Tuesday, August 12, 2014

சிவ புராணம் - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

சிவ புராணம் - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

உணவு விடுதிக்குப் போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

அயல் நாடுகளுக்குப் போக வேண்டும் என்றால் மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சி படிக்கும் போது வருகிறதா ? அதுவும் இலக்கியங்களை படிக்கும்போது வருகிறதா. பக்தி இலக்கியங்களை படிக்கும் போது வருகிறதா ? ஏதோ கடனுக்கு, சொல்ல வேண்டுமே என்று மனப்பாடம் செய்து ஒப்பித்து விட்டு போய் விடுகிறோம்.

மாணிக்க வாசகர் சொல்கிறார்

"சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை".

சிவ புராணத்தை சொல்லும் போது அவருக்கு சிந்தை மகிழ்கிறதாம்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

இறைவனை வணங்கவும் அவன் அருள் வேண்டும். எல்லோராலுமா முடிகிறது. எத்தனை தடைகள், எத்தனை சந்தேகங்கள்.

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன்றேன் நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

முதலில் அம்மா...அப்புறம் மனைவி, அப்புறம் பிள்ளைகள் என்று ஆயிரம் தடைகள் இறைவனை அடைய.

உன்னை அடைய, எனக்குத்தான் ஆயிரம் தடைகள். என்னை அடைய உனக்கு என்ன தடை என்று புலம்புகிறார் இராமலிங்க அடிகள்.

இறைவனுக்கு ஒரு தடையும் இல்லை, நம்மை ஆட்கொள்ள.

எனவே, மணிவாசகர் சொல்கிறார், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

இறைவனை வணங்கி அருள் பெற்றவர்கள் கூட, பின்னாளில் அது ஏதோ தாங்களே  செய்தது போல ஆணவம்  கொள்கிறார்கள்.

அரக்கர்கள் கதை எல்லாம் அதுதான். தவம் செய்து, அருள் பெற்று, அதனால் ஆணவம் கொண்டு, அறம் அல்லாதன செய்து மாண்டு போவார்கள். நாம் தவம் செய்வது கூட அவன் அருளாலே என்ற எண்ணம் இல்லாதது தான் ஆணவத்திற்கு காரணம்.

எனக்கு என்ன தெரியும். அவன் அருள்  செய்தான், அதனால் நான் அவனை வணங்கினேன் என்று பணிவோடு சொல்கிறார் மணிவாசகர்.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் இனி யான்" - முந்தை என்றால் முற்பிறவி கூட அல்ல, இதற்கு முன்னால் செய்த வினைகள் எத்தனையோ. அவை அனைத்தும் ஓய இந்த சிவ புராணத்தை உரைப்பேன் என்கிறான்.

அந்த வினை முழுவதும் ஓயும் வரை உரைக்க வேண்டும்.

செய்த வினைகள் நம்மை விட்டு போகுமா ?

வினை போவதாவது ? ஓடும் என்கிறார் அருணகிரி நாதர்

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

 பாடல்


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பனியான்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழிலிறைஞ்சி

பொருள்

சிவனவனென் = சிவன் அவன் என் 

சிந்தையுள் நின்ற அதனால் = என்னுடைய சிந்தனையில் நின்ற அதனால்

அவனரு ளாலே = அவனுடைய அருளாலே

அவன்தாள் வணங்கிச் = அவனுடைய திருவடிகளை வணங்கி

சிந்தை மகிழச் = மனம் மகிழ

சிவபுரா ணந்தன்னை = சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் = முன்பு செய்த வினைகள் அனைத்தும்

ஓய வுரைப்பனியான் = ஓயும் படி உரைப்பேன் நான்

கண்ணுதலான் றன் = கண் + நுதலான் + தன்  = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவன்

கருணைக் கண்காட்ட வந்தெய்தி = கருணை என்ற கண்ணை காட்ட வந்து எய்தி

எண்ணுதற் கெட்டா = எண்ணுவதற்கு எட்டா. நினைத்து கூட பார்க்க முடியாத 

எழிலார் கழிலிறைஞ்சி = அழகான கழல் அணிந்த அந்த திருவடிகளை வேண்டி ....



Sunday, August 10, 2014

கம்ப இராமாயணம் - உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.

கம்ப இராமாயணம் - உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.


