Sunday, October 5, 2014

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 1

சிவ புராணம் - போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - பாகம் 1 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே 

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன ?

மனிதன் அது வேண்டும், இது வேண்டும், அதுவும் வேண்டும், இதுவும் வேண்டும் அலைகிறான். 

அங்கே போகிறான், இங்கே வருகிறான், அவனைப் பார்க்கிறான், இவனைப் பார்க்கிறான், அந்தக்  கோவில், இந்தக் குளம் என்று அலைந்து கொண்டு இருக்கிறான். 


இன்பத்தை வெளியே தேடித் தேடி அலைகிறான். 

இன்பம் வெளியே இல்லை என்று உணர்ந்து கொண்டால் அலைவது நிற்கும். 

போக்கும் இல்லை 

வரவும் இல்லை.


புணர்தல் என்றால் ஐக்கியமாதல் , ஒன்றாதல், இணைதல். 

இன்பம் பிற ஒன்றின் மூலம் தான் அடைய முடியும் என்றால் அதில் சில சிக்கல்கள் இருக்கிறது.

முதாலவது, அந்த மற்ற ஒன்று நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உறவோ, நட்போ எதுவும் நம் கட்டுக்குள் இல்லை. இருப்பது போல இருக்கும். சில நேரம் இருக்கும். பல நேரம் இருக்காது. கட்டுப் பாடு தளரும் போது துன்பம் வருகிறது. 

இரண்டாவது,  எந்த ஒரு வெளிப் பொருளும் மறையும் தன்மை கொண்டது. அது அழிந்து போனால்   துன்பம். 

மூன்றாவது, வெளி ஒன்றிலிருந்து கிடைக்கும் இன்பம் நாளடைவில் குறையும். சலிப்பு வரும். 

நான்காவது, வெளி ஒன்றில் இருந்து இன்பம் வரும் என்றால் அதை மற்றவர்கள் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும், அதைக் காக்க வேண்டும் என்ற படபடப்பு வரும், யாரும் கொண்டு போய் விடுவார்களோ என்று எல்லோர் மேலும் சந்தேகம் வரும், நம்மை விட மற்றவன் சிறந்த ஒன்றைக் கொண்டிருந்தால் அவன் மேல் பொறாமை வரும்.....அத்தனை பாவ காரியமும் கூடவே வரும். 

கோபம், பயம், ஆசை, சந்தேகம் என்று எல்லாம் ஒன்றாக வரும். 

அவன் புணர்வும் இல்லாத புண்ணியன். 

போக்கும் இல்லை, வரவும் இல்லை, புணர்வும் இல்லை - அது புண்ணியம். 

மேலும் சிந்திப்போம் 




Friday, October 3, 2014

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது 


ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டு இருக்கும் போது , பிரிவு படுத்தத்தான் செய்கிறது.

மழைக் காலத்தில் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனான். வரவில்லை.

தவிக்கிறாள் அவள்.

மாலை நேரம். வானத்தைப் பார்க்கிறாள். கரு மேகங்கள் பன்னீர் தெளிக்கிறது. வான வில் ஜாலம் காட்டுகிறது.

வர்றேன்னு சொன்னானே, ஒரு வேளை வரமாட்டானோ என்று தவிக்கிறாள்.

பாடல்  

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.

பொருள்

பொருகடல் = அலை அடிக்கும் கடல். பொருதல் என்றால் எதிர்த்தல், சண்டை இடுதல். கடல் அலை கரையோடு எதிர்க்கிறது.

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி அணவு பெருந்துறை யாரே.

என்பார் திருஞான சம்பந்தர்



வண்ணன் = அந்த நிறம் கொண்டவன். கரிய நிறம் கொண்ட திருமால். கடல் வண்ணன்

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே?

என்பது நாலாயிர திவ்ய பிரபந்தம்.


புனைமார்பிற் றார்போல் = புனைந்து மார்பில் இருப்பது போல

திருவில் = திரு வில். வான வில்.

விலங்கூன்றித் = குறுக்கே நிறுத்தி

தீம்பெயல் தாழ = இனிமையான மழை வீழ, (அந்நேரத்தில்)

வருதும் = வருவேன்

எனமொழிந்தார் = என்று சொன்னார்

வாரார்கொல் = வர மாட்டாரோ

வானங் = வானம்

கருவிருந் = கருக் கொண்டு

தாலிக்கும் போழ்து = ஆலிக்கும் பொழுது. ஆலுதல் என்றால் ஒலித்தல், சந்தோஷத்தில் ஆடுதல்.

