Sunday, December 29, 2013

இராமாயணம் - தூயவர் துணி திறன் நன்று தூயதே

இராமாயணம் - தூயவர் துணி திறன் நன்று தூயதே 


வீடணனை சேர்க்கக்  கூடாது என்று சுக்ரீவன் உட்பட எல்லோரும் கூறி விட்டார்கள். இராமன் அனுமனின் எண்ணத்தை கேட்க்கிறான். அனுமனுக்கோ  மற்றவர்கள் சொன்ன கருத்தில் உடன் பாடில்லை. இருந்தாலும் அதை எவ்வளவு இனிமையாக, நாசுக்காக சொல்கிறான்.....

அனுமன் கூறுகிறான்

எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லோரும் தூயவர்கள். அவர்கள் துணிந்து தங்கள் கருத்துகளை கூறினார்கள். அவைகள் நல்ல கருத்துகளே. இருந்தாலும், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இவன் (வீடணன்) தீயவன் என்று நான் கருதவில்லை. மேலும் சில கருத்துகளை கூற விரும்புகிறேன்

பாடல்

தூயவர் துணி திறன் நன்று தூயதே;
ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.

பொருள்

தூயவர் = தூயவர்கள் (சுக்ரீவன் முதலானோர்)

துணி = துணிந்து

திறன் = திறமையுடன்

நன்று = நல்லதையே சொல்லி இருக்கிறார்கள்

தூயதே = தூய்மையானதே அவர்கள் சொன்னது ;

ஆயினும், = ஆனாலும்

ஒரு பொருள் = ஒரு பொருள். அதாவது அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு பொருளை

 உரைப்பென் = நான் சொல்லுவேன்

ஆழியாய்! = சக்கரப் படை கொண்டவனே

"தீயன்" என்று = தீயவன் என்று 

இவனை = இந்த வீடணனை

யான்  = நான் (அனுமன்)

அயிர்த்தல் செய்கிலேன் = சந்தேகம் செய்ய மாட்டேன்

மேயின சில பொருள் = அதற்கான  சில காரணங்களை
 
விளம்ப வேண்டுமால் = சொல்ல வேண்டும்

மற்றவர்களின் கருத்து தனக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் அதை சொன்னவர்களை அனுமன் அவமதிக்கவோ, அவர்களை தரக் குறைவாகவோ பேசவில்லை.

அவர்கள் தூயவர்கள், நல்லவர்கள், திறமையானவர்கள், நல்ல கருத்தையே கூறி இருக்கிறார்கள் என்று ஆரம்பிக்கிறான்.

பேச்சு ஒரு கலை என்றால் அந்த கலையை அனுமனிடம் கற்றுக் கொள்ளலாம்.





குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம்

குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம் 


அவளுக்கு, அவன் மேல் அளவற்ற காதல். அவனோ மேல் ஜாதிப் பையன். இவளோ சேரியில் வாழ்பவள். காதலுக்கு கண்ணா இருக்கு இதை எல்லாம் அறிந்து கொள்ள ? காதல் வந்து  விட்டது.

பாறையின் இடுக்கில் முளை விடும் செடி போல் அவள் மனதில் காதல்.

தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்....

"அவன் இந்த சேரி பக்கம் எல்லாம் வர மாட்டான், அப்படியே வந்தாலும் என்னை கட்டி அணைக்க மாட்டான். மற்றவர்களின் சுடு காட்டைப் எப்படி வெறுப்போடு பார்ப்போமோ அப்படி என்னை பார்ப்பான். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி வேறு எதையும் சட்டை பண்ணாமல் நேரே போகுமோ அது போல என் காமம் எதையும் காணாமல் அவன் பால் செல்கிறது " என்று சொல்லி கண் கலங்குகிறாள்.....

பாடல்

ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் 
சேரி வரினு மார முயங்கார் 
ஏதி லாளர் சுடலை போலக் 
காணாக் கழிப மன்னே நாணட்டு 
நல்லறி விழந்த காமம் 
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. 

