Showing posts with label pattinaththar paadal. Show all posts
Showing posts with label pattinaththar paadal. Show all posts

Thursday, November 11, 2021

பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம்

 பட்டினத்தார் பாடல் - முன்பு செய்த புண்ணியம் 


நாம் முயற்சி செய்கிறோம். நம் தகுதி, உழைப்பு, நேர்மை இவற்றிற்கு ஏற்ப ஏதோ ஒரு ஊதியம் கிடைக்கிறது. 


நம்மைவிட குறைந்த தகுதி, குறைவான உழைப்பு, குறைவான திறமை உள்ளவன் நம்மை விட பல மடங்கு அதிகம் பொருள் ஈட்டுகிறான். 


நம்மை விட தகுதியில், திறமையில், உழைப்பில் உயர்ந்தவன் நம்மை விட குறைவாக பொருள் ஈட்டுகிறான். 


இது நடக்கிறதா இல்லையா இந்த உலகில்?


காரணம் என்ன?


ஊழ் வினைப் ப் பயன் என்று நம் இலக்கியம் மிக ஆழமாக நம்பியது. 


ஏதோ எல்லாம் என்னால் என்று நினைக்காதே. முன் வினைப் பயன் இருந்தால் கிடைக்கும். இல்லை என்றால் என்ன முயன்றாலும் நட்டம்தான் வந்து சேரும். 


மூத்த மைந்தனுக்குத்த் தானே பட்டம் கிடைக்க வேண்டும். அதை விட்டு அவன் கானகம் போனனான். காரணம் என்ன?


"விதியின் பிழை" என்றான் இராமன். 


இங்கே பட்டினத்தார் சொல்லுகிறார்....


"முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என் மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில் செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில் செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப் போகிறாயா?"


என்று கேட்கறார். 


பாடல் 



முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_17.html


(pl click the above link to continue reading)



முன் தொடர்பில் = முற் பிறவியில் 


செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால் 


வந்த செல்வம் = வந்த செல்வத்தை 


இற்றைநாள் = இன்று, இப்போது 


பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே 


அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல் 


அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல் 


கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல் 


கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே 


நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை. 


என்னே அறிவீனம்!




Monday, September 7, 2020

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே 


கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், நாம் புதிதாகச் செய்தது என்ன?

உணவு, உடை, பேச்சு, நாம் கண்ட பொருள்கள், மனிதர்கள், கேட்ட செய்திகள்?

திருப்பி திருப்பி அதே தோசை, வடை, பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்...

அதே உடை....சேலை,  சுடிதார், pant , shirt , டீ-ஷர்ட் ....

மீண்டும் மீண்டும் அதே பேச்சு...மாமியார் சரி இல்லை, வீட்டு காரருக்கு ஒண்ணும் தெரியாது, மனைவிக்கு சரியா சமைக்கத் தெரியாது, அந்த கட்சி மோசம், இந்த கட்சி நல்லது, வெயில், மழை.....

அதே டிவி, அதே சீரியல், அதே blog , அதே பாட்டு

சலிப்பு வராதா?

ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும், முன்னேற வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நமக்கும் பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றாதா?

இப்படி செக்கு மாடு போல சில விஷயங்களில் சுத்தி சுத்தி வருகிறேனே, என்னக்கு ஒரு நல்ல வழியை காட்டுவாய் என்று சிவனை வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_7.html


உண்டதேயுண்டு  = உண்டதே உண்டு

முடுத்ததேயுடுத்து = உடுத்ததே உடுத்து

மடுத்தடுத்து = அடுத்து அடுத்து

உரைத்த யுரைத்தும்,  = சொன்னதையே சொல்லி

கண்டதேகண்டுங் = பார்த்ததையே பார்த்து

கேட்டதேகேட்டுங் = கேட்டதையே கேட்டு

கழிந்தனக நாளெல்லாம், = கழிந்தன நாட்கள் எல்லாம்

விண்டதா மரைமேலன்னம் = விண்ணில் தாமரை மேல் அன்னம்

வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா, = அதன் மேல் வீற்று இருக்கும் திரு வெண்காட்டில் உறையும் சிவனே

அண்டரே = தேர்வர்களே

போற்ற = போற்ற

வம்பலத்தாடு = அம்பலத்து ஆடும்

உமையனே = உமை ஒரு பங்கனே

உய்யு மாறருளே. = உய்யுமாறு அருள் செய்யேன்

வேறு ஒன்றும் தெரியாததால், தெரிந்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.

புதிதாக ஏதாவது செய்தி வந்தால் கூட, அதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. "அதெப்படி? நான் நம்புவதற்கு எதிராக அல்லவா இருக்கிறது...அதை எப்படி ஏற்றுக் கொள்ளுவது"  என்று எந்த புதிய செய்தி வந்தாலும், அதை புறம் தள்ளி விடுகிறோம்.

அறிவு எப்படி வளரும்?

