Tuesday, January 6, 2015

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல்

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல் 


திருக்குறள் படித்த பின் பேசுவதற்கே பயமாக இருக்கிறது.

எதைப் பேச வேண்டும் ? எப்படி பேச வேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர். அதன் படி பார்த்தால் நாமெல்லாம் பேசவே முடியாது போலிருக்கிறது. இது வரை பேசியதை நினைத்து வெட்கமாகவும் இருக்கிறது.

பெரிய நலன்களை ஆராயும்  அறிவுள்ளவர்கள் ஒருபோதும் பெரிய பயனைத் தராத சொற்களை பேச மாட்டார்கள்.

பாடல்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்

அரும்பயன் = பெரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும்

அறிவினார் = அறிவு உள்ளவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்களைத்

இல்லாத = தராத

சொல். = சொற்களை

1. ஒரு சொல்லை சொல்வதற்கு முன், அந்த சொல்லினால் என்ன பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல வேண்டும். 

2. ஒரு சொல்லினால் கொஞ்சம் தான் பயன் விளையும் என்றால் இன்னும் நன்றாக  சிந்தித்து அதை விட சிறப்பாக எப்படி சொன்னால் பெரிய பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல  வேண்டும்.

3. ஒரு வேளை பெரிய பயன்களை தரும் சொற்களை சொல்ல முடியாவிட்டால் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நலம். "சொல்லார் பெறும் பயன் இல்லாத  சொல்" என்கிறார் வள்ளுவர். 

4. இன்னும் சிந்தித்தால், எவன் ஒருவன் பெரிய நன்மை பயக்கும் சொற்களை சொல்லவில்லையோ அவன் பெரிய அறிஞன் அல்ல. அவன் சொல்வதை நாம்  கேட்டு நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. பெரிய பயன்களை தரும் சொற்களை பேசுபவர்களை கண்டு அவர்கள் சொல்வதை கேட்க்க வேண்டும். 

5. வள வள என்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி பேசுபவர்களின் பேச்சை  கேட்டு நேரத்தை வீணடிக்கவும் கூடாது. 

6. பெறும் பயன் தரும் சொற்களை யார் பேசுவார்கள் என்றால், அரிய பயன்களைப் பற்றை ஆராய்ச்சி செய்பவர்கள் அப்படி பேசுவார்கள். அது என்ன அரிய  பயன் ? பரிமேல் அழகர் சொல்கிறார் அரிய பயன் என்றால் வீடு பேறு , முக்தி என்று. உங்களுக்கு அதில் உடன் பாடு இல்லை என்றால் நீண்ட இன்பம், அமைதி, சமாதானம், இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யார் பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்களோ  அவர்கள் பேசுவது நமக்கு பெரிய பயனைத் தரும். 

எனவே, 

பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், 
அப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்வதை கேளுங்கள், 
இரண்டும் முடியாவிட்டால், பேசாமல் இருங்கள். 





Monday, January 5, 2015

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம்

இராமாயணம் - தாரையின் பேச்சு நயம் 


கோபமாக வந்த இலக்குவனை வழி மறித்த தாரை பேசத் தொடங்குகிறாள்.

அவ்வளவு அருமையாகப் பேசுகிறாள். ஒவ்வொருவரும் அதை இரசித்து பின் அதை பயில வேண்டும். இப்படிப் பேசப் பழகினால் வாழ்க்கை மிக இன்பபமாக இருக்கும்.

பேசத் தெரியாமல் தானே இவ்வளவு துன்பப் படுகிறோம்.

முதலில் கோபமாக வந்த இலக்குவனின் கோபத்தை மாற்ற வேண்டும். பின், அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். பின், அவன் நினைத்து வந்ததை  அவனே செய்ய முடியாமல் செய்ய வேண்டும்.