இந்திரஜித் போரில் இறந்ததை இராவணனிடம் தூதுவர்கள்  சொன்னார்கள். 

இராவணனின் மனநிலையை கம்பர்  காட்டுகிறார்.

ஒரு புறம் கோபம். மறு புறம் மகன் மேல் பொங்கும் காதல்.  இன்னொரு புறம் அவனை இழந்த சோகம் என்று இராவணன் தவிக்கிறான். 

 பாடல் 

திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரிபுரை கண்களும்;
உருகு செம்பு என ஓடியது ஊற்றும்நீர்.


பொருள்

திருகு வெஞ்சினத்  = திருகு என்றால் முறுக்கு,  கோணல், மாறுபாடு என்று பொருள். திருகு வெம் சினம் என்றால் தடம் புரண்ட கோபம். மாறுபட்ட

தீநிகர் சீற்றமும் = தீயைப் போல சீற்றமும்

பெருகு காதலும் = மகன் மேல் பெருகும் காதலும்

துன்பும் = அவன் இறந்த செய்தி கேட்ட துன்பமும் 

பிறழ்ந்திட = மாற்றிப் போட

இருபது என்னும் எரிபுரை கண்களும் = இருபது என்ற தீயை  உமிழ்கின்ற கண்களும்

உருகு செம்பு என ஓடியது = செம்பு என்ற உலோகத்தை உருக்கி விட்டது போல ஓடியது

 ஊற்றும்நீர் = கண்களில் இருந்து ஊற்றுப் போல பொங்கி வரும் கண்ணீர்

ஊற்று நீர் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அது போல, அவன் கண்ணீர் வந்தது. கண்கள் சிவந்து, உடல் கொதித்ததால் அது  உருகி ஓடும் செம்பைப் போல ஆனது.

சிவ புராணம் - இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

சிவ புராணம் - இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க



நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

இது சிவ புராணத்தின் தொடக்கம். இது பற்றி ஏற்கனவே நாம் சிந்தித்து இருக்கிறோம். இருந்தும் ஒரு வரி விட்டுப் போய் விட்டது.


இறைவன் எங்கு இருக்கிறான் ?

கோவிலில் இருக்கிறானா ? நமது பூஜை அறையில் இருக்கிறானா ? இமய மலையில் இருக்கிறானா ? எங்கு இருக்கிறான் ?

அவன் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவனை , அவன் இருக்கும் இடத்தில் சென்று பார்த்து விட்டு வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?

மாணிக்க வாசகர் இறைவன் இருக்கும் இடத்தை உறுதியாக சொல்கிறார்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

ஒரு இமைப் பொழுது கூட பக்தர்களின், அடியவர்களின் மனதை விட்டு நீங்க மாட்டான் அவன். அடியவர்களின் மனதில் ஆண்டவன் எப்போதும் குடி இருப்பான்.

இதையே திருமூலர் சொல்லுவார் ....

படமாட பகவர்க்கொன்று ஈயில்
நடமாட நம்பர்க்கொன்று ஆகா
நடமாட நம்பர்க்கொன்று ஈயில்
படமாட பகவர்க்கு அதாமே.

இறைவனுக்கு என்று ஒன்று செய்தால் அது அடியவர்களுக்கு வந்து சேராது. ஆனால்  அவன் அடியவர்களுக்கு என்று ஒன்று செய்தால் அது இறைவனை சென்று அடையும். 

படமாட = படம் + ஆட = பாம்பு படம் எடுத்து ஆடும்

பகவர்க்கொன்று ஈயில் = பகவானுக்கு ஒன்று தந்தால்

நடமாட = நடமாடும்

நம்பர்க்கொன்று ஆகா = நண்பர்களுக்கு (அடியவர்களுக்கு ) ஒன்றும் ஆகாது

நடமாட நம்பர்க்கொன்று ஈயில் = நடமாடும் அடியவர்களுக்கு ஒன்று தந்தால்

படமாட பகவர்க்கு அதாமே = அது பாம்பு படம் எடுத்து ஆடும் பகவானுக்கு சென்று அடையும்.

அடியார்கள் மனதில் ஆண்டவன் இருப்பான்.

இதையே ஔவையாரும் , தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்றார்.

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்றால் என்ன அர்த்தம். 

