Thursday, May 1, 2014

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?

நீத்தல் விண்ணப்பம் - சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?  


குழந்தையோடு ஒரு கோவிலுக்கோ, திருவிழாவுக்கோ, சினிமாவுக்கோ போகிறோம். நடுவில் பிள்ளையை காணவில்லை.

எப்படி பதறிப் போவோம். எப்படி தேடுவோம் ? எங்கெல்லாம் தேடுவோம் ? எதிரில் பார்க்கும் எல்லோரையும் கேட்போம் "இந்த மாதிரி ஒரு பிள்ளையை பார்த்தீர்களா " என்று. மனம் பதறும், பயம் கவ்விக் கொள்ளும், வயறு என்னோவோ செய்யும். என்னவெல்லாமோ நினைப்போம்....

அப்படியா இறைவனைத்  தேடுகிறோம் ?

நாள் கிழமை என்றால் கோவிலுக்குப் போவது, வீட்டில் விளக்கு ஏற்றுவது, பலகாரங்கள் பண்ணி உண்பது, அப்பப்ப சில பல பாடல்களை பாடுவது....

இதுவா தேடல் ?

தேடலில் ஆழம் இல்லை, அவசரம் இல்லை, நம்பிக்கை இல்லை. பின் எப்படி கிடைக்கும்.

மணி வாசகர் சொல்கிறார்.....

உன்னைப் பற்றி பாட மாட்டேன், உன்னை பணிய மாட்டேன், எனக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் உன்னை காண முடியாமல் இந்த ஊன் உடலை விட மாட்டேன், உன் பெருமைகளை நினைத்து வியக்க மாட்டேன், நீ எங்கே அலறித் தேட மாட்டேன், சிவன் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டார்கள் என்று ஓடி சென்று அறிய முயல மாட்டேன், உள்ளம் உருக மாட்டேன், நின்று உழல்கிறேனே என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; `சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.


பொருள்

பாடிற்றிலேன் = உன்னைப் பற்றி பாட மாட்டேன்

பணியேன் = உன்னை பணிய மாட்டேன்

மணி = மணி போன்ற

நீ = நீ

ஒளித்தாய்க்குப் = எனக்கு அகப்படாமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்

பச்சூன் = பசிய ஊன் (ஊன் உடம்பு)

வீடிற்றிலேனை = விட மாட்டேன்

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா

வியந்து = உன் பெருமைகளை வியந்து

ஆங்கு = அங்கு

அலறித் = அலறி

தேடிற்றிலேன் = தேட மாட்டேன்

`சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று = செய்வான் எங்கே இருக்கிறான், யார் அவனைக் கண்டவர்கள் என்று

ஓடிற்றிலேன்; = ஓடிச் சென்று அறிய முயல மாட்டேன்

கிடந்து உள் உருகேன் = உள்ளம் உருக மாட்டேன்

நின்று உழைத்தனனே = கிடந்து உழல்கிறேனே

ஆர்வத்தோடு, ஆழத்தோடு, அவசரமாகத் தேடுங்கள்....

தேடுங்கள் கண்டடைவீர்கள்


Tuesday, April 29, 2014

கம்ப இராமாயணம் - தழுவிய கைகள்

கம்ப இராமாயணம் - தழுவிய கைகள் 


போரில் அடிபட்டு இறந்து கிடக்கும் இராவணன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

இராவணா, யாரையெல்லாம் தழுவிய கைகள் உன்னுடையவை ....

போர்மகளை , கலை மகளை, புகழ் மகளை, சீர் மகளை, திருமகளை என்று எல்லோரையும் தழுவினாய். இது எல்லாம்  போதாது என்று கற்பின் கனலியான சீதையை தழுவ நினைத்தாய். அதனால் உயிரைக் கொடுத்தது மட்டும் அல்ல, பழியும் கொண்டாய். கடைசியில் இப்போது மண்ணைத் (பார் மகழை ) தழுவி கிடக்கிறாயே

என்று புலம்புகிறான்.


பாடல்

'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர, 
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின் 
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப் 
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத் மார்பால்?' 