ஐந்து வயதில் தெரிந்தது தான் ஐம்பது வயதிலும் தெரியும் என்றால், 45 வருடம்  வீணாகி விட்டது என்று அர்த்தம்.

அறிவு வளர வேண்டாமா?

உய்யு மாறருளே...வேறு என்ன செய்வது....அவன் காப்பாற்றினால் தான் உண்டு.





Wednesday, November 27, 2019

பட்டினத்தார் பாடல்கள் - எது எப்படி போனால் என்ன ?

பட்டினத்தார் பாடல்கள் -  எது எப்படி போனால் என்ன ?



சிலர், இந்த உலகமே தங்களால் தான் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டு செயல் படுவார்கள். இந்த வீடு, பிள்ளைகள், கணவன்/மனைவி, அலுவலகம், மகன்/மருமகள், மகள்/மருமகன் என்று எல்லாம் தன்னையே சார்ந்து இருப்பதாய் நினைத்துக் கொள்வார்கள்.

"நான் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா" என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

பின், "என்ன செய்து என்ன பலன்...என் அருமை யாருக்குத் தெரியுது " என்று அலுத்துக் கொள்ளவும் செய்வார்கள்.

உண்மையில், அவர்களை நம்பி யாரும் இல்லை. எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. "ஆ..அப்படியெல்லாம் இல்லை...யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் " என்று அவர்கள் குதிக்கலாம். என்ன சொன்னாலும், அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் நடந்து விடாது.

உலகம் மிகப் பெரியது. நம்மை நம்பி எதுவும் இல்லை. நமது தேவைகள் மிகக் குறைவு. என்னமோ நாம் தான் என்று பிரமித்து போக வேண்டாம்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. எத்தனை வேலைக் காரர்கள் இருந்திருப்பார்கள்? கொடுக்கல், வாங்கல், வரவு, செலவு, போட்டி, என்று எவ்வளவு இருந்திருக்கும் அவர் வாழ்வில்?

எல்லாவற்றையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டு, கட்டிய கோவணத்துடன்  இறங்கி விட்டார்.

நான் இந்த செல்வத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். அதை பாது காக்க வேண்டும்,  முதலீடு செய்ய வேண்டும், எவனாவது கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயப்பட வேண்டும்...இதுதான் எனக்கு வேலையா  என்று நடையை கட்டிவிட்டார்.

அவர் சொல்கிறார்,  நிலவின் பிறை வடக்கு பக்கம் உயர்ந்தால் என்ன, தெற்கு பக்கம் உயர்ந்தால் நமக்கு என்ன...என்று ஜாலியாக இருந்தார்.

அவர் சொல்வதைக் கேட்போம்....


பாடல்


உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கேவிடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.



பொருள்


உடைகோவணமுண்டு  = உடை, கோவணம் உண்டு

உறங்கப் புறந் திண்ணை யுண்டு = உறங்குவதற்கு யார் வீட்டு திண்ணையாவது இருக்கும்

உணவிங் = உணவு இங்கு

கடைகாயிலையுண் = கடைக் காய் இல்லை உண்டு

அருந்தத் தண்ணீருண்டு = அருந்த தண்ணீர் உண்டு

அருந்துணைக்கே = அருமையான துணைக்கு

விடையேறுமீசர்திருநாமமுண்டு = எருதின் மேல் ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு


இந்த மேதினியில் = இந்த உலகில்

வட கோடுயர்ந்தென்ன = வட கோடு உயர்ந்து என்ன ?

தென் கோடு சாய்ந்தென்ன = தென் கோடு சாய்ந்து என்ன ?

வான்பிறைக்கே. = வான் பிறைக்கே

அவரைப் போல் நம்மால் இருக்கிறதை எல்லாம் உதறிவிட்டு தெருவில் இறங்க முடியாது என்பது  வாஸ்தவம்தான்.

ஆனாலும், எல்லாம் நான் தான், என்னை வைத்துத்தான் எல்லாம் நடக்கிறது, நான்  இல்லாவிட்டால் இந்த உலகம் நின்று விடும் அல்லது என் குடும்பம் நின்று விடும்  என்று நினைப்பதை குறைக்கலாம்.

அந்த எண்ணம் வரும்போது மனம் லேசாகும். படபடப்பு குறையும். வாழ்க்கை  மென்மையாக இருக்கும். ஓட்டம் குறையும். நிதானம் வரும். அழுகை குறையும். ஆதங்கம் குறையும்.

மனம் உள்நோக்கித் திரும்பும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_30.html

Tuesday, November 26, 2019

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர்

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர் 


எது சரி, எது தவறு என்று மக்கள் குழம்பும் போது, உண்மை அறிந்த ஞானியர்களை மக்கள் நாடினார்கள்.

அனைத்தும் துறந்த, சுயநலம் இல்லாத ஞானிகள் அவர்கள். அவர்கள் சொல்வதை மக்கள் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று நடந்தார்கள்.

புத்தர், இயேசு, சங்கரர், இராமானுஜர், வள்ளலார், வள்ளுவர் போன்றவர்கள் மக்களை வழி நடத்தினார்கள்.

