Friday, February 7, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அவனுக்கே இவ்வுடல் அர்ப்பணம் 



ஆண்டாள் தன் காதலைத் தொடர்கிறாள்.

வானத்தில் வாழும் தேவர்களுக்கு என்று வேள்வியில் பெய்த அவிர் பாகத்தை காட்டில் உள்ள நரி உண்பது எவ்வளவு சரியான செயல் இல்லையோ அது போல நாராயணனுக்கு என்று இருக்கும் இந்த உடலை வேறு மானிடர் தொடுவார்கள் என்று பேசப் பட்டால் கூட உயிர் வாழ மாட்டேன், ஏ காமதேவனே என்று காமதேவனிடம் கூறுகிறாள்.

பாடல்

வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து  கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

பொருள்

வானிடை = வானத்தில்
வாழுமவ் = வாழும் அந்த

வானவர்க்கு = தேவர்களுக்கு
மறையவர் = வேதம் ஓதுவோர்
வேள்வியில் = வேள்வியில், யாகத்தில்
வகுத்த அவி = இட்ட அவிர்ப் பாகத்தை

கானிடைத் = காட்டில்

திரிவதோர் = திரியும் ஒரு

நரி புகுந்து = நரி புகுந்து

கடப்பதும்  = காலால் தீண்டுவதும்

மோப்பதும் = மூக்கால் முகர்வதும்

செய்வதொப்ப = செய்வதைப் போன்றது

ஊனிடை = தன் உடம்பில்

யாழிசங் குத்தமர்க்கென்று = ஆழி, சங்கு என்று தரித்த உத்தமர்கு என்று

உன்னித்  = பொங்கி , பூரித்து

தெழுந்தவென் = எழுந்த என்

தட முலைகள் = பெரிய மார்புகள்

மானிட வர்க்கென்று = வேறு மனிதர்களுக்கு என்று

பேச்சுப்படில் = பேசப் பட்டால்

வாழகில் லேன் = வாழ மாட்டேன், உயிரை விட்டு விடுவேன்

கண்டாய் = நீ அறிந்து கொள்

மன்மதனே = மன்மதனே


நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக் கைகளால் என்னை தீண்டும் வண்ணம்


ஆண்டாளுக்கு கண்ணன் மேல் அவ்வளவு காதல்.

காதல் என்றால் அப்படி இப்படி இல்லை.

பெண்களுக்கு இயல்பாகவே நாணம் மிகுந்து இருக்கும். மனதில் உள்ளதை அவ்வளவு எளிதில் சொல்ல மாட்டார்கள். வெட்கம். நாணம்.

அதையும் மீறி, தங்கள்  காதலர்களிடம்,கணவனிடம் கொஞ்சம் கொஞ்சம்  சொல்வார்கள். மற்றவற்றை அவர்களே கண்டு பிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுவார்கள்.

ஆனால், ஆண்டாள் அதை எல்லாம் பார்க்கவில்லை. அவள் காதலில் அவள் உண்டு, அவன் உண்டு. வேறு யாரைப் பற்றியும் அவளுக்கு  .கவலை இல்லை.

தன் காதலை தேன் தமிழில் வடிக்கிறாள். கால காலத்திற்கும் அவள் காதலை பறை சாற்றிக் கொண்டிருக்கும் அவைகள்.

முதலில், தன் காதல் கை கூட காதல் கடவுளான மன்மதனை வேண்டுகிறாள்.