குயில் ஆலுவ குளிர் சீர்காழியுள் என்பார் திரு ஞான சம்பந்தர்.

வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் 
அம்புந்தி மூ எயிலெய்தவன் அண்ணாமலை அதனைக் 
கொம்புந்துவ குயிலாலுவ குளிர் காழியுள் ஞான 
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. 

இது இந்த பாடலில் உள்ள சொற்களுக்கு அர்த்தம். அதன் கீழே ஓடும் அந்த பெண்ணின் மன நிலையை சிந்திப்போம்.

கடல் எப்போதும் போல இருக்கிறது. அவளுக்கு ஏனோ அது கரையோடு சண்டை போடுவது போல இருக்கிறது. அவள் மன போராட்டத்தை கடலின் மேல் ஏற்றிக் கூறுகிறாள்.


வானவில், திருமாலின் கழுத்தில் உள்ள மாலை போல இருக்கிறதாம். அவளுக்கும் மாலை சூடிக் கொள்ள, அவளுடைய காதலனுக்கு மாலை சூடிப் பார்க்க  ஆசை.

மேகம் கருக் கொண்டு சந்தோஷத்தில் சப்தம் இடுகிறது என்கிறாள். அது போல தானும் தாய்மை நிலை அடைய வேண்டும், அதனால் மகிழ்வு அடைய வேண்டும் என்று நினைக்கிறாள்.

இயற்கை எல்லாம் அவளின் வாழ்வோடு பின்னி பிணைந்து இருப்பது போல இருக்கிறது அவளுக்கு.

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி பாடியது போல ...பார்ப்பது எல்லாம் அவளுக்கு அவனை  நினைவு படுத்துகிறது.

அன்பு !

 
 

Wednesday, October 1, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 7

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 7


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 

---------------------------------------------பாகம் 6 -----------------------------------------------------------------

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 

அது என்ன ஈர்த்து ?

காந்தம் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இரும்புத் துண்டும் ஒரு மரகட்டையும் இருக்கிறது.  காந்தம் அந்த இரும்பை மெல்ல மெல்ல கவர்ந்து இழுக்கும். 

கிட்ட வர வர அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சர்ரென்று வேகமாய் போய் ஒட்டிக் கொள்ளும். 

ஆனால், அந்த மரக் கட்டை இருக்கிறதே, அதை தூக்கி காந்தத்தின் மேல் வைத்தாலும்  ஒட்டாது. அது காந்தத்தின் பிழை அல்ல. மரத் துண்டின் பிழை. 

சில பேர் நாள் எல்லாம் பூஜை செய்வார்கள், கோவிலுக்குப் போவார்கள், பாராயாணம்  செய்வார்கள். ஒன்றும்  நடக்காது. 

மணிவாசகர், குதிரை வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை, குருவாக வந்து  ஆண்டவன் ஆட் கொண்டான். 

அவர் இரும்பாய் இருந்தார். காந்தம் இழுத்துக் கொண்டது. 

அது மட்டும் அல்ல, காந்தத்தோடு ஒட்டிய இரும்பு நாளடைவில் காந்தத் தன்மை பெறும் . அது போல, இறைவனோடு ஒட்டி இருக்கும் போது , நாமும் இறை தன்மை  அடைவோம். 

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

சரி, அது என்ன எந்தை ?

ஒரு தந்தை தன் மகன் நல்லவனாக , வல்லவனாக வர வேண்டும் என்று அவனுக்கு என்னவெல்லாம் செய்வான் ? ஒரு கைமாறும் கருதாமல் எப்படி தந்தை  மகனுக்கு உதவிகள் செய்வானோ அது போல இறைவனும்   தனக்கு அருள்  செய்தான் என்று  கூறுகிறார்.மணிவாசகர். 

மேலும் சிந்திப்போம்

--------------------------------------   பாகம் 7 ------------------------------------------------------------

கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்


கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தில் 

மெய் ஞானம் - உண்மையான ஞானம். அது என்ன  உண்மையான அறிவு, உண்மை இல்லாத அறிவு ?

உண்மையான பொருள் பற்றிய ஞானம். 

முந்தைய வரிகளில் "பொய்யாயினவெல்லாம் போய் அகல வந்தருளி " என்ற  வேண்டினார். 