பொருள் 

ஓரூர் வாழினுஞ் = ஒரே ஊரில் வாழ்ந்தாலும் 

சேரி வாரார்  = நாம் வாழும் இந்த சேரிக்கு வாரார்

சேரி வரினும் = சேரிக்கு வந்தாலும் 

மார முயங்கார் = என்னை மார்போடு கட்டி அணைக்க மாட்டான்

ஏதி லாளர் = மற்றவர்களின்

சுடலை போலக் = சுடு காட்டைப் போல
 
காணாக் கழிப = காணமல் போய் விடுவான்

மன்னே

நாணட்டு = நாண் + அற்று = நாணம் அற்று

நல்லறி விழந்த காமம் = நல்ல அறிவை இழந்த காமம்

வில்லுமிழ் = வில்லு உமிழும் , வில்லில் இருந்து வெளிப்பட்ட

கணையிற் சென்று = கணை (அம்பு) போல சென்று

சேட் படவே. = தூரத்தில் செல்லுமே அது போல

சுடுகாட்டை யார் விரும்புவார்கள். கண்டாலும் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். சற்று வேகமாக போய் விடுவார்கள். அதிலும் மற்ற ஜாதி காரர்களின்  சுடு காடு என்றால் எவ்வளவு வெறுப்பு இருக்கும் ? அப்படி என் மேல்  வெறுப்பு கொள்கிறான் என்று கலங்குகிறாள்.

அவள் சோகத்தின், கண்ணீரின் ஈரம் காலம் கடந்து வந்தும் நம் நெஞ்சை தொடுகிறது அல்லவா ?




அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி

அபிராமி அந்தாதி - நலம் கொண்ட நாயகி 



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே 

பெண்.

அவளன்றி ஏது இந்த உலகம். அவளன்றி அன்பு ஏது, இனிமை ஏது, சுகம் ஏது ?

பெண்மை இயற்கைலேயே  அழகானது.

அவர்களின் குரல் அதை மிக சுகமானது. இனிமையானது.

அழகோடு அறிவும் சேர்ந்து விட்டால்  அதற்கு இணை ஏது ?

ஆண் இயற்கையிலேயே கொஞ்சம் முரடு. கரடு முரடான குரல். சண்டை பிடிக்கும் சுபாவம். வலிமையான உடல்.

பட்டர் அபிராமியை பார்க்கிறார்.

என்ன ஒரு பேரழகு. அவள் உடல் அழகை பார்த்து வியக்கிறார். அதற்கு மேல் அவளின் இனிய குரல். இனிமை என்றால் பனி போல சில்லென்று இருக்கும் இனிமை.

அவளின் அறிவோ - வேதங்களின் முடிவான அறிவு. கரை கண்ட அறிவு.

இத்தனையும் ஒன்றாக சேர்ந்த அவளை பார்க்கிறார்.

அவளுடைய கழுத்தில் ஒரு முத்து மாலை இருக்கிறது. அந்த மாலை அவளின் மார்பில் கிடந்து புரள்கிறது. அவளுடைய மார்புகள் இளமையானவை. வலிமையானவை. அவள் மூச்சு விடும் போது அவை நெருங்கி வருகின்றன. அந்த முத்து மாலை அவளின் மார்புகளுக்கு இடையே அகப்பட்டு இருக்கிறது. பின் இளகுகிறது.

சிவனின் வலிமையான மார்பை தாங்கும் மார்புகள் அவளுடையவை.

பட்டர்  உருகுகிறார்.