"மன்மதனே, உனக்கு காய் கறி , கரும்பு, நெல் எதை எல்லாம் படைத்து, உன்னை வணங்குகிறேன். உலகளந்த திரிவிக்கிரமன் என் வயிற்றையும், என் மென்மையான மார்புகளையும் தீண்டும் வரம் தருவாய்"

பாடல்



காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே



பொருள்

காயுடை = காய் கறிகள் 
நெல்லொடு = நெல்லும்
கரும்பமைத்துக் = கரும்பும் சேர்த்து
கட்டி யரிசி யவலமைத்து = கட்டி அரிசி, அவல் இவற்றைச் சேர்த்து
வாயுடை = நல்ல சொற்களை உடைய
மறையவர் = வேதம் ஓதுபவர்கள்
மந்திரத்தால் = சொன்ன மந்திரங்களால்
மன்மதனே = மன்மதனே
உன்னை வணங்குகின்றேன் = உன்னை வணங்குகின்றேன்
தேய = தேசத்தில். இந்த உலகில்
முன் னளந்தவன் = முன்னொரு காலத்தில் அளந்தவன்
திரி விக்கிரமன் = திருவிக்கிரமன்
திருக் கைகளாலென்னைத் = திரு கைகளால் என்னை
தீண்டும்வண்ணம் = தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் = ஒளி பொருந்திய என் வயிற்றையும்
மென் = மென்மையான
தட = பெரிய
முலையும் = மார்புகளையும்
தரணியில் = உலகில்
தலைப்புகழ் = சிறந்த புகழ்
தரக்கிற்றியே = தந்தருள்வாயாக

அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள் - பயம் போயிற்று. வெட்கம் போயிற்று. அவனே எல்லாம் என்று ஆனாள்.

ஒரு பெண் எல்லோரும் அறிய தன் காதலை, அதனால் வரும் ஆசைகளை வாய் விட்டுச்  சொல்வதென்றால் அவனை எந்த அளவுக்கு அவள் நேசித்திருக்க  வேண்டும் ?

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்

திருவாசகம் - மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்


சந்தேகம். பயம். ஆசை.

சந்தேகம் மனிதனை விடுவதே இல்லை. எது கிடைத்தாலும், இது அதுதானா, , இதையா நாம் தேடினோம், இதற்க்கா இந்த அலைச்சல்  என்ற சந்தேகம் எழுகிறது. நம்பிக்கையே கிடையாது. 

கிடைத்தது போய் விடுமோ ? இது நிலைக்காதோ ? யாரவது பறித்துக் கொண்டு போய் விடுவார்களோ ? என்ற பயம்.

இதை விட சிறப்பாக என்ன இருக்கும் ? அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும், எல்லாம் வேண்டும் என்று ஆசை , பேராசை.

இது சாதாரண பொருள்கள் , மனிதர்கள், அவர்களின் உறவுகள் இருந்து மட்டும் வருவது இல்லை....இறை அருள் கிடைத்தால் கூட இந்த பயமும், சந்தேகமும், ஆசையும் மனிதனை விடுவதில்லை.

மாணிக்க வாசகர் சொல்கிறார்.....

"உன் திருவடிகளை அடைந்த பின்னும், என் உடல் பொருள் ஆவி எல்லாம் உனக்காக தந்த பின்னும் நான் மெலிந்து கொண்டே இருக்கிறேன். அதற்காக என்னை கை விட்டு விடாதே. திரி புரங்களை எரித்தவன் நீ...."


பாடல்

பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

பொருள் 

பொலிகின்ற = ஒளிவிடும்

நின் தாள் =உன் திருவடிகளை

புகுதப்பெற்று = அடைந்த பின்னும்

ஆக்கையைப் போக்கப் பெற்று = உடல் என்பதே இல்லை என்ற ஆனா பின்

மெலிகின்ற என்னை = இன்னும் மெலிகின்ற என்னை. மெலிவு ஏன்? இது நிலைக்குமோ என்ற சந்தேகம், பயம் போன்ற உணர்வுகளால் மெலிந்து.  இறை அருளே ஆனாலும், வெளியில் இருந்து வரும் எதுவும் மனிதனை இட்டு நிரப்ப முடியாதுதான் போலிருக்கிறது.