எதை செய்தாலும் இறை தொண்டாகவே நினைக்கிறார், யாரைப் பார்த்தாலும் இறைவனையே  பார்க்கிறார்....அணித்திலும் இறைவனே நீக்கமற நிறைந்து இருப்பதால் , அவனன்றி வேறு எதுவும் இல்லாததால் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்  என்றார். 


அவர்கள், உலகம் அனைத்தையும் ஒன்றாகக் கண்டவர்கள். வேறுபாடுகளை கடந்தவர்கள். 

அப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த பூமி இது. அவர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள்  இவை. 

அள்ளிச் செல்லுங்கள். 


Friday, August 8, 2014

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 2

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 2 


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! 15 

பொருள்

ஈசன் அடிபோற்றி = ஈசனின் திருவடிகள் போற்றி

எந்தை அடிபோற்றி = என் தந்தையின் அடிகள் போற்றி

தேசன் அடிபோற்றி = ஒளி வடிவானவனின் அடி போற்றி

 சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி = அன்பில் நின்ற தூயவனின் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி =  பிறப்பு என்ற மாயத்தை அறுக்கும் மன்னவனின் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி = சிறந்த திருப் பெருந்துரையுள் உள்ள நம்முடைய தேவனின் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி = தெவிட்டாத இன்பம் அருளும் மலை போன்றவனே போற்றி

சிவனைப் போற்றி  பாடுகிறார். இதில் வேறு என்ன இருக்கிறது. மேலே செல்வோம்  என்று அவசரப் படக் கூடாது. 

மணிவாசகரின் தமிழ் அவ்வளவு எளிய தமிழ். கவிதை நாவில்   கற்கண்டாய் கரையும்.  எப்போது வாயில் போட்டோம், எப்போது கரைந்தது , எப்போது உள்ளே  சென்றது என்று தெரியாது.

வாசித்துக் கொண்டே மேலே சென்று விடுவோம், அதன் ஆழ்ந்த அர்த்தங்களை  அறியாமலேயே.

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

----------------------

எத்தனை போற்றி சொல்கிறார் ?


  1. ஈசன் அடிபோற்றி 
  2. எந்தை அடிபோற்றி 
  3. தேசன் அடிபோற்றி 
  4. சிவன் சேவடி போற்றி 
  5. நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
  6. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
  7. சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  
  8. ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
மொத்தம் எட்டு போற்றி சொல்கிறார்.

அது என்ன எட்டு கணக்கு ? ஒரு ஐந்து, அல்லது பத்து சொல்லி இருக்கலாம். அது என்ன எட்டு ?

அது அப்படி  இருக்கட்டும்.

இறைவணக்கம் சொல்ல வந்த வள்ளுவர்

கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.


கோளில் பொறியில் குணம் இலவே எண் குணத்தான் 
தாளை வணங்காத் தலை 

எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்;
கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம்.

அதாவது, கண் இருக்கிறது, ஆனால் இல்லை, காது இருக்கிறது ஆனால் கேட்காது என்றால் எப்படி இருக்குமோ அது போல எட்டு குணங்களை உடைய இறைவனை வணங்காத தலையும்  என்கிறார். அப்படிப் பட்ட தலைகள் இருந்தும் ஒரு பயனும் இல்லை. காணாத கண்ணும், கேளாத செவியும் போல, இறைவனை வணங்காத தலையும்.

எது என்ன எட்டு குணம் ?

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார்

எண்குணங்களாவன:


  1. தன்வயத்தன் ஆதல். அதாவது தனக்கு மேல் ஒருவன் இல்லாத நிலை ,
  2. தூய உடம்பினன் ஆதல், 
  3. இயற்கை உணர்வினன் ஆதல், 
  4. முற்றும் உணர்தல், 
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், 
  6. பேரருள் உடைமை, 
  7. முடிவு இல் ஆற்றல் உடைமை, 
  8. வரம்பு இல் இன்பம் உடைமை 


இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது.

சரி, இதற்கும் சிவ புராணத்தில் வரும் எட்டு போற்றிகளுக்கும் என்ன தொடர்பு ?