இடங் கொண்டு = நல்ல இடத்தில் இருந்து கொண்டு

விம்மி = விம்மி

இணை கொண்டு = இணையான இரண்டு மார்புகளின் இடையே 

இறுகி = அவை ஒன்று சேரும்போது இறுகி

இளகி = பின் அவை விலகும்போது இளகி

முத்து வடங் = முத்து மாலை

கொண்ட கொங்கை = கொண்ட மார்புகள்

மலை கொண்டு = மலை போன்ற

இறைவர் = சிவனின்

வலிய நெஞ்சை = வலிமையான நெஞ்சை

நடங் கொண்ட = உன் விருப்பப் படி நடனம் ஆட வைக்கும் 

கொள்கை நலம் = நல்ல எண்ணங்கள்

கொண்ட நாயகி = கொண்ட நாயகி

நல் அரவின் = நல்ல பாம்பின்

படம் கொண்ட = பாம்பின் படத்தை போன்ற

அல்குல் = அல்குல்

பனி மொழி = பனி போன்ற மொழி

வேதப் பரிபுரையே = வேதங்களை கால் சிலம்பாக கொண்டவளே அல்லது வேதங்களின் முடிவே

அவளின் அங்க அழகுகள் = மார்பு, அல்குல்
அவளின் குரல் இனிமை = பனி மொழி
அவளின் குணம் = நலம் கொண்ட கொள்கை
அவளின் அறிவு = வேதப் பரிபுரை

அபிராமி.


Saturday, December 28, 2013

இராமாயணம் - விளம்ப வேண்டுமோ ?

இராமாயணம் - விளம்ப வேண்டுமோ ?


வீடணன் சரண் அடைய வந்திருக்கிறான். அங்கிருந்த குரங்குகள் எல்லாம் அவனை சேர்க்கக் கூடாது, அவனை சிறை பிடிக்க வேண்டும் என்று கூறுகின்றன.

இராமன் மந்திர ஆலோசனை சபையை கூட்டுகிறான்.

சுக்ரீவன், அங்கதன், சம்பாதி எல்லோரும் விபீஷணனை சேர்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

அனுமன் அமைதியாக இருக்கிறான்.

இறுதியில் இராமன், அனுமனிடம் அவன் எண்ணம் என்ன என்று கேட்க்கிறான்.

அவன் என்ன சொன்னான் என்பதை விட எப்படி சொன்னான் என்று பார்ப்போம்.

நம் வீட்டிலோ, அலுவகலத்திலோ, நண்பர்கள் கூட்டத்திலோ நமக்கு எதிரான கருத்துகளை மற்றவர்கள் சொன்னால் நாம் என்ன செய்வோம் ?

முதலில் அவர்கள் மேல் கோபம் வரும் ... இப்படி முட்டாள்களாக இருக்கிறார்களே என்று  எரிச்சல் வரும்....நம் முறை வரும் போது அவர்கள் சொன்னதை  எதிர்த்து நம் கருத்தை வலுவாகக்  கூறுவோம்...அவர்கள் வருத்தப் படுவார்கள், வாதம் வலுக்கும், உணர்சிகள் உச்சம் எட்டும்..

அனுமன் மற்றவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் அதை எவ்வளவு பணிவாக, அன்போடு பண்போடு கூறுகிறான் என்று பார்ப்போம்....

"இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள். அறிவில் உயர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் அது  செய்யத் தக்கது அல்ல என்று கூறி  விட்டார்கள். அவர்கள் நல்லவர்கள். அறிந்து தெரிந்துதான் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மேலும் நான் எதுவும் கூற வேண்டுமா " என்று அனுமன்  ஆரம்பிக்கிறான்.

பாடல்

'எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர்,
அத்தனைவரும், ஒரு பொருளை, "அன்று" என,
உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்;
வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ?

பொருள்

'எத்தனை உளர் = எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
தெரிந்து = தெரிந்து
எண்ண  = எண்ணி, நான்றாக நினைத்து 
ஏய்ந்தவர் = அறிந்தவர்கள்
அத்தனைவரும் = அனைவரும்
ஒரு பொருளை = வீடணனை அடைகல்மாக ஏற்றுக் கொள்ளலாமா என்ற அந்த ஒரு பொருளை
"அன்று" என = தேவை இல்லை என்று
உத்தமர் = உத்தமர்கள்
அது தெரிந்து = அதன் நல்லது கெட்டதை தெரிந்து
உணர = உணர்து
ஓதினார் = கூறினார்கள்
வித்தக! = வித்தகனே
இனி, சில விளம்ப வேண்டுமோ? = இனி வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?