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

அளி = வண்டு

தேர்= தேர்ந்து , ஆராய்ந்து

விளரி = ஒரு வித இசை

ஒலி நின்ற = இசை நிறைந்த

பூம் பொழில் = பூஞ்சோலைகள் உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

வலி நின்ற = வலிமை நிறைந்த

திண் = திண்மையான

சிலையால் = வில்லால்

எரித்தாய் = அழித்தாய்

புரம் = திரி புரங்களை

மாறுபட்டே = மாறுபாடு கொண்டு, பகை கொண்டு


Wednesday, February 5, 2014

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர்

திருவாசகம் - பொறுப்பர் அன்றே பெரியோர் 


சிலருக்கு நல்லது செய்தால் கூட அது நல்லது என்று தெரியாமல் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள்.

மருத்துவர் சொல்கிறார் ...உடற்பயிற்சி செய்யுங்கள், இனிப்பைத்  .தவிருங்கள் என்று. கேட்கிறோமா?

இல்லாத நோயெல்லாம் வாங்கிக் கொள்கிறோம்.

அதே போல, இறைவன் அருளை அள்ளித் அள்ளித் தருகிறான். அது வேண்டாம் என்று மறுத்து கண்டதன் பின்னே போகிறோம்.

நான் அப்படியே போனாலும், என்னை கை விட்டு விடாதே என்று இறைவனிடம்  கெஞ்சுகிறார்.

தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே. சிறியவர்கள் செய்த பிழை என்றாலும் பெரியவர்கள் பொறுப்பது இல்லையா.

மணிவாசகர் தன்னை நாய் என்று பல இடத்தில் தாழ்த்திச் சொல்லுவார்.

ஏன் நாய் என்று சொல்ல வேண்டும் ? வேறு ஏதாவது விலங்கை சொல்லலாமே ?

நாயிடம் ஒரு குணம் உண்டு.

வீட்டில் நன்றாக வளர்ப்பார்கள். அதை குளிப்பாட்டி, மருந்து பௌடர் போட்டு, வேளா வேளைக்கு உணவு தந்து பராமரிப்பார்கள். வீட்டில் யாரும் இல்லை என்றால், வெளியில் போய் வேறு எதையாவது தின்று விட்டு வரும்.

கெட்டதின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.

சட்டம், போலீஸ், நீதி மன்றம் என்று இல்லா விட்டால் நாமும் அப்படித்தான்  இருப்போம்.

நல்லதைத் தந்தாலும் அதை விட்டு விட்டு கெட்டதின் பின் போகும் புத்தி நாய் புத்தி.

பாடல்

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

பொருள் 

மறுத்தனன் யான் =வேண்டாம் என்று மறுத்தேன் யான்

உன் அருள் அறியாமையின் = உன்  அருளின் மகிமையை அறியாமல்

என் மணியே = என் கண்ணின் மணி போன்றவனே

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? = அதற்காக என்னை வெறுத்து விட்டு விடாதே

வினையின் தொகுதி = வினையின் மொத்த தொகுதிகளை . இந்தப் பிறவி மட்டும் அல்ல, முன் எத்தனையோ பிறவிகளில் செய்த வினைகளின் தொகுதி

ஒறுத்து = அறுத்து

எனை ஆண்டுகொள் = என்னை ஆண்டுகொள்

உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

பொறுப்பர் அன்றே பெரியோர = பெரியவர்கள் பொறுப்பார்கள் அல்லவா

சிறு நாய்கள் தம் பொய்யினையே? = சிறு நாய்கள் செய்யும் பிழைகளை



நாலடியார் - மலையில் ஆடும் மேகம் போல

நாலடியார் - மலையில்  ஆடும் மேகம் போல 


மேகம்.

அழகழாக தோன்றும். ஒன்று மயில் போல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே யானை போல் மாறும். சிறிது நேரத்தில் மான் போல மாறும்....இப்படி மாறி மாறி கடைசியில் பிரிந்து சிதறி காணாமல் போகும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான்....குழந்தை, சிறுவன்/சிறுமி, வாலிபம், நடு வயது, முதுமை, இறப்பு என்று மாறிக் கொண்டே இருக்கும்.