நாமாக இருந்தால் என்ன சொல்லி இருப்போம்

"என்ன லக்ஷ்மணா ரொம்ப கோபமாக இருக்கிறாய் போலிருக்கிறது. என்ன விஷயம் சொல்லு " என்று ஆரம்பித்து இருப்போம்.

உடனே அவனும், இன்னும் சூடாகி "என்ன விஷயம்னு உனக்குத் தெரியாதா, தெரியாத  மாதிரி கேட்கிறாய் " என்று விவாதம் வலுத்து இருக்கும்.


தாரை அந்த வழியில் செல்லவில்லை. அவள், அவனின் கோபத்தை ஒரு பொருளாகவே மதிக்கவில்லை. அவனைப்  புகழ்கிறாள்.  

"நாங்கள் எவ்வளவோ காலம் செய்த தவத்தின் பயனாக நீ இங்கு வந்து இருக்கிறாய். இந்திரர்களுக்கும் எட்டாத செல்வம் உன்னை காணக் கிடைப்பது.  உன்  பாதம் எங்கள் மனையில் பட நாங்கள் என்ன வரம் பெற்றிருக்க வேண்டும். உன்னால் நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இதுவரை செய்த வினை எல்லாம் தீர்ந்தது. இதை விட வாழக்கைக்கு வேறு என்ன வேண்டும் "

பாடல்

'அந்தம் இல் காலம் நோற்ற
      ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோரால் எய்தல்
      ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம்
     மனை வரப் பெற்று, வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதி
      வேறு இதனின் உண்டோ?

பொருள்

'அந்தம் இல் = இறுதி இல்லாத. மிக நீண்ட.

காலம் = காலம்

நோற்ற ஆற்றல் = செய்த தவத்தால்

உண்டாயின் அன்றி = வந்ததே இல்லாமல்

இந்திரன் முதலினோரால் = இந்திரன் உள்ளிட்ட தேவர்களால்

எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே? = அடைய முடியாத ஒன்று அல்லவா இது

மைந்த! = மைந்தனே

நின் பாதம் கொண்டு = உன் பாதம்

எம் மனை வரப் பெற்று = எங்கள் வீட்டிற்கு வந்ததால்

வாழ்ந்தேம்; = நாங்கள் வாழ்வு அடைந்தோம்

உய்ந்தனம்; = எங்களுக்கு ஒரு வழி பிறந்தது

வினையும் தீர்ந்தேம்; = எங்கள் தீ வினைகள் யாவும் சென்று மறைந்தன

உறுதி வேறு இதனின் உண்டோ? = இதை விட எங்களுக்கு வேறு என்ன வேண்டும்.


நடுவில் , மைந்தனே என்று அவனை அழைக்கிறாள். அப்படி என்றால் நான் உனக்கு அம்மா  மாதிரி என்று சொல்லி விடுகிறாள். 

"நீ எவ்வளவு பெரிய ஆள். நீ வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா ?   நீ தான்  எங்கள் வாழ்வே " என்று அவன் வரவை நல்வரவாக்குகிறாள் தாரை. 

இனி, அவன் என்ன செய்ய முடியும் ?

அது மட்டும் அல்ல, இலக்குவனை அந்த இடத்தில் இருந்து ஓட ஓட விரட்டுகிறாள் தாரை  ...தன் சொல்லால். 

தான் வந்ததே தவறு என்று அவனை நினைக்கும் படி செய்கிறாள்....

எப்படி ?


Saturday, January 3, 2015

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 3




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.



அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம். 



==================== பாகம் 3 ============================================

பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்

அது ஒரு பெரிய மரம். பல கிளைகளைக் கொண்டது. கடற் கரையில் அமைந்த  மரம். மரத்தடியில் அமர்ந்து பார்த்தால் கடல் தெரியும். நீண்ட மணல் பரப்பு.  அதைத் தாண்டி  கடல். 

அந்த மரத்தடியில் அமர்ந்து அவர்கள் காதல் புரிந்தார்கள். 