மெய் ஞானம் கூட மேலோட்டமான ஞானம் அல்ல, கூர்மையான மெய் ஞானம். 

கூர்த்த மெய் ஞானத்தால் 

சிலருக்கு அறிவு நிறைய இருக்கும். நிறைய படித்து இருப்பார்கள். ஆனால் படித்தவற்றை உணர மாட்டார்கள். கிளிப்பிள்ளை போல புத்தகத்தில்  உள்ளவற்றை, மற்றவர்கள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்வார்கள். அறிவு இருக்கும். உணர்வு  இருக்காது.

மணிவாசகர் சொல்கிறார் 

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு " உணர்வார்" தம் கருத்தில் 

அறிவு உணரப் படவேண்டும். 

அணி கொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண்கிலார் என்றான் மகாகவி

கவிதை  புரியும்.  கவியின்  உள்ளம் புரியாது பலபேருக்கு 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 

இறைவனை உணர முடியும், ஓத முடியாது. 

அறிவும் இருக்க வேண்டும். உணர்வும் இருக்க வேண்டும். அவர்கள் கருத்தில் இறைவன் இருப்பான். 

ஞானம் இருக்க வேண்டும். 
மெய் ஞானம் இருக்க வேண்டும்.
கூர்த்த மெய் ஞானம் இருக்க வேண்டும் 
அந்த ஞானத்தோடு கூட உணர்வும் இருக்க வேண்டும் 

அப்படி அறிவும் உணர்வும் கொண்டவர்களின் கருத்தில் அவன் இருப்பான்.

எப்படி இருப்பான் தெரியுமா ?

மேலும் சிந்திப்போம் 




Tuesday, September 30, 2014

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி

வில்லி பாரதம் - தித்திக்கும் பக்தி 


கௌரவர்கள் சபையில் பாஞ்சாலி நிற்கிறாள். துச்சாதனன் அவளின் துகிலைப் பற்றி இழுக்கிறான். பஞ்ச பாண்டவர்களும் ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கிறார்கள்.

அவளின் மன நிலை எப்படி இருக்கும் ?

பயம்.  அவமானம். படபடப்பு. கோபம். சுய பச்சாதாபம் என்று எல்லாம் இருக்கும் அல்லவா ?

அவள் கடைசியில் வேறு ஒன்றும் கூறாமல் "கோவிந்தா கோவிந்தா" என்று அழைத்தாள் .

இது வரை நமக்குத்  தெரியும்.

நமக்குத் தெரியாத ஒன்றை வில்லிபுத்துரார்  சொல்லுகிறார்.


அவள் அப்படி கூறியவுடன், அவள் உடல் குளிர்ந்ததாம். நாவில் இதுவரை ஊறாத அமிழ்து ஊறியதாம். உடல் புளங்காகிதம் அடைந்து, உள்ளம் உருகினாளாம்.

இருக்கும் இடமோ கௌரவர் சபை. அவளின் சேலையின் ஒரு முனை துச்சாதனன் கையில்.

அவள் உடலோ குளிர்ந்தது, நாவில் அமுதம் ஊறியது, உள்ளம்  உருகியது என்கிறார்   வில்லியார்.

பாடல்

ஆறாகி யிருதடங்க ணஞ்சனவெம்புனல்சோர வளகஞ் சோர 
வேறான துகிறகைந்த கைசோரமெய்சோர வேறோர் சொல்லுங் 
கூறாமற் கோவிந்தா கோவிந்தாவென்றரற்றிக் குளிர்ந்து நாவில் 
ஊறாத வமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா முருகி னாளே.

சீர் பிரித்தபின்

ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர 
வேறான துகில் தகிந்த  கை சோர மெய் சோர வேறு ஒரு சொல்லும்  
கூறாமல்  கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் 
ஊறாத  அமிழ்து  ஊற உடல் புளகித்து உள்ளம் எல்லாம் உருகினாளே 


பொருள்

ஆறாகி = ஆறு போல ஓடி

இரு = இரண்டு

தடங் கண் = பெரிய கண்கள்

அஞ்சன = மை

வெம்புனல் = கொதிக்கின்ற நீர் (கண்ணீர்)