ஆனால், இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் கேட்பது?

யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்று தெரியமால் மக்கள் குழப்புகிறார்கள்.

பட்டினத்தார், உண்மை ஞானம் கண்டு தெரிந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களின் இலக்கணம் சொல்லுகிறார்.

நீங்கள் யார் பேச்சையாவது கேப்டதாய் இருந்தால், அவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கேட்காதீர்கள்.


பாடல்

பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.


பொருள்

பேய்போற்றிரிந்து= பேய் போல் திரிந்து

பிணம்போற்கிடந்து = பிணம் போல கிடந்து

இட்டபிச்சையெல்லா = இட்ட பிச்சை எல்லாம்

நாய்போலருந்தி = நாய் போல் அருந்தி

நரிபோலுழன்று = நரி போல் உழன்று

நன்மங்கையரைத் = நல்ல பெண்களை

தாய்போற்கருதித் = தாய் போல கருதி

தமர்போலனைவர்க்குந் = உறவினர் போல அனைவருக்கும்

தாழ்மைசொல்லிச் = பணிவாகப் பேசி

சேய்போலிருப்பர் = குழந்தையைப் போல இருப்பார்கள்

கண்டீர் = கண்டீர்

உண்மை ஞானந் தெளிந்தவரே. = உண்மையான ஞானம் தெளிந்தவரே


பேய் போல திரிந்து - பேய்க்கு ஒரு இருப்பிடம் கிடையாது.  அது பாட்டுக்கு காட்டில் அலையும்.  அதன் பேரில் ஒரு வீடு, பேங்க் அக்கௌன்ட் எல்லாம் கிடையாது.

பிணம் போல கிடந்து - பிணத்துக்கு உணர்ச்சி இருக்காது. நல்ல உணவு,  குளிர் சாதன அறை, பெரிய கார், பெண்கள், என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள்.

இட்ட பிச்சை எல்லாம் - அந்த உணவு வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்பது எல்லாம் கிடையாது. கிடைத்த பிச்சையை

நாய் போல் அருந்தி - தட்டு கூட கிடையாது

நன் மகளிரை தாய் போல் கருதி - பெண்களை தாயைப் போல கருதுவார்களாம்.

எல்லோரையும் உறவினர் போல நினைத்து பணிவாகப் பேசுவார்கள்.  என் ஜாதி,  என் மதம். இது பார்க்கும் நேரம். அதற்கு கட்டணம்.  யார் கிட்ட வரலாம், யார் தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு கிடையாது.

சேய் போல் இருப்பர் - சின்ன பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள்.

முதலில், சாமியாருக்கு மடம் எதற்கு?  எல்லாவற்றையும் வேண்டாம் என்று தானே  துறவறம் பூண்டு சாமியாராக ஆனாய். பின் எதற்கு மடம் , அதில் ஏக்கர் கணக்கில்  நிலம், பணம், தங்கம், சொத்து, வருமானம், வரி என்றெல்லாம்.  இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?  மடத்தில் இருக்கும்  யாரும், பட்டினத்தார் பட்டியலில் வர மாட்டார்கள்.

சொத்து சேர்த்து, அதை காப்பாற்றி, அதை பெருக்கி, அதை நிர்வாகம் பண்ண ஆளை போட்டு, அவன் ஏமாற்றாமல் இருக்கிறானா என்று தெரிந்து  கொள்ள  ஒரு ஆடிட்டர் ஐ போட்டு...இதெல்லாம் ஞானம் அடைந்ததின் குறியீடா?

உண்மையான ஞானிகளை பார்க்க போக வேண்டும் என்றால் மடத்திற்குப் போகாதீர்கள்.

எந்த மதத்திலும், எந்த பிரிவிலும், எங்கே பணமும் சொத்தும் புரள்கிறதோ அங்கே ஞானம் இருக்காது. உங்களுக்கு பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், காரியம் நடக்க யாரையாவது பிடிக்க வேண்டும் என்றால் அங்கே போங்கள். ஞானம்?

ஞானிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஞானம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் தேடிப்  போக வேண்டும்.

அந்தத் தேடல் தான் உங்கள் ஞானத்தின் முதல் படி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_26.html

Friday, March 29, 2019

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா 



பாடல்

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா


பொருள்

மண்ணும் தணல் ஆற = மீண்டும் மீண்டும் நாம் பிறந்து, பின் இறந்து கொண்டிருந்தால், நம் உடலை மீண்டும் மீண்டும் எரிப்பார்கள். அப்படி மாறி மாறி எரித்துக் கொண்டிருந்தால், இந்த மணல் (சுடுகாட்டு மணல் ) சூடாகவே இருக்கும் அல்லவா? அந்த மணல் கொஞ்சம் தணல் ஆறவும். சூடு ஆறி குளிரவும்

வானும் புகை ஆற = உடலை எரிக்கும் போது எவ்வளவு புகை வரும். நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து எரித்து எரித்து இந்த வானமே புகை மண்டி கிடக்கிறது. அந்த புகை ஆறவும்

எண்ணரிய தாயும் இளைப்பாறப் = பிள்ளையைப் பெறுவது என்றால் எவ்வளவு சிரமம் ஒரு தாய்க்கு. எத்தனை தாய்மார்கள் நம்மை மறுபடி மறுபடி பெறுவதற்கு சிரமப் படுவார்கள். அவர்கள் கொஞ்சம் இளைப்பாறவும். 


