால் சபையில் இருந்து 

நூற்றொருவர்  = நூற்றில் ஒருவன் வருவான் 

ஆயிரத்தொன் றாம்புலவர் = பாடல் பாடு என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் முடியும் 

வார்த்தை பதினா யிரத்தொருவர் = கற்றதை தெளிவாக மற்றவர்களுக்குச் சொல் என்றால், அது பத்தாயிரத்தில் ஒருவனுக்குத்தான் முடியும் 


பூத்தமலர்த்  = பூத்த மலர் 

தண்டா மரைத் = குளிர்ந்த தாமரை மலரில் இருக்கும் 

திருவே  = இலக்குமியே 

தாதா = கொடையாளி 

கோ டிக்கொருவர்  = கோடியில் ஒருவன் 


உண்டாயின் உண்டென் றறு.  = அது உண்மையானால், உண்மை என்று சொல்ல நீ அறுந்து விழுவாயாக 

பாடல் எழுதுவதை விட, படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள்  என்கிறார் ஒளவையார். 

காரணம் 

ஒன்று, சொல்வது  எளிது அல்ல. படித்து புரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வருவது கிடையாது. 

இரண்டாவது, பொருளைக் கொடுப்பது போல கல்வியைக் கொடுக்கவும் மனம் வராது.   எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்குச் சொல்லி தந்து விட்டால், என் மதிப்பு என்ன ஆவது.  அவனும் எனக்கு சமமாக ஆகி விடுவானே என்ற எண்ணம். 



கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

கரவாகிய கல்வி உளார் என்பார் அருணகிரிநாதர்.  கரவு என்றால் மறைத்தல். 

இயல்வது கரவேல் என்பது ஆத்திச் சூடி. 

கல்வி கற்றவர்கள் பிறருக்குச்  சொல்ல மாட்டார்கள். மறைத்து வைத்துக் கொள்வார்கள். 






Friday, August 7, 2020

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு


ஒரு நூலோ, பாடலோ, கதையோ நல்லது என்று எப்படி அறிந்து கொள்வது?

நல்லது அல்லாதனனவற்றைப் படித்து நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது ஒரு புறம். தீயனவற்றைப் படிப்பதால் நம் மனம் குழம்பும். தீய வழியில் செல்ல முற்பட்டு விடுவோம்.

ஒரு நூல் நல்ல நூல் என்பதற்கு ஒரே சான்று அது காலத்தை வென்று நிற்க வேண்டும்.

நல்லன அல்லாதவற்றை காலம் கழித்து விடும்.

ஒரு நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஓலைச் சுவடியில் எழுதி வைத்த பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறது என்றால் அதன் மகத்துவம் புரிய வேண்டும்.

அந்தக் காலத்தில் ஒரு நூலைச் செய்தால் அதை எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் உண்டு.

நூல் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை தீயில் போடுவார்கள். அது தீயில் கருகாமல் இருந்தால், அது நல்ல நூல் என்று ஏற்றுக் கொள்ளவார்கள்.

அது போல, ஓடுகிற நதியில் அந்த நூலைப் போடுவார்கள். அது ஆற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லாமல்  எதிர் நீந்தி வந்தால், அந்த நூல் ஏற்றுக் கொள்ளப் படும்.

ஒரு முறை ஒரு (பாண்டிய) மன்னன் ஒரு பெரிய கொம்பில் ஒரு கயிரைக் கட்டி, அதில் ஒரு பொன்னாலான ஒரு பையை கட்டித் தொங்க விட்டான்.

அவன், தன்னை நாடி பரிசு பெற வரும் புலவர்களிடம் சொல்லுவானாம் "நீங்கள்  கவிதை பாடுங்கள். அந்த பொற்கிழி கயிறு அறுந்து விழுந்தால் நீங்கள் அதை  எடுத்துக் கொண்டு செல்லலாம்" என்று.

புலவர்களுக்கு பயம். அவர்கள் பாடி, பொற் கிழி கீழே அறுந்து விழாவிட்டால், அவர்கள் பாட்டு  சிறந்தது அல்ல என்று நகைப்புக்கு இடமாகி விடும் அல்லவா?  எனவே யாரும் பாடல் பாடவில்லை.

மன்னனுக்கு சந்தோஷம்.

ஒளவையார் வந்தார். என்ன அங்கே பொற்கிழி கட்டி தொங்குகிறது என்று கேட்டு அறிந்து கொண்டாள். ஓ  இதுவா சங்கதி என்று இரண்டு பாடல்கள் பாடினாள் . இரண்டு பொற்கிழிகள் கயிறு அறுந்து விழுந்தது என்று கதை.