  1. ஈசன் என்றால்  அரசன், தலைவன்.
  2. எந்தை என்றதனால் அருள் உடையவன். 
  3. தேசன் என்றதனால் தூய உடம்பைக் கொண்டவன்  , 
  4. சிவன் என்றதனால் இயற்கை உணர்வின் 
  5. நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் 
  6. பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றல் உடையவன் 
  7. தேவன் என்றதனால் முற்றும் உணர்ந்தவன்  
  8. ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பம் உடையவன் 


என்ற இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார்.


 இராமன் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தான். அதற்கு முன்னால் தாடகை என்ற அரக்கியை  கொன்றான்.

அரக்கியை கொன்றது அவன் கை வண்ணம்.

அகலிகையை காத்தது அவன் கால் வண்ணம்.

விஸ்வாமித்ரர் சொல்கிறார் ....


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
   இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
   துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
   மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
   கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’

எத்தனை வண்ணம் ?


  1. இவ்வண்ணம் 
  2. நிகழ்ந்த வண்ணம்;
  3. உய்வண்ணம்  அன்றி 
  4. துயர் வண்ணம் உறுவது உண்டோ?
  5. மை வண்ணத்து அரக்கி போரில்  
  6. மழை வண்ணத்து அண்ணலே! உன்
  7. கை வண்ணம் அங்குக் கண்டேன்;
  8. கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’


எட்டு வண்ணங்களை காட்டி இராமனை போற்றுகிறார்  கம்பர்.

பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொன்றிக்கும் பின்னால் ஆழ்ந்த அர்த்தங்கள்  இருக்கும்.

சிந்தித்துப்  பொருள் கொள்ள வேண்டும்.

காரண காரியம் இல்லாமல் அவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் ஆழ்ந்த பொருள் பொதிந்து இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது.


சைவ ஆகமங்கள், திருக்குறள், சிவ புராணம், கம்ப இராமாயணம் என்று எல்லாம் ஒன்றைத்தான் சொல்கின்றன . இவை ஒன்றுக்கொன்று காலத்தால்  வேறுபட்டவை.  இருந்தும், இவை ஒரே கருத்தை சொல்கின்றன.

மேலும் சிந்திப்போம். ....


Thursday, August 7, 2014

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 1

சிவ புராணம் - ஈசன் அடி போற்றி - பாகம் 1 

பாடல்

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 

பொருள்

ஈசன் அடிபோற்றி = ஈசனின் திருவடிகள் போற்றி

எந்தை அடிபோற்றி = என் தந்தையின் அடிகள் போற்றி

தேசன் அடிபோற்றி = ஒளி வடிவானவனின் அடி போற்றி

 சிவன் சேவடி போற்றி = சிவனின் சிறந்த அடிகள் போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி = அன்பில் நின்ற தூயவனின் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி =  பிறப்பு என்ற மாயத்தை அறுக்கும் மன்னவனின் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி = சிறந்த திருப் பெருந்துரையுள் உள்ள நம்முடைய தேவனின் அடி போற்றி

சிவனைப் போற்றி  பாடுகிறார். இதில் வேறு என்ன இருக்கிறது. மேலே செல்வோம்  என்று அவசரப் படக் கூடாது. 

மணிவாசகரின் தமிழ் அவ்வளவு எளிய தமிழ். கவிதை நாவில்   கற்கண்டாய் கரையும்.  எப்போது வாயில் போட்டோம், எப்போது கரைந்தது , எப்போது உள்ளே  சென்றது என்று தெரியாது.

வாசித்துக் கொண்டே மேலே சென்று விடுவோம், அதன் ஆழ்ந்த அர்த்தங்களை  அறியாமலேயே.

இதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.


Tuesday, August 5, 2014

இராமாயணம் - எமானாலும் முடியாது

இராமாயணம் - எமானாலும் முடியாது 


போரில் இந்திரசித்து இறந்ததை தூதுவர்கள் வந்து சொல்கிறார்கள். இராவணனால் நம்ப முடியவில்லை.

எமனாவது, இந்திரஜித்தின் உயிரை எடுப்பதாவது. அவனுக்கு ஏது அவ்வளவு தைரியம்.

இந்த இந்திரசித்து ஏதோ ஒரு உலகில் ஒளிந்து கொண்டு என்னோடு விளையாடுகிறான் என்று நினைக்கிறான்.

பாடல்

'கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்!' என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.