பசு நனை = பசுமையான அரும்புகளைக் கொண்ட 
ஞாழற் = ஒரு வகை மரம் 
பல் சினை = பல கிளைகள் 
ஒரு சிறை = அதில் ஒரு கிளையின் கீழே 
புது நலன் இழந்த = புதியதாய் பெற்ற அழகை (நலன்) இழந்த. ஒரு பெண் பருவம்  அடையும் போது புது அழகைப் பெறுகிறாள். உடலில் சில மாற்றங்கள், மனதில் ஒரு சிலிர்ப்பு, ஒரு புன்னகை...அந்த அழகை இழந்தாள் என்று  சொல்லி நிறுத்துகிறது கவிதை. 

ஏன் இழந்தாள் , எப்படி இழந்தாள் என்று சொல்லவில்லை. அங்குதான் கவிதை நிற்கிறது. 

நலனை இழந்தது மட்டும் அல்ல, புலம்புகிறாள். இழந்ததை நினைத்து புலம்புகிறாள். 

முதலில் - இவளே என்று அருகில் இருந்த பெண்ணைச் சுட்டிக் காட்டி பாடல் ஆரம்பித்தது. 

அடுத்து, அருகில் இருக்கும் மரத்தைக் காட்டியது. 

அடுத்து, 


உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 

உது என்ற சுட்டுச் சொல். அது, இது, உது. அருகிலும் இல்லை, தூரத்திலும் இல்லை, இரண்டுக்கும் நடுவில்.  "உது".

உதுக் காண் = அதைப் பார் (உதைப் பார் என்று சொல்ல வேண்டும் )

எய்ய = எய்யாமல், மறைந்து விடாமல், மறந்து போய் விடாதே. நீ எப்போதும் வேண்டும். எய்ய என்றால் அடைய. 

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

 என்பார் மணிவாசகர் 

 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

உள்ளல் வேண்டும் = நினைக்க வேண்டும். 



 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 


நிலவும் இருளும் போல . நல்லதும் கெட்டதும் எங்கும் இருக்கும். அவளிடம் சிறு  குறைகள் இருக்கலாம். உன்னிடமும் சிறு சிறு குறைகள் இருக்கலாம். நிலவும்  இருளும் போல இருக்கிறது எங்கள் ஊர் என்கிறாள். அது ஊருக்கு மட்டும் சொன்னது அல்ல.  

புலவு திரை  = மாமிச மணம் வீசும் கரை. மீனும், நண்டும் இறந்து கிடக்கும். அதனால்  அவற்றின் உடலில் இருந்து வாடை வீசும்.  தலைவியின் சோகத்தை  விளக்குகிறாள் தோழி. நிலவு போல பளிச்சென்று இருக்கும் கடற்கரைதான்  என்றாலும், இப்போது மாமிச மணம் வீசுகிறது. 

கடலும் கானமும் = கடலும், அதை அடுத்த கரையும். 

மடல் தாழ் பெண்ணை = தாழ்ந்த மடல்களைக் கொண்ட பனை மரங்கள்.

பனை மரம் உயர்ந்து வளரும்.  ஆனால், மடல் தாழ்ந்த பனை மரம் என்கிறாள். தலைவி  எவ்வளவுதான் பெரியவளாக இருந்தாலும், உன்னிடம் வரும்போது எப்படி இருப்பாள் என்று சொல்லாமல் சொல்கிறாள். 

இப்படி நாங்கள் வந்து உன்னிடம் பேசுவதால், ஏதோ நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று  நினைத்து விடாதே. 

சிறு நல் ஊரே = சின்ன ஊர் என்றாலும், நல்ல ஊர் எங்கள் ஊர். 

 

Friday, January 2, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே



 எத்தனையோ மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், மடிகிறார்கள். எல்லோரும் ஒரு ஆழ்வாரகவோ, நாயன்மாரகவோ, எசுவாகவோ, புத்தராகவோ ஆக முடிவதில்லை.

