Sunday, November 30, 2014

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?


எவ்வளவோ படிக்கிறோம் ? எதை  எதையோ   அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல விதங்களில் அறிகிறோம்.

இவையெல்லாம் எதற்காக என்று வள்ளுவர் கேட்கிறார்.

படித்து என்ன செய்யப் போகிறாய் என்பது அவர் கேள்வி.

ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டும். கல்வியின் பயன் என்ன ?

பாடல்

கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்.

சீர் பிரித்த பின்

கற்றதனால் ஆய  பயன் என் கொல், வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின் 

பொருள்

கற்றதனால் = படித்ததனால்

ஆய  பயன் என் கொல் = கிடைக்கும் பயன் என்ன ?

வாலறிவன் = இறைவன் 

நற்றாள் = நன்மை பயக்கும் திருவடிகளை

தொழார் எனின் = தொழவில்லை என்றால்

வள்ளுவர் இறைவனை  தொழுங்கள் என்று சொல்லவில்லை.

இறைவனை தொழவில்லை என்றால், கற்றதனால் ஆய பயன் என்ன என்ற கேள்வியை  நம் முன் வைக்கிறார்.

அதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?

வாசிப்பதால் என்று சொல்லவில்லை. கற்றதனால் என்கிறார்.

இறைவன் திருவடிகளை தொழுவது என்பது கற்றதனால் வரும் ஒரு பயன்.

அது இல்லை என்றால், வேறு என்ன பயன் இருக்கிறது என்கிறார் ?

ஆணவங்களில் முதலாவது நிற்பது கல்வியினால் வரும் ஆணவம். வித்யா கர்வம் என்று   சொல்வார்கள்.

நாம் எல்லாம் அறிந்து விட்டோம். என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த உலகில் . எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்ற கர்வம் வரும்.

அந்த கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்.

இறைவனை தொழுவது ஆணவத்தை அழிக்கும்.

நம் அறிவை, ஏதோ மார்கத்தில் தூண்டிச் செலுத்துவது எது ? அந்தத் துறையில் நாம் வெற்றி பெறச் செய்வது எது ?

சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் ?

சிந்திப்போம்.



 


Saturday, November 29, 2014

தேவாரம் - சிலையாளி மலையாளி

தேவாரம் - சிலையாளி மலையாளி 


ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார்.

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.

ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

அங்குள்ள கரும்புகளில் கணுக்கள் இருக்கின்றன. அவற்றை கண் என்றும் சொல்லுவார்கள்.

கண் என்ன செய்யும் ?

பார்க்கும், அல்லது மூடித் தூங்கும்.

அவர் பார்க்கும் போது அந்த கரும்பின் கண்கள் எல்லாம் தூங்குவது போலத் தோன்றிற்று.

ஏன் தூங்க வேண்டும் ?

குளிர்ந்த , வாசமான தென்றல் காற்று சிலு சிலுவென வீசுகிறது.

அது மட்டும் அல்ல, அங்குள்ள சோலைகளில் உள்ள குயில்கள் இனிமையாக குரல் எழுப்புகின்றன. அது தாலாட்டு மாதிரி இருக்கிறது.

தென்றல் வருட, குயில் பாட...தூக்கத்திற்கு கேட்பானேன்.

அந்த மாதிரி கரும்பின் கண் வளரும் திருவையாற்றில் யார் இருக்கிறார் தெரியுமா ?

வானில் பறக்கும் மூன்று உலகங்களைச் செய்து அவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துன்பம் தந்ததால் அவற்றை அழிக்க அம்பு தொடுத்த, கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.

பாடலைப் பாருங்கள்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

நின்று உலாவும் நெடு விசும்பு நெருக்கி வரு புர மூன்று நீள்வாய் அம்பு  
சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேருங் கோயில்
குன்றெல்லாம்  குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடி வருடச்  செழுங் கரும்பு கண் வளரும்  திருவையாறே.


பொருள்

நின்று உலாவும் = ஒரு இடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து திரியும்

நெடு விசும்பு = நீண்ட வானத்தில்

நெருக்கி வரு = ஒன்றாகச் சேர

புர மூன்று = மூன்று உலகங்களையும்

நீள்வாய் = நீண்ட

அம்பு சென்று உலாம் படி = அம்பு சென்று தைக்கும் படி

தொட்ட = விட்ட

சிலையாளி = வில்லைக் கொண்டவன்

மலையாளி  = கைலாய மலையில் இருக்கும் சிவன்

சேருங் கோயில் = வந்து அடையும் கோயில்

குன்றெல்லாம்  = எல்லா குன்றுகளிலும்

குயில் கூவக் = குயில்கள் கூவ

கொழும் = சிறந்த

பிரச = தென்

மலர் பாய்ந்து = மலரின் மேல் சென்று

வாசமல்கு = வாசத்தைப் பெற்றுக் கொண்டு

தென்றலார் = தென்றல் காற்றானது

அடி வருடச் = பாதத்தை வருட

செழுங் கரும்பு = வளர்ந்த கரும்பு

கண் வளரும் = கண்கள் தூங்கும்

திருவையாறே = திருவையாறே

ஏதோ கோவிலுக்குப் போனோம்,  அர்ச்சனை பண்ணினோம், பிரகாரத்தை நாலு முறை  வலம் வந்தோம் , பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்தோம் என்று இல்லாமல், அங்குள்ள இயற்கையை  இரசிக்கிறார்.