என்று மிக மிக பணிவுடன் ஆரம்பிக்கிறான்.

அவர்கள் சொன்ன கருத்துகள் எதுவும் அனுமனுக்கு ஏற்புடையது அல்ல. அதற்கான காரணங்களை பின்னால் ஒவ்வொன்றாக கூறுகிறான். கடைசியில் இராமன் அனுமனின் கருத்தை ஏற்றுக் கொள்கிறான்.

சொல்லின் செல்வன் எப்படி பேச வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறான்.

கற்றுக் கொள்வோமே...




Wednesday, December 25, 2013

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?


நான் இங்கே இருக்கேன்...என்னோட மனசு இருக்கே அது இப்படி ஊருக்கு முந்தி அவளைப் போய் பார்த்து என்ன செய்யப் போகுது...நான் என் கையால அவளை கட்டி பிடிக்கிற மாதிரி வருமா இந்த மனம் கட்டிப் பிடிப்பது ?

இன்னும் எவ்வளவு தூரம் போகணும் அவளை பார்க்க, ஆனா இந்த மனம் எங்கே கேக்குது...அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளை பார்க்க....



அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 
நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
சேய வம்ம விருமா மிடையே 
மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
கோட்புலி வழங்குஞ் சோலை 
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள்

அஞ்சுவது அறியாது = அஞ்சுவதை அறியாமல்

தமர் = தமர் என்றால் துணை, உறவு. இங்கு தலைவி

துணை = துணை

தழீஇய  = தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் மனம்

நம் பிரிந்தன்று = நம்மை விட்டு பிரிந்து சென்றது

ஆயினும் = ஆனாலும்

எஞ்சிய = மீதம் உள்ள (வெறும் மனம் மட்டும் போனால், மீதியுள்ள உடல்)


கை = கை

பிணி = பிணித்தல், தழுவதல்

நெகிழின் = நெகிழ்ந்தால்

அ ஃது எவன் = அதனால் என்ன பயன் ?

நன்றும் = நல்ல, இந்த இடத்தில் நிறைய

சேய = தூரம் உள்ள

இருவாம் இடையே  = எங்கள் இருவருக்கும் உள்ள இடை வெளி

மாக் கடல் = பெரிய கடல்

திரையின் = அலைகளின்
முழங்கி  = முழக்கம் போன்ற ஒலி

வலனேர்பு = வலமாக எழுந்து
 
கோட்புலி = கொடுமையான புலி

வழங்குஞ் சோலை = இருக்கும் கானகம்

எனைத்து = எத்தனை

என்று = என்று

எண்ணுகோ  = எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைப்பதற்கு

மலைவே = மலைபோல் தடையாக உள்ள

கொஞ்சம் கரடு முரடான பாடல் அமைப்பு தான். வார்த்தைகளை கொஞ்சம் இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம்  விளங்கும்.


தலைவன் வேலை முடித்து விட்டு ஊர் திரும்புகிறான். சண்டைக்கு போய் விட்டோ, அல்லது பொருள் சேர்த்துவிட்டோ ரொம்ப நாள் கழித்து வருகிறான்.

தேரில் மிக விரைவாக மனைவியைத் தேடி வருகிறான்.

வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள்.

அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது.

ஆபத்தான வழிதான்.

அவன் நினைத்துப் பார்க்கிறான்... அவள் எப்படி இருப்பாள் ? என்ன உடை உடுத்தி இருப்பாள் ? என்ன நகை போட்டு இருப்பாள் என்று அவன் அவன் கற்பனை விரிகிறது...அவளைப் பார்க்க அவன் மனம் அவனுக்கு முன்னே ஓடிவிட்டது.