பண்ணுமயன் = பண்ணும் + அயன் . நம்மை மீண்டும் மீண்டும் படைக்கும் ப்ரம்மா 

கையாறவும் = நம் தலை எழுத்தை எழுதி எழுதி அவனுக்கும் கை வலிக்காதா? அவன் கை ஆறவும் 

அடியேன் கால் ஆறவும் = பிறந்தது முதல் ஆட்டம், ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடம், வேலை, வெட்டி என்று அலைந்து திரிகிறோம். கால் தான் வலிக்காதா நமக்கு. ஒரு பிறவி என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவி, எவ்வளவு நடப்பது ? கால் தான் வலிக்காதா ? என் கால் இளைப்பாறவும் 


காண்பார் = இவை எல்லாம் இளைப்பாறும்படி காண்பாய் 

ஐயா = ஐயா 

திருவை யாறா = திருவையாறா, திருவையாற்றில் உள்ள சிவனே 

பட்டினத்தாருக்கு தமிழ் வந்து விழுகிறது. 

ஐந்து ஆறுகள் சேரும் இடம், திரு + ஐந்து + ஆறு. திருவையாறு. 

அந்த ஆற்றினை, ஆறுதல் என்ற இளைப்பாறுதல் என்ற வார்த்தையோடு சேர்க்கும் இலாகவம் பட்டினத்தாருக்கு இருக்கிறது. 

அது போகட்டும். 

நமக்கு நேற்று நடந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. போன வாரம் நடந்தது அதை விட கொஞ்சம் குறைவாக நினைவு இருக்கிறது. போன மாதம், போன வருடம் ?

நாள் ஆக , ஆக நினைவு குறைந்து கொண்டே போகிறது. 

போன ஜென்மம் நினைவு இருக்கிறதா ? இல்லவே இல்லை. 

ஞானிகளுக்கு அது நினைவு இருக்கிறது. 

பட்டினத்தார் சொல்கிறார் எத்தனை பிறப்பு, எத்தனை தாய்மார் என்று. 

மாணிக்க வாசகர் சொல்லுகிறார் 

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் 
மெய்யே உன் பொன்னடிக்கு கண்டு இன்று வீடு உற்றேன் "

என்று சிவபுராணத்தில்.

புல்லாகி, பூடாகி, புழுவாய் , பறவையாய், பாம்பாய் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அத்தனை பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார். 

இளைத்து யார் ? இந்த உடம்பு அல்ல. இந்த ஆன்மா. மறுபடி மறுபடி பிறந்து இளைக்கிறது.

எளிய தமிழில் ஆழ்ந்த அர்த்தம்.

இது உங்கள் சொத்து. உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. வெட்டிக் கொண்டு போனாலும் சரி. கட்டிக் கொண்டு போனாலும் சரி. விட்டு விட்டுப் போய் விடாதீர்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_15.html

Wednesday, May 9, 2018

பட்டினத்தார் பாடல் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல் -  காதற்ற ஊசியும் வாராது காண் 


வாது  உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும்  புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.

இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லை. அவ்வளவு எளிய பாடல்.

காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே

நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.

அறிவின் உச்சம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம் ?

"ஹா...இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா " என்று தோளை குலுக்கி விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

இருக்கிற செல்வத்தை எல்லாம் ஊருக்கு கொடுத்துவிட்டு வீதியில் நம்மால் நடக்க முடியுமா ? நடக்கிற காரியமா ?

பட்டினத்தார் நடந்தார்.

படித்தால், அது பாதிக்க வேண்டும். நம் வாழ்க்கை மாற வேண்டும்.  இல்லை என்றால்  படித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பயனும் இருக்காது.

வேதம், உபநிஷதம், புராணம், கீதை, தேவாரம், பிரபந்தம், என்று ஒன்றும் படிக்கவில்லை.

ஒரே ஒரு வரி.

கிளம்பி விட்டார்.

அறிவுள்ளவுனுக்கு ஒரு வரி போதும்.

அறிவில்லாதவன் எத்தனை ஆயிரம் வரிகள் படித்தாலும்,  இன்னும் என்ன இருக்கிறது  என்று அலைவானே தவிர, படித்தது எதையும் வாழ்வில் நடை முறை படுத்த மாட்டான்.

கழுதை தின்ற கீதை புத்தகம் மாதிரி.  கழுதையின் வயிற்றுக்குள் போனது கீதை. சிலரின் மண்டைக்குள் போகிறது. பாதிப்பு ஒன்றும் இல்லை.