இளமை மாறிப் போகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இளமை நிலையானது அல்ல.

 இந்த உடம்பு நன்றாக உறுதியாக இருக்கும் போதே இந்த உடல் பெற்ற பயனை அடைந்து விட வேண்டும்.

அப்புறம் செய்யலாம், அப்புறம் படிக்கலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது...

யாருக்குத் தெரியும் அப்புறம் எப்புறம் வரும் என்று ?

பாடல்

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.


பொருள் 

யாக்கையை = உடலை

யாப்புடைத்தாப் = நன்றாக, உறுதியாக, ஒரு குறையும் இல்லாமல்

பெற்றவர் = பெற்றவர்கள் . தங்கள் முன் வினைப் பயனாக நல்ல உடலைப் பெற்றவர்கள்

தாம்பெற்ற = தாங்கள் பெற்ற

யாக்கையா லாய  = உடம்பால் பெறக் கூடிய

பயன்கொள்க = பயனை அடைய வேண்டும்

யாக்கை = உடம்பு

மலையாடு மஞ்சுபோல் = மலைமேல் ஆடும் மேகம் போல

தோன்றி = தோன்றி

மற் றாங்கே = மற்றபடி அங்கே

நிலையாது நீத்து விடும் = நிலையாக இல்லாமல் மறைந்து போகும்


Tuesday, February 4, 2014

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு

திருவாசகம் - இருதலைக் கொல்லி எறும்பு 


ஒரு மூங்கில் குழாய்.

அதன் நடுவில் உள்ள இரு எறும்பு.

குழாயின் இரு பக்கமும் நெருப்பு எரிகிறது. எறும்பு எங்கே போகும். ஒரு பக்கம் ஓடும். அங்கே சூடு  அதிகம் என்று மறு பக்கம் ஓடும். மாறி மாறி ஓடி முடிவில் நெருப்பில் மடிந்து போகும்.

நமக்கும் தான் எவ்வளவு ஆசை. கண்டதன் பின்னால் ஓடுகிறோம். பின் அது சுடுகிறதே என்று இன்னொரு பக்கம் ஓடுகிறோம். பின் அதுவும் சுடுகிறதே என்று  மறுபுறம்.

துன்பம் இல்லாத இன்பம் இல்லை. சூடு இல்லாத வெளிச்சம் இல்லை. வெளிச்சத்தை நோக்கி எறும்பு ஓடும். சூடு கண்டு பின் வாங்கும்.

 இது தான் என் வாழ்வின் இலட்சியம், இதை அடைந்து விட்டால் பின் வேறு எதுவும் வேண்டாம் என்று ஆசை ஆசையாக அடைந்த எத்தனை விஷயங்கள் பின் துன்பமாக மாறிப் போகின்றன.

மணிவாசகர் சொல்கிறார்....

"இருதலைக் கொள்ளி எறும்பு போல நான் இருக்கிறேன். உன்னைப் பிரிந்து தலை விரி கோலமாய் அலைகின்றேன். மூன்று உலகங்கலுக்கும் தலைவனே, என்னை கை விட்டு விடாதே. திரிசூலம் கையில் ஏந்தி பொலிபவனே"


பாடல்

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!


பொருள் 

இருதலைக்  கொள்ளியின் = இரண்டு பக்கமும் நெருப்பு கொண்ட கொள்ளியின்

உள் எறும்பு ஒத்து = உள்ளே அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போல

நினைப் பிரிந்த = உன்னைப் பிரிந்து

விரிதலையேனை = தலை விரி கோலமாக அலையும் என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

வியன் மூவுலகுக்கு = விரிந்த இந்த மூன்று உலகுக்கும்

ஒரு தலைவா = ஒரே தலைவனே

மன்னும்= நிலைத்த

உத்தர கோச மங்கைக்கு அரசே =  உத்தர கோச மங்கைக்கு அரசே

பொரு = போருக்கு

தலை = முன்னிற்கும்

மூவிலை வேல் = திரிசூலம்

வலன் ஏந்திப் பொலிபவனே! = வலக் கையில் ஏந்தி பொலிபவனே




இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்

இராமாயணம் - இறைவன் நம்மைத் தேடி வருவான்


இறைவனைத் தேடி அலையாதீர்கள். 