இறைவன் என்பவன் கோவிலுக்கு உள்ளே மட்டும் இருப்பவன் அல்ல.  எங்கும் நீக்கமற  நிறைந்து இருப்பவன்.

எங்கோ உள்ள குன்று, அதில் கண்ணுக்குத் தெரியாத குயில், அது பாடும் இசை,  தலை வருடும் பூங்காற்று, அதில் தவழ்ந்து வரும் இசை, அது கேட்டு கண் வளரும்  கரும்பு....இது எல்லாம் சேர்ந்ததுதான் இறைவன்.

இந்த பிரமாண்டமான இயற்கைதான் இறைவன்.

இறைவனை கோவிலுக்குள் மட்டும் தேடாதீர்கள். கோவிலுக்கு வெளியேயும் அவன்  தான்.

தேவாரம் ,  இப்படி எத்தனையோ அருமையான பாடல்களைக் கொண்டது.

நேரம் இருப்பின் மூலத்தைப் படித்துப் பாருங்கள்.

கொட்டி கிடக்கிறது. அள்ளிக் கொள்ளுங்கள்.

   .

Friday, November 28, 2014

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.


திருவையாறு !

திரு ஞான சம்பந்தர் காலத்து திருவையாறு !

பச்சை பசேலென்ற வயல் பரப்புகள்.

வயல் எங்கும் நெல். வயலில் நீர் நிறைந்திருக்கிறது. எவ்வளவு நீர் என்றால் , அந்த வயல்களில் தாமரை மலர் பூத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு நீர் என்று.

பசுமையான நெற் பயிர்களின் ஊடே சிவந்த தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.

வயல் வெளியில் ஊடாடும் தென்றல்.

அதன் அருகே கொஞ்சம் வீடுகள். வீட்டின் முற்றத்தில்  சில பல தென்னை மரங்கள். மரத்தடியில் தடி தடியாக சில எருமைகள். அதன் அருகே அந்த எருமையின் கன்றுகள்.

நெல்லின் தலை கோதிய காற்று தென்னை மரத்தின் மேலும் படர்ந்தது. அப்போது, அந்த தென்னை மரத்தில் இருந்த சில காய்ந்த தென்னக் குருளைகள் உதிர்ந்து விழுந்தன.

அந்த சத்தத்தில் , எருமை கன்றுகள் துள்ளி எழுந்து , தாமரை மலர்கள் சூழ்ந்த வயல் வெளியில் ஓடின.


இது தேவாரப் பாட்டில் வருகிறது சொன்னால் நம்ப முடிகிறதா ?


பாடல்

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த  அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடும் தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாய இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி  இருந்து அங்கு ஓடி 
செஞ்சாலிக் கதிர் உழக்கி செழுங்கமல வயல் படியுந் திருவையாறே.

பொருள்

அஞ்சாதே = அஞ்சாமல்

கயிலாய மலை = கயிலாய மலையை

எடுத்த = எடுத்த

 அரக்கர் கோன் = அரக்கர்களின் அரசன்

தலைகள் பத்தும் = தலைகள் பத்தும்

மஞ்சாடும் = வலிமை பொருந்திய

தோள் நெரிய = தோள்களும் நெரியும் படி

அடர்த்து = சண்டையிட்டு (இங்கே அழுத்தி )

அவனுக்கு = அந்த இராவணனுக்கு

அருள் புரிந்த  = அருள் புரிந்த

மைந்தர் கோயில் = காப்பவனின் கோயில்

இஞ்சாய = இஞ்சி போல உலர்ந்த

இளம் தெங்கின் பழம் வீழ = சிறிய தென்னையின் குருளை விழ

இள மேதி = எருமைக் கன்றுக் குட்டி

இருந்து அங்கு ஓடி  = அங்கிருந்து ஓடி

செஞ்சாலிக் = செந் நெல்

கதிர் = கதிர்களை

உழக்கி = மிதித்துக் கொண்டு

செழுங்கமல = சிவந்த தாமரைகள் உள்ள

வயல் = வயல்கள்

படியுந் = உள்ள

திருவையாறே.= திருவையாறே

என்ன ஒரு அழகான பாட்டு...இல்லையா ?