எதற்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் ?

ஒரு வரி போதாதா ?

ஒண்ணும் கூட வராது என்றால், அதை ஏன் நாம் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று  கிளம்பி விட்டார்.

அவருக்கு மனைவி இருந்தாள் . அழகான பிள்ளை இருந்தான். அரசனுக்கு கடன் தரும் அளவு செல்வம் இருந்தது.

அத்தனையையும் அந்த ஒரு ஒரு வரி மாற்றிப் போட்டு விட்டது.

நாம் இந்தப் பாடலைப் படித்தால், "ஆஹா என்ன அழகான பாடல் " என்று இரசிப்போம் .

ஆனால், பட்டினத்தாரோ, என்னோடு வராத செல்வத்தை நான் ஏன் வாழ் நாள் எல்லாம்  தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன  செய்ய ? கொண்டு போக முடியாது. அனுபவிக்கவும் முடியாது. பின் எதற்கு என்று நினைத்தார்.

வீதியில் இறங்கி விட்டார்.

ஒரு வரி போதும், ஞானம் பெற.

எது உங்கள் வரி ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_9.html

Wednesday, September 16, 2015

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து 


உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும். 

கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும். 

கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.

ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.

பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார். 

பாடல் 


ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”

பொருள் 

ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து 

திங்களாய் = மாதமாய் 

அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும் 

நொந்து = சோர்ந்து, சலித்து 

பெற்றுப்  = பிள்ளையைப் பெற்று 

பையலென்ற போதே  = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே 

பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து 

செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி 

கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை 

எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன் 




Saturday, April 25, 2015

பட்டினத்தார் - கடவுள் நாள்

பட்டினத்தார் - கடவுள் நாள் 


சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்டு விடும்...அப்படி ஒரு பிரயோகம் "கடவுள் நாள்".

கடவுள் நாள் என்றால் என்ன ? கடவுளைப் போல உயர்ந்த நாள்...

எந்த நாள் ?

காலம் கடவுள் போன்றது.

மிக உயர்ந்தது. கிடைக்காது. அருமையானது.

அந்தக் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் ?

ஏதோ அது நம்மிடம் மிக மிக அதிகமாக இருப்பது போல, அதை அனாவசியமாக செலவு செய்கிறோம்.

மீண்டும் மீண்டும் அதே இட்லி, தோசை, அரிசிச் சோறு, உப்புமா, காபி, டீ என்று சாப்பிடதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ....

அதே சட்டை, சேலை, சுடிதார் என்று போட்ட உடைகளையே மீண்டும் மீண்டும் போட்டு

திருப்பி திருப்பி அதே பேச்சு, அரட்டை, பொய்கள்...

அதே வீடு, அதே அலுவலகம், அதே பிள்ளைகள், அதே கணவன், மனைவி என்று அவர்களையே திருப்பி திருப்பி பார்த்து, அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கேட்டு ....

இப்படி நம் வாழ்வில் நடப்பது எல்லாம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதில் புதியதாய் என்ன இருக்கிறது...ஏதோ ஒன்றிரண்டு புதியதாய் இருக்கலாம் நாளடைவில் அதுவும் இதே சக்கரத்துக்குள் வந்து விடும்....

சலிப்பு வரவில்லையா ?

எத்தனை நாள் இதையே செய்து கொண்டு இருப்பது ?

எப்போது இதில் சலிப்பு வந்து இதை விடுவது ?

காலம் கடவுள் போன்றது...அதை இப்படி வீணடிக்கலாமா ?


பாடல்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்


பொருள்


இத்தனை நாளும் செய்ததையே செய்து, செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து வாழ் நாளை எல்லாம்   வீணாக்கி விட்டேனே என்று வருந்துகிறார் பட்டினத்தார்....

நாம் என்ன செய்தோம் என்று நாமும் யோசிப்போமே....


Monday, September 1, 2014

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ


இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே 
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல் 
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக் 
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

இந்தப் பிறவியை நம்பி யாராவது இருப்பார்களா ? நெஞ்சமே, சொத்து சுகம் எல்லாம் இருக்க, வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும், இந்த பிறவியை யாராவது நம்புவார்களா ?

வங்கியில் பணம் இருக்கிறது. ஒண்ணுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லாரும் இருக்கிறார்கள். பின் எதற்கு உயிரை விட வேண்டும்.

இத்தனையும் நம் உயிரை பிடித்து வைக்க உதவுமா ?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க, இதை யார் நம்புவார்கள்.

பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

காசு பணம் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை நம்பியா வாழ்வது.

வாழ்வின் நிலையாமையை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்கள்


Sunday, August 31, 2014

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா 


எத்தனை எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கிறோம். யார் யார் சொல்வதேல்லாமோ கேட்கிறோம். எல்லாம் சரி என்று பட்டாலும், நம் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை.

"இதெல்லாம் கேக்க படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சரிப் படுமா " என்று ஒதுக்கி தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.