சோர = வழிய

அளகம் = தலை முடி

சோர = அவிழ்ந்து விழ

வேறான = உடலில் இருந்து வேறு பட்ட

துகில் = சேலை

தகிந்த = காப்பாற்ற முயன்ற

கை சோர = கை தளர்ந்து போக

மெய் சோர = உடல் சோர்ந்து போக

வேறு ஒரு சொல்லும் = வேறு ஒரு சொல்லையும்

கூறாமல் = சொல்லாமல்

கோவிந்தா கோவிந்தா என்று = கோவிந்தா கோவிந்தா என்று

அரற்றி = கூறி

குளிர்ந்து = உடல் குளிர்ந்து

நாவில் = நாவில்

ஊறாத  அமிழ்து  ஊற = இது வரை ஊறாத அமிழ்து ஊற

உடல் புளகித்து = உடல் புளகித்து

உள்ளம் எல்லாம் உருகினாளே = உள்ளம் எல்லாம் உருகினாளே

இறைவன் பேரைச் சொன்னால் தித்திக்குமா ?


முருகன் பெயரை நினைத்தாலே கரும்பும் புளித்து  செந்தேனும் கசந்தது என்பார் அருணகிரி நாதர்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மானந்தத் தித்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே.

தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் புளித்து செந்தேனும் அரக்கைத்ததுவே என்கிறார்.

திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் , "அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறி" அள்ளூறி என்றால் வாயில் அமுது ஊறி.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 
 அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
 தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
 பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
 புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
 எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
 சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை 
 இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

என்று கூறுவார்.  

இராமா உன் நாமம் என்ன ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகப் பிரம்மம்.


ஓ இராமா நீ நாம ஏமி ருசிரா ? எந்த ருசிரா என்று இராம நாமத்தை ருசிக்கிறார் தியாகராஜா ஸ்வாமிகள்.

 ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || 
மதரஸமுலகண்டே ததிக்ருதமுலகண்டே
அதிரஸமகு நாமமேமி ருசிரா || 
நவரஸ பரமான்ன நவனீதமுலகண்டே
நதிகமௌனிநாம மேமி ருசிரா || 
த்ராக்ஷஃபலமுகன்ன இக்ஷுரஸமுகன்ன
பக்ஷிவாஹன நாமமேமி ருசிரா || 
அஞ்ஜநாதனய ஹ்ருத்கஞ்ஜதலமுனந்து
ரஞ்ஜில்லு நீநாமமேமி ருசிரா || 
ஸதாஷிவுடு மதி ஸதா பஜிஞ்சேதி
ஸதானந்தமகு நாமமேமி ருசிரா || 
ஸாரமுலேனி ஸம்ஸாரமுனகு ஸம்
தாரகமகு நாமமேமி ருசிரா || 
ஷரணன்ன ஜனமுல ஸரகுன ரக்ஷிஞ்சு
பிருது கல்கின நாமமேமி ருசிரா || 
கரிராஜ ப்ரஹல்லாத தரணீஜ விபீஷணுல
காசின நீநாமமேமி ருசிரா || 
கதலீ கர்ஜூர ஃபலரஸமுலகதிகமு
பதித பாவன நீ நாமமேமி ருசிரா || 
தும்புரு நாரதுலு டம்பு மீரக கா
நம்பு ஜேஸேதி நாமமேமி ருசிரா || 
ராம பத்ராசல தாம ராம தாஸுனி
ப்ரேமனொலின நாமமேமவி ருசிரா

 பக்தி இருந்தால் இறைவன் நாமத்தைச் சொல்லும் போது  இனிக்கும்.






Monday, September 29, 2014

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 6

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 6


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே



என்பார் திருஞானசம்பந்தர்.


----------------------/ பாகம் 2 /---------------------------------------------------------------------------------

யாவையுமாய் அல்லையுமாம்


இறைவன் அனைத்துமாக இருக்கிறான் - யாவையுமாய் 

அவனே அனைத்துமாக இல்லாதவனாகவும் இருக்கிறான் - அல்லையுமாய்.

எது என்ன  புதுக் குழப்பம் ?

எல்லாம் அவன் என்பது புரிகிறது. 

அவன் எல்லாமாகவும் இல்லை என்பது எப்படி சரியாகும் ?

ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போல இருக்கிறதே ?

சிந்திப்போம்.

அதற்கு முன்னால் இரணியன் கதையை நினைத்துப்  பார்ப்போம். 

 ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட 
கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற 
தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்'

அவன் சாணிலும் இருக்கிறான். அணுவை ஆயிரம் கோடியாக பிளந்தால் அந்த தூளிலும்  உள்ளான். மாமேரு குன்றிலும் உள்ளான். இந்த தூணிலும் உள்ளான். நீ சொன்ன சொல்லிலும் உள்ளான் என்று கூறுகிறான் பிரகலாதன். 

தூணில் இருக்கிறானா என்று கேட்டால் ஆமாம் இருக்கிறான்.

இந்த தூண்தான் அவனா என்று கேட்டால் இல்லை. 

தூணில் அவன் இருக்கிறான். ஆனால் அந்தத் தூணே அவன் இல்லை. அவன் தூண்  இல்லாமல் மற்ற வடிவிலும் மற்ற இடங்களிலும் இருப்பான்.


அதைத்தான் மணிவாசகர் சொல்கிறார் - யாவையுமாய், அல்லையுமாய்.

அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான். அதற்காக அவை எல்லாம் அவன் இல்லை.

சிலையில், படத்தில் அவனை வணங்கலாம். 

ஆனால், அந்த சிலைதான் அவன் என்று சொல்லக் கூடாது. அவன் அந்த சிலையைத் தாண்டி  இருக்கிறான். 

இதையே அபிராமி பட்டரும் "உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே" என்றார். உள்ளும் புறமும் உண்டு.  

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே

காணும் அனைத்திலும் இறைவனை காண்பது.

அவை அன்றியும் அவனை நினைப்பது.

யாவையுமாய் அல்லையுமாய்

மேலும் சிந்திப்போம்

-------------------------------------------------/ பாகம் 3 /----------------------------------------------------------

சோதியனே துன் இருளே 

ஜோதி தன்னையும் விளக்கும். மற்ற பொருள்களையும் விளங்க வைக்கும். ஒளி  உண்மையை அறிய உதவும். 

ஜோதி சரி, அது எப்படி இறைவன் இருளாக இருக்க முடியும் ? அதுவும் அடர்ந்த  இருள் (துன் இருள்) 

ஜோதி அறிவு , ஞானம் என்றால் 

இருள் என்பது அஞ்ஞானம் என்று  ஆகும். இறைவன் எப்படி அஞ்ஞானம் ஆவான் ? 

மற்ற மதங்களில் ஒரு சிக்கல் உண்டு. 

இறைவன் என்றும் , சாத்தான் என்றும் இரண்டு கூறுகளாக உலகை பிரிக்கிறார்கள். நல்லது எல்லாம் இறைவன் செய்வது. கெடுதல் எல்லாம் சாத்தான்  செய்வது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதில் ஒரு சிக்கல் உண்டு. 

அப்படி என்றால் சாத்தான் இறைவனுக்கு நிகரானவானா என்று ஒரு சிக்கல்.

சாத்தானை படைத்தது யார் என்று இன்னொரு சிக்கல். 

இறைவன் தான்  சாத்தானைப் படைத்தான் என்றால் , ஏன் இறைவனே அந்த சாத்தானை அழிக்கக்  கூடாது ? 

இதற்கு சரியான விடை இல்லை. 

நம் மதம் இதை மிகச் சரியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. 

நல்லதும் கெட்டதும் அவனே என்று சொல்கிறது. 

இன்னும் சொல்லப் போனால் நல்லது கெட்டது எல்லாம் நாம் தரும் பெயர்கள். செயல்கள் நடக்கின்றன. நாம் அவற்றிற்கு நல்லது , கெட்டது என்று பெயர் தருகிறோம். 


பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மணிவாசகர்  சொல்லுவார்.

இருட்டில் ஒன்றும் தெரியாது. தொட்டுத் தடவி ஒரு மாதிரி உணரமுடியும். ஆனால் முழுமையாக விளங்காது. அது போல இறைவனையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.  சில பல நிகழ்வுகளில், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக உணர முடியுமே அன்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

இதையே சொல்ல வந்த வள்ளுவர் ...

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்      
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05)                


இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.

 என்றார்.

இருள் சேரும், இரு வினையும் சேராது. 

அது ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் ஜோதி. அதை நாம் எங்கே முழுமையாக  அறிந்து கொள்வது ? 

அந்த ஜோதியை நம் அறியாமை என்ற இருள் , கரி, மூடி இருக்கிறது. அறியாமை விலகும் போது ஜோதியின் ஒளி  வெளிப்படும்.