பாட்டு அழகாக இருந்தாலும்...

வயல் வெளியில் தாமரை பூத்தது, தென்னை மரத்தில் இருந்து குருளை விழுந்தது, எருமைக் கன்று ஓடியது, இராவணனுக்கு அருள் புரிந்த சிவன் அமரும்  கோயில்....என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதே ?

சிலருக்கு எதைப் பார்த்தாலும் தனக்கு அது வேண்டும் என்று நினைப்பார்கள்.

நல்ல வீட்டைப் பார்த்தால், நமக்கு இந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் தேவலை என்று நினைப்பார்கள்..

அழகான பெண்ணை பார்த்தால் , தனக்கு வேண்டும்.

காண்பதெல்லாம் வேண்டும்.

அது ஒரு வகை.

இன்னொரு வகை, அடைய வேண்டும் என்ற ஆசை இல்லாமல், அது அது அங்கங்கே இருக்கட்டும் என்று அவற்றை அப்படியே பார்த்து இரசிப்பதோடு நிற்பது.

இராவணன் என்ன நினைத்தான் ....?

கைலாய மலையே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். மலையை தூக்கிக் கொண்டு போய் விட நினைத்தான். அவன் வலிமைக்கு மலையை தூக்க நினைத்தான்.

நம் வலிமைக்கு நாம் எதை எதையோ தூக்க நினைக்கிறோம்.

எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பது ஆணவம். ஆணவம் அழியும் இடத்தில்  அருள் கிடைக்கும்.

பக்தி என்றால் எல்லா பற்றையும் விட்டு விட்டு இறைவன் மேல் அன்பு செலுத்துவது  ஒன்று மட்டும் தான் என்று ஒரு எண்ணம் பலருக்கு உண்டு.

உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். இறைவன் ஒருவனையே நேசிக்க வேண்டும் என்று பலர் நினைப்பது உண்டு.

அது அல்ல பக்தி,

பக்தி என்பது உலகை, இயற்கையை இரசிப்பது, அதன் ஆச்சரியங்களில் மூழ்குவது,

இறைவன் வேறு இயற்கை வேறு என்பது அல்ல.

தென்னை மரம், அதன் அடியில் எருமைக் கன்று, வயல் வெளி, அதில் பூத்த தாமரை என்று  இயற்கையோடு ஒன்றுகிறார் ஞான சம்பந்தர்.

நாம் செல்லும் வழியில் நிற்கும் மரங்களை  நாம் எத்தனை முறை இரசித்து இருக்கிறோம் ?

மழையில் நனைந்த மரங்களை, ஜன்னலோரம் பறந்து செல்லும் அந்த பெயர் தெரியாத  பறவையை, தாயின் தோளில் நிம்மதியாகக் தூங்கிக் கொண்டு வரும் குழந்தையை, நிலவோடு கட்டிப் பிடித்து விளையாடும் மேகங்களை, இப்படி நம் வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரம் அதிசயங்கள்  நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் கண் மூடிச் செல்கிறோம்.

பணம் ஒன்றே குறியாக  அலைகிறோம். அது வேண்டும், இது வேண்டும் , அதுவும்  வேண்டும், இதுவும் வேண்டும் என்று ஆலாய் பறக்கிறோம்....இராவணன் மாதிரி

மலையைப் பார்த்தால் தனக்கு வேண்டும்.

மற்றவன் மனைவியைப் பார்த்தால் தனக்கு வேண்டும்

சற்று நேரம் அடையும் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கையை இரசியுங்கள்....

மனைவியின் வெட்கப் புன்னகையை, பிள்ளையின் மலர்ந்த முகத்தை, சில்லென்று  முகத்தில் படும் நீரை...

இத்தனை சந்தோஷங்களும் உங்கள் முன்னால் கொட்டிக் கிடக்கிறது. அனுபவியுங்கள்.

பக்தி பின்னால் வரும்.....


Thursday, November 27, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?


இராமனுக்குத் தந்த வாக்குறுதியை சுக்ரீவன் மறந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை சுக்ரீவனிடம்  அனுப்பினான். இலக்குவனும் மிகுந்த சினத்துடன் வருகிறான்.

குரங்குகள் என்ன செய்வது என்று அறியாமல் தாரையிடம் சென்று யோசனை கேட்டன. தாரை அவர்களை பலவாறு ஏசுகிறாள்.

அந்த சமயத்தில் இலக்குவன் கோட்டையை நெருங்கி விட்டான். குரங்குகள் சென்று கோட்டை கதவை அடைத்தன . இலக்குவன் அதை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வேகமாக வருகிறான்.

குரங்குகள் மீண்டும் தாரையிடம் ஓடி வருகின்றன..