பொருள்


போர்மகளை = போர் மகளை
கலைமகளை = கலை மகளை
புகழ்மகளை = புகழ் மகளை
தழுவிய கை  = தழுவிய உன் கைகள்
பொறாமை கூர = பொறாமை கொள்ளும் படி இருக்க

சீர்மகளை = செல்வ மகள்
திருமகளை = திருமகளை

தேவர்க்கும்  = தேவர்களுக்கும்
தெரிவு அரிய = அறிய முடியாத
தெய்வக் கற்பின் = தெய்வீக கற்பு நெறி கொண்ட 
பேர்மகளை = பேர் கொண்ட சீதையை

தழுவுவான் = தழுவ நினைத்து

உயிர் கொடுத்து = அதில் உயிரைக் கொடுத்து

பழி கொண்ட பித்தா! = பழி கொண்ட பித்தனே

பின்னைப் = பின்னால் 

பார்மகளைத் தழுவினையோ = நில மகளை தழுவி கிடக்கிறாயோ

திசை யானைப் = எட்டுத் திசைகளை காக்கும் யானைகளை
பணை இறுத்த = தந்தங்களை உடைத்த
பணைத் மார்பால்?' = பெரிய மார்பால்
 
உயிர் கொடுத்தும் புகழ் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். 

இவன் உயிர் கொடுத்து பழி கொண்டதால் அவனை பித்தன் என்று வீடணன் அழைத்தான். 

கல்வி, செல்வம்,  வீரம் என்று எல்லாம் இருந்தும் சீதையைத் தழுவ நினைத்து  பழி சுமந்து உயிர் கொடுத்தான். 

பழி சுமத்தும் பாடல்தான். 

சோகமான பாடல் தான். 

இருந்தும் கம்பனின் கவிச் சுவை எப்படி இருக்கிறது பாருங்கள். 

என்ன ஒரு கற்பனை. என்ன ஒரு சொல் ஆளுமை !


Friday, April 25, 2014

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை

நீத்தல் விண்ணப்பம் - கண் நெருப்பில் விழுவேனை 



பெண்களின் கண்கள் நெருப்பு போன்றவை. பார்த்ததும் பற்றிக் கொள்ளும். ஆணின் மனம் மெழுகு போல், வெண்ணை போல் உருகும் அந்த கண் எனும் நெருப்பில்.

உருகும் மெழுகு பொம்மைக்கு தன்னை எப்படி காப்பாற்றிக்  கொள்வது என்று தெரியாது. அது போல மணி வாசகர் இருக்கிறார்.

நான் உருகுகிறேன், என்னை காப்பாற்று என்று இறைவனிடம் வேண்டுகிறார்.அது  மட்டும் அல்ல, ஒரு முறை காப்பாற்றி விட்டு விட்டால் மீண்டும் அங்கு தான் போவேன். என் குணம் அப்படி. எனவே, நான் அவ்வாறு போகாமால் இருக்க என்னை உன் அடியவர்கள் மத்தியில் விட்டு விடு. அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்று  கூறுகிறார்.

அவராலேயே  முடியவில்லை.

பாடல்

முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல்முழுகும்
விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்
தொழுதுசெல் வானத் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய் வேனை விடேலுடை யாய்உன்னைப் பாடுவனே.


பொருள்

முழு = முழுவதும்

அயில் = கூர்மையான

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

என்பார் அருணகிரி நாதர்.

வேற் = வேல் போன்ற

கண்ணியரென்னும் = கண்களை கொண்ட பெண்கள் என்னும்

மூரித் = மூண்டு எழும்

தழல் = தீயில்

முழுகும் = முழுகும்

விழுதனை யேனை = வெண்ணை போன்றவனை

விடுதி கண் டாய் = விட்டு விடாதே

நின் = உன்னுடைய

வெறி மலர்த் தாள் = மணம் பொருந்திய மலர் போன்ற திருவடிகளில்

தொழுது = வணங்கி

செல் = செல்கின்ற

வானத் தொழும்பரிற் = வானத்தில் உள்ள அடியவர்கள் 

கூட்டிடு = என்னை சேர்த்து விடு 

சோத்து = வணங்கி

தெம்பிரான் =  எம்பிரான்

பழுது = குற்றங்கள்

செய் வேனை = செய்கின்ற என்னை

விடேலுடை யாய் = விடாமல் காக்கின்றவனே

உன்னைப் பாடுவனே = உன்னை நான் பாடுவேனே

மண்ணாசையும், பொன்னாசையும் விட்டு விடும்.

பெண்ணாசை விடாது  போலிருக்கிறது.

ஆண்டிகளையும் ஆட்டிவிக்கிறது.

துறவிகளையும் துரத்திப்  பிடிக்கிறது.

ஐம்புலன்களுக்கும் இன்பம் தருவது பெண் என்று வள்ளுவரும் ஜொள்ளி இருக்கிறார்.


Thursday, April 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி 


காமம் சுடும்.

எல்லா ஆசையும் சுடும். ஆசைகள் மனிதனை ஆட்டுவிக்கும்.  மனத்திலும்,உடலிலும் சூட்டினை ஏற்றும்.