மேலும் சிந்திப்போம் 


------------------------------------/பாகம் 4/----------------------------------------------------------------------

தோன்றாப் பெருமையனே

கிருஷ்ண ஜெயந்தி உண்டு.

விநாயக சதுர்த்தி உண்டு.

சிவ ஜெயந்தி, சிவ சதுர்த்தி கிடையாது.

ஏன் ?

சிவன் தோன்றியது என்று ஒரு நாள் கிடையாது.

அவன் தோன்றியவன் இல்லை.

எப்போதும் இருப்பவன்.

அது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், அவனுடைய பெருமைகள் நமக்குத் தோன்றாது.

"அடடா இது எனக்கு தோணாம போச்சே " என்று சொல்லுவது இல்லையா அது போல.

அப்படி என்ன பெருமை ?

சிந்திப்போம்....

--------------------------------------பாகம் 5 -----------------------------------------------------------------------

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே


தொடக்கம், நடு , முடிவு என்று மூன்றுமாக இருப்பவன். இவை இல்லாமலும் இருப்பவன். 

அது எப்படி ? 

அவனே தொடக்கம், நடு முடிவு என்று இருக்கிறான், இவை இல்லாமலும் இருக்கிறான் என்பது எப்படி சாத்தியமாகும் ?


தொடக்கம், நடு , முடிவு என்பது காலத்தின் பரிணாமம். அவன் காலத்தை கடந்தவன். காலம் இல்லாத ஒன்றுக்கு தொடக்கம், நடு , முடிவு எப்படி இருக்கும். 

குழப்பமாக இருக்கிறது அல்லவா ?

சற்று நிதானமாக சிந்திப்போம். 

காலம் என்பது என்ன ? காலம் என்பது எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறதா ? 

காதலிக்காக காத்து இருக்கும் போது ஒரு நிமிடம் கூட யுகம் போல இருக்கிறது. 

காதலியுடன் இருக்கும் போது யுகம் கூட நிமிடம் போல பறந்து விடுகிறது. 

எப்படி ? இது எதனால் நிகழ்கிறது ?

மனம் ஒன்றிப் போகும் போது காலம் நின்று  போகிறது. யுகம் கூட  நொடியாக உறைந்து போகிறது. 

மனம் ஒன்றாத போது காலம் நீண்டு கொண்டே போகிறது என்பது புரிகிறது அல்லவா ?

ஞானிகளுக்கு கடந்த காலம், எதிர் காலம் என்பதெல்லாம் கிடையாது. அவர்கள் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறார்கள். 

நாமோ, ஒன்று இறந்த காலத்தில் அல்லது எதிர் காலத்தில் வாழ்கிறோம். நாம் நிகழ் காலத்தில்  வாழ்வதே இல்லை. 

மனம் ஒன்று பட்டவர்களுக்கு அவன் ஆதி, அந்தம், நடு அல்லாதவன். 

மனம் ஒன்று படாதவர்களுக்கு அவன் ஆதி, அந்தம் நடுவாகி நின்றவன். 

மேலும் சிந்திப்போம் 

---------------------------------------------பாகம் 6 -----------------------------------------------------------------

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே


ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 

அது என்ன ஈர்த்து ?

காந்தம் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இரும்புத் துண்டும் ஒரு மரகட்டையும் இருக்கிறது.  காந்தம் அந்த இரும்பை மெல்ல மெல்ல கவர்ந்து இழுக்கும். 

கிட்ட வர வர அதன் ஈர்ப்பு விசை அதிகமாகி சர்ரென்று வேகமாய் போய் ஒட்டிக் கொள்ளும். 

ஆனால், அந்த மரக் கட்டை இருக்கிறதே, அதை தூக்கி காந்தத்தின் மேல் வைத்தாலும்  ஒட்டாது. அது காந்தத்தின் பிழை அல்ல. மரத் துண்டின் பிழை. 

சில பேர் நாள் எல்லாம் பூஜை செய்வார்கள், கோவிலுக்குப் போவார்கள், பாராயாணம்  செய்வார்கள். ஒன்றும்  நடக்காது. 

மணிவாசகர், குதிரை வாங்க சென்று கொண்டிருந்தார். அவரை, குருவாக வந்து  ஆண்டவன் ஆட் கொண்டான். 

அவர் இரும்பாய் இருந்தார். காந்தம் இழுத்துக் கொண்டது. 