அதில் முதல் பாடல்.

"ஒருவன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்வது தான் தாளாண்மை எனப் படுவது. கேட்ட பின் கொடுப்பது வலிமையை காட்டுவது. மீண்டும் மீண்டும் ஒருவனை அலைய விட்டு பின் கொடுப்பது அவன் நடந்ததற்கு தந்த கூலி. அப்படி பல முறை வந்து கேட்ட பின்னும் கொடுக்காமல் இருப்பவன் குலம் வாரிசு அற்றுப் போய் விடும் என்பது உண்மையானால்,ஏ பொற் கிழியே நீ அறுந்து விழுவாய் "

இது முதல் பாடல். அவர் பாடி முடித்தவுடன், அவர் சொன்னது உண்மைதான் எனபதால், பொற் கிழி அறுந்து விழுந்ததாம்.

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி 
அடுத்தக்கால் ஈவது  வண்மை - அடுத்தடுத்துப் 
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும் 
பொய்த்தான் இவனென்று போமேல், 
அவன்குடி எச்சம் இறுமேல் இறு.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_7.html

தண்டாமல்  = பிச்சை கேட்காமல் (இன்றும் கூட மலையாளத்தில் தெண்டுதல் , தெண்டி என்ற சொற்கள் உண்டு. தெண்டி என்றால் பிச்சைக்காரன்).

ஈவது = கொடுப்பது

தாளாண்மை  = தயவு உள்ள குணம். கருணை.

தண்டி  = பிச்சை

அடுத்தக்கால் =  கேட்ட பின்

ஈவது = கொடுப்பது

வண்மை = வள்ளல் தன்மை

அடுத்தடுத்துப்  = மீண்டும் மீண்டும்

பின்சென்றால் = பின்னும் வந்து கேட்ட பின்

ஈவது =  கொடுப்பது

காற்கூலி = அவன் நடந்து வந்ததற்கு கொடுத்த கூலி

பின்சென்றும்  = அதன் பின்னும்

பொய்த்தான் = கொடுக்காமல் ஏமாற்றினால்

இவனென்று போமேல்,  = அவனை கொடுக்காமல் விட்டால்

அவன்குடி = அப்படிப்பட்டவன் குடும்பத்தில்

எச்சம் = வாரிசு

இறுமேல் = இற்றுப் போய்விடும் என்பது உண்மை ஆனால்

இறு = நீயும் அறுந்து போ (வாரிசு அறுந்து போவது போல)

கதை உண்மையோ பொய்யோ. ஆனால், அது சொல்லும் கருத்து உயர்வானது.

கேட்காமல் கொடுப்பது என்பது எவ்வளவு உயர்ந்த பண்பு.

இன்று பொது உடைமை பற்றி பேசுகிறோம். அன்றே, இதை எல்லாம் தாண்டி வாழ்க்கை முறையை வகுத்து  வைத்து இருக்கிறார்கள்.

விட்டு விட்டோம்.

பெறவும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

நடுவில் பல தலைமுறைகள் திசை தெரியாமல் தடுமாறி போய் இருக்கின்றன.

பல படையெடுப்புகள், ஆங்கிலேய ஆதிக்க, நம் பாடத்திட்ட முறைமைகளின் மாற்றம்  என்று வந்ததால் நம் அடிப்படை நமக்குத் தெரியாமல் போய் விட்டது.

அவற்றை நாம் புரிந்து கொள்வதுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்.





Tuesday, July 21, 2020

ஔவையார் பாடல் - நன்றே

ஔவையார் பாடல் - நன்றே 


தீயாரைக் காண்பதும், அவர்கள் சொல்வதை கேட்பதும் தீதே, அவரோடு இணங்கி இருப்பதும் தீதே என்றார்.

ஆனால் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத்தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படம், வலை தளங்கள், செய்தித் தாள்கள், என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும், புரட்டும், வஞ்சனையும், கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது.

இதை விட்டால் ஒன்றும் இல்லையே. பின் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு ஔவை தரும் விடை

மனம் சும்மா இருக்காது. எதையவாது பிடித்துக் கொள்ளும் இயல்பு உடையது. அதை அறிந்த ஒளவை சொல்கிறாள்....

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_21.html

பாடல் 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று


பொருள்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே  = நல்லவர்களை காண்பதும் நன்றே. நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தொலைக் காட்சியில், வலை தளங்களில் பார்த்தால் கூட போதும்.

நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே = அவர்கள் சொல்வதை கேட்பதும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;  = அவர்களுடைய குணங்களை சொல்வதும் நல்லதே

அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று = அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது

அதாவது,


கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பதை விடுத்து நல்லவற்றை பார்க்க வேண்டும்.

எவன் எவனோ பேசுவதை கேட்பதை விட்டு விட்டு, நல்லவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பதை விட்டு விட்டு, நல்லவர்களைத் தேடிப் போய்   கண்டு அவர்களோடு பேச வேண்டும்.

பார்க்க முடியவில்லையா, பேச முடியவில்லையா, அவர்களின் நல்ல குணத்தையாவது  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இராமன் இப்படி வாழ்ந்தான்.

தர்மன் இப்படிச் செய்தான்.

அரிச்சந்திரன் இப்படி பொய் பேசாமல் இருந்தான் என்று நல்லவர்களின்  குணங்களை  பேச வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம், நாளடைவில் அந்த குணங்கள் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.



Monday, July 20, 2020

ஒளவையார் பாடல் - தீதே

ஒளவையார் பாடல் -  தீதே 


பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்

மிக எளிய பாடல்.

தீயாரைக் காண்பதுவும் தீதே = தீயவர்களை காண்பதும் தீது

திரு அற்ற = சிறப்புகள் அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே = தீயவர்கள் சொல்வதை கேட்பதும் தீது

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே = தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. = அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் தீதே


சரியாத்தானே சொல்லி இருக்கிறாள் கிழவி. இதில் என்ன சொல்ல இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

அதுவும் இல்லாமல் நாம எங்க தீயவர்களோடு பழகுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம்.  இதெல்லாம் நமக்கு இல்லை. நாம் பாக்குறது, பேசுறது எல்லாம் நம்ம அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நன்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்.  அவங்க எல்லாம் தீயவர்கள் இல்லை. எனவே, நமக்குச் சொன்ன அறிவுரை இல்லை   என்று எடுத்துக் கொள்ளலாமா?

சற்று யோசியுங்கள்.

நீங்கள் தீயவர்களை  பார்ப்பதே இல்லையா?  அவர்கள் சொல்வதை கேட்பதே இல்லையா?

நீங்கள் தினமும் தீயவர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள் , அவர்களோடு இணக்கமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எத்தனை டிவி பார்க்கிறீர்கள்?

அதில் எத்தனை சீரியல்கள், நாடகங்கள், அரசியல் அலசல்கள், "பெரியவர்களின்" பேச்சுகள் - அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

அவர்கள் நல்லதைத்தான் சொல்கிறார்களா? நல்லதைத்தான் செய்கிறீர்களா?

யாரை எப்படி கொல்லுவது , யாரை எப்படி ஏமாற்றுவது, எப்படி வஞ்சகம் செய்வது,  ஆட்களை கடத்துவது, கொலை செய்வது, திருடுவது என்று உலகில்  உள்ள அத்தனை வக்ரங்களும் அவற்றில் இல்லையா?

அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனம் பாதிக்கப் படாதா?

இல்லை பாதிக்காது என்று நீங்கள் சொன்னால், பின் நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளை  கேட்பதிலோ, படிப்பதிலோ அர்த்தம் இல்லை.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தும் நம்மை பாதிக்கத்தான் செய்யும்.

சரி. நான் தான் தொலைக்காட்சியே பார்ப்பதே இல்லையே . அப்படியே பார்த்தாலும்  செய்தி, பாடல், நகைச்சுவை என்று மட்டும் தானே பார்ப்பேன்  என்று சொல்லலாம்.

அந்தச் செய்திகளில் தீயவை இல்லையா?  அதை சொல்பவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?  யார் யாரோ பேசியதை காட்டுகிறார்கள் செய்தியில்.  அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

சார், தொலைக் காட்சியே பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை என்று சொல்லலாம்.

சினிமா?

செய்தித்தாள் ?

தீமைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவை தீமை என்று கூடத் தெரியாமல்   வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி பார்த்தால் என்ன? கேட்டால் என்ன? அதில் சொன்ன மாதிரியா செய்கிறோம் . நமக்குன்னு ஒரு அறிவு இருக்குல்ல என்று சொல்லலாம்.

ஒரு நடிகர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறார். எத்தனை சிறுவர்கள்  அது ஒரு பெரிய  விடயம் என்று அது போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள் ?

தங்கள் தங்கள் ஆதர்ச கதாநாயகர்கள் என்ன செய்கிறார்க்ளோ  அதே போல்  நாமும் செய்ய வேண்டும் விரும்புவது இல்லையா?