ரொம்ப ஒண்ணும் படிக்க வில்லை - ஒரே ஒரு வரிதான் படித்தார் பட்டினத்தார் - ஒம்பது கோடி சொத்தை ஒரே நாளில் உதறி விட்டு கிளம்பி விட்டார்.

அவர் வாசித்த  அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே"

ஒரு பொறி பட்டது. கற்பூரம் பற்றிக் கொண்டது.

அவர் பாடிய ஒரு பாடல் கீழே.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் 
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை 
கருப்பையூர் வாராமற் கா

நாம் பாட்டுக்கு பிறந்து விடுகிறோம். நம்மால் எவ்வளவு பேருக்கு வலி, எவ்வளவு  பேருக்கு சங்கடம், அலுப்பு, சலிப்பு.

ஒவ்வொரு முறை நாம் பிறக்கும் போதும் ஒரு அன்னை நம்மை சுமக்க வேண்டி இருக்கிறது. சுமந்து பெற்றால் மட்டும் போதுமா ? பாலூட்டி, கண் விழித்து, வளர்க்க வேண்டி இருக்கிறது. அவளின் உடல் என்ன பாடு பாடும். ஏதோ ஒரு முறை   என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவிகள், எத்தனை தாய் வயிற்றில்  பிறந்து அவளை சங்கடப் படுத்துகிறோம்.

நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் பிரம்மா நம் தலையில் விதியை எழதி  அனுப்பிகிறான். எழுதி எழுதி அவனுக்கும் கை சலித்து போய் இருக்கும். அத்தனை  பிறவிகள்.

பிறந்த பின் சும்மா இருக்க முடிகிறதா. அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிகிறோம்.  நடையாய் நடந்து கால் சலித்துப்  போகிறோம்.

எல்லாம் போதும், இருப்பையூர் வாழும் சிவனே, இன்னும் ஓர் அன்னையின் கருப்பையில்  வாராமல் என்னை காத்தருள்வாய்.


Tuesday, May 27, 2014

பட்டினத்தார் பாடல் - விதி ஏட்டை கிழிக்க

பட்டினத்தார் பாடல் - விதி ஏட்டை கிழிக்க 


இருந்த செல்வம் அத்தனையும் ஒரே நாளில் உதறித் தள்ளிவிட்டு துறவியானார்  பட்டினத்தார்.

வாழ்வின் நிலையாமை, செல்வத்தின் நிலையாமை, மனிதர்கள் சிற்றின்பத்தின் பால் அலையும் அர்த்தமற்ற செயல்கள் இவற்றைப் பற்றி வெகுவாகப் பாடி  இருக்கிறார்.

நாம் பெரிதாக நினைக்கும் உறவுகள், செல்வம், வாழ்கை தரும் இன்பங்கள்,  எதிர் காலம் பற்றிய கனவுகள், பயங்கள் இவற்றை எல்லாம் "பூ" என்று ஊதித் தள்ளுகிறார் பட்டினத்தடிகள்.

விதி விதி என்று நாம் சில சமயம் நொந்து கொள்வோம். அந்த பிரமன் எழுதிய விதி என்ற ஏட்டினை கிழித்து எரிய ஒரு வழி இருக்கிறது. திரு ஒற்றியூர் என்ற திருத்தலத்தில் நடக்கும் பக்தர்களின் பாதங்கள் நம் தலை மேல் படும் படி அந்தத் தெருவில் உருள்வதே விதி என்ற ஏட்டினை கிழிக்கும் என்கிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

சுடப்படு வார் அறி யார், புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் 
திடப்படு மாமதில் தென்ஒற்றி யூரன் தெருப்பரப்பில் 
நடப்பவர் பொற்பதம் நந்தலை மேற்பட நன்குருண்டு 
கிடப்பது காண்மன மே விதி ஏட்டைக் கிழிப்பதுவே!


பொருள்

சுடப்படு வார்  = இறந்த பின் இந்த உடல் சுடுகாட்டில் வைத்து எரிக்கப் படும். சுடப் படும்.

அறி யார் = அதை யாரும் அறிவது இல்லை.

புரம் மூன்றையுஞ் சுட்டபிரான் = திரி புரம் மூன்றையும் சுட்ட பிரான் (சிவன்)

திடப்படு மாமதில் = உறுதியான பெரிய சுவர்களைக் கொண்ட

தென் = தெற்கு

ஒற்றி யூரன் = ஒற்றியூர் என்ற ஊரில்

தெருப்பரப்பில் = தெருவில்

நடப்பவர் = நடப்பவர்கள்

பொற்பதம் = பொன் போன்ற பாதங்கள்

நந்தலை = நம் தலை மேல்

மேற்பட = மேல் பட

 நன்குருண்டு = நன்றாக உருண்டு

கிடப்பது = கிடப்பது

காண் மன மே = கண்டு கொள் மனமே

விதி ஏட்டைக் கிழிப்பதுவே! = விதி என்ற ஏட்டை கிழிப்பதுவே


வாழ்வைப் பற்றி ஒரு நிதானம் பிறக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ள வேண்டி இருக்காது  - பட்டினத்தார் பாடல்களைப் படித்தால். ஒண்ணுமே பெரிய விஷயம் இல்லை  என்று தோன்றும்.