"இப்ப என்ன செய்வது " என்று கேட்க்கின்றன ....

பாடல்


அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர்.

பொருள் 

அன்ன காலையின் = அந்த நேரத்தில் (காலத்தில் )

ஆண் தகை ஆளியும் = ஆண்களில் சிங்கம் போன்ற அவனும் 

பொன்னின் = பொன் போன்ற சிறந்த உயர்ந்த

நல்நகர் = அந்த நல்ல நகரின் (கிட்கிந்தையின் )

வீதியிற் புக்கனன்; = வீதியில் புகுந்தான்

சொன்ன தாரையைச்  = முன்னால் சொன்ன தாரையை

சுற்றினர் நின்றவர் = மீண்டும் வந்து சூழ்ந்து கொண்டனர்

“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர். = என்ன செய்வது இப்போது என்று வந்தோம்  என்றனர்.



Tuesday, November 25, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் 


தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான். அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்

காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்

தேவி நீங்க = சீதை நீங்க

அத் தேவரின் சீரியொன் = தேவர்களை விட சிறந்தவனான அவன்

ஆவி நீங்கினன்போல் = உயிர் பிரிந்ததைப் போல

அயர்வான் = சோர்வடைவான்

அது பாவியாது = அந்தி நினைத்துப் பார்க்காமல்

பருகுதிர் போலும் = சுவைப்பீர்கள் போலும்

நும் = உங்கள்

காவி நாள்மலர்க்  = அன்று பூத்த குவளை மலர் போன்ற

கண்ணியர் = கண்களை கொண்டவர்களின்

காதல் நீர் = காதல் நீர்

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....:)

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு  உரிமையோடு கண்டித்து திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியை கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்  கோபித்து வந்தான். தாரை சமாதானப் படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது.

இந்த பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும் ? ஒன்றும் ஆகி இருக்காது.  கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லை தான்.

குறித்த காலத்தில் சுக்ரீவன் வந்தான் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

மாறாக, இவ்வளவு நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.  சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.

இரண்டாவது, காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.



Monday, November 24, 2014

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே


இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ?  எதை அடைய இத்தனை முயற்சிகள் ?

படித்து, மணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை திருமணம் செய்து கொடுத்து....பின் என்ன ?

ஒன்றும் இல்லை ! ஒன்றும்  இல்லாமல் போவதற்கா இத்தனை பாடு ?

நாவுக்கரசர் சொல்கிறார்

"பூவைக் கையில் கொண்டு அவன் பொன் போன்ற அடிகளை போற்றுவதில்லை. நாக்கினால் அவன் நாமம் சொல்வதில்லை. இந்த உடம்புக்கே நாளும் இரை தேடி அலைந்து, முடிவில் காக்கைக்கு இரையாக இந்த உடலை விட்டு, வாழ்நாட்களை கழிப்பார்களே"

பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக் = பூவைக்

கைக் கொண்டு = கையில் கொண்டு

அரன் = சிவனின்

பொன்னடி= பொன் போன்ற திருவடிகளை

போற்றிலார் = போற்ற மாட்டார்கள்

நாக்கைக் = நாக்கினைக்

கொண்டரன் = கொண்டு + அரன்

நாமம் நவில்கிலார் = பெயரைச் சொல்ல மாட்டார்கள்

ஆக்கைக் கேயிரை தேடி = ஆக்கைக்கே + இரை + தேடி = இந்த உடம்புக்கு தீனி தேடி

அலமந்து = அலமந்து (அலைந்து)

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே = காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

இந்த உடல் எப்படியும் மடிந்து போகப் போகிறது.  மடிந்த உடன் மக்கிப் போகும்.

அதற்கு முன் இந்த உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ....

 காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்பார் பட்டினத்தார்.

கடைசி காலம் வருமுன்னே குற்றாலத்தானையே கூறு என்றார்.


Saturday, November 22, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

வாழ்க்கையில் பல துன்பங்களுக்குக் காரணம் மெய் எது பொய் எது என்று அறியாமல் குழம்புவதுதான்.

சரி எது, தவறு எது ?
நல்லது எது, கெட்டது எது ?
நல்லவர் யார் , கெட்டவர் யார் ?
எது சரியான பாதை, எது தவறான பாதை ?

என்று தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு தவிக்கிறோம்.

பொய்யானவற்றை விட்டு உண்மையானவற்றை அடைய வேண்டும்.


பொய் என்பது பொய் அறிவு, பொய் உணர்வு.
மெய் என்பது மெய் அறிவு, மெய் உணர்வு.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு  என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  என்பதும் அவர் வாக்கே.

இறைவனை அறியும் போது பொய் விலகும், உண்மை புரியும்.