ஏன் ?

ஒரு சிலருக்குத்தான் விதித்து இருக்கிறதா ?

மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?

எல்லோரும் சுவர்க்கம் போக முடியுமா ?

முடியும் என்கிறார் நம்மாழ்வார்.

அது மட்டும் அல்ல, நீங்கள் வைகுண்டம் போக வேண்டியது உங்கள் விதி.  போகாமல் இருப்பது விதிவிலக்கு. நாம் எல்லோரும் கட்டாயம் வைகுண்டம் போவோம்.

அவர் போனார். போன போது என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறார். நீங்களும் போகலாம் என்றும் கூறுகிறார்.

பாசுரம்

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.  

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.

அது அவருடைய பரந்த மனத்தைக் காட்டுகிறது. மக்கள் மேல் அவர் கொண்ட அன்பை வெளிப் படுத்துகிறது.

இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

வைணவ உரை   எழுதிய பெரியவர்கள் இந்த பாடலுக்கு சற்று வேறு  விதமாக பொருள் சொல்லி இருக்கிறார்கள்.  அதை கீழே தந்திருக்கிறேன். அதையும் படியுங்கள்.


 -அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர். அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!

“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது. இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.



இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து

இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து 


தன் தோழிகளுடன் தாரை இலக்குவனை சந்திக்க வருகிறாள். அவர்களை கண்டு இலக்குவன் தயங்கி, முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறான்.

மாமியார்கள் நடுவில் நின்ற மருமகனைப் போல வெட்கப்பட்டு நின்றான் என்றான் கம்பன்.

ஒரு புறம் இலக்குவன் தயங்கி, நாணி நிற்கிறான்.

மறுபுறம், தாரை அவனை நேரில் பார்க்க நாணி தோழிகள் கூட்டத்தின் நடுவில் நிற்கிறாள். தோழிகளை விலக்கிக் கொண்டு வருகிறாள்.

பாடல்

தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.

பொருள்


தாமரை வதனம் சாய்த்து = தாமரை போன்ற முகத்தை சாய்த்து

தனு = வில்லை

நெடுந் தரையின் ஊன்றி = நீண்ட தரையின் மேல் ஊன்றி. ஒரு support -க்கு.

மாமியர் குழுவின் = மாமியார்கள் குழுவின் முன்

வந்தான் ஆம் என = வந்ததைப் போல

மைந்தன் நிற்ப = இலக்குவன் நிற்க

பூமியில் = பூமியின் மேல்

அணங்கு அனார்தம் = வானுலகப் பெண்களைப் போன்ற பெண்களின்

பொது இடைப் புகுந்து = நடுவில் இருந்து

பொன் தோள் = பொன் போன்ற தோள்களை கொண்ட

தூமன = தூமையான மனத்தைக் கொண்ட

நெடுங்கண் தாரை = நீண்ட கண்களைக் கொண்ட தாரை 

நடுங்குவாள், = நடுங்கிக் கொண்டு

இனைய சொன்னாள் = இவற்றைச் சொன்னாள்.



Thursday, January 1, 2015

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி




தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி.

தில்லையுள் கூத்தனே = இந்த உலகம் அலைந்து கொண்டே இருக்கிறது. கூத்தாடிக் கொண்டிருக்கிறது. சலனம் இல்லாத ஒன்று இல்லவே இல்லை. எலெக்ட்ரான், ப்ரோடான் என்று அனைத்து துகள்களும் சுழன்று கொண்டே இருக்கின்றன. கிரகங்கள், பால் வெளி, கலக்சி (galaxy ) என்று அனைத்தும் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

சிவனின் வடிவைப் பார்த்தால்  தெரியும். சுழன்று ஆடும் போது ஒரு புகைப் படம் பிடித்த  மாதிரி இருக்கும். ஒரு frame அப்படியே உறைந்த மாதிரியான தோற்றம்.