அது மட்டும் அல்ல, காந்தத்தோடு ஒட்டிய இரும்பு நாளடைவில் காந்தத் தன்மை பெறும் . அது போல, இறைவனோடு ஒட்டி இருக்கும் போது , நாமும் இறை தன்மை  அடைவோம். 

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

சரி, அது என்ன எந்தை ?

ஒரு தந்தை தன் மகன் நல்லவனாக , வல்லவனாக வர வேண்டும் என்று அவனுக்கு என்னவெல்லாம் செய்வான் ? ஒரு கைமாறும் கருதாமல் எப்படி தந்தை  மகனுக்கு உதவிகள் செய்வானோ அது போல இறைவனும்   தனக்கு அருள்  செய்தான் என்று  கூறுகிறார்.மணிவாசகர். 

மேலும் சிந்திப்போம் 

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு

குறுந்தொகை - பெண்ணின் காதல் வெளிப்பாடு 


குறுந்தொகையில், ஒரு இளம் பெண் தன் காதல், காம உணர்வை எவ்வளவு மென்மையாக வெளிப்படுத்திகிறாள்.


அவர் கொதிக்கும் பாலைவனத்தின் வழியே போய்   இருக்கிறார். அந்த வழியில் வறண்ட, வெப்பமான காற்று  அடிக்கும். மரங்கள் எல்லாம் பட்டுப் போய் நிற்கும். அவர் என்னை அணைத்து என் மார்பில் துயில்வதை விடுத்து இப்படி துன்பப் படுகிறாரே என்று நினைத்தால் வருத்தமாய் இருக்கிறது.

பாடல்

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென  
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் 
மலையுடை யருஞ்சுர மென்பநம்     

முலையிடை முனிநர் சென்ற வாறே. 

பொருள்

வெந்திறற் கடுவளி = வெம்மையான + திறல் + கடுமையான + வெளி = வெப்பம் உடைய, வலிமையான, வேகமாக அடிக்கும் காற்று

பொங்கர்ப் = மரத்தின் கிளை(களின் ஊடே)

போந்தென = வீசுவதால் 

நெற்று = முதிர்ந்த காய்ந்த காய்

விளை = விளைந்த

யுழிஞ்சில் = உழிஞ்சில் என்ற மரத்தில் 

வற்ற லார்க்கும் = வறண்டு, வத்தல் போல சுருங்கிக் கிடக்கும்

மலையுடை = மலைகளின் ஊடே

யருஞ்சுர மென்ப = அரும் சுரம் என்ப. சுரம் என்றால் காய்ந்து போன காடு. கொடுமையான, காய்ந்து போன காடு

நம் முலையிடை = என் மார்பின் இடை 

முனிநர் சென்ற வாறே. = கோபித்து சென்றவர்

அவன் பிரிந்து சென்ற ஏக்கம் ஒரு புறம். அவன் எப்படி துன்பப் படுகிறானோ என்றோ கவலை ஒரு புறம். பெண்ணின் உணர்சிகளை பிரதிபலிக்கும் அற்புதமான பாடல்.


( மனைவியை மார்போடு அணைத்துத் தூங்குவதை ஆண்டாள்  கூறுகிறாள்.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.

)


Sunday, September 28, 2014

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை

நளவெண்பா - என்றும் நுடங்கும் இடை 


தமயந்தியின் இடை மிக மிகச் சிறியது என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று யோசிக்கிறார் புகழேந்தியார்.

அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அப்போதுதான் பறித்த மலர்கள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன.

அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று தமயந்தியின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம்.

பாடல்

என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.


பொருள்


என்றும் = எப்போதும்

நுடங்கும் = காற்றில் பட படத்தல்

இடைஎன்ப = எடை என்று சொல்லப் படுவது

ஏழுலகும் = ஏழு உலகிலும்

நின்ற = நிலைத்து நிற்கும்

கவிகை = குடையின்  (வெண்கொற்றக் குடை )

நிழல்வேந்தே = நிழலில் கொண்ட அரசனே

ஒன்றி = ஒன்றுபட்டு

அறுகால் = ஆறு கால்களைக் கொண்ட

சிறுபறவை = சிறு பறவை (வண்டு)

அஞ்சிறகால் = அசையும் சிறகால்

வீசம் = வீச

சிறுகாற்றுக் = வரும் சிறிய காற்றுக்கு

காற்றாது = ஆற்றாது , தாங்க முடியாமல்

தேய்ந்து = தேய்ந்து (விடும்)