அது தான்  இணக்கமாக இருப்பது.

சரி, சினிமாவும் பார்ப்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

Youtube ? வாட்ஸாப்ப்?

இவற்றில் இல்லாத வக்கிரங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வரும் செய்திகள் அப்படி ஒன்றும் மோசமானவை இல்லை  என்று நாம் நினைக்கலாம்.

சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு.

முதலாவது - பொய் சொல்லுதல்

இரண்டாவது - புறம் கூறுதல்

மூன்றாவது - பயனில சொல்லுதல்

நான்காவது = கடும் சொல் சொல்லுதல்

உங்களுக்கு வரும் செய்திகளில் இவை இல்லை என்று சொல்ல முடியுமா?

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் புறம் சொல்லுபவர்களாக இருக்கலாம். அது ஒரு தீய செயல் தானே? அதைச் செய்பவர்களதீயவர்கள் தானே?

அவர்களை நாம் பார்ப்பது இல்லையா? அவர்களோடு பேசுவது இல்லையா? அவர்களோடு இணக்கமாக இருப்பது இல்லையா?

பேச்சின் மூலம் சாதிச் சண்டையை, மதச் சண்டையை தூண்டுகிறான் ஒருவன்.அவன் சொல்வதை youtube ல் கேட்பது இல்லையா?

ஒளவையார் தீயவர்களை நேரில் சென்று காண்பது தீது, அவர்கள் சொல்வதை நேரே  நின்று கேட்பது தீது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒருவன் தவறான எண்ணத்தோடு ஒரு புத்தகம் எழுதுகிறான். அதை வாசித்து,  அவன் சொல்லுவதும் சரியாத்தானே இருக்கிறது என்று நாம் நினைத்தால்,  நாம் அந்த தீயவனோடு இணக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே எவ்வளவு தீயவர்களோடு  நீங்கள் தொடர்பு  வைத்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

இது ரொம்ப நாள் நடந்து கொண்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை.

சற்று தள்ளி நின்று யோசித்தால் இதன் விபரீதம் புரியும்.

சரி, அப்படினா என்னதான் செய்றது?

டிவி கூடாது, செய்தித் தாள் கூடாது, whatsapp , youtube கூடாது, அக்கம் பக்கம் அரட்டை அடிக்கக் கூடாது  என்றால் பின் என்னதான் செய்றது?

கிழவி அதற்கும் வழி சொல்லி விட்டுப் போய் இருக்கிறாள்.

அது என்ன தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_20.html

Monday, February 11, 2019

ஒளவையார் - அரியது

ஒளவையார் - அரியது 


அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

"தானமும் தவமும் தான்செயல் அரிது"


படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

Wednesday, October 11, 2017

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை

ஒளவையார் பாடல் - மரம் போல் பொறுமை 


ஒரு வீட்டில் , சில சமயம் ஒரு நபர் ஏதோ ஒரு வழியில் தவறாகப் போய் விடலாம்.

வீட்டுக்கு அடங்காத பிள்ளை.

எடுத்தெறிந்து பேசும் மருமகள்.

மரியாதை இல்லாத மருமகன்.

ஒட்டாத சம்பந்தி.

கொடுமைக்கார மாமியார்.

பொறுப்பிலாத கணவன்.

ஊதாரி மனைவி

என்று யாரோ , எங்கேயோ தடம் பிரண்டு போய் விடலாம்.

அவர்களை என்ன செய்வது ? முடிந்தால் திருத்தலாம்.

இல்லை என்றால் ?

கை கழுவி விடலாமா ?

கூடாது என்கிறார் ஒளவையார்.

சகித்துத் தான் போக வேண்டும்.

எத்தனை காலம் என்று கேட்டால், ஆயுள் காலம் முழுவதும் சகிக்கக்தான் வேண்டும்.

வீட்டில் ஒருவர் சரியில்லை என்றால், வெளியில் சொல்லக் கூடாது. தாங்கிக் கொள்ளத்தான்  வேண்டும்.

விடாது தீமை செய்தாலும், அப்படி தீமை செய்பவர்களை கடைசிவரை வெறுக்காமல் காப்பார்கள் ஆன்றோர். தன்னை வெட்டுபவனுக்கும் கடைசிவரை நிழல் தரும் மரத்தைப் போல.

பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்


பொருள்

சாந்தனையும் = சாகும் வரை

தீயனவே  = தீமைகளையே

செய்திடினும் = செய்தாலும்

தாம் = பெரியவர்கள்

அவரை = அந்த தீமை செய்பவர்களை

ஆந்தனையும் = ஆகும் வரை, அதாவது முடிந்தவரை ,

காப்பர்  = காவல் செய்வார்கள்

அறிவுடையோர் = அறிவுடையவர்கள்

மாந்தர் = மக்கள்

குறைக்கும் = தன்னை குறை செய்யும் (வெட்டும்)

தனையும் = செய்தாலும்

குளிர் = குளிர்ச்சியான

நிழலைத் தந்து = நிழலை தந்து

மறைக்குமாம் = வெயிலில் இருந்து மறைக்கும்

கண்டீர் = கண்டு கொள்ளுங்கள்

மரம் = மரம்

துன்பம் செய்தாலும், தவறு செய்தாலும்,  சொன்ன பேச்சு கேட்கா விட்டாலும், ஒத்துப் போக வில்லை என்றாலும்....சகித்து, அவர்களுக்கும் நல்லதே செய்யுங்கள்.

குடும்பம் நன்றாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/10/blog-post_56.html



Tuesday, December 6, 2016

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 


குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

உடற்பிறப்பால் தோள்வலிபோம் = உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய் விடும்

பொற்றாலி யோடெவையும் போம் = தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


எளிமையான பாடல் தான்.

தாயோடு அறுசுவை போம் ...குழந்தை பிறந்தது முதல் அது தன் தாய் செய்யும் உணவைத்தான் உண்கிறது.   தாயின் கை பக்குவம் தான் ஒரு குழந்தையின்  அடிப்படை  சுவை. உலகில் எவ்வளவு பெரிய சுவையான உணவு செய்தாலும், "எங்க அம்மா செய்தது போல வருமா " என்று சொல்லுவது எல்லோருக்கும் வழக்கம். காரணம், சுவை என்ற ஒன்றை அறிவதே தாயின் உணவில் இருந்துதான்.  எப்போதாவது கணவன் அவனுடைய மனைவியிடம் "எங்க அம்மா கை பக்குவம் உனக்கு இல்லை " என்று கூறினால், மனைவி கோபம் கொள்ளக் கூடாது.  மனைவி எவ்வளவுதான் சுவையாக சமைத்தாலும், அம்மாவின்  சாப்பாட்டின் சுவை தான் அடிப்படை (base ). அதை மாற்ற முடியாது.

தந்தையோடு கல்வி போம் ... ஏன் ? பள்ளி மற்றும் கல்லூரிக்கு பணம் கட்ட தந்தை வேண்டும்,  தந்தை இல்லாவிட்டால் பிள்ளைகள் சீக்கிரம் வேலைக்குப் போக  வேண்டி இருக்கும், அதனால் கல்வி தடை படும் என்பதாலா ? இல்லை.

எவ்வளவோ வீட்டில் , தந்தை இருப்பார். அதிகமாக சம்பாதிக்க முடியாமல் இருப்பார். ஏழை குடும்பமாக இருக்கும். தந்தை இருந்தும் படிக்க வசதி இருக்காது. அந்த மாதிரி இடத்தில், தந்தை இருந்தும் கல்வி போய் விடுகிறதே ?

அவ்வை சொன்னது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அல்ல.

தந்தை மகனுக்கு வேண்டியதைச் சொல்லித் தருவான். அனுபவ பாடங்கள். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை " என்று சொன்னது அதனால் தான். ஒரு மகனின் அல்லது மகளின்   முன்னேற்றத்தில் அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள் ? தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்த தவறுகளை, அவற்றை திருத்திய விதத்தை எல்லாம்  பிள்ளைகளுக்கு சொல்லித் தருவான். எனவே தான், "தந்தையோடு கல்வி போம்"


சேயோடு தான் பெற்ற செல்வம் போம் .... பிள்ளைகள் தவறி விட்டால் எவ்வளவு  செல்வம் சம்பாதித்து என்ன பயன் ? அவர்கள் இல்லை என்றால் இருக்கும் செல்வத்திற்கு  ஒரு மதிப்பு இல்லை. 

மனைவி  என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக,  பிள்ளையாக ...எல்லாமாகி நிற்கிறாள்.

மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.  

மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க   வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள். 

மனைவி என்பவள் ஒருவனுக்கு, தாயைப் போல அன்பு காட்டி, தகப்பனைப் போல   அறிவுரை கூறி,  உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளை போல  வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட  மனைவி போனால், எல்லாம் போய் விடும். 

இத்தனையும் தரும் மனைவியை , ஒருவன் எப்படி கொண்டாட வேண்டும் ....