ஏன் இந்த  உலகம் சுழன்று கொண்டே  இருக்கிறது ? ஏன் இந்த துகள்கள் சுழன்று கொண்டே  இருக்கின்றன. ஒரு இடத்தில் நிலையாய் நின்றால் என்ன ?

இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நுரையீரல் சுருங்கி விரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

நின்று போனால் உயிர்ப்பு நின்று போகும்.

உயிராய், இயக்கமாய் இருப்பவன் அவன்.

சுழற்சி, இயக்கம் இறை தத்துவம்.

தென் பாண்டி நாட்டானே .

தில்லையுள் கூத்தனே என்றார் முதலில். அடுத்து தென் பாண்டி நாட்டானே. பாண்டிய  நாட்டில் உள்ளவனே என்கிறார்.

அங்கும் இருப்பான். இங்கும் இருப்பான்.

அல்லல் பிறவி அறுப்பானே = இந்தப் பிறவி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது....துன்பம் நிறைந்த பிறவி இது.  சங்கிலித் தொடர் போல. அந்தத் தொடரை அறுப்பவன் அவன்.

ஓம் என்று சொல்லுவதற்கு அரியவன்.

சொல்லி = சொல்ல முடியாவிட்டாலும், எப்படியாவது சொல்லி.

திருவடிக்கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் = இதுவரை  சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்ல வில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் தெரியுமா ?

சிவபுரத்தி னுள்ளார் = சிவ புரம் செல்வார்கள். சிவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். 

சிவனடிக்கீழ்ப் = அங்கே சென்று, அவனின் திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. = எல்லோரும் போற்றும் படி இருப்பார்கள்.

எல்லோரும் போற்றும் படி, சிவபுரம் சென்று, சிவனின் அடியின் கீழ் இருப்பார்கள்.

சிவ புராணம்  முற்றும்....அதாவது என் உரை முற்றும். சிவ புராணத்திற்கு உரை சொல்லி  முடியாது.

திருவாசகத்திற்கு  பொருள் என்ன என்று மாணிக்க வாசகரிடமே கேட்டார்கள்.

இதுதான் பொருள் என்று இறைவனின் திருவடியைக் காட்டிவிட்டு  அதில் அவர் மறைந்து விட்டார்   என்று ஒரு வரலாறு உண்டு.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் .....உணர்ந்து பாருங்கள்....
நாவில் தித்திக்கும்  திருவாசகம்.

திருவாசகம் எனும் தேன் என்பார் வள்ளலார்.

நன்றி . வணக்கம்.

குறுந்தொகை - புது நலன் இழந்த - பாகம் 2

குறுந்தொகை - புது நலன் இழந்த 




சங்க காலப் பாடல்களில், அவை சொல்வதை விட சொல்லாமல் விட்டவை சுவாரசியமானவை.


தோழி, தலைவனிடம் சொல்கிறாள்.

"இதோ நிற்கிறாளே இவள், நீ சொன்னதைக் கொண்டு நான் சொன்னவற்றை கேட்டு, தன்னுடைய நலன்களை இழந்து, வருத்தத்தில் இருக்கிறாள். நீ இதை நினைக்க வேண்டும். அதோ அது தான் எங்கள் சின்ன நல்ல ஊர்"

இவ்வளவுதான் பாட்டின் நேரடி அர்த்தம். ஆனால், அது சொல்லாமல், குறிப்பால் உணர்த்தும் அர்த்தங்கள் கோடி.

முதலில் பாடலைப் பார்ப்போம்.

இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
கடலுங் கானலுந் தோன்றும் 
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

படிக்கவே சற்று கடினமான பாடல் தான்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்.


இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறை  
புது நலன் இழந்த புலம்புமாரு உடையள்  
உதுக்காண் எய்ய உள்ளல் வேண்டும் 
நிலவும்  இருளும்  போலப் புலவுத் திரைக் 
கடலும்  கானலும்  தோன்றும் 
மடல் தாழ்  பெண்ணை எம் சிறு நல் ஊரே .

பொருள்

இவளே = இதோ நிற்கிறாளே இவள்

நின் சொல் = நீ சொன்ன சொற்களை

கொண்ட =கேட்டு

என் சொல் = நான் அவளிடம் சொன்னவற்றை

தேறி = ஏற்றுக் கொண்டு

பசு நனை = பசுமையான அரும்புகளை கொண்ட

ஞாழற் = ஒரு மரம்

பல் சினை = பல கிளைகளில்

ஒரு சிறை = ஒரு கிளையின் அடியில்

புது நலன் = புதியதாய் கொண்ட அழகினை

இழந்த = இழந்து

புலம்புமாரு = புலம்பும் அல்லது வருந்தும் தன்மையை

உடையள்  = கொண்டு இருக்கிறாள்

உதுக்காண் = அதோ அங்கே இருக்கிறது பார்

எய்ய = அசை நிலை

உள்ளல் வேண்டும் = நினத்துப் பார்க்க வேண்டும்

நிலவும்  இருளும்  போலப் = நிலவும் இருளும் போல

புலவுத் = மாமிச வாடை வீசும்

திரைக் = அலை பாயும்

கடலும் = கடலும்

கானலும் = அதை அடுத்த கரையும்

தோன்றும் = இருக்கும்

மடல் தாழ் = மடல் தாழ்ந்து இருக்கும்

பெண்ணை =  பனை மரங்களை கொண்ட

எம் சிறு நல் ஊரே = எங்களுடைய சின்ன நல்ல ஊரே

இதன் உள் அடங்கி அர்த்தத்தை நாளை பார்ப்போம்.

கொஞ்சம் இலக்கணமும் சேர்த்துப் பார்ப்போம். இலக்கணம் அறிந்தால் இந்த பாட்டின் சுவை  மேலும் கூடும்.
------------------------------- பாகம் 2 -----------------------------------------------------------------------------

1. தமிழ் இலக்கணத்தில் சுட்டுப் பொருள் என்று ஒன்று உண்டு. ஒன்றை சுட்டிக் காட்டி  கூறுவது.  இதில் அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு என்று இரண்டு உண்டு.  அண்மை சுட்டு என்றால் அருகில் உள்ளதை சுட்டிக் காட்டி கூறுவது. சேய்மை என்றால்  தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிக் கூறுவது.

சேய்மை சுட்டு 'அ ' என்ற எழுத்தில் தொடங்கும். அது, அவன், அவள், அங்கே என்பது போல.

அண்மை சுட்டு 'இ ' என்ற எழுத்தில் தொடங்கும். இது, இவன், இவள், இங்கே என்பது போல.

அண்மையும் அல்லாமல், சேய்மையும் அல்லாமல் நடுத்தரமாக இருப்பதை சுட்டுவதும்  இருக்கிறது. அது 'உ' என்ற எழுத்தில் தொடங்கும். உது, உவன், உவள்,  என்பது போல. இப்போது அதை அதிகமாக யாரும் உபயோகப் படுத்துவது இல்லை.

இறைவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டால், அவன் அங்கே இருக்கிறான் என்று ஆகாயத்தை  காட்டுவார்கள், கைலாய மலையில் இருக்கிறான், பாற்கடலில் இருக்கிறான்  என்று சொல்லுவார்கள்.

இங்கே இருக்கிறான் என்று யாரும் சொல்லுவது இல்லை. இறைவனை அண்மைச் சுட்டில்   யாரும் சொல்லுவது இல்லை.

திருஞான சம்பந்தரிடம் அவருடைய தந்தை கேட்டார் "வாயில் பால் வழிகிறதே,  யார் கொடுத்தது " என்று .