பெண்ணின் இதழ்கள் எவ்வளவு மென்மையானது. இனிமையானது. அழகானது.  சுவையானது.

அது முதலையின் வாயைப் போலத் தெரிகிறது மாணிக்க வாசகருக்கு. பிடித்தால்  விடாது. உயிரை வாங்கிவிடும் என்பதால்.

பயப்படுகிறார்.

உலகிலேயே பெரிய சுமை எது ?

இந்த உடல் தான்.  இதை தூக்கிக் கொண்டு அலைய வேண்டி  இருக்கிறது. ஒரு நிமிடம் இறக்கி வைக்க முடியுமா ?

இதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொண்டு இருப்பது. என்னால் முடியவில்லை என்கிறார்  மணிவாசகர்.

பாடல்


முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே.


பொருள்

முதலைச் = முதலை போல்

செவ் வாய்ச்சியர் = சிவந்த வாயை கொண்ட பெண்களின்

வேட்கை = ஆசை என்ற

வெந் நீரிற் = வெந்நீரில் 

கடிப்பமூழ்கி = ஆழ்ந்து மூழ்கி

விதலைச் செய் வேனை  = நடுக்கம் கொண்ட என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விடக்கு  ஊன் மிடைந்த = மாமிச நாற்றம் கொண்ட

சிதலைச் = நோய்

செய் காயம் = உண்டாக்கும், அல்லது இடமான இந்த உடலை

பொறேன் = பொறுத்துக் கொண்டு இருக்க  மாட்டேன். பொறுக்க முடியவில்லை 

சிவனே = சிவனே 

முறை யோ முறையோ = இது சரிதானா, இது சரிதானா

திதலைச் செய் = தேமல் படர்ந்த 

பூண் முலை = ஆபரணம் அணிந்த மார்பை கொண்ட

மங்கை பங்கா = மங்கையை பாகமாகக் கொண்டவனே

என் சிவகதியே = என் சிவகதியே



Wednesday, April 23, 2014

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய்

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய் 


போரில் இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து அழுகிறான் வீடணன்.

சீதை மேல் கொண்ட காதல் எவ்வளவு பெரிய இராவணனை எவ்வளவு கீழிறங்கி வர வைத்து சாதாரண ஆளாக ஆக்கி விட்டது. கடைசியில் ஒன்றும் இல்லாமால் வெறும் போர்க்  களத் தரையில் கிடக்கிறான்.

காதலுக்கு அவன் கொடுத்த விலை அது.

வீடணன் ஏதேதோ நினைக்கிறான்.

இராவணன் ஒரு முறை சூர்பனகையின் கணவனை ஒரு போரில் கொன்று விட்டான். அதற்கு பழி தீர்க்கத்தான் சூர்பனகை சீதை மேல் காதலை இராவணனிடம் ஊட்டி, இராமனின் பகையைத்  ,தேடித் தந்து, இராமன் இராவணனை கொல்லும்படி செய்தாளோ என்று நினைக்கிறான் வீடணன். சூர்பனகை பழி தீர்த்துக் கொண்டாள் என்று நினைக்கிறான். உன்னை பார்க்க எல்லோரும் அஞ்சி நடுங்குவார்களே. இன்று நீ யார் முகத்தை பார்க்கிறாய் என்று அவலத்தின் உச்சியில் நின்று புலம்புகிறான் வீடணன்.


பாடல்

''கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்'' என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, 

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! 

நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு 

எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 



பொருள்


''கொல்லாத மைத்துனனைக் = கொல்லத் தகாத மைத்துனனை 

 கொன்றாய்''  = (இராவணா நீ ) கொன்றாய்

என்று = என்று

அது குறித்துக் = அதை மனதில் குறி கொண்டு

கொடுமை சூழ்ந்து = கொடுமை மனதில் சூழ

பல்லாலே = தன்னுடைய பெரிய பற்களால் 

இதழ் அதுக்கும் = இதழை கடிக்கும் (கோபத்தில் )

கொடும் பாவி = கொடுமையான பாவியான சூர்பனகை

நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! = பாரமான நீண்ட பழியைத் தீர்த்துக் கொண்டாளோ ?