திரு ஒற்றியூரில் உள்ள சிவனின் மேல் "ஒற்றியூர் உடைய கோவே " என்று உருகி  உருகி நாவுக்கரசர் பாடி இருக்கிறார். நேரம் இருப்பின் அதையும் படித்துப் பாருங்கள். 


Friday, May 23, 2014

பட்டினத்தார் பாடல் - நடுத் தலையில் குட்டு

 பட்டினத்தார் பாடல் - நடுத் தலையில் குட்டு 


பொது மகளிர்...பொருளுக்காக ஆண்களோடு அன்பாக இருப்பது போல பேசுபவர்கள்.

பொது மகள் எப்படி எல்லாம் இருப்பாள் என்று பட்டினத்தார் பட்டியல் இடுகிறார்....

நாவார இதமாகப்  பேசுவார்கள்.உங்களைப் பிரிந்தால் உயிர் வாழமாட்டேன் என்று சத்தியம் செய்வார்கள். எப்போதும் உடன் இருந்து உண்பார்கள். நம் கையில் உள்ள பணம் குறைந்தால், "போய் வாரும்" என்று நடுத் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி  விடுவார்கள். அப்படிப் பட்ட பெண்களுக்கு தான் பெற்ற செல்வத்தையெல்லாம் கொடுத்து பின் கஷ்டப் படுவதோ தலைவிதி, இறைவா கச்சி ஏகம்பனே.....

பாடல்

நாவார வேண்டும் இதஞ் சொல்லுவாருனை நான்பிரிந்தால்
சாவேன் என்றேயிருந் தொக்கவுண்பார்கள் கைதான்வறண்டால்
போய்வாரும் என்றுநடுத் தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார் தலைவிதியோ இறைவாகச்சி ஏகம்பனே.

பொருள்

நாவார = நாக்குக்கு  இனிமையாக.உள்ளத்தில் இருந்து வரவில்லை. சொல், நாக்கில் இருந்து வருகிறது.

வேண்டும் = தேவையான

இதஞ் = இதமான சொற்களை

சொல்லுவாருனை = சொல்லுவார். உன்னை

நான்பிரிந்தால் = நான் பிரிந்தால்

சாவேன் =  சாவேன்,உயிர் வாழ மாட்டேன்

என்றேயிருந் தொக்கவுண்பார்கள் = என்றே இருந்து ஒக்க (உடன்) உண்பார்கள்

கைதான்வறண்டால் = கையில் உள்ள பொருள் குறைந்தால்

போய்வாரும்= சென்று வாரும்

என்று = என்று

நடுத் தலைக்கே = நடு  மண்டையில்

குட்டும் = குட்டு வைக்கும்

பூவையருக்கு = பெண்களுக்கு

ஈவார் = ஈகை புரிவார். பொருளை தானமாகத் தருவார்

தலைவிதியோ = அது அவர்களின் தலைவிதியோ

இறைவா = இறைவா

கச்சி = காஞ்சி

ஏகம்பனே = எகாம்பரேஸ்வரனே

விலை மகளிர் எப்படியும்  போகட்டும்.

ஒரு ஆண், மனைவியைத் தவிர்த்து இன்னொரு பெண் பின் ஏன் போகிறான் ?

- இதமான சொல்
- கூட அமர்ந்து உண்பது
- நீ இன்றி நான் இல்லை என்று அன்பொழுகப் பேசுவது

இவை அவனுக்கு வேண்டி இருக்கிறது. அன்பான பேச்சும், அவளின் அன்யோன்யமும் வேண்டி இருக்கிறது.

அது எங்கு கிடைக்கிறதோ அங்கு போகிறான் - தவறு என்று தெரிந்தும்.

பாடலைப் படிக்கும் போது பாடமும் படிப்போம் 

Tuesday, February 25, 2014

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை

பட்டினத்தார் பாடல் - எல்லாம் பகை 


நம் நோக்கத்திற்கு தடையாய் இருப்பவர்கள் எல்லோரும் பகை தானே ?

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்கள் எல்லோரும் நமக்கு பகையே.

அன்பின் பெயரால், கடமையின் பெயரால், காதலின் பெயரால் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து எப்படி அவனை அடைவது என்று ஏங்குகிறார் பட்டினத்தார்.

ஓர் இரவில் கட்டிய மனைவியை, மகனை, அகன்ற அரசை அனைத்தையும் விடுத்து சென்றான் சித்தார்த்தன்...

மாட மாளிகை, கணக்கில் அடங்கா செல்வம் என்று அனைத்தையும் காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே என்ற ஒரு வாக்கியம் கண்டவுடன் விட்டு விட்டு சென்றார் பட்டினத்தார்...