ஞான சம்பந்தர் சொன்னார்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே


பெம்மான் இவன் அன்றே என்று  கூறினார்.இதோ இங்கே நிற்கிறானே இவன் தான்  என்று இறைவனை அண்மைச் சுட்டில்  காட்டினார்.

பெம்மான் அவன் அன்றே என்று கூறி இருக்கலாம். இலக்கணம் ஒன்றும் தப்பாது. அவன் என்று சொல்லாமல் இவன் என்று கூறினார்.

சரி, பாடலுக்கு வருவோம்.

இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி   


இவளே என்று ஆரம்பிக்கிறது பாடல்.  இவள், என்றால் அருகில் நிற்பவள். தலைவி  அங்கே நிற்கிறாள்.  அவளை முன்னே வைத்துக் கொண்டு யாரோ யாரிடமோ  எதுவோ சொல்லுகிறார்கள். யார், யாரிடம் என்ன சொன்னார்கள் என்பதை  பாடல் மெதுவாக பூ மலர்வது போல சொல்கிறது. 

நின் சொல் கொண்ட என் சொல் தேறி


உன்னுடைய சொற்களை கொண்ட என் சொற்களை கேட்டு 

இங்கே நாம் ஒன்றை அனுமானித்துக் (guess ) கொள்வோம். பின்னால் அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம். 

தோழி தலைவனிடம் சொல்வதாக நினைத்துக் கொள்வோம். 

தோழி சொல்கிறாள், "நீ என்னிடம் பலவற்றை சொன்னாய். அவற்றை கேட்டு நானும்  அதை தலைவியிடம் சொன்னேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டாள் " 

 அதாவது, தலைவன் நேரடியாக தலைவியிடம் சொல்லவில்லை. தோழியிடம் சொல்லி  , தோழி போய் தலைவியிடம் சொல்லி இருக்கிறாள். தோழி சொன்னதை  தலைவி ஏற்றுக் கொண்டாள் . 

இதில் இழையோடும் சிலவற்றை நாம் யூகிக்க முடியும். 

தோழி சொல்கிறாள் "நீ சொன்னதைத்தான் நான் சொன்னேன்" நானாக எதுவும் சொல்லவில்லை என்பது புலப் படும்.   ஏதோ ஒரு சந்தேகம். ஒரு வேளை தலைவன்  சொன்னது எல்லாம் தவறாக இருக்குமோ ? இவன் சொன்னதைக் கேட்டு  நாமும் தலைவியிடம் எதை எதையோ சொல்லி விட்டோம். அவளும் அவற்றை  நம்பி விட்டாள். நாளை அவை தவறாகப் போனால், தலைவி என்னைத்தானே குறை  கூறுவாள் என்று எண்ணி தோழி , தலைவியை வைத்துக் கொண்டு  தலைவனிடம் கூறுகிறாள் "நீ சொன்னதைத்தாம்பா நான்  சொன்னேன் "  (எனக்கு ஒண்ணும் தெரியாது என்பது தொக்கி நிற்கிறது ).

மெல்லிய பதற்றம் நமக்குப் புரிகிறது. 

அது மட்டும் அல்ல, தலைவன் நேரடியாக தலைவியிடம் ஒன்றும் கூறவில்லை. ஒரு வேளை தலைவியின் நாணம் தடுத்து இருக்கலாம்.....அல்லது....தலைவி தன்னை ஏற்றுக்  கொள்ளா விட்டால் என்ன  செய்வது என்ற தலைவனின்  பயம் காரணமாக இருக்கலாம்....தோழியை தூது போகச் சொல்லி இருக்கிறான். அவளும் பக்குவமாக எடுத்துச் சொல்லி  தலைவியின்  காதலை பெற்றுத் தந்திருக்கிறாள்.

அவர்கள் காதலித்தார்கள் ? எங்கே எப்படி என்பதை நாளை பாப்போம்.