நல்லாரும் = நல்லவர்களும்

தீயாரும் = தீயவர்களும்

நரகத்தார் = நரகத்தில் உள்ளவர்களும்

துறக்கத்தார் = சொர்க்கத்தில் இருப்பவர்களும்

நம்பி! = சகோதரனே

நம்மோடு எல்லாரும் பகைஞரே; = நமக்கு எல்லோரும் பகைவர்களே

யார் முகத்தே விழிக்கின்றாய்? = இன்று நீ யார் முகத்தில் விழிப்பாய்

எளியை ஆனாய்! = எவ்வளவு பெரிய ஆளாக இருந்து இன்று எவ்வளவு சாதாரண ஆளாக   மாறி விட்டாய்

Tuesday, April 22, 2014

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?



வீடணன் புலம்பல்.

இராவணன் போரில் அடிபட்டு இறந்து  கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

"நீ வீரர்கள் சென்று அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ? உன் பாட்டன் பிரமனின் உலகம் அடைந்தாயோ ?  கைலாயம் அடைந்தாயோ ? உன் உயிரை இப்படி தைரியமாக யார் கொண்டு சென்று இருப்பார்? அது எல்லாம் இருக்கட்டும், இதுவரை உன்னிடம் ஆடிய மன்மதன் இனி ஓய்வு கொள்வானா ? உன்னை  எரித்த சந்திரனும் இனி குளிர்வானா "

என்று புலம்புகிறான்.

மன்மதன் இராவணனோடு விளையாடினானாம். அந்த விளையாட்டு நின்று போய்விட்டதா என்று கேட்கிறான் வீடணன்.

காதல், எவ்வளவு பெரிய ஆளை எங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

ஆச்சரியம்.

பாடல்

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன் 
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 

பொருள்

வீர நாடு உற்றாயோ? = வீரர்கள் அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ?

விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? = எல்லா      உயிர்களையும் படைத்த, அவைகளின் முன்பே தோன்றிய பிரமனின் , உன் பாட்டனின் நாட்டை அடைந்தாயோ ?

பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? = பிறை சூடும் சிவனின் கைலாயம் அடைந்தாயோ ?

ஆர், அணா! = யார், அண்ணா ?

 உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? = உன் உயிரை அஞ்சாமல் கொண்டு சென்றது

அது எலாம் நிற்க = அது ஒரு புறம் நிற்கட்டும்

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? = மன்மதன் உன்னிடம் ஆடிய ஆட்டம் முடித்தானா ?

குளிர்ந்தானோ, மதியம் என்பான்? = இத்தனை நாள் உன்னை எரித்துக் கொண்டிருந்த  சந்திரன் என்பவன் இனி குளிர்வானா ?


Monday, April 21, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


வாழ்க்கைக்கு சிறந்த துணைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர்  சொல்லுகிறார்.

முதலாவது, இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த பண்புகளுடன் இருக்க வேண்டும்.  அது என்ன இல்லற வாழ்க்கைக்கு தகுந்த பண்புகள் ?

பரிமேல் அழகர் சொல்கிறார் ....


நல்ல குணங்கள் :  துறவிகளை பாதுகாத்தலும் மற்றும் போற்றுதலும், விருந்தினர்களை உபசரித்தலும் ,  ஏழைகள் மேல் அருளுடமையும் முதலாயின.

நல்ல செயல்களாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், தொழில் வன்மையும், சமுதாயத்தோடு ஒத்து வாழ்தலும் முதலாயின.

இரண்டாவது, கணவனின் வருவாய்க்குத் தக்கபடி வாழ்கை நடத்துதல்.


பாடல்

மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.

பொருள்

மனைத் தக்க = வீட்டிற்கு வேண்டிய

மாண்பு உடையள் ஆகி = மாண்புகளை கொண்டு

தற் கொண்டான் = தன்னைக் கொண்டவனின்

வளத்தக்காள் = வளத்திற்குள் வாழ்பவள்

வாழ்க்கைத்துணை = வாழ்க்கைத் துணையாவாள்

என்ன தெரிகிறது ?

அந்தக்  காலத்தில் வீட்டுச் செலவை பார்த்துக் கொண்டது மனைவிதான்.  கணவனின்  வருமானத்திற்குள் செலவு செய்பவள் நல்ல மனைவி.

அதே போல் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மனைவிதான்.

துறவிகளைப் போற்றுவதும், ஏழைகளுக்கு உதவுவதும் அவள் தான்.

மொத்தத்தில் வீட்டை முழுவதும் ஏற்று நடுத்துபவள் அவளாகவே இருந்திருக்கிறாள்.

திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் போய் , வீட்டை வாங்கு, காரை வாங்கு என்று  வருமானத்திற்கு அதிகமாக செலவை அதிகரிப்பவள் அல்ல நல்ல துணை  என்று வள்ளுவர் சொல்லுகிறார்.