அவரின் பாடல்

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே

பொருள்

தாயும்பகை = தாயும் பகை. தாய் பகை அல்ல, தாயும் பகை. உலகிலேயே நம் மீது பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுபவர் தாய்தான்.

தாயினும் சாலப் பரிந்து என்பார் மணிவாசகர்.

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே என்பார் வள்ளலார்.

அப்பன் நீ , அம்மை நீ என்பார் அப்பர்.

அந்தத் தாயும் பகை என்கிறார் பட்டினத்தார்.

கொண்ட பெண்டீர் பெரும்பகை = மனைவி பெரும் பகை. ஒரு புறம் அவளின் சுயநலம்.  இன்னொரும் புறம் பிள்ளைகளை காக்க வேண்டுமே என்ற எண்ணம். இவற்றால் கணவனின் நேரத்தை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொள்ளும் மனைவி பெரும் பகை. பட்டினத்தார் சொல்கிறார்.

தன்னுடைய சேயும்பகை = பிள்ளைகளும் பகை. அவர்கள் பெரியவர்களாக ஆகும் வரை நம்மை ஒரு விதம் அசைய விட மாட்டார்கள். வாழ்வில் பெரும் பகுதி அவர்களை ஆளாக்குவதிலேயே போய் விடுகிறது.

யுறவோரும் பகை = உறவோரும் பகை.

யிச்செகமும் பகை = இச் செகமும் பகை. இந்த உலகமே பகை

ஆயும் பொழுதில் = ஆராயும் பொழுதில். உங்களுக்கு இது எல்லாம் பகை என்று தெரியாவிட்டால், இன்னும் சரியாக ஆராயவில்லை என்று அர்த்தம். ஆழ்ந்து ஆராய்ந்து பாருங்கள். அது எப்படி தாய், மனைவி, பிள்ளைகள், உறவு, உலகம் எல்லாம் பகையாக முடியும் என்று கேட்கிறீர்களா ? 

அருஞ்செல்வம் நீங்கில் = அருமையான செல்வம் நீங்கினால் எல்லோரும் பகையே. செல்வம் இருக்கும்  வரை தான் அவர்களின் அன்பும், நட்பும், உறவும், காதலும். செல்வம் நீங்கினால் உண்மை தெரியும்.  நாலு காசு சம்பாதிக்காதவனை மனைவியும், பிள்ளைகளும், உறவும் எப்படி மதிக்கும் ? அவன் உறவு யாருக்கு வேண்டும் ? 

இவர்கள் அனைவருக்கும் வேண்டியது நீங்கள் அல்ல, உங்கள் செல்வம்.

இக்காதலினாற் தோயுநெஞ்சே = இவர்கள் மேல் காதலினால் நாளும் தோய்ந்து கிடக்கும் நெஞ்சே

மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே = திரு மருதுரீல் வாழும் சிவனின் பொன் போன்ற பாதங்களே விடுதலை தரும்.

ஜீரணிக்க கொஞ்சம் கடினம்தான். அது எப்படி என்று சண்டை பிடிக்கத்தான் தோன்றும். "ஆயுங்கால்"....ஆராயுங்கள்.


Monday, February 24, 2014

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?

பட்டினத்தார் பாடல் - அல்லல் அற்று என்று இருப்பேன் ?


வேலைக்குப் போனால் மேலதிகாரி சொல்வதை கேட்டு தலை ஆட்ட வேண்டும். பல்லைக் காட்ட வேண்டும். அவர் சொல்வது சரியோ, கேட்டுக் கொள்ள வேண்டும்.

தொழில் செய்யலாம் என்றால் வாடிக்கையாளர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதர்க்கெல்லாம் தலை ஆட்ட வேண்டும்.

அரசாங்க அதிகாரிகளின் கெடு பிடி...

இப்படி நாளும் பலரின் நெருக்கடிகள். நிம்மதியாக எங்கே இருக்க முடிகிறது.

இந்த தொல்லைகள், பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் என்று இருப்பேன் என்று அங்கலாய்கிறார் பட்டினத்தார்.....

பாடல்

செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே

பொருள்

செல்வரைப் = செல்வந்தர்களை

பின்சென்று = பின்னால் சென்று

சங்கடம் பேசித் = மனதுக்கு பிடிக்காததை கடமைக்கு பேசி

தினந்தினமும் = தினமும்

பல்லினைக் காட்டிப் = பல்லினைக் காட்டி

பரிதவியாமற் = பறிதவிக்காமல்

பரமானந்தத்தின் = மிகப் பெரிய ஆனந்தத்தின்

எல்லையிற் புக்கிட = எல்லையில் புகுந்திட

வேகாந்தமாய் = ஏகாந்தமாய்

எனக்காம் இடத்தே = எனக்கு ஆகும் இடத்தில்


அல்லல் அற்று = துன்பங்கள் அற்று

என்றிருப் பேனத்தனே = என்று இருப்பேன் அத்தனே

 கயிலாயத்தனே = கைலாய மலையில் இருப்பவனே