கற்பனையில் அவளைக் கண்டு மகிழ்கிறான்...


அவனுக்கு புன் முறுவல் வருகிறது....

இந்த மனம் போய் என்ன செய்யப் போகிறது...இந்த மனதால் அவளை கட்டி பிடிக்க முடியுமா  ? அப்படியே கட்டி பிடித்தாலும் நான் என் கையால் அவளை அணைப்பது போல  வருமா என்று புன்முறுவல் பூக்கிறான்....


இரசனையான பாடல் ...

தலைவன் தலைவிக்கு இடையே உள்ள அன்பை வெளிப் படுத்தும் ஒரு இனிய பாடல்.

இப்படி பல பாடல்களைக் கொண்டது குறுந்தொகை....நேரமிருப்பின் மூல நூலைப் படித்துப் பாருங்கள்.




இராமாயணம் - காணாமலே காதல்

இராமாயணம் - காணாமலே காதல் 


வீடணன், இராமனிடம் சென்று அடைக்கலமாக விரும்புகிறான். இராமன் யார் என்றே அவனுக்குத் தெரியாது. இராமனைப் பற்றி கேள்விப் பட்டது கூட கிடையாது. இருந்தாலும் இராமன் மேல் அப்படி ஒரு அன்பு.

"நான் அவனை இதற்கு முன் பார்த்தது கிடையாது. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட கிடையாது. அவன் மேல் எனக்கு இவ்வளவு அன்பு பிறக்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என் மனம் உருகுகிறது. இந்த பிறவி என்ற நோய்க்கு அவன் பகைவன் போலும்" என்று வீடணன் உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.

பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டது இல்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம் கூட தெரியாது

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அவன்

புன் புறப் பிறவியின் = மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல. பிறவி என்ற பகையை அழித்து மீண்டும் பிறக்காமல் செய்வான்.

அரக்கர் குலத்தில் பிறந்தவன் வீடணன். இராமன் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது.

இருந்தாலும் அவன் மேல் அன்பு பிறக்கிறது.

ஏன் ?

அதற்கு காரணம் அவனுக்கும் தெரியவில்லை.

விநோதாமாய் இல்லை ?

இந்த அன்புக்கு காரணம் என்ன ? இந்த அன்பை அவனுக்குள் தோன்ற வைத்தது எது ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்....



Sunday, December 22, 2013

நன்னெறி - அறிவும் புலன்களும்

நன்னெறி - அறிவும் புலன்களும் 


ஐந்து புலன்களும் மனிதர்களை அலைக் கழிக்கும். ஆனால், அறிவுள்ளவர்களை அந்த ஐந்து புலன்களும் ஒன்றும் செய்யாது. அறிவில்லாதவர்கள்தான் அந்த புலன்கள் பாடாய் படுத்தும்.

சூறாவளி காற்று சிறு துரும்பை சுழற்றிப் போடும், ஆனால் கல் தூண் அசையாமல் நிற்கும்.

பாடல்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே 
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 

பொருள் 

பொய்ப்புலன்கள் = பொய்யான இன்பத்தை தரும் புலன்கள்

ஐந்து நோய் = ஐந்து புலன்களும் நோய் செய்யும் 

புல்லியர் பாலன்றியே = அறிவில்லாத புல்லியர்களுக்கு

மெய்ப்புலவர் தம்பால் = உண்மையான அறிவு உடையவர்களை

விளையாவாம் = அவை பற்றாது

துப்பிற் = ??

சுழன்று கொல்= சுழன்று அடிக்கும் காற்று

கல்தூணைச் = கல் தூணை

சூறா வளிபோய்ச் = சூறாவளி காற்று

சுழற்றும் சிறுபுன் துரும்பு = சுழற்றும் சிறிய துரும்பை