பொருள்

'கூற்றம் உன் எதிர் வந்து = எமன் உன் முன்னால் வந்து

உயிர் கொள்வது = உன் உயிரை எடுத்துக் கொள்ளும்

ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று = ஒரு வலிமையையும் உள்ளது அன்று

எனையும் ஒளித்து = என்னிடம் இருந்து ஒளிந்து கொண்டு

ஏற்ற எவ் உலகு உற்றனை? = சிறந்த எந்த உலகுக்கு சென்றாய் 

எல்லை இல் ஆற்றலாய்!' = எல்லை இல்லாத ஆற்றல் உள்ளவனே

என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.= என்று சொல்லும் இராவணனின் ஒரு தலை



Monday, August 4, 2014

சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

சிவ புராணம் - வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க 


வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

சிவ புராணத்தில், அடுத்த ஐந்து வரிகள்

வேகம்  கெடுத்து ஆண்ட  வேந்தன் அடி வெல்க 

எல்லாவற்றிலும் ஒரு வேகம். போகும் இடம் தெரிந்த மாதிரி ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். யாரையாவது நிறுத்தி எங்கே போய் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், எல்லோரும் போகிறார்கள் நானும் போகிறேன் என்பதே பதிலாக இருக்கும்.

நம் ஊரில் காய் கறி அங்காடி (மார்கெட்) இருக்கும். அங்கு சில நாய்கள் அலைந்து கொண்டிருக்கும். முதலில் ஒரு வாசலில் இருந்து குறைக்கும். பின் அங்கும் இங்கும் ஓடும். பின் வேறு ஏதோ வாசலில் இன்னொரு நாய் குரைப்பதைக்  கேட்கும். அங்கு ஓடும். அங்குள்ள நாய்களோடு சண்டை போடும். இப்படி நாள் முழுவதும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும். நாளின் முடிவில் தளர்ந்து போகும். என்ன செய்து விட்டாய் என்று கேட்டால் ஒன்றும் இருக்காது.

மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

அங்காடி நாய் போல அலைந்தனையே நெஞ்சமே என்பார் பட்டினத்தடிகள். 

உடல் அலைவது, ஓடுவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த மனம் இருக்கிறதே, அது ஒரு கணம் ஒரு இடத்தில் நிற்கிறதா ? ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓட்டத்தை நிறுத்தினால் அல்லவா மனதை எதிலாவது ஒருமுகப் படுத்த முடியும். 

என்ன செய்யட்டும் என்று கேட்ட அருணகிரி நாதரை , ஒண்ணும் செய்யாதே "சும்மா இரு" என்றான் முருகன். 

மணிவாசகர் சொல்கிறார் - என் வேகத்தை கெடுத்து என்னை ஆட்கொண்ட தலைவன் அடி வெல்க  என்கிறார்.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

பிறந்து இறந்து பிறந்து இறந்து என்ற சுழலை நிறுத்தி, அதை வேறோரோடு அறுப்பவன் அவன்.  கிளையை வெட்டினால் மீண்டும் துளிர்க்கும். வேரோடு அறுக்க  வேண்டும்.  பிஞ்ஞகன் என்றால் தலைக் கோலம் கொண்டவன் என்று பொருள். ஆகாய கங்கை, பிறைச் சந்திரன், என்று தலையில் கொண்டவன் அவன். 

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

தன்னிடம் வராதவர்களுக்கு அவன் தூரத்தில் நிற்கிறான். சொல்லப் போனால் அவன் அவர்களை விடுவது இல்லை. அவர்கள்தான் அவனை விட்டு விலகிப் போகிறார்கள். புறத்தில் உள்ளவர்களுக்கு சேயோன் (அண்மை என்றால் அருகில். சேய்மை என்றால் தூரத்தில்) அவன். 

கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
   
கரம் குவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்களுக்கு மகிழ்ந்து அருள் புரிபவன். 


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


இறைவன் இருக்கும் இடம் இரண்டு என்று சைவ சித்தாந்தம்  கூறுகிறது. ஒன்று நம் மனம். இன்னொன்று தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குல தூரத்தில் உள்ளது.  இதனால் தான் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்க  வேண்டும் என்று சொல்வது. அது பேரம்பலம், இது சிற்றம்பலம்.