உங்களுக்கு அவனைத் தெரியாது. அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்ற விவரங்கள் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் எப்படி போவது என்ற வழி தெரியாது.

ஆனால், உங்களை அவனுக்குத்  தெரியும்.நீங்கள் யார், எங்கே இருகிறீர்கள், எப்படி இருகிறீர்கள் என்று அவன் அறிவான்.

அவனை உங்கள் இருப்பிடத்திற்கு வரவழைக்க ஒரு வழி இருக்கிறது.

நல்வினை.

நல்லது செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி வருவான்.

சுக்ரீவன் இருந்த இடத்திற்கு இராமன் வந்தான். சுக்ரீவன் இராமனைத் தேடித் போகவில்லை. அவன் வேண்டும் என்று கூட விரும்பவில்லை. இராமனை அடைய எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், இராமன் அவன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.

அதற்கு காரணம் என்ன ?

தீவினைகளை தவிர்த்து நல்லது செய்ததனால் என்று அவனே சொல்கிறான்.

பாடல்


ஆயது ஒர் அவதியின் கண்,
     அருக்கன் சேய், அரசை நோக்கி,
'தீவினை தீய நோற்றார் என்னின்
     யார்? செல்வ! நின்னை,
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல்
     ஆம் நலம் மிக்கோயை,
மேயினென்; விதியே நல்கின், மேவல்
     ஆகாது ஏன்'? என்றான்.

பொருள்

ஆயது = அந்த நேரத்தில்

ஒர் அவதியின் கண் = அந்த கூட்டத்தில்

அருக்கன் சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )

அரசை நோக்கி = அரசனாகிய இராமனை நோக்கி

'தீவினை  = தீய வினைகளை

தீய = தீய்ந்து போகும்படி

நோற்றார் = செய்தவர்கள்

என்னின் யார்?  = என்னை விட யார் இருக்கிறார்கள் நின்னை,

செல்வ! = செல்வனாகிய இராமனே

நாயகம் உலகுக்கு எல்லாம் = இந்த உலகுக்கே நாயகனாக. உலக நாயகன். இன்று யார் யாருக்கோ இந்த பட்டத்தை தருகிறார்கள். இராமனுக்கு கம்பன் தந்த பட்டம் "உலக நாயகன்"

என்னல் ஆம் = உன்னை நினைக்கலாம்

 நலம் மிக்கோயை = நலம் மிகுந்த உன்னை

மேயினென் = அடைந்தேன்

விதியே நல்கின் = இதை எனக்கு தந்தது விதியே

மேவல் ஆகாது ஏன்'? என்றான். = அடைய முடியாதது என்ன இருக்கிறது.

தீவினைகளை தவிர்த்தால் நல்லது நடக்கும் என்பது விதி. 

அதை மாற்ற முடியாது. 

இறைவன் நம்மைத் தேடி வருவதாவது ? இராமனுக்கு குடும்பச் சிக்கல். அதனால் வந்தான். வேறு எந்த கடவுளாவது அப்படி வந்து இருக்கிறார்களா ?


நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

என்பார் அருணகிரி.

நீலச் சிகண்டியில் (மயில்) ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன்  வருவான் என்கிறார்.

அவன் மட்டும் அல்ல , கூடவே மனைவியையும் அழைத்துக் கொண்டு வருவானாம். 

எப்ப வருவான் ?

எந்த நேரத்திலும் வருவான். எல்லா நேரத்திலும் வருவான். 

அதனால், இறைவனை நீங்கள் தேடி அலையாதீர்கள். நல்லதே செய்யுங்கள். அவன் உங்களைத் தேடி  நீங்கள் இருக்கும் இடம் வருவான்.